Thursday, September 1, 2011

கடுக்கரையில் வாழ்ந்த நிமிடக் கவி உடையார்பிள்ளை

கடுக்கரை ஊரில் பிறந்த பலர் சிறந்த கலைஞர்களாக இருந்தனர்.நாடகம்  என்றாலே அந்தக் காலத்தில் நினைவுக்கு வருபவர் கவி உடையார்பிள்ளை. நம் ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது அவர் வசனம், பாடல்கள் எழுதி அரங்கேற்றிய நாடகங்கள் ஸ்ரீவள்ளி திருமணம், பவளக்கொடி,அல்லி அர்ச்சுனன் முதலியன. நாடகத்தந்தை ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் சீடர் இவர்.

நவாப் டி.எஸ் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் ஸ்ரீ ஐயப்பன் நாடகத்தை எழுதியவர் நமது ஊர்க்காரரான உடையார்பிள்ளைதான்.சென்னை,பம்பாய் போன்ற நகரங்களில் வருடக் கணக்கிலும் மாதக்கணக்கிலும் வெற்றிகரமாக நாடகம் நடந்தது. தமிழ் நாட்டில் ஸ்ரீஐயப்பன் பக்தி மார்க்கத்தைப் பரப்பியவர் கடுக்கரைக் கவிதான்.

இவர் சிறந்த நடிகரும் ஆவார். ஆஞ்சனேயர் வேடம் பூண்டு நடித்திருக்கிறார்.

கவி எழுதும் வல்லமை இவருக்கு உண்டு.பள்ளிக்கூடத்தில் பூஜை வைப்புக்கு இரண்டு சக்கரம் கொண்டு போகவேண்டும்.இவரது மகன் தங்கம் இரண்டு சக்கரம் கேட்க அவர் ஒரு சக்கரம் மட்டும் கொடுத்து ஒரு கவி எழுதி அதனையும் மகனிடம் கொடுத்தனுப்பினார்.அவ்ர் எழுதிய வெண்பா:-

   “பூசைக்குச் சக்கரம் பொதாதென்று என்னுடைய
    ஆசைக்குமரன் அழுகின்றான் நேச்முடன்.
    தீதில்லா கல்வி உணர் தேசிகனே ஒரு துட்டுக்கு
   ஆதரவு தான் புரிவீரே”

1955-ம் ஆண்டு பூதப்பாண்டியில் ஒரு நிகழ்ச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தொடர் சமயச் சொற்பொழிவின் இறுதி நாளில் நன்றி கூற வேண்டிய நபர் வரவில்லை.அந்தக்கூட்டத்தில் இருந்த மெய்க்கும்பெருமாள்பிள்ளை எழுந்து உடையார்பிள்ளையிடம் , “ நீங்கள் மேடையேறி நன்றி கூறுங்கள்” என்று கூற மேடை ஏறி நன்றி கூறிவிட்டு ஒரு கவிதையைப் பாடி முடித்தார். அந்தக் கவிதை :---

“ தத்துவ வினோத ஞான சக்தியனே வாராதய்யா
 தொத்து நாஸ்திகம் தனை தொலைக்கவந்த தூயனே
 முத்து இராமலிங்கம் எனும் முத்தமிழ் வினோதனே
இத்திரையில் நீடுகாலம் இன்பம் எய்து வாழ்கவே”

ஒருதடவை தன் மைத்துனன் தான் கூப்பிட்ட இடத்துக்கு வராததால் நக்கலாக
எழுதிய ஒரு கவி

“ சுறுசுறுப்புக்கு என் பேரன் கட்டி
சோம்பேறி என் மைத்துனன் ஐயாக்குட்டி
பாண்டிநாட்டுப் பொறுக்கிப் பட்டி
பக்குவமாய் தூணிலே கட்டி
கஞ்சியை ஊத்து அம்முக்குட்டி

இன்று கடுக்கரை ஐயப்பன் கோவில் வருவதற்கு காரணம் கவி உடயார்பிள்ளைதான். கே.எம் . ஆறுமுகப்பெருமாள் பிள்ளையிடம் நிலத்தை இலவசமாகப் பெற்று நிதி திரட்டி 1953-ல் அடிக்கல் நாட்டி 1959-ல் கும்பாபிசேகம் நடந்தது


No comments:

Post a Comment