Sunday, November 6, 2011

كويت ல் نوفمبر ( ١ ٢ ٣ ٤ ٥ ٦ ٧ ٨ ٩) ٢٠١١

٢٠١١ 6th November


٦ ٢٠١١ نوفمبر


இன்று நான் தூங்கப் போகும் இரவு குவைத்தில் கடைசி இரவு. செப்டம்பர் ٩-ம் தேதி யில் இருந்து இன்றோடு ٥٩ இரவுகள். ٦٠ பகல்கள் .

சலாம் மாலிக்கும்.

எல்லோருக்கும் சுக்ரான் கூறி விடைபெறுகிறேன்.

மா சலாம்
*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****
உயரம் என நினைப்பதெல்லாம் உண்மையில் உயரம் தானா

கடுக்கரை அய்யப்பன் கோயில் பக்கம் ஒரு பெரிய பாறை ஒன்று உண்டு.அதன் பெயர் ஆனைக்கல் பாறை. அதன் உச்சியில் யாராலேயும் ஏறவே முடியாது என்ற எண்ணம் சின்ன வயதில் எங்கள் எல்லோருக்குமே உண்டு. முருகன் என்னை விட 2 வயது மூத்தவன். அவனது வயது 13. அவனும் நானும் அந்த சமயத்தில் தி.மு.க.

கட்சிக்கொடிகளை அந்த ஆனைக்கல் பாறையின் பக்கத்தில் உள்ள சின்னச் சின்ன பாறைகளின் உச்சியில் வைத்து யார் கூடுதல் உயரமான பாறையில் வைக்கிறார்கள் என்று போட்டி நடக்கும். காங்கிரஸ் கொடியை சற்று உயரம் கூடுதலான பாறையில் ஒரு பையன் வைத்துவிட்டான்.அதை விட உயரம் கூடுதலான பாறையாக மிச்சம் இருந்தது அந்த ஆனைக்கல் பாறைதான். நானும் முருகனும் செய்வதறியாது திகைத்து ‘அய்யோ... தோத்துட்டோமே’ என்று பரிதாபமாய் நின்றோம்.

முருகன், “தங்கப்பா....ஏணி ஒண்ணு அப்பாக்குத் தெரியாமத் தருவியா”

ஏணியை எடுத்துக் கொண்டு போன முருகன் மறுநாள் என்னை அழைத்தான். ரோட்டில் போய் கொண்டே ஒரு இடம் வந்ததும் ஆனைக்கல் பாறை இருக்கும் இடம் நோக்கி கையை நீட்டினான். அங்கே தி.மு.க கொடி பறந்து கொண்டிருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். ஏணி வைத்தாலும் ஏற முடியாதே எப்படி ஏறிட்டான்.....எப்படி இறங்கினான்....இன்றுவரை எப்படி போய் கொடியை வைத்தான் என எனக்குத் தெரியாது.

அடுத்த நாள் நாங்கள் வெற்றிக் களிப்பில் இனி இந்த உயரத்தை எவனும் எட்டிவிட முடியாது என்று நெஞ்சினை நிமிர்த்தி நடந்ததெல்லாம் நினவுக்கு வருகிறது.என் அப்பா காங்கிரஸ். இன்று நினைக்கும்போது அந்த உயரம் ஏனொ என் நெஞ்சைக் குத்துகிறது.

உயரம் கூடுதல் என்றாலே .....தனிச் சிறப்புதான்....

மாடி வீட்டில் வாழ்பவனுக்கு அதிக மரியாதை உண்டு. அது ஒரு காலம் .
இப்போ 7-ஆவது மாடி 8-ஆவது மாடி எனவும் மனிதன் உயரமான இடத்தில் வாழ்கிறான்.முதல் தளத்தின் வாழ்பவனும் உச்சியில் வாழ்பவனும் நிலையில் ஒன்று போல் இல்லை. உயரத்தை வைத்து மனிதனின் நிலையை நிர்ணயிக்கும் காலம் இன்று இல்லை...

உயரமாக பறப்பவர் பிரதமர் அல்லது ஜனாதிபதி மட்டுமே அன்று.இன்று நானும் பறந்தேன் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா..?

வெளிநாட்டுக்கு போனவர்கள் தான் என் வீட்டுத்தெருவில் கூடுதல்.என் வீட்டு வரிசையில் உள்ள வீடுகளில் வெளிநாட்டுக்குப் போனவர்களே அதிகம். போகாத வீடே இல்லை எனச் சொல்லலாம்.

இன்றைய நிலையில் குவைத்துக்குப் பறந்து வந்ததோ செல்வதோ பெருமை இல்லை. எனக்குப் பெருமை என்பது என் மகனை நேசித்த அத்தனை உள்ளங்களும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அன்பு பாராட்டியது தான்.அதனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் மறக்கக்கூடாது.உயர்ந்த இந்த நினைவுகள் எந்தன் மனதில் நீங்காமல் இருக்கும்.

முற்றிலும் புதுமையான இந்த அனுபவத்தை ,சுகம் தரும் நினவுகளை சுமந்து செல்கிறேன்.


வட்டப் பாதையில் தானே செல்கிறோம்.....இன்னொரு புள்ளியில் சந்திப்போம். போய் வருகிறேன்.

இன்ஸா அல்லா.

1 comment:

  1. நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.............

    ReplyDelete