Sunday, October 30, 2011

அய்யப்பன் கோயில் விரதம்

1973 ல் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த சமயம். நவம்பர் மாதம் சபரிமலைக்கு மாலை போட்டு 9 நாள் விரதம் இருந்து ஒரு பஸ் வாடகைக்குப் பிடித்து போவதற்காக plan போட்டபோது என்னையும் அழைத்தார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம்.41 நாள் விரதம் இருந்தல்லவா போகணும்.அதிலும் முதல் தடவை போகும் கன்னி ஐயப்பன் மார்கள் 41 நாள் விரதம் இருக்காமல் போகலாமா ?.ஒரே குழப்பமாய் இருந்தது.

கடுக்கரையில் குருசாமிகள் பலர் உண்டு.நாகருபிள்ளைகுருசாமியிடம் போய் விசயத்தைக் கூறி போகலாமா எனக் கேட்க அவர்,கன்னி ஐயப்பன் மாரெல்லாம் விரதம் இருந்து நடந்து தான் தை மாதம் விளக்குக்குதான் போகணும் என்றார். தாமுஅண்ணனிடம் கேட்டதில், சும்ம போப்போ அந்தக் காலத்துல சொன்னாங்க அப்பம் சாலை வசதி கிடையாது.இப்பம்லா பம்பை வரைக்கும் பஸ்ல போகலாம்.நடை துறந்த அண்ணைக்கே கூட்டம் வந்திரும்.எல்லாத்துக்குமே மனசுதான் காரணம்.சாமி ஒண்ணும் செய்ய மாட்டாரு.

அப்பா என்னிடம், “ஒருத்தருட்டயும் ஒண்ணும் கேக்காண்டாம்.பிரின்சிபால், பறவைக்கரசு, வேலப்பன் லாம் வாறாங்கள்ளா. போயிற்று வா.கார்த்திகை ஒண்ணாம் தேதி மாலை போடு...”

கடுக்கரையில் ஐய்யப்பன் கோயிலுக்கு காலையில் நான் என் அம்மையுடன் போய் மாலையை சாமி சன்னதியில் வைத்து வணங்கினேன். அம்மைதான் அந்த மாலையை என் கழுத்தில் போட்டாள்.நான் அம்மையின் காலைத் தொட்டு வணங்கினேன்.குருசாமி என்று யாரையும் மாலை போடுவதற்கு நான் தேடிப் போகவில்லை.

கல்லூரிக்கு போய் சாயந்திரம் வீட்டுக்கு வந்தேன். அடுக்களையில் அம்மையை தேடினேன்.அம்மா அங்கு இல்லை.வீட்டுக்குப்பின் வடக்குத் தாவாரத்தில் ஒரு புதிய அடுக்களை உருவாகி சூட்டடுப்பில் இட்லி அவித்துக் கொண்டிருந்தாள் அம்மா....

‘ என்னம்மா இதெல்லாம் உன்ன கஷ்டபடுத்தவா நான் மாலை போட்டிருக்கேன்.’ நான் சத்தமாகவே கேட்டேன்.

‘அப்பாதான் சொன்னா....இன்னும் ஒரு வாரம்தானே...விரதம் இருக்கணும்னா சும்மையா.

‘எல்லாம் சுத்தமா இருக்கணும். நானும் உனக்கு வேண்டி காலையில் குளித்து விட்டுதான் இந்த இடத்தை சாணி வைத்து மெழுகி அதன் பிறகு தான் அடுப்பை பத்தவைப்பேன்...’

‘ஒரு வீட்டுக்கும் போயிராதே. போனால் என்னமாம் தந்தால் திண்ணுராதே. கண்ட கண்ட ஹோட்டல்ல சாப்பிடாதே...’

நான் ஒருவன் மாலைப் போடப்போய் எனக்கு முன்னாலயே அம்மையும் அப்பாவும் குளித்து நான் சாப்பிட்ட பின் அவர்கள் சாப்பிட....என் மனதில் இனம் புரியாத நெருடல். இதாவது பரவாய் இல்லை. என்னை விட 25 வயது கூடுதலான Lab attendar என்னை சாமி எனவும் நீங்க வாங்க போங்க...எனப் பெரிய மரியாதையுடன் பேசியது எனக்கு கூச்சமாக இருந்தது.

