Saturday, December 31, 2011

சீமந்த தங்கம் ,வெள்ளி வளைகாப்பு விலை 60 ருபாய் கிராமத்துக்கடைகளில்

ஐந்து நாட்களுக்கு முன் என் மனைவி என்னிடம் 31-12-11 சனிகிழமையன்று தெரிசனம்கோப்புக்கு சீமந்த வளைகாப்பு வீட்டுக்குப் போகணும்.அதனால் ஒரு செட் சூல் காப்பு வாங்கி வாருங்கள் என்று கூறினாள்.

சூல் காப்பு ஒரு செட் என்றால் ஒரு தங்க காப்பும் வெள்ளிக் காப்பும் இருக்கும்.

நான் மீனாக்ஷிபுரத்தில் எனக்குத் தெரிந்த தங்க ஆசாரி நண்பர் வீட்டுக்குப் போய் சூல்காப்பு கேட்டேன். அவர் உடனே எழுந்து என்னுடன் வருவதற்கு தயாரானார்.

ஏன், உங்களிடம் கிடையாதா வெளியில் கடையில் தான் போய் வாங்கணுமா ?

சூல் காப்பு நாஙகள் செய்வதென்றால் ஒண்ணேகால் கிராம் தங்கம் வேணும்.ஒரு கிராம் தங்கம் விலை 2724 ருபாய். ஒரு கிராம் வெள்ளி விலை 54 ருபாய். 3500 ருபாய் ஆகும். நாங்க செய்து வச்சா யாரு வாங்குவாஙக.

கடையில் கிடைக்கும் காப்பின் உண்மையான விலை 50 அல்லது 60 ருபாதான். 60 ருபாய்ணு சொன்னா உங்கள மாதிரிப்பட்ட ஆளுங்க வாங்க மாட்டீங்க. 100 அல்லது அதற்கு மேல சொன்னாதான் வாங்கீட்டுப் போவீங்க. ஒரு மில்லி தங்கம் கூட அதில் இருக்காது.கண்ணாடி வளையலப் போட்டால் போதுமே.

என் மனம் வாங்காதே என்று சொல்லவே காப்பு வாங்காமலேயே வீட்டுக்குப் போய்விட்டேன்.

நான் அவளிடம் , “ உன் வளைகாப்புக்கு வந்த காப்புகளை என்ன செய்தாய் ?” கேட்டேன்.

அவள், “ எனக்கு வந்த தங்க சூல்காப்புகளையெல்லாம் ஆசாரியிடம் கொடுத்து இரண்டு கல் காப்புகள் செய்தேன். வெள்ளிகாப்புகளைக் கொடுத்து ஒரு வெள்ளிச் சங்கு செய்தேன்.”என்றாள்.

நான் அவளிடம் சொன்னேன். “ இப்பம்லாம் வாங்குகிறகாப்பில் தங்கம்லா இருக்காது. அதனால் நாம் ருபாய் 200 அல்லது 300 ருபாய் கொடுத்துரலாம். அதுதான் பிரயோஜனமாக இருக்கும்”.

அவளும் நான் சொலவதை புரிந்து கொண்டாள்.

31-12-2011 இன்று நாங்கள் சீமந்த வீட்டுக்குப் போனோம். நாங்கள் நினைத்தது போலவே ருபாய் கொடுத்துவிட்டு வந்தோம்.

ஏமாறுகிறவர்கள் இருப்பதுவரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதிலும் படித்தவர்களும் ஏமாறத் தயாராய் இருப்பதுதான் மனசுக்கு வேதனையாக இருக்கிறது.

வரும் காலங்களில் மாற்றம் வருமா.....?

Thursday, December 29, 2011

மண்டல பூஜை நாளில்.....

கடுக்கரை நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் பாலமோர் சாலையில் பயணித்தால் சேர்ந்து விடும் ஒரு அழகான சிறிய கிராமம். மன்னர் ஆட்சியில் கடுக்கரை ஒரு முக்கியமான கிராமமாக இருந்தது. அரசியல் ரீதியாக பார்த்தால் ஜீவா,பிரட்டீஷ் அரசு அவரைக் கைது செய்ய போலீஸ் தேடிக் கொண்டிருந்த வேளையில் கடுக்கரையில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவர். தி.மு.க தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடுக்கரையில் அவரது கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக வந்திருக்கிறார்.

கோட்டைச் சுவர் போல் வடக்கு கிழக்கு மேற்கு மலைகள். ஊரை வலம் வரும் ஆறு. ரம்மியமான பசுமையான வயல். இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த அழகு. இது தான் கடுக்கரை.
இயற்கையாக அய்யப்பனின் ஆலயம் அமைந்த இடம் சபரிமலை.கடுக்கரையில் ஒரு உய்ர்ந்த பாறையில் சின்ன குன்றின் மீது அய்யப்பனின் கோவில் இருக்கிறது. 18 படிகள் பாறையிலேயே செதுக்கி எடுக்கப்பட்டு அமைந்திருக்கின்றன.

அய்யப்பன் சாமியைப் பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். அவ்வளவு அழகு.

30 வருடங்களுக்குப் பின் மண்டலபூஜை நாளில் நானும் என் மனைவியும் அய்யப்பன் சாமியை தரிசித்து விட்டு வந்தது மனசுக்கு சந்தோசமாக இருந்தது

Sunday, December 25, 2011

முப்பது வருடம் போனபின் நினைவஞ்சலி

25-12-1981 என் தந்தை மறைந்த நாள். இன்று 25-12-2011..
நினைவு நாள். முப்பது வருடம் முடிந்து விட்டது.
இப்பவும் இருப்பது போன்ற உணர்வுடன்
இன்றைய காலை இனிதாக விடிந்தது.

பாப்பாத்திதனைத் தனதாக்கி தங்கமெனைத் தனயனாக்கிய
என் அப்பாவை வணங்குவேன் தினமும்.

தள்ளாத வயதிலும் கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
தன்னை அணுகியவனை அன்பாகவும் ஆதரவுடனும்
அரவணைக்கும் ஆறுமுகம் பிள்ளையின் பிள்ளையாய்
பிறந்தது நானடைந்த பாக்கியமே.

நோயுற்ற போது சேய் நான் என் தந்தையைத்
தாய் போல் பேணி பாது காத்ததும் எத்தனையோ
சேய்களிருந்தும் கடைசி வரைக் கூடவே இருந்துக் காத்த
கடைசிப் பிள்ளை நான் என்பதும் நானடைந்த பாக்கியம் தானே.

எங்கள் வீட்டுத் தங்கத்தின் புகழ் பாட விரும்பி தங்கம் நான்
அறிந்த சில உண்மைகளை பதிவு செய்கிறேன்.


இல்லம் இல்லா குப்பன் இல்லம் பெற்றதையும்
நிலமில்லா சுப்பன் நிலம் பெற்றதையும்
பலர் என்னிடம் கூறக் கேட்டு வியந்ததுண்டு

ஆடியிலும் கோடையிலும் பஞ்சம் வருவதுண்டு.
கொடிய நோயான வறுமை வாட்டும் போது சிலர்
வாடிய முகத்துடன் தேடிப் போகும் இடம்
கடுகையில் ஓரிடம் தான் உண்டு அப்போது.
அது நெல்லுக்கடை ஆறுமுகம் பிள்ளையின் வீடுதான்.

காசும் நெல்லும் பெற்றுச் செல்வர் சிலர்.
பசியாறிச் செல்வர் பலர்.

