Monday, November 28, 2011

காட்டுப்புதூர் பண்ணையாரும் ஊர்வகை அம்மன் கோயிலும்

காட்டுப்புதூர் ஒரு சிற்றூர்.கடுக்கரை வழியாகவும் போகலாம்.அழகியபாண்டியபுரம் வழியாகவும் போகலாம். நான் பலதடவைக் காட்டுப்புதூர் வழியாக உலக்கை அருவிக்குச் சென்றிருக்கிறேன். இப்பொழுது காட்டுப்புதூர் ஊரின் ஒரு அற்றத்தில் ஒரு புதிய அம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்று விழங்குகிறது.

அந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மாலை பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்தக் கோயிலில் உள்ள ஒரு அம்மா அன்றைய தினத்தில் பக்தர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதலையும் குறைகள் நீங்க பரிகாரங்களையும் கூறுவாள். வெளியூர் மக்கள் அதிகம் வரும் அந்தக் கோயிலுக்கு காட்டுப்புதூர் மக்கள் அதிகம் வருவதில்லை.

ஆனால் அந்தக் கோயில் ஒரு பெரிய கோயிலாக வளர்ந்து வருகிறது.

நானும் என் மனைவியும் போய் திருப்தியோடு திரும்பியிருக்கிறோம். அந்தக் கோயிலில் இன்னொருவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்பார்.அவருக்கு சாமி அருள் வரும் போது குறைகள் நீங்க அருள் வாக்கு கூறுவார்.சாமி அருள் குறிப்பிட்ட நேரம் வரை தான் இருக்கும். அந்த நேரம் முடிந்ததும் அருள் வாக்கை சொல்வதை நிறுத்தி விடுவார்.

அப்படி குறி சொல்பவர் என்னுடன் குறத்தியறை பள்ளிக்கூடத்தில் படித்தவர். எனக்கு இவற்றில் எல்லாம் அதிக நம்பிக்கை இல்லை என்றாலும் அதை விமர்சிக்கும் அளவுக்கு நான் அறிவாளி இல்லை. ஆனால் கவலையோடு வரும் மக்கள் ஆறுதலுடன் திரும்புவதையும் ஒவ்வொரு மக்களின் முகங்களில் காணும் பொலிவையும் பார்க்கும்போது ஒரு பிரமிப்பு இருக்கிறது.எனக்கு அந்தக் கோயிலுக்குச் சென்று அம்மனை வணங்குவது மட்டும் பிடிக்கும்.

காட்டுப்புதூர் ஊரைச் சேர்ந்த நாகேந்திரன் கடுக்கரையில் வசித்து வருகிறார். அவரும் அவரது தம்பியும் பூப்புப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ் தர என்வீட்டுக்கு வந்தார்கள்.

தம்பி சுசீந்திரத்தில் வசித்து வருகிறார்.தம்பியின் வீட்டு விழா அது.

நான் ,“ லெட்டர்லாம் கொடுத்தாச்சா” கேட்டேன்.

“காலையில் இருந்தே கொடுத்துட்டு வாறோம். காட்டுப்புதூர் மாத்திரம் பாக்கி இருக்கிறது.”

“கடுக்கரை வரை போன நீங்கள் காட்டுப்புதூருக்கு ஏன் போகல்ல....பக்கம் தானே” நான் கேட்டேன்.

“நம்ம ஆட்கள் கொஞ்சம்பேர் தான் இருக்கிறார்கள்.என் தம்பியும் நானும் வெளியூரில் இருந்தாலும் எங்களுக்கும் வரி உண்டு. ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கணும். தம்பதிகளாக ஒவ்வொரு வீட்டுக்கும் போய் அழைப்பிதழ் கொடுத்து கூப்பிடணும்.அப்படிக் கூப்பிட்டால்தான் வருவார்கள். அழைப்பிதழ் கொடுக்கும் முன் அந்த ஊரில் பழமையான முத்தாரம்மன் கோயில் ட்றஸ்டியைப் பார்த்து ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழத்துடன் 105 ருபாயும் வைத்து அழைப்பிதழையும் வைத்துக் கொடுக்கணும்” நாகேந்திரன் சொன்னார்.

இப்படி ஒரு சம்பிரதாயம் இருப்பது இதுவரை எனக்குத் தெரியாதே......ஆச்சரியத்துடன் அவரைக் கேட்டேன், “ கோயிலுக்கு சொத்து எதுவும் உண்டா”

“ காட்டு்ப்புதூர் பண்ணையார் ஆறுமுகம் பிள்ளை ஒண்ணரை ஏக்கர் வயலை இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தார்.இப்பொழுது அது 25 ஏக்கராக பெருகி இருக்கிறது.

