Friday, October 28, 2011

திருவையும் ஆட்டுரலும்

கல்லூரிக்குத் தினமும் காலையில் எத்தன மணிக்கு புறப்பட்டுவருவ....என பலர் கேட்பதுண்டு.

நாரூல்ல வந்து தங்கு. அப்பந்தான் பிள்ளைகள நல்ல பள்ளிக் கூடத்தில் சேக்கலாம்....உனக்கும் வசதியாயிருக்கும். இப்படி பலர் சொல்வதை கேட்பேன்.ஆனால் அம்மையை விட்டுட்டு எப்படிப் போகமுடியும்.

நீ ஒரு வீட்டப் பாரு நானும் ஓங்கூட வந்து ஒரு மாசம் இருக்கேன் என அம்மா சொன்னாள்.

நான் ராமன்பிள்ளைத்தெருவில் கொஞ்ச நாளும் பின் நல்லபெருமாள் காலனியில் கொஞ்ச நாளும் இருந்து விட்டு புதிய வீடு ஒன்றினை பொன்னப்ப நாடார் காலனியில் கட்டி அங்கே தங்கினோம்

புதுவீடு பால் காய்ச்சி வருமுன் என் மனைவி என்னிடம், “புது வீட்டுக்குப் போகதுக்கு முன்னால் உரல்,உலக்கை,திருவை,அம்மி,ஆட்டுரல் எல்லாம் மயிலாடியில் சொல்லிச் செய்து வாங்கணுமே.” சொன்னாள்.

நான் சிரித்துக் கொண்டே உலக்கை வைத்து உனக்கு இடிக்கத் தெரியுமா....grinder -ஐக் கொடுத்திருவோம்....mixieல்லாம் வேண்டாமா எனக் கேட்டேன்.

அம்மை ‘ வீடுன்னா இதெல்லாம் இருக்கணும்’ என வெடுக்கென சொன்னாள். என் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னதெக் கேளுங்களேன் என்று பார்வையால் சொன்னாள்.மயிலாடியில் இந்தியன் வங்கியில் வேலை பாத்த ஒருவரிடம் நான் இதைச் சொல்ல அவர் சுப்பையாத்தேவர் என்ற பெயருள்ள ஒரு ஆளை அனுப்பினார்.

அவரிடம் தேவையான அனைத்துக்கும் முன்பணம் கொடுத்தேன்.சிவப்பு நிறக் கல்லில் தமிழில் வீட்டின் பெயரை வெட்டிக் கொண்டுவரச் சொன்னேன்.

இப்பொழுது திருவை புது மெருகு மாறாமல் ,ஆட்டுரல் எல்லாம் அப்படியே பின் பக்கம் கேட்பாரற்று பரிதாபமாய் கிடக்கிறது

No comments:

Post a Comment