ஊருக்கு உறுப்பினராகி பின் பஞ்சாயத்துக்குத் தலைவராகி
ஏழூர்களின் முதலாம் மனிதராய்த் திகழ்ந்தார்.
அஞ்சுகிரி அய்யப்பனுக்கு கோவில் காண அஞ்சுகிரிப்
பொத்தையில் தன் சொத்தினைக் கொடுத்து மகிழ்ந்த
பெருமான் ஒரு மண்டல பூஜைநாளில் சிவனடி சேர்ந்தார்.

மார்கழிப் பனிவிழும் அதிகாலை நேரத்தில்
காலனவன் கவர்ந்து சென்றான் எந்தையின் உயிரை.அவர்
உறங்கியது போலவே இருந்தது உயிர் போன பின்னும்.
வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும்
மடிந்தாலும் இது போலவே மடிய வேண்டும்.

Wednesday, December 21, 2011

இரு தலைமுறையினரின் சதாபிஷேகவிழா

 
Posted by Picasa


 
Posted by Picasa


கடுக்கரையில் 1960 ஜனுவரி மாதம் 25-ஆம் தேதி (1135-ஆம் ஆண்டு தை மாதம் 12-ஆம் தேதி) திங்கள் கிழமை எங்க வீட்டில் அதாவது ஈஸ்வரிபவனத்தில் எங்க தாத்தா மெய்க்கும்பெருமாள் பிள்ளைக்கும் ஈஸ்வரவடிவுக்கும் சதாபிஷேக விழா நடந்தது. வீட்டுக் களத்தில் பெரிய பந்தலில் சாப்பாடு விருந்தும் நடந்தது.

மெய்க்கும்பெருமாள் பிள்ளையின் மகள் மீனாட்சி பெருமாள்பிள்ளையின் மகனான பேரனின் பெயர் மெய்க்கும்பெருமாள் பிள்ளை. அவரது மூத்த மகன் ஆறுமுகப்பெருமாள் -பகவதி அம்மாள் மகளான பேத்தியின் பெயர் ஈஸ்வரவடிவு. இவர்களது சதாபிஷேகம் 2011-11-30 புதன்கிழமை பெருமாள் கோவில் திருமணமண்டபத்தில் நடந்தது.

 
Posted by Picasa

Tuesday, December 20, 2011

விருந்தில் தொலைந்த மோதிரம்

நான் இன்று காலையில் இந்துக்கல்லூரிக்குச் சென்றேன்.கல்லூரியில் என்னுடன் வேலை பாத்த இப்பொழுதும் வேலை பார்க்கிற ஆசிரியர் வில்சனைக் கண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம்.

அவரைப் பார்த்து திரும்பி வீட்டுக்கு வரும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

நான் கல்லூரியில் கணிதத்துறை தலைவராக பொறுப்பேற்றபின், ஈஸ்வரப்பிரசாத் கணிதத்துறையில் முதல் Ph.D பட்டம் பெற்றதற்காக விருந்து தர விரும்பினார்.
என்னிடம் வந்து சார் ஹோட்டலில் போய் நாம் சாப்பிடுவதைவிட ஒரு குக்கை ஏற்பாடுபண்ணி சமையல் செய்து விருந்து வைக்கலாமே என என்னிடம் கூறினார்.

நானும் 'அதுதான் மிக நல்லா இருக்கும்' என்று சொன்னேன்.

எங்கே வைப்பது என கேட்க அவர் என்வீட்டில் அனைவரையும் அழைக்கலாம் அது எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்று பிரசாத்தே சொன்னார். நான் முழு மனதுடன் சம்மதித்தேன்.

இடம் என்னுடைய வீடு எனத் தீர்மானமானது. எல்லாம் முறைப்படி நினைத்தபடி ஒரு குறிப்பிட்ட தேதியில் விருந்து நடந்தது.

இரவு கணிதத்துறை ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்தனர். என் வீட்டு மாடியில் தான் எல்லோரும் கூடி இருந்து விருந்து அருந்தினோம். விருந்து முடிந்த பின் எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர்.

எங்களுடன் வந்தவர்களில் கடைசியாக சாப்பிட்ட மகேஷ்வரன் கீழே வந்து என்னிடம் ஒரு தங்க மோதிரத்தைக் காண்பித்து ‘இது மாடியில் கிடந்தது. உங்கள் மோதிரமா ?’ எனக் கேட்டார்.

நான்,“இது என்னுடையது இல்லை. யாருக்கென்றும் தெரியவில்லை.நாளைக் காலையில் பாத்துக்கலாம்” என்று சொல்லி அவரிடம் அவர் மோதிரத்தைக் கண்டு எடுத்து என்னிடம் தந்ததற்கு நன்றி சொன்னேன்.

அவர் போனபின் நான் அந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் ஒரு பெண் அணியும் மோதிரம் எனப் புரிந்து கொண்டேன். பின் சற்றுத் தீவிரமாக நானும் என் மனைவியும் மோதிர அமைப்பை பார்த்ததில் அது அணிபவர்கள் யாராக இருக்கும் என ஓரளவு கணித்தோம். அதன் படி வில்சன் சாரிடம் போன் பண்ணி விசயத்தைக் கூறினேன்.

வில்சன்,“ சார்.... என் மனைவியின் மோதிரம் தான் அது. வீட்டுக்கு வந்த உடனே அவள் மோதிரம் தொலைந்து போன விசயத்தினை என்னிடம் கூறினாள்....சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் போன் வந்தது” என்றார்.

அடுத்தநாள் மோதிரத்தினை அவரிடம் கொடுத்தேன்.

அதன்பிறகு நாங்கள் சிவலோகத்திற்கு ஒரு நாள் காலையில் போய் மாலையில் வந்தோம். அங்கு எல்லோரும் வெகு நேரம் குளித்து விட்டு வெளியே வரும்போது எங்களில் ஒருவர் தன்னுடைய கை விரலில் மோதிரம் இல்லாதிருப்பதைக்கண்டார்.

அவர் வில்சன் சார்.

Sunday, December 18, 2011

அடுத்தவர் வீட்டு மனையில் பூமி பூஜை

சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகரில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தோம். அது புதிதாக உருவான பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீட்டு மனைகள் உள்ள இடம். கிருஷ்ணன் கோவிலின் தெற்காக அமைந்த மனை,சுசீந்திரம் ஊரின் மேற்குப் பக்கம் உள்ள மனைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக புதியதாக வீடுகள் கட்டப்பட்டு பல மனைகள் வீடு அமைவதற்காக காத்திருக்கின்றன.

நான் போய் இருந்த வீட்டின் பக்கத்தில் இரண்டு மனைகளில் வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. 16 பில்லர்கள் போடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

என் அருகே இருந்தவரிடம் ,“ அங்கே கட்டும் வீடு பெரிதாக இருக்கிறதே. அது யாருக்கு... நமக்கு தெரிஞ்ச ஆளா?”

“அது ஒரு ஆளுடைய மனை இல்லை. ரெண்டு பேருடையது” என்றார்.

“ஓஹோ.... ரெண்டு பேரும் ஒண்ணு போலவே வீடு கெட்டுகிறார்களே....அண்ணன் தம்பிகளா....” நான் கேட்டேன்.