அவர் மேலும் சுடுகாட்டுக்காக ஒரு ஏக்கர் கொடுத்திருக்கிறார்.”

ஏற்கனவே நான் சிறுவனாக இருக்கும்போதே அறிந்த பண்ணையாரைப் பற்றிய இந்தத் தகவல் அவரது மேலுள்ள மதிப்பை மேலும் கூட்டியது.

அது எப்படி 25 ஏக்கரானது.....சாதாரணமாக குறைஞ்சுல்லா போகும்.வயலை பாட்டத்துக்கு வைத்திருப்பவர்கள் தலை முறை தலைமுறையாக வைத்திருப்பார்களே. பாட்டநெல்லும் சரியா வராதே. நான் கேட்டேன்.

மூன்று வருடம் தான் ஒருவரிடம் அந்த வயல் இருக்கும்.அதன் பிறகு ஏலம் நடைபெறும். பாட்டத்துக்கு எடுப்பவர்கள் அந்த நெல் விலயை முன் பணமாக கட்ட வேண்டும். கொடை நடக்கும் போது வரி கொடுக்கணும். கார்த்திகை மாதம் 30 நாளும் தினமும் சிறப்பு பூஜை நடக்கும்.துண்டில் பெயர் எழுதிப்போட்டு எடுக்கும் துண்டில் இருக்கும் நபர்கள் நான்கு பேர் சேர்ந்து அந்த சிறப்பு பூஜையை நடத்த வேண்டும்.வெளியூரில் வரி உள்ளவர்கள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் அந்தப் பூஜையை நடத்த நேரில் போக முடியாவிட்டாலும் அதற்கான பணத்தைக் கொடுத்து விடுவது தான் இதுவரை வழக்கமாக இருக்கிறது.

பண்ணையாரின் புகளும் ஊர்க்காரர்களின் கட்டுப்பாடும் பிரமிப்பைத் தந்தன.

Saturday, November 19, 2011

பறக்கையில் பிறந்த ஒருவர் லண்டனில்

கல்லூரியில் படிப்பை முடித்து சும்மா இருந்த போது ஒரு நாள் கடுக்கரை தகரவீட்டில் இருக்கும் எனது அண்ணனைப்(பாஸ்கரன்) பார்க்கப் போனேன். அப்போ அந்த வீட்டின் முன்னால் ஒரு சிறு கூட்டம் வெளியே சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது. அண்ணனும் வடக்கு திசையைப் பாத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

அண்ணன் என்னிடம் ,“ லண்டனில் இருந்து நீலாப்பிள்ளையும் ராமசாமியும் வந்திருக்காங்க.. இப்ப இங்க வருவாங்க.அதான் நான் வெளிய நிக்கேன்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் வந்தார்கள். அகமும் முகமும் மலர அவர்களை வீட்டுக்குள் கூட்டிச் சென்றார்.

கொஞ்சநேரம் பேசிவிட்டு அவர்கள் இருவரும் வேறொரு வீட்டில் நடக்கும் விருந்துக்குப் போனார்கள். அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்த அண்னன் என்னிடம் ,“ எங்கிட்ட ராமசாமிக்கு ரொம்ப ப்ரியம்.சங்கீதம் ரொம்ப புடிக்கும் அவர் திருவனந்தபுரம் A.G's office ல வேலை பாத்துக்கிட்டு இருந்தப்போ லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷனில் பதவி கிடைத்ததால் அங்கு குடும்பத்துடன் இருக்கிறார்....” எனச் சொன்னார்.

எனக்கு ஒரெ பிரமிப்பா இருந்தது.கனவில் கூட வெளிநாடு செல்வது நடக்காது அந்த காலத்தில். லண்டனில் குமரி மாவட்டத்தில் பிறந்த ஒருவர் வேலை பார்ப்பது என்பது ஒரு சாதாரணமான விசயமில்லை. எனக்குத் தெரிந்து அந்த காலத்தில் வேறு யாரும் வெளிநாட்டில் வேலை பார்த்ததாகவும் நினவில் இல்லை

அதன் பிறகு அவரை அவரது பெங்களூர் வீட்டில் பாத்து பேசியிருக்கேன்.

