Monday, November 28, 2011

காட்டுப்புதூர் பண்ணையாரும் ஊர்வகை அம்மன் கோயிலும்

காட்டுப்புதூர் ஒரு சிற்றூர்.கடுக்கரை வழியாகவும் போகலாம்.அழகியபாண்டியபுரம் வழியாகவும் போகலாம். நான் பலதடவைக் காட்டுப்புதூர் வழியாக உலக்கை அருவிக்குச் சென்றிருக்கிறேன். இப்பொழுது காட்டுப்புதூர் ஊரின் ஒரு அற்றத்தில் ஒரு புதிய அம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்று விழங்குகிறது.

அந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மாலை பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்தக் கோயிலில் உள்ள ஒரு அம்மா அன்றைய தினத்தில் பக்தர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதலையும் குறைகள் நீங்க பரிகாரங்களையும் கூறுவாள். வெளியூர் மக்கள் அதிகம் வரும் அந்தக் கோயிலுக்கு காட்டுப்புதூர் மக்கள் அதிகம் வருவதில்லை.

ஆனால் அந்தக் கோயில் ஒரு பெரிய கோயிலாக வளர்ந்து வருகிறது.

நானும் என் மனைவியும் போய் திருப்தியோடு திரும்பியிருக்கிறோம். அந்தக் கோயிலில் இன்னொருவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்பார்.அவருக்கு சாமி அருள் வரும் போது குறைகள் நீங்க அருள் வாக்கு கூறுவார்.சாமி அருள் குறிப்பிட்ட நேரம் வரை தான் இருக்கும். அந்த நேரம் முடிந்ததும் அருள் வாக்கை சொல்வதை நிறுத்தி விடுவார்.

அப்படி குறி சொல்பவர் என்னுடன் குறத்தியறை பள்ளிக்கூடத்தில் படித்தவர். எனக்கு இவற்றில் எல்லாம் அதிக நம்பிக்கை இல்லை என்றாலும் அதை விமர்சிக்கும் அளவுக்கு நான் அறிவாளி இல்லை. ஆனால் கவலையோடு வரும் மக்கள் ஆறுதலுடன் திரும்புவதையும் ஒவ்வொரு மக்களின் முகங்களில் காணும் பொலிவையும் பார்க்கும்போது ஒரு பிரமிப்பு இருக்கிறது.எனக்கு அந்தக் கோயிலுக்குச் சென்று அம்மனை வணங்குவது மட்டும் பிடிக்கும்.

காட்டுப்புதூர் ஊரைச் சேர்ந்த நாகேந்திரன் கடுக்கரையில் வசித்து வருகிறார். அவரும் அவரது தம்பியும் பூப்புப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ் தர என்வீட்டுக்கு வந்தார்கள்.

தம்பி சுசீந்திரத்தில் வசித்து வருகிறார்.தம்பியின் வீட்டு விழா அது.

நான் ,“ லெட்டர்லாம் கொடுத்தாச்சா” கேட்டேன்.

“காலையில் இருந்தே கொடுத்துட்டு வாறோம். காட்டுப்புதூர் மாத்திரம் பாக்கி இருக்கிறது.”

“கடுக்கரை வரை போன நீங்கள் காட்டுப்புதூருக்கு ஏன் போகல்ல....பக்கம் தானே” நான் கேட்டேன்.

“நம்ம ஆட்கள் கொஞ்சம்பேர் தான் இருக்கிறார்கள்.என் தம்பியும் நானும் வெளியூரில் இருந்தாலும் எங்களுக்கும் வரி உண்டு. ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கணும். தம்பதிகளாக ஒவ்வொரு வீட்டுக்கும் போய் அழைப்பிதழ் கொடுத்து கூப்பிடணும்.அப்படிக் கூப்பிட்டால்தான் வருவார்கள். அழைப்பிதழ் கொடுக்கும் முன் அந்த ஊரில் பழமையான முத்தாரம்மன் கோயில் ட்றஸ்டியைப் பார்த்து ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழத்துடன் 105 ருபாயும் வைத்து அழைப்பிதழையும் வைத்துக் கொடுக்கணும்” நாகேந்திரன் சொன்னார்.

இப்படி ஒரு சம்பிரதாயம் இருப்பது இதுவரை எனக்குத் தெரியாதே......ஆச்சரியத்துடன் அவரைக் கேட்டேன், “ கோயிலுக்கு சொத்து எதுவும் உண்டா”

“ காட்டு்ப்புதூர் பண்ணையார் ஆறுமுகம் பிள்ளை ஒண்ணரை ஏக்கர் வயலை இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தார்.இப்பொழுது அது 25 ஏக்கராக பெருகி இருக்கிறது.

அவர் மேலும் சுடுகாட்டுக்காக ஒரு ஏக்கர் கொடுத்திருக்கிறார்.”

ஏற்கனவே நான் சிறுவனாக இருக்கும்போதே அறிந்த பண்ணையாரைப் பற்றிய இந்தத் தகவல் அவரது மேலுள்ள மதிப்பை மேலும் கூட்டியது.

அது எப்படி 25 ஏக்கரானது.....சாதாரணமாக குறைஞ்சுல்லா போகும்.வயலை பாட்டத்துக்கு வைத்திருப்பவர்கள் தலை முறை தலைமுறையாக வைத்திருப்பார்களே. பாட்டநெல்லும் சரியா வராதே. நான் கேட்டேன்.

மூன்று வருடம் தான் ஒருவரிடம் அந்த வயல் இருக்கும்.அதன் பிறகு ஏலம் நடைபெறும். பாட்டத்துக்கு எடுப்பவர்கள் அந்த நெல் விலயை முன் பணமாக கட்ட வேண்டும். கொடை நடக்கும் போது வரி கொடுக்கணும். கார்த்திகை மாதம் 30 நாளும் தினமும் சிறப்பு பூஜை நடக்கும்.துண்டில் பெயர் எழுதிப்போட்டு எடுக்கும் துண்டில் இருக்கும் நபர்கள் நான்கு பேர் சேர்ந்து அந்த சிறப்பு பூஜையை நடத்த வேண்டும்.வெளியூரில் வரி உள்ளவர்கள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் அந்தப் பூஜையை நடத்த நேரில் போக முடியாவிட்டாலும் அதற்கான பணத்தைக் கொடுத்து விடுவது தான் இதுவரை வழக்கமாக இருக்கிறது.

பண்ணையாரின் புகளும் ஊர்க்காரர்களின் கட்டுப்பாடும் பிரமிப்பைத் தந்தன.

No comments:

Post a Comment