“அப்படி எல்லாம் இல்ல... ஒரு தமாஷ் நடந்து போச்சு” என்றார்

“என்னது.... தமாஷ் நடந்து போச்சா.. என்ன தமாஷ் நடந்துச்சு...” கேட்டேன்

“ரெண்டுமனைகளில் வடக்கு மனைக்கு சொந்தக்காரர் வீடு கட்ட வேண்டும் என நினைத்து அய்யரை எல்லாம் அழைத்து வந்து பெரிய பூஜையெல்லாம் போட்டு சொந்தக்காரர் புடை சூள வந்து கல் எல்லாம் போட்டு வேலையையும்ம் நல்ல நாள் பாத்து ஆரம்பித்து விட்டார்.வேலையும் நடந்து எட்டு குழிகள் தோண்டப்பட்டன. மழை வந்து விட்டதால் பணி நிறுத்தப்பட்டது. மழை வராமல் இருந்தால் எட்டு தூண்கள் எழும்பி இருக்கும்....நல்ல காலம் மழை வந்து அவரைக் காப்பாத்திற்று...”

“ என்ன சொல்றீங்க. மழை வந்து கெடுத்துற்றுனு சொல்லுங்கோ” என்றேன்.

“அவர் கல் போட்டதும் பூஜை செய்ததும் அவரது மனையில இல்ல. அடுத்த தெக்கு மனையில். அது அவரது மனையே இல்லை”

நான் மிகுந்த வியப்புடன் அந்த ரெண்டு மனைகளின் அருகே சென்றேன். என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். “ இப்படி வேலை நடந்திருப்பது தெற்கு மனையின் சொந்தக்காரருக்குத் தெரியுமா...?. விசயம் தெரிந்தால் சண்டை வருமே.”

‘அவர் தோண்டிய குழியை மண் போட்டு நிரப்பிக் கொடுத்துருவாரு’

அப்பொழுது ஒரு வயதான பெரியவருடன் ஒரு தம்பதியினர் மனை அருகே வந்து கொண்டிருந்தனர். சுத்தி சுத்தி பார்த்தார்கள் . அது அவர்களுடைய மனைதானா .அவர்களால் பாத்து உறுதியாக அந்த மனை தங்களுக்கு உரிமையானது என்று சொல்ல முடியவில்லை. நாளை லேய் அவுட்டைக் கொண்டு வந்து பாக்கணும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களுடன் வந்த பெரியவர் என் கையைப் பிடித்து “ பொன்னப்பா இங்க நிக்க என்ன விசயம்” என்று கேட்டதும் தான் நான் அவரைப் பார்த்தேன்.

அவர் எனது ஆரம்பப் பள்ளிக்கூட ஞானத்து வாத்தியார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்த நான் மடிப்பை எடுத்து சரியாக்கி மிகவும் பௌயமாய் நின்று ,“ என் பேரைக் கூட இந்த வயதிலும் ஞாபகம் வச்சிருக்கீங்களே சார்...” என் கண்ணில் நீர் தழும்பியது.

“எப்படி பொன்னப்பா உன்ன மறக்க முடியும். நீ யாரு.கடுக்கரை ஆறும்பிள்ள அண்ணாச்சியின் மகன் லா.கடுக்கரையில் வேலை பாக்கும்போது தினமும் உங்க வீட்ல தான் நாங்க சைக்கிள வைப்போம்” என்றார்.

அந்த தெக்கு மனையின் சொந்தக்காரர் எனது ஆசிரியர் ஞானத்து சுப்பிரமணியபிள்ளை சாரின் மகன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.

Saturday, December 17, 2011

இது வரை நான் போகாத பூதப்பாண்டி கோயில்


Posted by Picasa
கார்த்திகை கடைசித் திங்கள் சிவன்கோவிலுக்குப் போகவேண்டும் என்று என் மனைவி விரும்பினாள். இதுவரை ஊர்ப்பக்கத்தில் இருந்தாலும் போகாத பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க சுவாமி கோவிலுக்குப் போகலாம் என முடிவெடுத்து நான்,என் மனைவி, ஆறுமுகப்பெருமாள் அவரது மனைவி எல்லோரும் அவரது காரில் கடுக்கரைக்குப் போய்
 திரும்பும் போது பூதப்பாண்டி கோவிலுக்குப் போனோம்.

கடுக்கரையில் சதாபிஷேக விழாவன்று அவர் வராததால் என் அத்தான் காந்தியின் வீட்டுக்குப் போக எண்ணி எங்களையும் அழைத்ததால் நாங்களும் போனோம்.

பூதப்பாண்டி கோவில் வாசல் வழி உள்ளே சென்றதும் பாறையின் மீதுள்ள சிவனும் சிவலிங்கமும் இருந்ததைப் பார்த்தேன். இடது பக்கமாக காங்க்ரீட் நடைபாதையில் நடந்து வந்தோம். தெற்கு வாசல் வழியே வெளியே போனால் தெப்பக்குளம். கிழக்குப் பக்கம் உள்ள கோவில் நுழைவாசல் வழியே கோவிலின் உள்ளே போகுமுன் காலை பைப் நீரில் கழுவி விட்டு வர வேண்டும் என சுவரில் ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது.

பைப்பில் தண்ணீர் வரவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்த உடன் அங்கிருந்த ஒருவர் சட்டை போடக்கூடாது கழற்ற வேண்டும் என சொல்லவே நாங்கள் சட்டையைக் கழற்றினோம்.

சட்டையைக் கழற்றச் சொன்னவன் என்னையே உற்றுப் பார்த்து விட்டு உங்களுக்கு கடுக்கரைதானே என்றான். நான் ஆமாம் என்றேன். உனக்கு எந்த ஊர் என்று கேட்க ‘தெரிசனம்கோப்பு’ என்றான். அதனைக் கேட்ட என் மனைவி திரும்பிப் பாத்து அவனிடம் ‘ நீ கிருஷ்ணன் தானே’ எனக் கேட்டாள்.

ஆமாம் என்ற கிருஷ்ணன் அவளைப் பாத்து ‘நான் உங்க வீட்ல வளந்தவன்லா... சுந்தரத்தின் மகன் நான்’ என்றான். அதன்பிறகு  அவன் எங்கள் கூடவே வந்து ஒரு guide போல விளக்கமாக கோவிலைப் பற்றி சொன்னான்.

கோவில் கருவறை சிறிய குன்றுபோல் இருக்கும் பெரிய பாறையைக் குடைந்து எடுத்தது.அதில் பூதலிங்க சுவாமி சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். கொடி மரம் இல்லையே எனக் கேட்டேன். புதிய கொடிமரம் வைக்கப்போகிறார்கள். அதோ அதுதான் புதிய கொடிமரம் என்று கான்பித்த இடத்தைப் பார்த்தோம்.கொடிமரம் தரையில் ஒரு நீண்ட தகர வளைவில் தரையில் மரப்பகுதி படாமல் வைக்கப்பட்டிருந்தது. துணி சுற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் அதன் மீது எண்ணெயை ஊற்றுகிறார்கள். எண்ணெயில் ஊறிக் கொண்டே இருக்கிறது கொடிமரம். சிவகாமி அம்மன் சன்னதிக்கும் மற்றும் சுற்றி உள்ள எல்லா சன்னதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தான் கிருஷ்ணன்.

கோவிலை விட்டு வெளியே வந்த போது ஒருவர் என்னெதிரே வந்து,“  நீங்க இந்துக்கல்லூரியிலதானே வேலை பார்க்கிறீங்க” எனக் கேட்டார்.
“ வேலை பார்த்து இப்பம் ரிட்டயர்டாயிற்றேன்” என்றேன்.

“உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். நான் H.R&C.E -ல் வேலை பாக்கும்போது இரவிபுதூர் அம்மன் கோவில் கணக்கு பாக்க வருவேன்.அந்தக் கோவிலுக்கு அப்பாதான் ட்ற்ஸ்டியாக இருந்தார். கணக்கு மிகவும் சரியாக இருக்கும். அவர் போல் நான் ஒரு ஆளை என் செர்வீசில் பாத்ததே இல்லை.”

அவர் பேசி விட்டு போகும்போது, சொன்ன வார்த்தைகள் நான் வீடு வந்து சேர்ந்தபின்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

“ உங்க அப்பா ஒரு பெரிய மனிதர். மதிக்கப்பட வேண்டியவர்.”

இந்த வயதிலும் இது வரை இந்தக் கோவிலுக்குள் நான் போகாமல் இருந்தது எனக்கே என்னவோ போல்தான் இருந்தது.திருவிழா, தேரோட்டம் என வந்த போதும் கோவிலின் உள்ளே போனதே இல்லை. நினைத்தால் வெட்கமாகவும் இருக்கிறது

Tuesday, December 13, 2011

வடக்குத்தெரு ராமன் பிள்ளை செய்த மோர்

கடுக்கரைக்கு போய் ராஜேந்திரன் வீட்டுக்குப் போனேன். அங்கு ராமன் பிள்ளையும் மற்றும் சிலரும் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பாத்ததும் ராமன் பிள்ளைக்கு ஒரே சிரிப்பு ... நான் என்னா.. என்னப் பாத்ததும் சிரிக்கீங்க .... என்ன விசயம்...என்று கேட்டேன்.

ராஜேந்திரன்," ஒண்ணுமில்லே. அந்த மோரு செய்த கதையை உங்ககிட்ட சொல்லியாச்சா என்று மாமா கேட்கவும் நீ வரவும் சரியாக இருக்கிறது" என்றார்..

ராஜேந்திரன் சொல்ல ஆரம்பித்ததும் அதை நினச்சு நினச்சு சிரித்துக் கொண்டே இருந்தார்.

கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் அனவரும் கீரிப்பாறைக்கு சென்றனர்.பொன்னீலன் சார் தான் அனைத்து ஏற்பாடுகளைச் செய்தார். ராஜெந்திரனை அழைத்து சமையலுக்கு ஒரு ஆளை அழைத்து வரச்சொன்னார்.கீரிப்பாறையில் உள்ள Tourist Bunglow -ல் தான் எல்லோரும் அமர்ந்து கலந்துரையாடினார்கள்.சமையல் பெரையில் சமையல் காரர் ராமன் பிள்ளை தான் வாங்கி வந்த காய்கறிகள் , பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னீலன் சார் ராமன்பிள்ளையிடம், “ ஐயா! மோரு வாங்கினீங்களா....வானமாமலை சாருக்கு மோர் கண்டிப்பா வேணும்...”

’அய்யோ... மறந்து போச்சே... மோரு வாங்கல்லியே...’ ராமன்பிள்ளை சொன்னார்.

பொன்னீலன் சாரின் முகம் வாடியதைக் கண்ட ராஜேந்திரன் ராமன் பிள்ளையிடம்,“என்ன மாமா இப்படி செய்திட்டீங்க....இப்பம் என்ன செய்ய....என்னை ஏன் இப்படி கஷ்டப் படுத்துறீங்க”....

“மருமகனே , ஏன் வருத்தப்படுகீங்க....மோர்தானே வேணும் ....செய்துட்டாப் போச்சு”

“என்னது... மோரை செய்வீங்களா....”

“நீங்க ரெண்டு பேரும் இப்பம் இந்த ரூமை விட்டுப் போங்கோ. சமையல் எல்லாம் முடிஞ்சு மோரு செய்த பின் உங்கள கூப்பிடுகேன். மோரை ருசி பாத்தபின் சொல்லுங்கோ எப்படீன்னு.”

சாப்பிடும் நேரம் நெருங்கியது. “சாப்பாடு ரெடியா..... மாமா என்ன ஆச்சு.. மோருக்கு என்ன செய்தீர். எங்கிட்ட மோர் எப்படி செய்வீர் எனச் சொல்லும். நானும் தெரிஞ்சிக்கேனே” ராஜேந்திரன் சொல்லவும் பொன்னீலன் சாரும் சமையல் பெரைக்குள் வந்து விட்டார்.

“ மருமகனே, நீங்க கொஞ்ச நேரம் உள்ளே போங்கோ.....தயவு செய்து நான் கூப்பிட்ட பின் வாங்கோ....”

நேரம் வந்ததும் ராமன்பிள்ளை அழைக்கவே ராஜேந்திரனும் பொன்னீலன் சாரும் போனார்கள்.

பொன்னீலன் சார் குடித்தார். அவர் முகத்தில் ஒரே மகிழ்ச்சி...ரொம்ப நல்லா இருக்கு .. மோரைப் போலவே ருசியாய் இருக்கிறதே என்றார்.

எல்லோரும் நன்றாக ருசித்துச் சாப்பிட்டார்கள். வானமாமலை சார் மட்டும், ‘ இது மோர் இல்லையே... வேறு என்னவோ போல் இருக்குதே’ என்றார்.

ராஜேந்திரன், “ ஏன்.. நல்லா இல்லையா?” கேட்டார்.

“மோரை விடவும் நன்றாக இருக்கு” சொன்னார்.

நான் ராமன் பிள்ளையிடம் ,“ எனக்கு நீங்க மோர் செய்து தரணுமே..... நாக்கில் நீர் ஊறுகிறதே.”

அது என்ன பெரிய காரியமா... செய்துட்டாப் போச்சு

Monday, December 12, 2011

வடக்குத்தெரு ராமன்பிள்ளையும் புதுக் கண்ணாடியும்





கடுக்கரை ஊரில் வடக்குத்தெருவின் முடிவில் ஒரு குளம்.அது தென் வடலாக நீண்ட குளம்.கிழக்குப்பக்கக் கரை காட்டுப்புதுர்ர் செல்லும் சாலை அந்தச்சாலை வழியே செல்லும் போது ஒரு பெரிய ஆலமரம். அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் திட்டு திட்டாக இருக்கும் பாறை.எப்பொழுதும் அந்த இடம் நிழல்தரும் குழுமையாக இருக்கும்.வயலுக்குப் போவோர் வருவோர் அந்த இடத்தில் இளைப்பாறுவது வழக்கம். அதன் பக்கத்தில் உள்ள வயல்களில் அறுவடை செய்வோர் அந்தப் பாறையில் வைத்து சூடடிப்பது வழக்கம்.

நிழல் தரும் அந்தப் பாறையில் ஒருவர் சிந்தனை செய்யும் பாவனையில் வடக்கு மலையை பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

கண்ணாடி போட்டிருந்த அவர் மிகக் கூர்மையாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த வழியே சென்ற பெண்கள்.“ சமையர்கார அண்ணெ, என்னத்த உத்துப் பாத்துக்கிட்டிருக்கீரு...அப்படி அங்க என்னதான் இருக்கு.” கேட்டார்கள்.

‘ஒண்ணுமில்ல. நேத்தைக்குத்தான் புதுசா கண்ணாடி போட்டேன். அது எப்படி இருக்குன்னு பாத்துக்கிட்டிருக்கேன்.’

மலைக்கு அப்புறம் உள்ள இடமும் தெரியுதாக்கும் என நக்கலாக கேட்கிறாள் ஒரு பெண்.