சமீபத்தில் 14-11-2011ல் துவரங்காடு ராஜா மண்டபத்தில் சந்தித்தேன்.எனக்குத் தெரிந்து முதல் முதலாக லண்டன் சென்று வேலை பாத்த இவரைப் பற்றி ஒரு Blog எழுதலாமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.அவரிடம் இதுபற்றிக் கூறினேன்.அவரும் அவருடைய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் .

சொன்னதில் எனக்கு பிடித்தது

Queen Elizabeth II ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த தேதி எது எனத்தெரியாததால் பிறந்த மாதமான ஜூன் மாதமுழுவதும் தினமும் கொண்டாடுவாராம். ஒவ்வொரு நாள் விருந்திலும் முக்கிய பிரமுகர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களை அழைத்து அவர்களுடன் ராணியும் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள். Buckingham அரண்மனையில் அப்படி நடக்கும் ஒரு விருந்தில் ராமசாமிப் பிள்ளையும் அவரது மனைவியும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

தன்னுடைய பணிக்காலம் முடிந்து இந்தியா திரும்பிய ராமசாமிப் பிள்ளை இந்திய அரசால்
I.A.A.S பணிக்கு உயர்த்தப்பட்டார். His last posting was Financial Advisor to Government of Karnataka which was ruled by H.D.Deva Gowda.

ராமசாமிப் பிள்ளை பிறந்த ஊர் பறக்கை. அவரது மனைவியின் ஊர் கடுக்கரை.

Tuesday, November 15, 2011

கடுக்கரையில் 80 வயதில் ஒரு சாமிகொண்டாடி

13-11-2011 ஞாயிற்றுக்கிழமை ஆண்டித்தோப்பில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் எனது மனைவியின் அண்ணனின் மகளது திருமணம் நடந்தது. அன்று மாலையில் திரும்பவும் வரணுமே ,கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க கடுக்கரையில் என் மச்சினன் ராஜேந்திரன் வீட்டுக்குப் போகலாமே என நான் அங்கு போனேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஊரில் உள்ள சுடுகாட்டு சொள்ள மாடன் கோயில் கொடை பற்றிப் பேச்சு வந்தது.‘மூன்று வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும் இந்தக் கொடைக்கு வரி எழுதுவது யார் தெரியுமா’ என்று கேட்டு விட்டு அவனே பதில் சொன்னான்.

‘மாமா இருக்கும் வரை மாமா தான் எழுதுவா’

‘எங்க அப்பாவா எழுதுவா... எனக்கு இதுவரை தெரியாதே...’என வியந்தேன்.

‘70 வருடத்துக்கு முன்னே நடந்த விசயத்தைச் சொல்லட்டுமா.... ’ சொன்னான்.

“அப்பம் மகராஜபிள்ளை என்பவர் தான் சொள்ளமாடன் கோயில் சாமி கொண்டாடி. அவர் தான் பூ எடுப்பார்.அவர் மறைவுக்குப் பின் யார் பூ எடுப்பது என்றப் பிரச்சனை வந்தது. சட்டம்பி வேலாயுதன் பிள்ளையும் அவரது அத்தானும் தாங்கள் தான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும் என மிகவும் தீவிரமாக இருந்தார்கள்...கொடை நடக்கும் நாள் நெருங்கியது.

வரி எழுத பெரியவர் என் அப்பா வந்தார்.கூடி இருந்த பெரியவர்கள் ஆவலோடு அடுத்து சாமி ஆடப்போவது வேலாயுதம் பிள்ளை தான் என எதிர் பாத்துக் கொண்டிருந்தனர்.

என் அப்பா,“ சரி, பூ எடுக்கப் போவது யாரு ...”

“ நான் தான் என ஒரு குரல் கூட்டத்தில் இருந்து வந்தது”.

குரல் வந்த திசையைப் பாத்து உமக்கு இங்கு என்ன உரிமை இருக்கு. முன்னால சாமி ஆடிய மாராச பிள்ளைக்கு பிள்ளைகள் இருக்குல்லா. மூத்தவனைக் கூட்டிட்டு வா... உடனே திருவாழி என்ற ஒருவர் எழுந்து போனார்.

மகராஜபிள்ளை வீட்டுக்குப் போய் அவரது மூத்தமகனை வரி எழுதும் இடத்துக்கு அனுப்பச் சொல்லி அவனது அம்மையைக் கேட்டார்.