குறிப்பிட்ட நாளில் பயணமானோம். நடு இரவில் எங்கேயோ வண்டி நின்றது. அடைத்துக் கிடந்த கடையின் முன்னால் சிமென்ட் தரையில் படுத்து உறங்கி காலையில் பக்கத்தில் உள்ள ஆற்றில் காலைக் கடன்களை முடித்து விட்டு பயணமாய் பம்பை போய் சேர்ந்தோம். அங்கு குளித்தொம். காலையில் ஏதாவது சாப்பிடணுமே....நிறைய ஹோட்டல்கள் ....நாங்கள் சாப்பிட்டொம்.எங்களுடன் வந்த குருசாமியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டது ப்ரோட்டா....சாப்பிடலாமா....சாப்பிடலாம் ,இருமுடிப்பையில் உள்ள நெய்த்தேங்காயில் நெய் அடைச்சா விரதம் எல்லாம் முடிஞ்சு...இப்படி ஒரு விளக்கம் சொன்னார்கள்....என் மனம் ஒத்துக்கவே இல்லை...எனக்காக வீட்ல அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கணுமா.கடுக்கரையில் அய்யப்பன் கோயிலுக்கு போகும்போது விரதம் இருந்தா போகிறோம்.சபரிமலைக்கு பழைய காலத்தில் பஸ் வசதி கிடையாது.நடந்து செல்லும் போது சரியான சாப்பாடு கிடைக்காது,குளிர் காலம்,....இது போன்ற சிரமங்களை தாங்கிக் கொள்வதற்காக ஒரு பயிற்சியாய் செய்தவைகளை இப்போதும் தேவையே இல்லாமல் கடைபிடிக்கிறோம்.

நான் மனதளவில் சுத்தமாகவும் என்னுடன் குறைந்தது ஒருவரையாவது எனது செலவில் அய்யப்பன் கோயிலுக்குப் போகும் போது கூட்டிக் கொண்டு போவேன். என்னைப் பொறுத்தளவில் இது ஒரு ஆன்மீக சுற்றுப் பயணம்.

கோயிலுக்கு 18 படிவழியாக ஏறி சாமி தரிசனம் முடிந்து சுகமாய் வீடு வந்து சேர்ந்தோம்.
பாரம் குறைந்த இருமுடிப்பைக்கு சூடம் கொழுத்தி மாலையை கழற்றினேன்.

நான்கைந்து தடவை இது போல் போனேன். யாரையும் அதிகம் கஷ்டப்படுத்தாமல் முறைப்படி
விரதம் இருந்து தான் போனேன். மாலை போட்டபின் எல்லோர் வீட்டுக்கும் போவேன். பேசிக்கொண்டிருப்போம். ஆனால் நான் கேட்டாலும் குடிக்கக்கூட தன்ணிர் தர மாட்டாங்க....அய்யய்யோ மாலை போட்டிருக்க வீட்ல போய் குடி....சில காரணங்களால் வீடு சுத்தமாயில்ல என்று சொல்லி வீட்டுக்கு வரக்கூடாதும்பாங்க.....

நம்மைத் தேவையே இல்லாமல் கஷ்டப்படுத்தி இருமுடிப்பையை தூக்க முடியாத அளவிற்கு நிரப்பி தலையில் வைத்து நடக்க முடியாமல் நடந்து போகிறோம்.நாம் கொண்டுபோன எதையுமே அய்யப்பன் சன்னதிக்குள் கொண்டு போக முடியாது.

மலையாள மக்கள் ஒரெ ஒரு நெய் தேங்காய் மட்டுமே கொண்டு வந்து சாமி கும்பிட்டு போகிறார்கள்.

1981-டிசம்பர் 25-ல் என் தந்தை இறைவனடி சேர்ந்த நாளில் இறுதிச் சடங்குக்கு பலர் வந்தார்கள். விளாங்காட்டில் இருந்து குமரேசனும் வந்திருந்தார்....குமரேசன் அய்யப்பன் கோயிலுக்கு போக மாலை போட்டிருந்தார்.அவரிடம்,“ நீங்க தாடியெல்லாம் வச்சுகிட்டு... மாலை போட்டிருக்கீங்க....ஏன் வந்தீங்க....”

அவர் சொன்னது,“ உங்க அப்பா போய் சேந்துட்டா.கடுக்கரையில் ஐயப்பன் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்தது அப்பா தானே.அவர் புகழ் சாகவே சாகாது.... இண்ணைக்கு வரல்லன்ணா நான் மனுசனே இல்ல. வந்ததை பெரும் பாக்கியமாகவே நினைக்கிறேன் விளக்குக்கு சபரி மலைக்குப் போகப் போறேன்....உங்க கோலப்பத்தானும் நானும் எப்படின்னு தெரியுமா.எப்படி சார் நான் வராம இருக்க முடியும்....”

குமரேசனின் குரல் அடிக்கடி என் காதினில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....மண்டல பூஜையன்று தான் என் தந்தை மறைந்தார்....

அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களை மன்னித்தருள்வாய் சுவாமியே அய்யப்பா.

சுவாமியே சரணம் அய்யப்பா

No comments:

Post a Comment