Tuesday, November 1, 2011

குவைத்தில் வேஷ்டி கட்ட ஆசைப்பட்ட நான்

குவைத்தில் மங்காஃபில் நாலாம் பிளாக்கு ஒருவருக்கு மட்டுமே 11 கட்டிடம் இருக்கு.ஒவ்வொரு கட்டிடத்திலும் 36 வீடுகள். இவைகளை சரியாகக் கவனித்து வாடகையை வாங்குவதற்கும் பராமரிப்பு செய்யவும் ஒரு குவைத்தி மானேஜர் இருக்கிறார். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒரு Watch man உண்டு.அவர்களை இங்குள்ள மொழியில் ஹாரிஷ் என அழைக்கிறார்கள்.வீட்டின் குப்பைகளை எடுத்துப்போடவேண்டும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தறை தளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.11 பேரில் 4 மலையாளிகள்,7 பேர் எகிப்து நாட்டினர்.

நாங்கள் இருக்கும் கட்டிடத்தில் 13 மலையாளிகளும் 3 தமிழர்களும் வசிக்கிறார்கள். நைஜீரியா, பிலிப்பைன்ஸ்,ஸ்ரீலங்கா,எகிப்து நாட்டினர்களும் உண்டு.எல்லா வீடுகளிலும் AirCondition வசதி செய்யப்பட்டுள்ளது. வாடகைக்கு கொடுப்பதற்காகவே கட்டப்பட்ட வீடு.சுவர்கள் என்ற பெயரில் இருப்பவை நன்றாக இல்லை.கதவு,ஜன்னல் ஏதோ இருக்கு...

லிஃப்ட் வசதி உண்டு.கழிவு நீர் அனைத்தும் பூமிக்கடியில் குழாய் மூலம் போகிறது.ரோடு முழுவதும் இரு ஓரங்களிலும் பல விதமான கார்கள் அணிவகுத்து நிற்பதை காண அழகாக இருக்கும்.தூசி படிந்த இந்தக் கார்களை தண்ணீர் விட்டு கழுவுவதால் அந்த நீர் ரோட்டின் அருகே அங்கங்கே தேங்கி நிற்கும்.இது நடந்து செல்பவர்களுக்கு கொஞ்சம் இடஞ்சலா இருக்கும். தண்ணீர் போக ஓடை என எதுவும் இல்லை.

பேரனுக்கு மொட்டை போட ஒரு பார்பர்ஷாப்புக்குப் போனோம்.அதன் முதலாளி மலையாளி.உதயம் மெஸ், கீர்த்தி மெஸ்,அண்ணாமலை மெஸ், பாண்டியன் மெஸ் எல்லாமே தமிழர்களால் நடத்தப்படுகிறது.

15 நிமிட நடை தூரத்தில் கடற்கரை. அரை மணி நேரமாகும் நடைபாதையின் ஒரு முனையில் இருந்து புறப்பட்டு எதிர் முனைக்குப் போய் சேர. இரவும் நடக்கலாம். கடற்கரைக்கு போவதற்கு முன் இருவழிசாலையை கடந்து செல்ல வேண்டும். வேகமாக அதி வேகமாக வரும் கார்கள் சிவப்பு விளக்கு signal-க்கு நின்றாலும் நாம் கவனமாகச் செல்ல வேண்டும். நாங்கள் இருந்த இடத்தின் அருகாமையில் பள்ளிக்கூடம் இருக்கிறது. காலயில் 8 மணிக்கு துவங்கி 12.30 க்கு முடியும்.ஆசிரியரகள் சம்பளம் காணாது என strike பண்ணுவதாக பத்திரிகையில் படித்தேன்.ஆச்சரியமாக இருந்தது.

சின்னக்குழந்தைகள் சிரித்து விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.அந்தப் பிள்ளைகளுடன் அவர்கள் பெற்றோர்களும் பாதுகாப்புக்காகவும் கம்பனி கொடுப்பதற்காகவும் நிற்பார்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம் தான் தெரிந்தது. நண்பர்களுடன் பேசிக் கொள்ளும்போது இறுக்கம் தளர்ந்து முகங்கள் மலர்கின்றன. பேசி முடித்து போனபின் பழையபடி serious ஆகி விடுகிறார்கள்.பாசிகள் படர்ந்த குளத்தில் கையை வைத்தால் பாசிகள் அகன்று ,கையை எடுத்தால் முன்போல் சேருமே அது போல.