அந்த தாய் , “ யாரு வேணுமானாலும் சாமி ஆடட்டும். என் மகனுக்கு 11 வயதுதானே ஆகிறது...எம்மகன விட்டுருங்கோ”

“கூட்டிட்டு வரச் சொன்னது யாரு தெரியுமா. ஆறும்பிள்ளை அத்தானாங்கும்....”

“நான் என்னத்த சொல்ல இனி. அவன் அந்த ரூம்ல தான் கிடக்கான் போய்ப் பாரு”

அந்த தாய் கண்ணிர் மல்க பூட்டிய அந்தக் கதவைத் திறந்தாள். அங்கு சிறுவன் வீரமணி ஒட்டிய வயறுடன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அம்மணமாய் நின்றிருந்தான். இதனைப் பார்த்து அதிர்ந்து போனவர் தன் தோளில் கிடந்த துவர்த்தை எடுத்து அவனது இடுப்பைச் சுற்றிக் கட்டினார். அந்தத் துவர்த்து அவ்வளவு கட்டியானதாக இல்லாததால் அவனது நிர்வாணம் முற்றிலும் மறைக்கப்படவில்லை.

பையன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு அந்தக் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்டான்.

பையனின் நிலமையைப் புரிந்து கொண்ட எனது அப்பா,சொள்ளமாட சாமியின் முன்னால் படைக்கப் பட்டிருந்த 4 முழ வேட்டியை (கச்ச முறி )எடுத்து தன் கையாலயே அவனது இடுப்பில் கட்டி அவனது கண்ணீரையும் அன்பாகத் துடைத்து விட்டார்.

சிறுவன் வீரமணி தான் இனி ‘சாமி கொண்டாடி’என அந்தக் கூட்டத்தில் என் அப்பா அறிவித்தார் . நியாயமான இந்த முடிவைக் கேட்டு எல்லோருமே முழுமனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை அதே வீரமணிதான் சாமி கொண்டாடியாக இருந்து வருகிறார். இப்பொ அவரது வயது 80.

இன்னொரு விசயம் தெரியுமா என என்னைக் கேட்டான் ராஜெந்திரன்.

ஆவலாக அவன் முகத்தை நான் பார்க்க அவன் சொன்னான்.“ கடுக்கரையில் எந்த சமுதாயத்தினர் கொடை விழா நடத்தினாலும் வரி எழுதுவது மாமா தான் (எங்க அப்பாதான்)”

நான் இதுவரை கேள்விப்படாத ஒரு விசயம்.... கேட்க மிகவும் சந்தோசமாகவே இருந்தது

Sunday, November 6, 2011

كويت ல் نوفمبر ( ١ ٢ ٣ ٤ ٥ ٦ ٧ ٨ ٩) ٢٠١١

٢٠١١ 6th November


٦ ٢٠١١ نوفمبر


இன்று நான் தூங்கப் போகும் இரவு குவைத்தில் கடைசி இரவு. செப்டம்பர் ٩-ம் தேதி யில் இருந்து இன்றோடு ٥٩ இரவுகள். ٦٠ பகல்கள் .

சலாம் மாலிக்கும்.

எல்லோருக்கும் சுக்ரான் கூறி விடைபெறுகிறேன்.

மா சலாம்
*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****
உயரம் என நினைப்பதெல்லாம் உண்மையில் உயரம் தானா

கடுக்கரை அய்யப்பன் கோயில் பக்கம் ஒரு பெரிய பாறை ஒன்று உண்டு.அதன் பெயர் ஆனைக்கல் பாறை. அதன் உச்சியில் யாராலேயும் ஏறவே முடியாது என்ற எண்ணம் சின்ன வயதில் எங்கள் எல்லோருக்குமே உண்டு. முருகன் என்னை விட 2 வயது மூத்தவன். அவனது வயது 13. அவனும் நானும் அந்த சமயத்தில் தி.மு.க.

கட்சிக்கொடிகளை அந்த ஆனைக்கல் பாறையின் பக்கத்தில் உள்ள சின்னச் சின்ன பாறைகளின் உச்சியில் வைத்து யார் கூடுதல் உயரமான பாறையில் வைக்கிறார்கள் என்று போட்டி நடக்கும். காங்கிரஸ் கொடியை சற்று உயரம் கூடுதலான பாறையில் ஒரு பையன் வைத்துவிட்டான்.அதை விட உயரம் கூடுதலான பாறையாக மிச்சம் இருந்தது அந்த ஆனைக்கல் பாறைதான். நானும் முருகனும் செய்வதறியாது திகைத்து ‘அய்யோ... தோத்துட்டோமே’ என்று பரிதாபமாய் நின்றோம்.