அவர் , “ ச்சேச்சே....அது தெரியாதுல்லா. அந்தப் பாறையில ஒரு சின்ன எறும்பு ஊர்ந்து போவது மாத்திரம் மிகத் தெளிவாய் தெரிகிறது....” சிரிக்காமலே சொன்னார்.

ஆமாம் உமக்கு இண்ணைக்கு வேற ஆள் கிடைக்கல்லியா.. நாங்கதான் கிடைச்சமாக்கும் எனச் சிரித்தபடியே ரசித்துக்கொண்டு போனார்கள் பெண்கள்.

இந்த விசயத்தை என்னிடம் சொன்னது ராஜேந்திரன்.அப்போ அந்த சமயல்கார ராமன்பிள்ளையும் எங்க கூட இருந்தார்.

ராமன் பிள்ளை ,“ மருமகனே, நம்ம மோரு கதையைச் சொல்லுங்கோ தங்கப்பன் கேக்கட்டும்” என்றார் ரஜேந்திரனைப் பாத்து.

வாய்விட்டுச் சிரித்தார்கள் ராஜெந்திரனும் ராமன்பிள்ளையும். நான் ஆவலாக கேட்க ஆயத்தமானபோது என்னுடைய போன் சிணுங்கியது.

அழைத்தது ராமு . நான்,“ இன்னொரு நாளைக்கு வாறேன். இப்பம் எனக்கு அவசரமாக ஒரு இடத்துக்கு போகணும். மோர்க்கதையை அப்பம் மறக்காமச் சொல்லு...”




Sunday, December 11, 2011

இரண்டு சூரியன் கடுக்கரைப் புதுக்குளத்தில்

 நேற்று பௌர்ணமி .சிவன்கோயிலில் அன்ன விருந்தும் கிரிவலமும் நடக்கும் .இதில் பங்கு கொள்ள நாங்கள் காலையில்  சிவன் கோயிலுக்குப் போனோம். சிவன் கோயிலை சுற்றி பச்சைக் கம்பளம் விரித்தால் போல நெற்பயிர். கோயிலின் அருகே ஒரு சின்ன குளம். தொலை தூரத்தில் மூன்று பக்கமும் நீல வண்ணத்தில் கோட்டை போல மலை.  இயற்கை அன்னை அன்பாக தராளமாக அள்ளி வீசிய காட்சியை ரசித்தபடியே நான் ராஜேந்திரன் வீட்டுக்குப் போனேன்.

blogspot-ல் எழுத சுவராஸ்யமான நம்மூர் செய்திகள் ஏதாவது உண்டுமா என நான் கேட்க சிந்தனையில் மூழ்கினார் ராஜேந்திரன் .

நான்,“ ரெட்டச் சூரியன் என்று பட்டப்பெயர் கொண்ட ஒரு ஆள் வடக்குத் தெருவிலேயே உண்டுல்லா. அவருக்கு ஏன் அந்தப் பட்டப்பெயர்? யாரு அவர்?

“யார் அவர் என்பதெல்லாம் வேண்டாம். எல்லாம் நம்ம சொந்தக்காரர் தான். அந்தக்காலத்துல பேப்பர் கிடையாது. சும்மா சாயந்திரம் எல்லோரும் வருவார்கள்.எதையாவது சொல்லி நேரத்தைப் போக்குவார்கள். கொஞ்ச தூரம்  காலாற நடப்பதும் உண்டு.”

ஒரு நாள் ஒருவர் வந்து எல்லோரும் இருக்கையில் நான் ரெண்டு சூரியனை இண்ணைக்கு காலைல பார்த்தேன் என்று கூறினார்.

எல்லோரும் மிக ஆவலாக எங்கே எனக் கேட்க நாளைக்கு காலைல  காணிக்கிறேன் எனச் சொல்லி அடுத்த நாள் காலையில் கிழக்குப் பக்கம் இருக்கும் இரத்தினபுரம் ஊருக்கு அழைத்துச் சென்றார்.

காலையில் சூரியன் கிழக்கு மலையில் இருந்து எழுந்து ஊரைக் காண வந்தது. வந்தவர்கள் இன்னொரு சூரியன் எங்கே ? என ஆவலாகக்கேட்க, அவர் அதோ அங்கே பாருங்கள் என் புது குளத்தைக் காட்டுகிறார். குளத்தில் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாக தெரிந்தது.

இதனால் அவரை இரட்டச் சூரியனென்றே அழைக்க அதுவே அவரின் பட்டப்பெயராயிற்று.


Saturday, December 10, 2011

மகத்தான மனிதர் ஜீவா

கடுக்கரையில் கம்யூனிஸ் கட்சியில் பலர் உறுப்பினர்களாக இருந்தனர் 1940 களில்.அதில் முக்கியமானவர்கள் இன்று உயிரோடு இல்லை. தாணப்பன் என்ற பெரியவர் அவர்களில் முக்கியமானவர்.எனது மைத்துனனிடம் பெரியவர் சென்னை சென்று ஜீவாவுடன் இருந்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக என்னிடம் கூறினார். என் மைத்துனன் ராஜெந்திரன் சொன்னது என் நெஞ்சைத் தொட்டது.

சென்னையில் ஜீவாவை அவருடைய வீட்டில் சந்திக்க தாணப்பன் போகிறார். ஜீவா பதட்டமான நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட பெரியவர் என்னவென்று தெரியாமல் அமைதியாய் அவரிடம் என்ன விசயம் என அறிந்து கொள்ளும் படியாக அவர் முகத்தைப் பார்த்தார்.

ஜீவா, “ தாணப்பா உன் பாக்கெட்டில் எத்தனை ருபாய் இருக்கு. அதைத் தா. என் மனைவிக்கு பிரசவ வேதனை ஆரம்பித்து விட்டது.ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணணும்..”  கேட்பது யார் ? ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர். தன் பாக்கட்டில் இருந்த ருபாயை எடுத்துக் கொடுத்தார் தாணப்பன்.

ஹாஸ்பிட்டலில் தன் மனைவியை சேர்த்து விட்டு உடனே தோழர் ராமமூர்த்தியை வழிஅனுப்ப ரயில்வே நிலையத்துக்கு போகிறார். கூடவே கடுக்கரைப் பெரியவரும் போகிறார்.

ரயில் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. ராமமூர்த்திக்கு மாலை போட வேண்டிய ஜீவாவுக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.  ஜீவா ரயில் நிலயத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் காலில் ஏதோ ஒன்று தட்டுப்படவே அதைக் குனிந்து எடுக்கிறார்.

அது ஒரு நீண்ட பெரிய மணிப்பேர்ஸ். கத்தை கத்தையாக பணம். உடனே அவர்,“ இந்த ரயிலில் போகும் யாரோ தான் பணத்தை தவற விட்டிருக்கின்றனர்.” என்க் கூறிய படியே Station Master  அறைக்குள் நுழைகிறார்.

ஜீவாவைக் கண்டதும் அதிகாரி எழுந்து நின்று வரவேற்கிறார்.

“ இந்த பணத்தை இந்த ரயிலில் போகும் யாரொ தான் தவற விட்டிருக்கின்றனர்.உடனே அனொவுண்ஸ் பண்ணி உரியவரிடம் பணத்தை சேர்த்து விடுங்கள்” என ஜீவா கூறிய உடன் அதிகாரி அவர் சொன்னது போலவே செய்தார்.