பெரம்பலூரில் இருந்து ஒரு அம்மாவைப் பாத்தோம். எங்களைப் போல வந்தவர்கள். பேசுவதற்கு ஆள் கிடைத்ததும் அவள் அடைந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் கண்டேன்.நாங்கள் இந்தியாவுக்குப் போகும் நாள் நெருங்குவது அவளுக்கு வருத்தமாக இருக்கிறதாம்.

என் பேரனை ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு போகும் போது ஒரு வயதான பெண் அவளது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு என் பேரனைக்காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவளருகே நான் சென்றதும் என்னைப் பாத்து ‘தமிழா’ எனக் கேட்டாள்.

“பேத்தியா பேரனா மகள் பிள்ளையா மகன் பிள்ளையா” என நான் கேட்க அவள் சொன்ன பதில் ஆச்சரியமாகவே இருந்தது.

“நான் 9 மணிக்கு வந்து இந்தக் குழந்தையின் அப்பா அம்மா வேலைமுடிஞ்சு 3 மணிக்கு வரும் வரை ஆயாவாக இருக்கேன். 90 K.D சம்பளம்.
எனக்கு ஆந்திரா தமிழ்நாடு பார்டர்...இன்னும் 3 வீடுகளுக்கு பொங்கி கொடுக்க போவேன் அதில 75 K.D கிடைக்கும்.நானும் அக்காவும் ஃபாஹீல்ல இருக்கோம்”

நிறைய பூனைகள் அங்கும் இங்கும் திரிவதைப் பார்த்த நான், ஒரு பூனை வயதான Watch man பின்னால் போவதைப் பார்த்தேன்.அந்தப் பூனை ஒரு அறையின் உள்ளே போனதும் இவர் பின்னால் ஓடிவந்து மறைவான இடத்தில் நின்று பூனை உள்ளே போகிறதா என பாத்துக் கொண்டிருக்க திரும்பிப் பாத்த பூனை இவரைக் கண்டு மறுபடியும் அவரை நோக்கி வந்தது.அவர் அந்தப் பூனையிடம் சைகையால் ஏதோ சொல்ல அது ரூமுக்குள் போய் படுத்துக் கொண்டது.தெரு நாயே இல்லாத இடத்தில் நாய் போல பூனை ஒன்று இருப்பதைப் பாத்து அவரிடம் நான் கேட்டேன் நீங்க வளக்கிறீங்களா என. அது தானாக வந்து என்னிடம் ஒட்டிக் கொண்டது என்றார்.

ஒரு மாதமே ஆன நிலையில் திடீரென வீடைக் காலி செய்து கொண்டு போன ஒரு இந்தியப் பெண்ணிடம் போகும் காரணம் கேட்டேன்.

”நான் ஒரு டெய்லர்...இங்கு வைத்து தைக்கக் கூடாது எனச் சொல்கிறார்கள்...பக்கத்து கடைகாரன் எனது ஊர்க்காரன் .... அவன் நான் தைத்தால் அவனுக்கு தொழில் பாதிக்கும் என்று பராதி சொல்லி இருக்கான். எனக்கு என்ற கர்த்தர் வேறொரு வழிகாட்டி.. அதுகொண்டு ஞான் இவிடே இருந்து போகுகையாணூ...”

மலையாளிகளின் ஒற்றுமையாய் இருப்பார்களே ......ஒரே நாடு....ஒரே ஊரு....ஒரே மதம்... இப்படியும் மனிதர்கள்.....பிதாவே இவர்களை மன்னித்தருள்வீர்.

கடைகளிலும் பல இடங்களிலும் காணும் மனிதர்களை அவர்களின் உடையை வைத்தே முஸ்லீம் எனவும் இந்த நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் வேட்டி அணிந்து தமிழ்நாட்டுக்காரன் எனக் காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

எனது பேரனின் Birth day party-க்கு வேட்டி அணிந்து வந்து தமிழனாய் குவைத்தில் என்னை நானே பாக்கவெண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன்.ஆனால் என் மனைவிக்கு விருப்பமில்லை.பேன்ட் போடல்லண்ணா பாஸ்போட்ட எங்க வப்பீங்க என கேட்டு பய முறுத்தி விட்டாள்....

வேட்டி அணிந்து சென்றேன்....என் மன திருப்திக்காக ..அன்பாக எங்களை அழைத்த ஆஸ்ராமம் மாதேவன் வீட்டுக்கு.

No comments:

Post a Comment