முருகன், “தங்கப்பா....ஏணி ஒண்ணு அப்பாக்குத் தெரியாமத் தருவியா”

ஏணியை எடுத்துக் கொண்டு போன முருகன் மறுநாள் என்னை அழைத்தான். ரோட்டில் போய் கொண்டே ஒரு இடம் வந்ததும் ஆனைக்கல் பாறை இருக்கும் இடம் நோக்கி கையை நீட்டினான். அங்கே தி.மு.க கொடி பறந்து கொண்டிருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். ஏணி வைத்தாலும் ஏற முடியாதே எப்படி ஏறிட்டான்.....எப்படி இறங்கினான்....இன்றுவரை எப்படி போய் கொடியை வைத்தான் என எனக்குத் தெரியாது.

அடுத்த நாள் நாங்கள் வெற்றிக் களிப்பில் இனி இந்த உயரத்தை எவனும் எட்டிவிட முடியாது என்று நெஞ்சினை நிமிர்த்தி நடந்ததெல்லாம் நினவுக்கு வருகிறது.என் அப்பா காங்கிரஸ். இன்று நினைக்கும்போது அந்த உயரம் ஏனொ என் நெஞ்சைக் குத்துகிறது.

உயரம் கூடுதல் என்றாலே .....தனிச் சிறப்புதான்....

மாடி வீட்டில் வாழ்பவனுக்கு அதிக மரியாதை உண்டு. அது ஒரு காலம் .
இப்போ 7-ஆவது மாடி 8-ஆவது மாடி எனவும் மனிதன் உயரமான இடத்தில் வாழ்கிறான்.முதல் தளத்தின் வாழ்பவனும் உச்சியில் வாழ்பவனும் நிலையில் ஒன்று போல் இல்லை. உயரத்தை வைத்து மனிதனின் நிலையை நிர்ணயிக்கும் காலம் இன்று இல்லை...

உயரமாக பறப்பவர் பிரதமர் அல்லது ஜனாதிபதி மட்டுமே அன்று.இன்று நானும் பறந்தேன் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா..?

வெளிநாட்டுக்கு போனவர்கள் தான் என் வீட்டுத்தெருவில் கூடுதல்.என் வீட்டு வரிசையில் உள்ள வீடுகளில் வெளிநாட்டுக்குப் போனவர்களே அதிகம். போகாத வீடே இல்லை எனச் சொல்லலாம்.

இன்றைய நிலையில் குவைத்துக்குப் பறந்து வந்ததோ செல்வதோ பெருமை இல்லை. எனக்குப் பெருமை என்பது என் மகனை நேசித்த அத்தனை உள்ளங்களும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அன்பு பாராட்டியது தான்.அதனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் மறக்கக்கூடாது.உயர்ந்த இந்த நினைவுகள் எந்தன் மனதில் நீங்காமல் இருக்கும்.

முற்றிலும் புதுமையான இந்த அனுபவத்தை ,சுகம் தரும் நினவுகளை சுமந்து செல்கிறேன்.


வட்டப் பாதையில் தானே செல்கிறோம்.....இன்னொரு புள்ளியில் சந்திப்போம். போய் வருகிறேன்.

இன்ஸா அல்லா.

Thursday, November 3, 2011

விடை பெறுகிறோம்

நான் இந்தியாவில் இருந்து வந்தது என் பொன்னு பேரனைக் காண.
நாள் நெருங்குகிறது இந்நாட்டை விட்டுப் போக. இன்னமும் நாலு
நாளே உள்ளன...வெகு வேகமாக சுற்றுதோ பூமி.
நாளும் அதனால் வேகமாய் போனது.திருவோண தினத்தில் வந்த
நான் பேரன் பிறந்தநாள் விருந்துண்டு பேருவகை அடந்தேன்.தீபாவளித் திரு
நாள் வந்த புதனில் புத்தாடை உடுத்து மக்களுடன் இருந்தேன்.ஏளாம்
நாள் நவம்பர் மாதத் திங்கள் மாலை வரை குவைத்தில்.மறு
நாள் செவ்வாய் காலையில் இந்தியாவினில் என் வீட்டில்

நான் சுமந்து செல்வது நல்ல உள்ளங்களின் அன்பை
என் மனதினில் உள்ள பசுமையான நினைவுகளில்
வானுயர் கட்டிடங்களோ ஊசிக்கோபுரமோ இல்லை;இங்குளோர்
அன்பை குழைத்து எம்மீது பூசிய அழகை சுமந்து செல்கிறோம்.
தாயிடம் தந்தையிடம் அண்ணனிடம் தோழனிடம்
அன்பைப் பொழிவது போல் அதுக்கு எள்ளளவும் குறையாமல்
எங்களையும் வீட்டுக்கழைத்து விருந்தளித்த பாங்கினை
வானில் பறக்கும் போதும் வீட்டினில் உறங்கும் போதும்
நினைவில் கொள்வோம்.போய் வருகிறோம்....

