Saturday, December 10, 2011

கம்பர் ராமன்பிள்ளையும் கல்யாணச் சாப்பாடும்

கடுக்கரையில் தகரவீட்டில் 60 வருடங்களுக்கு முன் மாதேவன்பிள்ளை என்ற ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார்.

தகரவீட்டு செல்லம்பிள்ளை(மாதேவன்பிள்ளை) மிக அழகாக ஆங்கிலத்தில் பேசும் திறமை உடையவர். அவர் சங்கீதம் இலக்கண சுத்தமாகப் பாடுவார். இராமாயணத்தை மிகவும் நேர்த்தியாக பொருள் கூறி விளக்குவார்.

தினமும் கம்பராமாயணத்தை தினமும் அவரது வீட்டில் அங்குள்ள மக்கள் எல்லோரும் சேர்ந்து கேட்க வருவார்கள்.ஒருவர் புத்தகத்தை பார்த்து ராகமாய் பாடுவார்.கூடவே சேர்ந்து பாடும் செல்லம்பிள்ளை அதை பொருள் கூறி விளக்குவார். இவருடன் சேர்ந்து பாட வந்தவர் ஊரில் உள்ள ராமன் பிள்ளை என்ற பெரியவர்.

அதிகமாக பள்ளிக்கூடம் போகவில்லை.எழுதவும் படிக்கவும் மாத்திரமே தெரியும்.அவர் நன்றாகப் பாடுவார். ஒருதடவை கேட்டால் மனதில் பதிந்துவிடும். ஞாபகசக்தி கூடுதல். அதன் பிறகு மறக்கவே மாட்டார்.

தினமும் கேட்டுக்கேட்டே கம்பராமாயணம் முழுவதும் மனப்பாடமாய் ஆயிற்று. வசதிகள் எதுவும் இல்லாத அவருக்கு கம்பராமாயணம் கை கொடுத்தது. ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு இராமாயண சொற்பொழிவுக்குப் போவார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் விவசாய வேலை பார்த்தும் தன் வாழ்க்கையை நிம்மதியாய் கழித்து வந்தார் ராமன் பிள்ளை.

பெருமாள்கோயில் திருவிழாவில் இவருடைய சொற்பொழிவு நிச்சயமாய் இருக்கும். ராமன் பிள்ளைக்கு கர்நாடக சங்கீதத்திலும் நாட்டமும் ஞானமும் உண்டு. கடுக்கரை ஊர்த் திருவிழாவில் ஒரு நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் மக்கள் அதிகமாக கச்சேரி கேட்க வருவார்கள். முன் வரிசையில் ராமன் பிள்ளையும் கச்சேரியை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.ராமன்பிள்ளை  அன்று அணிந்திருந்த வேட்டியும் ஷாலும் கசங்கியும் அழுக்காகவும் இருந்தது.

நாதஸ்வரக் கலைஞர் முன் வரிசையில் இருந்த ராமன்பிள்ளையின் திறமையை அறிந்திருக்க வில்லை. ஒரு ராகத்தை பாடுகையில் அதனைத் தவறாகப் பாடுகிறார்.
 தவறைக் கண்டு பிடித்த ராமன் பிள்ளை எழுந்து கலைஞரைப் பார்த்து,       “ எப்பனே.... இப்பம் வாசிச்சயே அதை திரும்ப வாசி..... நீ வாசிச்சது சரியில்லை... ”என்று கூறுகிறார்.

அசந்து போய் ,“ இந்த சின்ன ஊரில் சங்கீதம் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை. ராமன் பிள்ளை சொன்னது சரிதான்” என ஒப்புக் கொண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

ஊரில் ஒரு திருமண வீட்டுக்கு கசங்கிய அழுக்கு உடையுடன் போன ராமன் பிள்ளையை அவரை அறியாத ஒருவன் உள்ளே போக அனுமதிக்கவில்லை. மிகவும் சினம் கொண்ட அவர் வீட்டுக்குப் போய் நல்ல தூய ஆடை அணிந்து திருமணவீட்டுக்கு வந்தார். இப்போ யாரும் அவரைத் தடுக்க வில்லை.

பெரிய காமணம் தென்னை ஓலையால் அமைக்கப்பட்டது. பந்திப்பாய் அகலம் குறைந்து நீளம் கூடுதலாக இருக்கும். நான்கு வரிசையாக பந்திப்பாய் போடப்பட்டிருந்தது. அதில் போய் சிவந்து போன முகத்துடனும் கோபத்துடனும் உட்கார்ந்தார்.

முதலில் கறிகள் வரிசையாய் வந்தது.... அன்னம் பரிமாறி பருப்பும் ஊற்றினார்கள்....

திடீரென ஒரு குரல்....குரல் வந்த திசையைப் பார்த்தால் ராமன் பிள்ளை தன் அங்க வஸ்திரத்தை அந்தச் சோற்றின் மேல் போட்டு சப்தமாய் சொல்கிறார்.“  சாப்பாடு எனகில்லை. இந்த அங்க வஸ்திரத்துக்குத்தான்....” எனச் சொல்லி சாப்பாட்டுப் பந்தியில் இருந்து எழுந்து மன நிம்மதியோடு போகிறார் கம்பர் ராம்பிள்ளை.




No comments:

Post a Comment