ஜீவா ராமமூர்த்தி நிற்கும் இடத்தை நெருங்கவே தொண்டர்களில் பதட்டத்தைக் கண்ட ஜீவா , “ ரயில் போக கொஞ்சநேரம் ஆகும்.... பயம் வேண்டாம் என சிரித்த படியே ராமமூர்த்திக்கு மாலை அணிவிக்கிறார்.

ரயிலும் கிளம்புகிறது. ஜீவா தாணப்பனைப்பார்த்து ,”ஊருக்குப் போக பணம் வேணும்லா. நாளைக்கு ஆபீஸுக்கு வா.” என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவியைப் பார்க்க போனார்.

அடுத்த நாள் ஜீவாவைப் பார்க்க போகிறார். அங்கு அவர் தரையில் பேப்பரை விரித்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து எழுந்த ஜீவா கடனை அடைத்தார்.

ஜீவா நினைத்திருந்தால் தேவையான சமயத்தில் கிடைத்த பணத்தை எடுத்திருக்கலாம். எவ்வளவு பெரிய இயக்கத்தின் தலவர். அன்றாட வாழ்க்கைக்கே அவர் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்.

மனித நேயம் உள்ள மகத்தான மானுடன் ஜீவா........... இது மிகையல்ல.




கம்பர் ராமன்பிள்ளையும் கல்யாணச் சாப்பாடும்

கடுக்கரையில் தகரவீட்டில் 60 வருடங்களுக்கு முன் மாதேவன்பிள்ளை என்ற ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார்.

தகரவீட்டு செல்லம்பிள்ளை(மாதேவன்பிள்ளை) மிக அழகாக ஆங்கிலத்தில் பேசும் திறமை உடையவர். அவர் சங்கீதம் இலக்கண சுத்தமாகப் பாடுவார். இராமாயணத்தை மிகவும் நேர்த்தியாக பொருள் கூறி விளக்குவார்.

தினமும் கம்பராமாயணத்தை தினமும் அவரது வீட்டில் அங்குள்ள மக்கள் எல்லோரும் சேர்ந்து கேட்க வருவார்கள்.ஒருவர் புத்தகத்தை பார்த்து ராகமாய் பாடுவார்.கூடவே சேர்ந்து பாடும் செல்லம்பிள்ளை அதை பொருள் கூறி விளக்குவார். இவருடன் சேர்ந்து பாட வந்தவர் ஊரில் உள்ள ராமன் பிள்ளை என்ற பெரியவர்.

அதிகமாக பள்ளிக்கூடம் போகவில்லை.எழுதவும் படிக்கவும் மாத்திரமே தெரியும்.அவர் நன்றாகப் பாடுவார். ஒருதடவை கேட்டால் மனதில் பதிந்துவிடும். ஞாபகசக்தி கூடுதல். அதன் பிறகு மறக்கவே மாட்டார்.

தினமும் கேட்டுக்கேட்டே கம்பராமாயணம் முழுவதும் மனப்பாடமாய் ஆயிற்று. வசதிகள் எதுவும் இல்லாத அவருக்கு கம்பராமாயணம் கை கொடுத்தது. ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு இராமாயண சொற்பொழிவுக்குப் போவார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் விவசாய வேலை பார்த்தும் தன் வாழ்க்கையை நிம்மதியாய் கழித்து வந்தார் ராமன் பிள்ளை.

பெருமாள்கோயில் திருவிழாவில் இவருடைய சொற்பொழிவு நிச்சயமாய் இருக்கும். ராமன் பிள்ளைக்கு கர்நாடக சங்கீதத்திலும் நாட்டமும் ஞானமும் உண்டு. கடுக்கரை ஊர்த் திருவிழாவில் ஒரு நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் மக்கள் அதிகமாக கச்சேரி கேட்க வருவார்கள். முன் வரிசையில் ராமன் பிள்ளையும் கச்சேரியை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.ராமன்பிள்ளை  அன்று அணிந்திருந்த வேட்டியும் ஷாலும் கசங்கியும் அழுக்காகவும் இருந்தது.

நாதஸ்வரக் கலைஞர் முன் வரிசையில் இருந்த ராமன்பிள்ளையின் திறமையை அறிந்திருக்க வில்லை. ஒரு ராகத்தை பாடுகையில் அதனைத் தவறாகப் பாடுகிறார்.
 தவறைக் கண்டு பிடித்த ராமன் பிள்ளை எழுந்து கலைஞரைப் பார்த்து,       “ எப்பனே.... இப்பம் வாசிச்சயே அதை திரும்ப வாசி..... நீ வாசிச்சது சரியில்லை... ”என்று கூறுகிறார்.

அசந்து போய் ,“ இந்த சின்ன ஊரில் சங்கீதம் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை. ராமன் பிள்ளை சொன்னது சரிதான்” என ஒப்புக் கொண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

ஊரில் ஒரு திருமண வீட்டுக்கு கசங்கிய அழுக்கு உடையுடன் போன ராமன் பிள்ளையை அவரை அறியாத ஒருவன் உள்ளே போக அனுமதிக்கவில்லை. மிகவும் சினம் கொண்ட அவர் வீட்டுக்குப் போய் நல்ல தூய ஆடை அணிந்து திருமணவீட்டுக்கு வந்தார். இப்போ யாரும் அவரைத் தடுக்க வில்லை.

பெரிய காமணம் தென்னை ஓலையால் அமைக்கப்பட்டது. பந்திப்பாய் அகலம் குறைந்து நீளம் கூடுதலாக இருக்கும். நான்கு வரிசையாக பந்திப்பாய் போடப்பட்டிருந்தது. அதில் போய் சிவந்து போன முகத்துடனும் கோபத்துடனும் உட்கார்ந்தார்.

முதலில் கறிகள் வரிசையாய் வந்தது.... அன்னம் பரிமாறி பருப்பும் ஊற்றினார்கள்....

திடீரென ஒரு குரல்....குரல் வந்த திசையைப் பார்த்தால் ராமன் பிள்ளை தன் அங்க வஸ்திரத்தை அந்தச் சோற்றின் மேல் போட்டு சப்தமாய் சொல்கிறார்.“  சாப்பாடு எனகில்லை. இந்த அங்க வஸ்திரத்துக்குத்தான்....” எனச் சொல்லி சாப்பாட்டுப் பந்தியில் இருந்து எழுந்து மன நிம்மதியோடு போகிறார் கம்பர் ராம்பிள்ளை.




Thursday, December 8, 2011

திப்புசுல்தான் பஸ்ஸும் தங்கச்செயினும்

நான் நேற்று என் மனைவியுடன் வடசேரி BUS STAND க்குப் போனேன்.என் பேரன் மகள் மருமகன் பெங்களூருக்கு போகும் போது அவர்களை வழி அனுப்ப போனோம்.

பல பஸ்கள் நிற்கையில் திப்பு சுல்தான் பஸ்ஸையும் பார்த்த பொழுது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

என்னுடைய மருமகன் மோகன் அரசுத்துறையில் வேலை பார்க்கும்போது நாகர்கோவிலில் இருந்து transfer  ஆகி சென்னையில் உள்ள அலுவலகத்தில்  வேலை பார்த்து வந்தார்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை மாலையில் சென்னயில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திங்கள் கிழமை காலையில் வேலை பார்க்க அலுவலகம் சென்று விடுவார்.

