Wednesday, August 31, 2011

கடுக்கரையும் ஊர்மக்களின் தேசப்பற்றும்

கடுக்கரை குமரி மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள ஒரு சிற்றூர்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த ஒரு கிராமம்.இந்த சின்ன ஊரிலிருந்து பலர் இந்தியாவின் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்கள் என்பது நமக்குப் பெருமையான ஒன்று.

வடக்குத்தெருவில் தாணுபிள்ளை,புதுகுளத்தெரு வன்னியன், மேலத்தெரு ராமைய்யாபிள்ளையின் மகன் மணி, அழகப்பன் ராணுவத்தில் சேர்ந்து பனியாற்றினார்கள்.

விமானப்படையில் பள்ளிக்கூடத்தெரு அனந்தராமன்பிள்ளை, வடக்குத்தெரு போஸ், கீழத்தெரு திரவியம்பிள்ளையின் மகன் கிருஷ்ணன் சேர்ந்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்தாலும் பாரதநாட்டின் மீதும் சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட தேசியத்தலைவர்கள் மீதும் அதிக மதிப்பு வைத்திருந்தனர்

 கடுக்கரை ஊர் மக்கள். சுபாஷ் சந்திர போஸ் வாசிப்பு சாலை என்ற நூலகம்,மகாத்மாகாந்தி நூல்நிலையம் ஊரில் இருந்தது. காந்தியடிகளின் சுதேசிப் பொருளை ஆதரிக்க பலர் கதராடைகளை அணிந்தனர்.

 சேத்திரபாலன் ஒரு முடி திருத்தும் கலைஞர்.அவர் ஒரு தேச பக்தர். தன் வாழ்நாள் முழுவதும் கதராடையை மட்டுமே அணிந்து வந்தார்.அவரது மகனின் பெயர் சுபாஷ் சந்திர போஸ்.

என் அப்பா காந்தியின் தீண்டாமைக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர். நாங்கள் சேத்திரபாலனை அண்ணன் என்றும் பண்டாரம் என்பவரை தாத்தா என்றுதான் கூறுவோம்.

 1948-ம் ஆண்டு ஜனுவரி மாதம் பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வருகிறது.அதைக் கேட்ட மக்கள் சோகத்தில் மூழ்கினதால் திருவிழா நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. மறுநாள் மாலையில் ஊர்மக்கள் ஒன்றுகூடி மௌன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடத்தினார்கள் .  

No comments:

Post a Comment