இந்து திருநாளாம் திருவோண நாளில் இந்தியாவில் இருந்து புறப்பட்டோம்.
இஸ்லாம் திருநாளாம் பக்ரீத்பெருநாளில் இங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறோம்

Wednesday, November 2, 2011

இறைவா இது உன் லீலை தானே

கருவறையில் உயிர்த்த நான் பிரிந்தேன் தாய் முகம் காண
பள்ளிப்பருவம் முடித்தவன் ஊரைப் பிரிந்தேன் கல்லூரி காண
மாவட்டம் மாறினேன் இளங்கலை கணிதம் பயில
மாநிலம்தனை பிரிந்தேன் முதுகலைக்காக...

தாய் வீட்டைப் பிரிந்தேன் சேய் நான் செய்த வீட்டில் வாழ
காலம் ஓடியது இளமை போய் முதுமையில் இப்போ
நாட்டை பிரிந்து வந்திருக்கேன் என் மக்களைக் காண
வியந்து நிற்கிறேன் இறைவா இதுவும் உன் லீலை தானே.

இளமையில் உறவுக்காக வியர்க்க வியர்க்க ஒடிய இவன்
இனியாகிலும் இளைப்பாறட்டும் என நினைத்தாயா இறைவா
இன்னும் எத்தனை நாளோ நானறியேன் உன் கருணை
என்றும் எனக்கும் எந்நாட்டுக்கும் வேணுமே.

Tuesday, November 1, 2011

குவைத்தில் வேஷ்டி கட்ட ஆசைப்பட்ட நான்

குவைத்தில் மங்காஃபில் நாலாம் பிளாக்கு ஒருவருக்கு மட்டுமே 11 கட்டிடம் இருக்கு.ஒவ்வொரு கட்டிடத்திலும் 36 வீடுகள். இவைகளை சரியாகக் கவனித்து வாடகையை வாங்குவதற்கும் பராமரிப்பு செய்யவும் ஒரு குவைத்தி மானேஜர் இருக்கிறார். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒரு Watch man உண்டு.அவர்களை இங்குள்ள மொழியில் ஹாரிஷ் என அழைக்கிறார்கள்.வீட்டின் குப்பைகளை எடுத்துப்போடவேண்டும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தறை தளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.11 பேரில் 4 மலையாளிகள்,7 பேர் எகிப்து நாட்டினர்.

நாங்கள் இருக்கும் கட்டிடத்தில் 13 மலையாளிகளும் 3 தமிழர்களும் வசிக்கிறார்கள். நைஜீரியா, பிலிப்பைன்ஸ்,ஸ்ரீலங்கா,எகிப்து நாட்டினர்களும் உண்டு.எல்லா வீடுகளிலும் AirCondition வசதி செய்யப்பட்டுள்ளது. வாடகைக்கு கொடுப்பதற்காகவே கட்டப்பட்ட வீடு.சுவர்கள் என்ற பெயரில் இருப்பவை நன்றாக இல்லை.கதவு,ஜன்னல் ஏதோ இருக்கு...

லிஃப்ட் வசதி உண்டு.கழிவு நீர் அனைத்தும் பூமிக்கடியில் குழாய் மூலம் போகிறது.ரோடு முழுவதும் இரு ஓரங்களிலும் பல விதமான கார்கள் அணிவகுத்து நிற்பதை காண அழகாக இருக்கும்.தூசி படிந்த இந்தக் கார்களை தண்ணீர் விட்டு கழுவுவதால் அந்த நீர் ரோட்டின் அருகே அங்கங்கே தேங்கி நிற்கும்.இது நடந்து செல்பவர்களுக்கு கொஞ்சம் இடஞ்சலா இருக்கும். தண்ணீர் போக ஓடை என எதுவும் இல்லை.

