Wednesday, August 31, 2011

கடுக்கரையில் அந்தநாட்களில் நடந்த திருமணச் சடங்கு


கல்யாண மண்டபம் இல்லாத காலம் கடுக்கரையில் 1973 வரை திருமணச் சடங்குகள் அவரவர் வசதிக்கேற்ப ஊரிலேயெ நடந்தன.

மணமேடை ஒன்று நமது ஊர்வகை ட்ற்ஸ்டிடம் உண்டு. மரத்தால் ஆன மணமேடை அதை பிரித்தும் சேர்த்தும் வைக்கும்படியான அமைப்பில் இருக்கும்.குறைந்த வாடகை தான். மணமேடையை வீட்டின் முற்றத்தில் அல்லது வைப்பதற்கு வசதியான இடத்தில் கொண்டு போய் அதனை ஆசாரியை வைத்து ஒண்ணிப்பார்கள்(சேர்ப்பார்கள்).இட வசதி இல்லையென்றால் ஆக்குப்பெரையில் ஒரு இடத்தில் மணமேடையைப் பொருத்துவார்கள்.

ஆக்குப்பெரை என்பது தென்னை ஓலையால் வேயப்படுவதாகும்.அதில்தான் தான் சாப்பாடு பந்தி வைப்பார்கள். சாப்பாடு பொங்குவதற்கு தனியாக சமையல்காரரை நியமித்து அதற்கு என்று தனியாகப் பெரையும் போடுவார்கள்.

சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் நம்து ஊரில் உண்டு. அதனை வாங்கி வைத்தவர்கள் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்ற்ஸ்டிகளாக இருந்த ஒட்டடுக்கு வீடு பிச்சைக்காரன்பிள்ளை என்ற திருச்சித்தம்பலம் பிள்ளையும் கீழத்தெரு திரவியம்பிள்ளையும் தான்.

திருமணநாளுக்கு முந்தின நாள் சாயந்திரம் 6 மணிக்கு மேல் அந்த பெரையில் காய்கறிகள் இருக்கும். காய்கறிகளை வெட்டுவதற்கு ஊர்மக்களை அழைப்பார்கள். எல்லா மக்களும் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் கூடி காய்களை வெட்டுவதற்கு தயாராக இருப்பார்கள். ஊர் முதலடி வந்து அவர் முதலில் ஒரு காயை எடுத்து வெட்டுவார். “சரி,... எல்லோரும் காய்கறி வெட்டுங்க...” என்று கூறியதும் காய்கறி வெட்டுவார்கள்.

எனக்குதெரிந்து முதலடியாக இருந்தவர் வடக்குதெரு ஆறுமுகம்பிள்ளை. அவர் காலமான பின் எனது அப்பா ஆறுமுகம் பிள்ளை.1974-ல் கல்யாண மண்டபம் வந்து விட்டது. எனது திருமண மறுவீடு எங்கள் வீட்டில் பெரை போட்டுதான் நடந்தது 1975-ல்

பல பெரியவர்களிடம் பேசியதில் 1947 க்கு முன்னால் பல்லக்கில் மாப்பிள்ளையை வைத்து ஊர்வலம் போவதுண்டு என்ற தகவலைக் கூறினார்கள்

திருமணம் முடிந்த மறுநாள் 7-ம் நீர்ச் சடங்கு நடைபெறும்.மஞ்சள் நீர் ஒரு பெரிய வார்ப்பில் தயாராக வைத்திருப்பார்கள்.அத்தான், மைத்துனர்கள்,மதனி, சம்மந்தி ஒருவருகொருவர் மீது விட்டு விளையாடுவார்கள்.இப்போது அந்த விளையாட்டெல்லாம் இல்லை.

No comments:

Post a Comment