Tuesday, October 25, 2011

செயற்கரிய செயலைச் செய்த பெரியார்

1985 அல்லது 1986 என நினைக்கிறேன்.கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது.தமிழ் நாடு முழுவதும் ஒன்றுபட்டு நடத்திய பெரிய போராட்டம்.பள்ளி ஆசிரியர்களும் ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கியதால் கல்விச் சாலைகளில் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.அரசு எந்த முடிவும் எடுக்காததால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
தர்ணா நடத்தியதால் அரசு ஆசிரியர்களைக் கைது செய்து பாளையாங்கோட்டை சிறையில் அடைத்தார்கள்.நான் அந்தச் சமயத்தில் சுகமில்லாமல் வீட்டில் இருந்தேன்.என் கூட வேலைபாத்தவர்களும் போராட்டத்தில் பங்கு கொண்டு ஜெயிலுக்குப் போனாங்க.

சுந்தரேசன் விசயத்தைச் சொன்னபோது நானும் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன். என் மனைவியோ ‘போகாதே...போகாதே என் கணவா’என்று பாட மாத்திரம் செய்யவில்லை. காச்சல் சரியாக்கூட விடல்ல....இப்பம் போனா கஷ்டம்லா....

நான் Dr.Rejae-ஐப் போய் பார்த்து காய்ச்சல் சட்டுணும் கொணமாக injection ஏதாவது போடுங்களேன்....போராட்டத்தில் சேர்ந்து ஜெயிலுக்குப் போகப் போறேன்.அவர் எனக்கு நன்கு தெரிந்தவர் ....போராட்டத்தை வெகுவாக எதிர்த்தும் கிண்டலாகவும் பேசி என்னைப் ஜெயிலுக்கு போகாதீங்கோ என சொன்னார்.நான் வற்புறுத்தவே மருந்துகள் தந்து அனுப்பினார்.

2 நாள் கழித்து நானும் சுந்தரேசனும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன்னெ நின்ற மற்ற நண்பர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டு ஜெயிலுக்குப் போனோம். கோர்ட்டுக்குப் போய் அங்கிருந்து ஒரு பஸ்ஸில் ,பாளையாங்கொட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார்கள். இவ்வாறு ஜெயிலுக்குப் போவது இரண்டாவது தடவை. உள்ளே போனதும் எங்கள் அங்க அடையாளங்களை பாத்து ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்தார்கள். அலுமினியத் தட்டும் தந்தாங்க. வித்தியாசமான அனுபவம்.முதல் 2 நாளா கூட்டம் அதிகம் இல்லாததால் சமாளித்து விட்டோம்.அதன்பிறகு சிறை நிரம்பி வழிந்ததால் குளிக்க,கக்கூஸ் போக பட்ட கஸ்டங்கள் சொல்லி மாளாது.

காலையில் வரிசையில் நின்று உப்பு மாவோ என்னமாம் தருவாங்க.....பள்ளி ஆசிரியர்களே முன் வந்து பொங்கவும் பரிமாறவும் செய்ததால் ஏதோ ஒரு மாநாட்டில் கலந்தது போலவே இருந்தது.கடுக்கரையில் இருந்து பல வாத்தியார்கள் எங்க கூடவே ஜெயில்ல இருந்தாங்க.....தினமும் இரவு உறங்கப் போவதுக்கு முன்னால பாட்டுப் பாடுவதும்,மிமிக்ரி,பேச்சு என நேரம் போவதே தெரியாமல் நாட்கள் நகர்ந்தன.மருமகன் மோகன் இரண்டு நாள் எங்களுக்காக அவல் கொண்டு வந்து தந்தான்.

பகல் பொழுது பல ஆசிரியர்களுடன் பேசிப் பொழுதைக் கழிப்போம். நான் ஒரு ஆசிரியரைப் பாத்தேன்.ஒல்லியான தேகம்.அமைதியான முகம். எளிமையான தோற்றம் தலையில் முன் நெற்றியின் நடுவே தலை முடி.....ரெண்டு சைடுலேயும் கசண்டி....பள்ளிவாத்தியாரா இருக்கும்னு நானே நினச்சுகிட்டேன்....அவரிடம் போய் பேச ஏனோ எனக்கு மனசு வரல்ல. அவர் சற்று வயதானவர். போராட்டத்துக்கு மிகவும் ஆதரவு கொடுத்தவர்.
ஒரு வழியாக போராட்டம் முடிவுக்கு வந்தது....கோரிக்கைகள் நிறை வேறியது.

சில வருடம் கழிந்தபின் அரசாணை வந்தது.வசந்தமும் வந்தது. கூடுதல் சம்பளம். Arrears-ம் கிடைத்தது.ஒரு நாள் தினத்தந்தி பேப்பரைப் பார்க்கும்போது,“ கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த arrears பணத்தை குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தார்.ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் நூலகராக இருக்கிறார்” என்ற செய்தியில் அவரது போட்டோ இருந்தது. ஓ....இவர் நம்ம கூட ஜெயில்ல இருந்தவருல்லா....பள்ளி வாத்தியார்ணுல்லா நெனச்சுட்டென்.

இவர் தான் கல்யாண சுந்தரம். திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ரோட்டரி கவர்ணராக இருந்தவர் அழைத்து வேலை கொடுத்தார்.
அய்யோ என்ன விசித்திரமா இருக்கு. ஓய்வு பெற்ற பின் தனக்கு கிடைத்த பணம் அனைத்தையுமே பொது விசயத்துக்கு அளித்து விட்டார்.மாதம் கிடைக்கும் பென்சனை என்ன செய்வாரோ?.....

பத்திரிகை வாயிலாக அறிந்த செய்தி.Super Star -ன் மனைவி நடத்தும் ‘ஆஸ்ரம்’ பள்ளியில் வேலை பார்த்ததாக...இவரது குரல் ஒரு பென்ணின் குரல் போல் கீச்சுகுரலாக இருக்கும்.ரேடியோவில் இவரது பேட்டிய கேட்டபோது அறிந்து கொண்டேன்..இவர் நோயினால் அவதிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருந்தபோது
இவருக்கு மருத்துவ நிதி பிரித்து கொடுக்க சங்கம் முனைந்தது.ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டார். ஒரு ரூபாய் தாருங்கள் அதுவே போதும் எனக் கூறிவிட்டார்.

இன்று அவரது நிலமை என்ன? எங்கிருக்கிறார் ? எதுவுமே தெரியவில்லை.....

செயற்கரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்.....

No comments:

Post a Comment