Saturday, December 10, 2011

மகத்தான மனிதர் ஜீவா

கடுக்கரையில் கம்யூனிஸ் கட்சியில் பலர் உறுப்பினர்களாக இருந்தனர் 1940 களில்.அதில் முக்கியமானவர்கள் இன்று உயிரோடு இல்லை. தாணப்பன் என்ற பெரியவர் அவர்களில் முக்கியமானவர்.எனது மைத்துனனிடம் பெரியவர் சென்னை சென்று ஜீவாவுடன் இருந்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக என்னிடம் கூறினார். என் மைத்துனன் ராஜெந்திரன் சொன்னது என் நெஞ்சைத் தொட்டது.

சென்னையில் ஜீவாவை அவருடைய வீட்டில் சந்திக்க தாணப்பன் போகிறார். ஜீவா பதட்டமான நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட பெரியவர் என்னவென்று தெரியாமல் அமைதியாய் அவரிடம் என்ன விசயம் என அறிந்து கொள்ளும் படியாக அவர் முகத்தைப் பார்த்தார்.

ஜீவா, “ தாணப்பா உன் பாக்கெட்டில் எத்தனை ருபாய் இருக்கு. அதைத் தா. என் மனைவிக்கு பிரசவ வேதனை ஆரம்பித்து விட்டது.ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணணும்..”  கேட்பது யார் ? ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர். தன் பாக்கட்டில் இருந்த ருபாயை எடுத்துக் கொடுத்தார் தாணப்பன்.

ஹாஸ்பிட்டலில் தன் மனைவியை சேர்த்து விட்டு உடனே தோழர் ராமமூர்த்தியை வழிஅனுப்ப ரயில்வே நிலையத்துக்கு போகிறார். கூடவே கடுக்கரைப் பெரியவரும் போகிறார்.

ரயில் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. ராமமூர்த்திக்கு மாலை போட வேண்டிய ஜீவாவுக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.  ஜீவா ரயில் நிலயத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் காலில் ஏதோ ஒன்று தட்டுப்படவே அதைக் குனிந்து எடுக்கிறார்.

அது ஒரு நீண்ட பெரிய மணிப்பேர்ஸ். கத்தை கத்தையாக பணம். உடனே அவர்,“ இந்த ரயிலில் போகும் யாரோ தான் பணத்தை தவற விட்டிருக்கின்றனர்.” என்க் கூறிய படியே Station Master  அறைக்குள் நுழைகிறார்.

ஜீவாவைக் கண்டதும் அதிகாரி எழுந்து நின்று வரவேற்கிறார்.

“ இந்த பணத்தை இந்த ரயிலில் போகும் யாரொ தான் தவற விட்டிருக்கின்றனர்.உடனே அனொவுண்ஸ் பண்ணி உரியவரிடம் பணத்தை சேர்த்து விடுங்கள்” என ஜீவா கூறிய உடன் அதிகாரி அவர் சொன்னது போலவே செய்தார்.

ஜீவா ராமமூர்த்தி நிற்கும் இடத்தை நெருங்கவே தொண்டர்களில் பதட்டத்தைக் கண்ட ஜீவா , “ ரயில் போக கொஞ்சநேரம் ஆகும்.... பயம் வேண்டாம் என சிரித்த படியே ராமமூர்த்திக்கு மாலை அணிவிக்கிறார்.

ரயிலும் கிளம்புகிறது. ஜீவா தாணப்பனைப்பார்த்து ,”ஊருக்குப் போக பணம் வேணும்லா. நாளைக்கு ஆபீஸுக்கு வா.” என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவியைப் பார்க்க போனார்.

அடுத்த நாள் ஜீவாவைப் பார்க்க போகிறார். அங்கு அவர் தரையில் பேப்பரை விரித்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து எழுந்த ஜீவா கடனை அடைத்தார்.

ஜீவா நினைத்திருந்தால் தேவையான சமயத்தில் கிடைத்த பணத்தை எடுத்திருக்கலாம். எவ்வளவு பெரிய இயக்கத்தின் தலவர். அன்றாட வாழ்க்கைக்கே அவர் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்.

மனித நேயம் உள்ள மகத்தான மானுடன் ஜீவா........... இது மிகையல்ல.




No comments:

Post a Comment