Sunday, December 11, 2011

இரண்டு சூரியன் கடுக்கரைப் புதுக்குளத்தில்

 நேற்று பௌர்ணமி .சிவன்கோயிலில் அன்ன விருந்தும் கிரிவலமும் நடக்கும் .இதில் பங்கு கொள்ள நாங்கள் காலையில்  சிவன் கோயிலுக்குப் போனோம். சிவன் கோயிலை சுற்றி பச்சைக் கம்பளம் விரித்தால் போல நெற்பயிர். கோயிலின் அருகே ஒரு சின்ன குளம். தொலை தூரத்தில் மூன்று பக்கமும் நீல வண்ணத்தில் கோட்டை போல மலை.  இயற்கை அன்னை அன்பாக தராளமாக அள்ளி வீசிய காட்சியை ரசித்தபடியே நான் ராஜேந்திரன் வீட்டுக்குப் போனேன்.

blogspot-ல் எழுத சுவராஸ்யமான நம்மூர் செய்திகள் ஏதாவது உண்டுமா என நான் கேட்க சிந்தனையில் மூழ்கினார் ராஜேந்திரன் .

நான்,“ ரெட்டச் சூரியன் என்று பட்டப்பெயர் கொண்ட ஒரு ஆள் வடக்குத் தெருவிலேயே உண்டுல்லா. அவருக்கு ஏன் அந்தப் பட்டப்பெயர்? யாரு அவர்?

“யார் அவர் என்பதெல்லாம் வேண்டாம். எல்லாம் நம்ம சொந்தக்காரர் தான். அந்தக்காலத்துல பேப்பர் கிடையாது. சும்மா சாயந்திரம் எல்லோரும் வருவார்கள்.எதையாவது சொல்லி நேரத்தைப் போக்குவார்கள். கொஞ்ச தூரம்  காலாற நடப்பதும் உண்டு.”

ஒரு நாள் ஒருவர் வந்து எல்லோரும் இருக்கையில் நான் ரெண்டு சூரியனை இண்ணைக்கு காலைல பார்த்தேன் என்று கூறினார்.

எல்லோரும் மிக ஆவலாக எங்கே எனக் கேட்க நாளைக்கு காலைல  காணிக்கிறேன் எனச் சொல்லி அடுத்த நாள் காலையில் கிழக்குப் பக்கம் இருக்கும் இரத்தினபுரம் ஊருக்கு அழைத்துச் சென்றார்.

காலையில் சூரியன் கிழக்கு மலையில் இருந்து எழுந்து ஊரைக் காண வந்தது. வந்தவர்கள் இன்னொரு சூரியன் எங்கே ? என ஆவலாகக்கேட்க, அவர் அதோ அங்கே பாருங்கள் என் புது குளத்தைக் காட்டுகிறார். குளத்தில் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாக தெரிந்தது.

இதனால் அவரை இரட்டச் சூரியனென்றே அழைக்க அதுவே அவரின் பட்டப்பெயராயிற்று.


No comments:

Post a Comment