பேரனுக்கு மொட்டை போட ஒரு பார்பர்ஷாப்புக்குப் போனோம்.அதன் முதலாளி மலையாளி.உதயம் மெஸ், கீர்த்தி மெஸ்,அண்ணாமலை மெஸ், பாண்டியன் மெஸ் எல்லாமே தமிழர்களால் நடத்தப்படுகிறது.

15 நிமிட நடை தூரத்தில் கடற்கரை. அரை மணி நேரமாகும் நடைபாதையின் ஒரு முனையில் இருந்து புறப்பட்டு எதிர் முனைக்குப் போய் சேர. இரவும் நடக்கலாம். கடற்கரைக்கு போவதற்கு முன் இருவழிசாலையை கடந்து செல்ல வேண்டும். வேகமாக அதி வேகமாக வரும் கார்கள் சிவப்பு விளக்கு signal-க்கு நின்றாலும் நாம் கவனமாகச் செல்ல வேண்டும். நாங்கள் இருந்த இடத்தின் அருகாமையில் பள்ளிக்கூடம் இருக்கிறது. காலயில் 8 மணிக்கு துவங்கி 12.30 க்கு முடியும்.ஆசிரியரகள் சம்பளம் காணாது என strike பண்ணுவதாக பத்திரிகையில் படித்தேன்.ஆச்சரியமாக இருந்தது.

சின்னக்குழந்தைகள் சிரித்து விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.அந்தப் பிள்ளைகளுடன் அவர்கள் பெற்றோர்களும் பாதுகாப்புக்காகவும் கம்பனி கொடுப்பதற்காகவும் நிற்பார்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம் தான் தெரிந்தது. நண்பர்களுடன் பேசிக் கொள்ளும்போது இறுக்கம் தளர்ந்து முகங்கள் மலர்கின்றன. பேசி முடித்து போனபின் பழையபடி serious ஆகி விடுகிறார்கள்.பாசிகள் படர்ந்த குளத்தில் கையை வைத்தால் பாசிகள் அகன்று ,கையை எடுத்தால் முன்போல் சேருமே அது போல.

பெரம்பலூரில் இருந்து ஒரு அம்மாவைப் பாத்தோம். எங்களைப் போல வந்தவர்கள். பேசுவதற்கு ஆள் கிடைத்ததும் அவள் அடைந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் கண்டேன்.நாங்கள் இந்தியாவுக்குப் போகும் நாள் நெருங்குவது அவளுக்கு வருத்தமாக இருக்கிறதாம்.

என் பேரனை ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு போகும் போது ஒரு வயதான பெண் அவளது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு என் பேரனைக்காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவளருகே நான் சென்றதும் என்னைப் பாத்து ‘தமிழா’ எனக் கேட்டாள்.

“பேத்தியா பேரனா மகள் பிள்ளையா மகன் பிள்ளையா” என நான் கேட்க அவள் சொன்ன பதில் ஆச்சரியமாகவே இருந்தது.

“நான் 9 மணிக்கு வந்து இந்தக் குழந்தையின் அப்பா அம்மா வேலைமுடிஞ்சு 3 மணிக்கு வரும் வரை ஆயாவாக இருக்கேன். 90 K.D சம்பளம்.
எனக்கு ஆந்திரா தமிழ்நாடு பார்டர்...இன்னும் 3 வீடுகளுக்கு பொங்கி கொடுக்க போவேன் அதில 75 K.D கிடைக்கும்.நானும் அக்காவும் ஃபாஹீல்ல இருக்கோம்”

நிறைய பூனைகள் அங்கும் இங்கும் திரிவதைப் பார்த்த நான், ஒரு பூனை வயதான Watch man பின்னால் போவதைப் பார்த்தேன்.அந்தப் பூனை ஒரு அறையின் உள்ளே போனதும் இவர் பின்னால் ஓடிவந்து மறைவான இடத்தில் நின்று பூனை உள்ளே போகிறதா என பாத்துக் கொண்டிருக்க திரும்பிப் பாத்த பூனை இவரைக் கண்டு மறுபடியும் அவரை நோக்கி வந்தது.அவர் அந்தப் பூனையிடம் சைகையால் ஏதோ சொல்ல அது ரூமுக்குள் போய் படுத்துக் கொண்டது.தெரு நாயே இல்லாத இடத்தில் நாய் போல பூனை ஒன்று இருப்பதைப் பாத்து அவரிடம் நான் கேட்டேன் நீங்க வளக்கிறீங்களா என. அது தானாக வந்து என்னிடம் ஒட்டிக் கொண்டது என்றார்.