அவர் ஒரே பஸ் அதுவும் திப்பு சுல்தான் பஸ்ஸில் தான் வாரம்தொறும் பயணம் செய்வார். வெள்ளிகிழமை,ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்  இவர் வந்து பஸ்ஸில் ஏறியபின் தான் பஸ் கிளம்பிச் செல்லும். அவ்வாறு சென்றுவந்ததால் பஸ் ட்ரைவருக்கும் கண்டக்டருக்கும் இவர் நண்பராகி விட்டார்.

அதன் பிறகு நாகர்கோவிலுக்கு மாறுதல் கிடைத்தது. சென்னை செல்வதென்றால் திப்பு சுல்தான் பஸ்ஸில் தான் செல்வார்.

தனது சின்னப்பாவின் வீட்டு விழாவுக்கு ஒரு நாள் மாலையில் அதே பஸ்ஸில்  சென்னைக்கு கிழம்பிச் சென்றார். உழுந்தூர்ப்பேட்டையில் வண்டி நின்றது. ஹோட்டலில் சிற்றுண்டி அருந்தி விட்டு ரோட்டோரம் ஒண் பாத்ரூம் போய் விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்.  தூக்கம் .....நல்ல தூக்கம். சென்னை வந்ததும் மோகன் சின்னப்பா வீட்டுக்குப் போய் குளிக்க எண்ணெய் எடுத்து தலையில் தேய்க்க கண்ணாடியின் முன் நின்ற போது அதிற்சி அடைந்தார். கழுத்தில் எப்போதும் கிடக்கும் தங்கச் செயின் காணவில்லை. யாரிடம் எதுவும் சொல்லவில்லை.

விழாவில் கலந்து விட்டு அன்று மாலையே திப்பு சுல்தான் பஸ்ஸில் நாகர்கோவிலுக்குப் பயணமானார். அப்போது செயின் காணாமல் போன விசயத்தை மோகன் ட்ரைவரிடம் கூறினார்.

பஸ்ஸில் பயணம் செய்த போது செயின் கழுத்தில் கிடந்தது....சென்னை வந்த பிறகு தான் இல்லை..... ட்ரைவர் , உழுந்தூர்பேட்டையில் தான் நாம் ரெண்டு பேரும் சாப்பிட்டு ஒண் பாத் ரூம் போன விசயத்தைக் கூறி நாம் அதே இடத்தில் போய் தேடலாம் என்றார்.

உழுந்தூர்ப்பேட்டை வந்தது. இருள் நேரமாகையால் ஒரு டார்ச்சு லைட்டை கையில் கொண்டு போய் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தேடிப் பார்த்தார்கள்
லைட் வெளிச்சத்தில் மணல்களுக்கு இடையே மின்னிக் கொண்டு செயின் கிடந்ததைக் கண்டார்கள்.

செயின் கிடைத்த மகிழ்ச்சியில்  அந்த விசயத்தை மோகன் எங்களிடம் கூறினார். திப்பு சுல்தான் பஸ் ட்ரைவரால் தான் தங்கச் செயின் கிடைத்தது.  சினிமா போல் இருந்தாலும் உண்மையான இந்த நிகழ்ச்சி மிகவும் ஆச்சரியத்தை தந்தது என்னவோ உண்மையே. 

Tuesday, December 6, 2011

ஜீவா என்ற சொரிமுத்து கடுக்கரையில் ஒருநாள்

1940 களில் பிரட்டீஸ் அரசினரால் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலவர்கள் தலைமறைவாய் இருந்துகொண்டு கட்சியின் தொண்டர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்த தலைவர் ஜீவா தலைமறைவாக இருந்த இடம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்ட கடுக்கரை.அவர் அதிகமாக கடுக்கரை ம.வேலப்பன் வீட்டில் தான் தங்கி இருந்தார்.

 எனது மைத்துனன் ராஜேந்திரன் அவரது ஆச்சி அதாவது அப்பாவின் அம்மா சொன்னதாக ஒரு சுவாரஸ்யமான தகவலைக் கூறினார்.ராஜேந்திரனின் அப்பா ஜீவாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இரவு உணவு சாப்பிட தரையில் ஜீவா உட்பட எல்லோரும் அமருகிறார்கள். மின்சார வசதி இல்லாத காலம்.சாப்பிடும் இடத்தில் ஒரு அரைக்கேன் லைட். அது தரும் வெளிச்சத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அபபொழுது உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஆச்சியை ஜீவா உற்றுப் பாத்துக் கொண்டே இருந்தார். ஆச்சிக்கோ தன்னை ஏன் பாத்துக் கொண்டே இருக்கிறார்....பெரிய தலைவர்லாஇவரு....என நினைத்துக் கொண்டே நடந்து செல்லும் போது ஜீவா கேட்கிறார் ,“ அம்மா.... உங்களுக்கு சொந்த ஊர் கடுக்கரையா?”

’இது  என் வீட்டுக்காரரின் வீடு. நான் பொறந்து வளந்ததெல்லாம் பூதப்பாண்டி’

“ அதானே பாத்தேன்.... என்னத் தெரியல்லியா.. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் படிச்சோம்லா... நான் பட்டம் பிள்ளையின் மகன் சொரிமுத்துல்லா....” ஜீவா சொன்னார்.

 “ இப்பம்தான் மொகத்த சரியா பாக்கேன்.....ஆமாம்.... நீ மூக்கன்லா.. அப்பம் நீ மூக்கு குத்திருந்தேல்லா.....ஒம்பேரு ஜீவாண்ணுல்லா எல்லாரும் சொல்றாங்க....பெரிய தலைவர்ணும் சொல்றாங்க..”

’இவங்கள்ளாம் அப்படி சொல்றாங்க...நான் அதே மூக்கந்தான்.....’

ஆச்சிக்குப் பெருமை.....ஒரே மகிழ்ச்சி....

ஆச்சி சொன்ன இந்த தகவல் பேரனுக்கும் தனது ஆச்சி ஒரு பெரிய தலைவருடன் பள்ளிக்கூடத்தில் படித்தவள் என்பதில் பெரும் மகிழ்ச்சி....

Sunday, December 4, 2011

காதலும் பொய்யாகுமா ?

காதல் அழிவதே இல்லை என்று நான் எழுதிய விசயத்தை விவரமாக எனது நண்பர் பெருமாளிடம் கூறினேன்.சிரித்துக்கொண்டே கேட்ட அவர் என்னிடம் அவரது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார்.

அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. வேலை பார்த்த இடம் பஞ்சாப்.அவர் ஒரு பெண்ணை அதுவும் தமிழ் பெண்ணை கண்டார். காதல் மலர்ந்தது.மணமும் வீசியது திருமணம் செய்து கொண்டதால்.காதலுக்கு அடையாளமாக இருவருக்கும் குழந்தை பிறந்தது.

மனைவியின் மீது அன்பு கூடியது. தாஜ்மகால் கட்ட வில்லையென்றாலும் ஒரு அழகான வீட்டை தன் மனைவியின் பெயரிலேயே வாங்கினார்.அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. மனைவியோ போகவேண்டாம் எனத் தடுத்தாள்.

மனைவியிடம் நான் சம்பாதிப்பது யாருக்காக நம் பிள்ளை
யின் வருங்காலம் வளமாக இருக்க வேண்டாமா..... இப்படியெல்லாம் அவளிடம் கூறி அவன் வெளி நாட்டுக்குப் போய் வேலையில் சேர்ந்தான்.

நல்ல சம்பளம். மாதம் தோறும் செலவு போக மீதிப் பணத்தை மனைவிக்கே அனுப்பினான்.

