Saturday, December 17, 2011

இது வரை நான் போகாத பூதப்பாண்டி கோயில்


Posted by Picasa
கார்த்திகை கடைசித் திங்கள் சிவன்கோவிலுக்குப் போகவேண்டும் என்று என் மனைவி விரும்பினாள். இதுவரை ஊர்ப்பக்கத்தில் இருந்தாலும் போகாத பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க சுவாமி கோவிலுக்குப் போகலாம் என முடிவெடுத்து நான்,என் மனைவி, ஆறுமுகப்பெருமாள் அவரது மனைவி எல்லோரும் அவரது காரில் கடுக்கரைக்குப் போய்
 திரும்பும் போது பூதப்பாண்டி கோவிலுக்குப் போனோம்.

கடுக்கரையில் சதாபிஷேக விழாவன்று அவர் வராததால் என் அத்தான் காந்தியின் வீட்டுக்குப் போக எண்ணி எங்களையும் அழைத்ததால் நாங்களும் போனோம்.

பூதப்பாண்டி கோவில் வாசல் வழி உள்ளே சென்றதும் பாறையின் மீதுள்ள சிவனும் சிவலிங்கமும் இருந்ததைப் பார்த்தேன். இடது பக்கமாக காங்க்ரீட் நடைபாதையில் நடந்து வந்தோம். தெற்கு வாசல் வழியே வெளியே போனால் தெப்பக்குளம். கிழக்குப் பக்கம் உள்ள கோவில் நுழைவாசல் வழியே கோவிலின் உள்ளே போகுமுன் காலை பைப் நீரில் கழுவி விட்டு வர வேண்டும் என சுவரில் ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது.

பைப்பில் தண்ணீர் வரவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்த உடன் அங்கிருந்த ஒருவர் சட்டை போடக்கூடாது கழற்ற வேண்டும் என சொல்லவே நாங்கள் சட்டையைக் கழற்றினோம்.

சட்டையைக் கழற்றச் சொன்னவன் என்னையே உற்றுப் பார்த்து விட்டு உங்களுக்கு கடுக்கரைதானே என்றான். நான் ஆமாம் என்றேன். உனக்கு எந்த ஊர் என்று கேட்க ‘தெரிசனம்கோப்பு’ என்றான். அதனைக் கேட்ட என் மனைவி திரும்பிப் பாத்து அவனிடம் ‘ நீ கிருஷ்ணன் தானே’ எனக் கேட்டாள்.

ஆமாம் என்ற கிருஷ்ணன் அவளைப் பாத்து ‘நான் உங்க வீட்ல வளந்தவன்லா... சுந்தரத்தின் மகன் நான்’ என்றான். அதன்பிறகு  அவன் எங்கள் கூடவே வந்து ஒரு guide போல விளக்கமாக கோவிலைப் பற்றி சொன்னான்.

கோவில் கருவறை சிறிய குன்றுபோல் இருக்கும் பெரிய பாறையைக் குடைந்து எடுத்தது.அதில் பூதலிங்க சுவாமி சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். கொடி மரம் இல்லையே எனக் கேட்டேன். புதிய கொடிமரம் வைக்கப்போகிறார்கள். அதோ அதுதான் புதிய கொடிமரம் என்று கான்பித்த இடத்தைப் பார்த்தோம்.கொடிமரம் தரையில் ஒரு நீண்ட தகர வளைவில் தரையில் மரப்பகுதி படாமல் வைக்கப்பட்டிருந்தது. துணி சுற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் அதன் மீது எண்ணெயை ஊற்றுகிறார்கள். எண்ணெயில் ஊறிக் கொண்டே இருக்கிறது கொடிமரம். சிவகாமி அம்மன் சன்னதிக்கும் மற்றும் சுற்றி உள்ள எல்லா சன்னதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தான் கிருஷ்ணன்.

கோவிலை விட்டு வெளியே வந்த போது ஒருவர் என்னெதிரே வந்து,“  நீங்க இந்துக்கல்லூரியிலதானே வேலை பார்க்கிறீங்க” எனக் கேட்டார்.
“ வேலை பார்த்து இப்பம் ரிட்டயர்டாயிற்றேன்” என்றேன்.

“உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். நான் H.R&C.E -ல் வேலை பாக்கும்போது இரவிபுதூர் அம்மன் கோவில் கணக்கு பாக்க வருவேன்.அந்தக் கோவிலுக்கு அப்பாதான் ட்ற்ஸ்டியாக இருந்தார். கணக்கு மிகவும் சரியாக இருக்கும். அவர் போல் நான் ஒரு ஆளை என் செர்வீசில் பாத்ததே இல்லை.”

அவர் பேசி விட்டு போகும்போது, சொன்ன வார்த்தைகள் நான் வீடு வந்து சேர்ந்தபின்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

“ உங்க அப்பா ஒரு பெரிய மனிதர். மதிக்கப்பட வேண்டியவர்.”

இந்த வயதிலும் இது வரை இந்தக் கோவிலுக்குள் நான் போகாமல் இருந்தது எனக்கே என்னவோ போல்தான் இருந்தது.திருவிழா, தேரோட்டம் என வந்த போதும் கோவிலின் உள்ளே போனதே இல்லை. நினைத்தால் வெட்கமாகவும் இருக்கிறது

No comments:

Post a Comment