Tuesday, November 15, 2011

கடுக்கரையில் 80 வயதில் ஒரு சாமிகொண்டாடி

13-11-2011 ஞாயிற்றுக்கிழமை ஆண்டித்தோப்பில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் எனது மனைவியின் அண்ணனின் மகளது திருமணம் நடந்தது. அன்று மாலையில் திரும்பவும் வரணுமே ,கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க கடுக்கரையில் என் மச்சினன் ராஜேந்திரன் வீட்டுக்குப் போகலாமே என நான் அங்கு போனேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஊரில் உள்ள சுடுகாட்டு சொள்ள மாடன் கோயில் கொடை பற்றிப் பேச்சு வந்தது.‘மூன்று வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும் இந்தக் கொடைக்கு வரி எழுதுவது யார் தெரியுமா’ என்று கேட்டு விட்டு அவனே பதில் சொன்னான்.

‘மாமா இருக்கும் வரை மாமா தான் எழுதுவா’

‘எங்க அப்பாவா எழுதுவா... எனக்கு இதுவரை தெரியாதே...’என வியந்தேன்.

‘70 வருடத்துக்கு முன்னே நடந்த விசயத்தைச் சொல்லட்டுமா.... ’ சொன்னான்.

“அப்பம் மகராஜபிள்ளை என்பவர் தான் சொள்ளமாடன் கோயில் சாமி கொண்டாடி. அவர் தான் பூ எடுப்பார்.அவர் மறைவுக்குப் பின் யார் பூ எடுப்பது என்றப் பிரச்சனை வந்தது. சட்டம்பி வேலாயுதன் பிள்ளையும் அவரது அத்தானும் தாங்கள் தான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும் என மிகவும் தீவிரமாக இருந்தார்கள்...கொடை நடக்கும் நாள் நெருங்கியது.

வரி எழுத பெரியவர் என் அப்பா வந்தார்.கூடி இருந்த பெரியவர்கள் ஆவலோடு அடுத்து சாமி ஆடப்போவது வேலாயுதம் பிள்ளை தான் என எதிர் பாத்துக் கொண்டிருந்தனர்.

என் அப்பா,“ சரி, பூ எடுக்கப் போவது யாரு ...”

“ நான் தான் என ஒரு குரல் கூட்டத்தில் இருந்து வந்தது”.

குரல் வந்த திசையைப் பாத்து உமக்கு இங்கு என்ன உரிமை இருக்கு. முன்னால சாமி ஆடிய மாராச பிள்ளைக்கு பிள்ளைகள் இருக்குல்லா. மூத்தவனைக் கூட்டிட்டு வா... உடனே திருவாழி என்ற ஒருவர் எழுந்து போனார்.

மகராஜபிள்ளை வீட்டுக்குப் போய் அவரது மூத்தமகனை வரி எழுதும் இடத்துக்கு அனுப்பச் சொல்லி அவனது அம்மையைக் கேட்டார்.

அந்த தாய் , “ யாரு வேணுமானாலும் சாமி ஆடட்டும். என் மகனுக்கு 11 வயதுதானே ஆகிறது...எம்மகன விட்டுருங்கோ”

“கூட்டிட்டு வரச் சொன்னது யாரு தெரியுமா. ஆறும்பிள்ளை அத்தானாங்கும்....”

“நான் என்னத்த சொல்ல இனி. அவன் அந்த ரூம்ல தான் கிடக்கான் போய்ப் பாரு”

அந்த தாய் கண்ணிர் மல்க பூட்டிய அந்தக் கதவைத் திறந்தாள். அங்கு சிறுவன் வீரமணி ஒட்டிய வயறுடன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அம்மணமாய் நின்றிருந்தான். இதனைப் பார்த்து அதிர்ந்து போனவர் தன் தோளில் கிடந்த துவர்த்தை எடுத்து அவனது இடுப்பைச் சுற்றிக் கட்டினார். அந்தத் துவர்த்து அவ்வளவு கட்டியானதாக இல்லாததால் அவனது நிர்வாணம் முற்றிலும் மறைக்கப்படவில்லை.

பையன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு அந்தக் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்டான்.

பையனின் நிலமையைப் புரிந்து கொண்ட எனது அப்பா,சொள்ளமாட சாமியின் முன்னால் படைக்கப் பட்டிருந்த 4 முழ வேட்டியை (கச்ச முறி )எடுத்து தன் கையாலயே அவனது இடுப்பில் கட்டி அவனது கண்ணீரையும் அன்பாகத் துடைத்து விட்டார்.

சிறுவன் வீரமணி தான் இனி ‘சாமி கொண்டாடி’என அந்தக் கூட்டத்தில் என் அப்பா அறிவித்தார் . நியாயமான இந்த முடிவைக் கேட்டு எல்லோருமே முழுமனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை அதே வீரமணிதான் சாமி கொண்டாடியாக இருந்து வருகிறார். இப்பொ அவரது வயது 80.

இன்னொரு விசயம் தெரியுமா என என்னைக் கேட்டான் ராஜெந்திரன்.

ஆவலாக அவன் முகத்தை நான் பார்க்க அவன் சொன்னான்.“ கடுக்கரையில் எந்த சமுதாயத்தினர் கொடை விழா நடத்தினாலும் வரி எழுதுவது மாமா தான் (எங்க அப்பாதான்)”

நான் இதுவரை கேள்விப்படாத ஒரு விசயம்.... கேட்க மிகவும் சந்தோசமாகவே இருந்தது

No comments:

Post a Comment