வருடங்கள் 6 கழிந்தன.வெளிநாட்டில் வேலை செய்தது போதும் என நினைத்து தன் மனைவியிடம் விவரத்தைக் கூறி தான் வரும் விவரத்தைக் கூறினான்.

அவளோ நம் நாட்டில் நீங்க வாங்கும் சம்பளம் கிடைக்காதே.அதனால் இப்போ வரவெண்டாமே....2 வருடம் கழித்து வந்தால் போதுமே என்கிறாள்.ஆனால் அவன்  நாடு திரும்புகிறான்

மனைவியையும் குழந்தையையும் பார்த்து இனி நான் உங்க கூடத்தான் இருப்பேன். வெளிநாட்டுக்கெல்லாம் போக மாட்டேன் என்று உற்சாகமாக கூறுகிறான்.

தன் பிள்ளையிடம் பேசுகையில் அந்தப் பிள்ளை அடிக்கடி மாமா இங்க வருவாரே ஏன் இப்பம் காணல்ல மாமாவை பாக்கணும் என்று சொல்ல சந்தேகப் பொறி அவனது மனதில் தட்டியது.

யார் அந்த மாமா ?........தலை கிறு கிறுவென சுற்றியது.

அவள் இன்னொருவனுடன் மனைவி போல் வாழ்ந்தது தெரிய வந்தது.

தான் கொடுத்த வீட்டையும் கொஞ்சம் ருபாயையும் எடுத்துக் கொண்டு பிள்ளை தனக்கு வேண்டாம் என பிள்ளையை அவனிடமே விட்டுவிட்டுகள்ளத்தனமாக காதலித்தவனுடன் போகிறாள் .

தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து மனம் குமுறி விவாக ரத்துக்கு கோர்ட்டை அணுகுகிறான் . ஆனால் அவள் அதற்கு மறுக்கிறாள் .

போராடி விவாகரத்தினை பெறுகிறார் .தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் அனைத்தையும் கோர்ட்முலம் பெறுகிறார் .
இப்பொழுது னது பிள்ளைக்காக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .....
பணம் எதுவும் இல்லாததால் அவளைவிட்டு
விலகினான் கள்ளக்காதலன் ....அவள் எப்படி வாழ்கிறாள் ......தெரியாது.
காதலும்  பொய்யாகுமோ .....

Saturday, December 3, 2011

காதல் அழிவதே இல்லை

நானும் கடுக்கரை ராஜேந்திரனும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காலையில் காட்டுபுதூர் சாலையில் நடந்து போகும்போது காட்டுப்புதூர் பண்ணையார் பற்றிய ஒரு தகவலை என்னுடைய ப்ளாக்-ல் பதிவு செய்ததை சொன்னேன் . அதைக் கேட்ட ராஜேந்திரன் ," உனக்கு இது போல் எழுதும் பழக்கம் உண்டா?",எனக் கேட்டார் . ஆம் என்று சொன்னதும் அவர் தனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்.

பறக்கையில் இருந்து ஒரு நந்தினி என்ற பெயருடைய பெண் நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞரும் படித்துக் கொண்டிருந்தார் .
அவர் அவளை மிகவும் நேசிக்க அவளோ அவரது நேசத்தை பொருட்படுத்தாமல் புறக்கணித்து வந்தார் .மேலும் அவரைப் பற்றித்தன்னுடைய ஆசிரியர்களிடம் குறை சொல்லி தன்னை மனதளவில் தொல்லை தருவதாகவும் சொன்னார் . மனம் வருந்திய இளைஞர் அவள் மேலுள்ள காதலை நெஞ்சினில் சுமந்த படி த்தனது படிப்பை முடித்து விட்டு வேலை தேடி போய்விட்டார் .
நந்தினியும் பக்கத்து ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பாத்து வந்தார். அந்த சமயத்தில் ஒருவனை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் . அவளது வாழ்க்கை ரம்மியமாகப் போய் கொண்டிருக்கும்போது விதி விளையாடி காலன் அவளது கணவனை கவர்ந்து கொண்டான் .
காலம் நகர்ந்து கொண்டே இருந்தது .மகள் வளர்ந்து படிக்க ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிற்று .
கதவுகளில் ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்குமே .நந்தினிக்கும் ஒரு கதவு திறந்து டெல்லிக்கு அவளை அழைத்தது . அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது . மகளுடன் மகளுக்காக வாழ்ந்து வந்தா .
தன் வேலை முடிந்து மாலையில் நடந்து செல்லும் போது தன் பேரை சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தா.
அவள் எதிரே ஒருவன் . "என்னைத் தெரியவில்லையா ......நீ நந்தினி தானே ..."
எனக் கேட்டான் .
 சற்று ஆச்சரியத்துடனும் சங்கடத்துடனும்  ஆம் என்று தலை அசைத்த வாறே நீ  ராமகிருஷ்ணன் தானே .....நீ  இங்க தான் இருக்கியா ? எனக்கேட்டாள் நந்தினி. நான் இங்க தான் வேலை பாக்கேன். நீ எப்படி இங்க வந்தே. மாப்பிள்ளைக்கு இங்க தான் வேலையா? என ராமகிருஷ்ணன் கேட்டார். நானும் என் 11 வயது மகளும் தான் இங்க இருக்கோம். நான் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பாக்கேன். நந்தினி சொன்னாள். “கணவர் எங்க வேலை பார்க்கிறார் எனக் கேட்க கணவர் இறந்த விசயத்தை அவள் சொல்கிறாள்” உங்களுக்கு கல்யாணம் ஆயிற்றா என அவள் கேட்க இல்லை யென தலயை அசைக்கிறார். நான் திருமணமே வேண்டாம் என இருந்துவிட்டேன் . நான் உன்னைதான் மணக்க வேண்டும் என்றிருந்தேன். நீ மறுத்து விட்டதால் நான் கல்யாணமே களிக்கல்ல. இருவரும் சிலநாட்கள் கழித்து மறுபடியும் சந்திக்கின்றனர். நந்தினியை மணக்க தான் தயாராக இருப்பதைக் கூறுகிறான். ’எனது மகளுக்கு 11 வயதாகிறது. நம் திருமணம் நடந்தால் அது அவளைப் பாதிக்கும். அதனால் வேண்டாம்’ என்கிறாள் நானே உன் மகளிடம் பேசுகிறேன் என கூறிய ராம்கிருஷ்ணன் மகளிடம் பேசி பூரண அனுமதி பெறுகிறார். இப்பொழுது இருவரும் திருமணமாகி ஓருயிராய் மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர். சினிமாவில் மாத்திரமே நடக்கும் இது போல். மிகவும் சந்தோசமாக இருந்தது கேட்பதற்கு. சாவி பத்திரிகை ஆசிரியரின் மகளின் திருமணமும் இது போன்றதுதான். அது சினிமாவாகவும் வந்தது. ராமகிருஷ்ணனும் நந்தினியும் ஆறுமுகம் பிள்ளை (ராஜேந்திரன்),வேணுகோபால் ஆகிய இருவர்களின் மாணவர்கள். ராமகிருஷ்ணன் வேலை பார்ப்பது ஒரு தனியார் தொலைக் காட்சியில்.

என்னிடம் சொன்ன ஆறுமுகம் பிள்ளையின் முகம் மிகவும்  பூரிப்புடன் காணப்பட்டது .தனது  மாணவர்கள் இருவரும் திருமணம் செய்து சந்தோசமாய் இருப்பதை அறிந்து கொண்டதால்.