ஒரு மாதமே ஆன நிலையில் திடீரென வீடைக் காலி செய்து கொண்டு போன ஒரு இந்தியப் பெண்ணிடம் போகும் காரணம் கேட்டேன்.

”நான் ஒரு டெய்லர்...இங்கு வைத்து தைக்கக் கூடாது எனச் சொல்கிறார்கள்...பக்கத்து கடைகாரன் எனது ஊர்க்காரன் .... அவன் நான் தைத்தால் அவனுக்கு தொழில் பாதிக்கும் என்று பராதி சொல்லி இருக்கான். எனக்கு என்ற கர்த்தர் வேறொரு வழிகாட்டி.. அதுகொண்டு ஞான் இவிடே இருந்து போகுகையாணூ...”

மலையாளிகளின் ஒற்றுமையாய் இருப்பார்களே ......ஒரே நாடு....ஒரே ஊரு....ஒரே மதம்... இப்படியும் மனிதர்கள்.....பிதாவே இவர்களை மன்னித்தருள்வீர்.

கடைகளிலும் பல இடங்களிலும் காணும் மனிதர்களை அவர்களின் உடையை வைத்தே முஸ்லீம் எனவும் இந்த நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் வேட்டி அணிந்து தமிழ்நாட்டுக்காரன் எனக் காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

எனது பேரனின் Birth day party-க்கு வேட்டி அணிந்து வந்து தமிழனாய் குவைத்தில் என்னை நானே பாக்கவெண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன்.ஆனால் என் மனைவிக்கு விருப்பமில்லை.பேன்ட் போடல்லண்ணா பாஸ்போட்ட எங்க வப்பீங்க என கேட்டு பய முறுத்தி விட்டாள்....

வேட்டி அணிந்து சென்றேன்....என் மன திருப்திக்காக ..அன்பாக எங்களை அழைத்த ஆஸ்ராமம் மாதேவன் வீட்டுக்கு.

மீனா.......கத்திரிக்காயா......

முட்டை ஆம்ப்ளேட்டை சிறியதாக தோசை போல் வட்ட வடிவமாக்கி வார்த்து அதனை சற்றுச் சூடாக்கிய இரண்டு Bread piece-க்கும் இடையில் வைத்து சாப்பிட்டது முதல் தடவை என்பதால் மிகவும் ரசித்து சாப்பிட்டேன். தட்டத்தில் இருந்த அமைப்பின் அழகை பார்த்து என்னவெல்லாம் முட்டையிலும் சேர்ந்திருக்கிறது என்பதனைக் கேட்டு அறிந்து கொள்ள என் மனைவியிடம் சொன்னேன். அவளோ உங்களுக்கு கொழுப்பு இருப்பதால் முட்டை திங்கக் கூடாதுல்லா என்றாள்.

அப்படியா....சரி . Vegetable sandwich ஐ பன்னில் வைத்து சாப்பிடிருக்கேன்.bread -ல் வைத்து இங்க வீட்லதான் சாப்பிட்டிருக்கேன்.என்னென்ன காய்கறிகள் சேர்ந்திருக்கிறது என மருமகளிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் என் மனைவி.

சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவதற்கு தேவையான சமையல் செய்தவைகள் எல்லாம் இருந்தன.ஒரு தட்டத்தில் மீன்பொரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு துண்டும் சப்பையாய் மீன் வடிவத்தில் இருந்தது. சிறிது நேரம் கழிந்து சாப்பிடலாம்னு நினைச்சுட்டிருந்த எனக்கு நாக்கில் எச்சில் ஊறியது. நானே தட்டத்தினை எடுத்து சோறெல்லாம் போட்டு அந்த மீன் துண்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டேன். மிக ஆசையாய் முதலில் மீனை தின்போம் என எடுத்துப் பாத்தேன். ரெம்பவும் மெதுவாக இருந்தது....முள் எதுவுமே இல்லயே....என்னடா இது....என யோசித்துக் கொண்டே என் மருமகளிடம் கேட்டேன்....மீன் மாதிரி தெரியல்லியே என்றேன்...அது மீன் இல்ல மாமா....கத்தரிக்கா.... NET ல பாத்து தான் செய்தேன்.

அய்யய்யே நல்ல ஏமாந்திட்டேனே....ஆஹா... பேஷ் பேஷ் ...மிகவும் ஆனந்தமாய் இருந்தது. இதுபோல பல சுவையான விசயங்களை எழுதலாம் இன்னும் இரண்டு மாதம் குவைத்தில் இருந்தால்.....