Sunday, December 25, 2011

முப்பது வருடம் போனபின் நினைவஞ்சலி

25-12-1981 என் தந்தை மறைந்த நாள். இன்று 25-12-2011..
நினைவு நாள். முப்பது வருடம் முடிந்து விட்டது.
இப்பவும் இருப்பது போன்ற உணர்வுடன்
இன்றைய காலை இனிதாக விடிந்தது.

பாப்பாத்திதனைத் தனதாக்கி தங்கமெனைத் தனயனாக்கிய
என் அப்பாவை வணங்குவேன் தினமும்.

தள்ளாத வயதிலும் கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
தன்னை அணுகியவனை அன்பாகவும் ஆதரவுடனும்
அரவணைக்கும் ஆறுமுகம் பிள்ளையின் பிள்ளையாய்
பிறந்தது நானடைந்த பாக்கியமே.

நோயுற்ற போது சேய் நான் என் தந்தையைத்
தாய் போல் பேணி பாது காத்ததும் எத்தனையோ
சேய்களிருந்தும் கடைசி வரைக் கூடவே இருந்துக் காத்த
கடைசிப் பிள்ளை நான் என்பதும் நானடைந்த பாக்கியம் தானே.

எங்கள் வீட்டுத் தங்கத்தின் புகழ் பாட விரும்பி தங்கம் நான்
அறிந்த சில உண்மைகளை பதிவு செய்கிறேன்.


இல்லம் இல்லா குப்பன் இல்லம் பெற்றதையும்
நிலமில்லா சுப்பன் நிலம் பெற்றதையும்
பலர் என்னிடம் கூறக் கேட்டு வியந்ததுண்டு

ஆடியிலும் கோடையிலும் பஞ்சம் வருவதுண்டு.
கொடிய நோயான வறுமை வாட்டும் போது சிலர்
வாடிய முகத்துடன் தேடிப் போகும் இடம்
கடுகையில் ஓரிடம் தான் உண்டு அப்போது.
அது நெல்லுக்கடை ஆறுமுகம் பிள்ளையின் வீடுதான்.

காசும் நெல்லும் பெற்றுச் செல்வர் சிலர்.
பசியாறிச் செல்வர் பலர்.

ஊருக்கு உறுப்பினராகி பின் பஞ்சாயத்துக்குத் தலைவராகி
ஏழூர்களின் முதலாம் மனிதராய்த் திகழ்ந்தார்.
அஞ்சுகிரி அய்யப்பனுக்கு கோவில் காண அஞ்சுகிரிப்
பொத்தையில் தன் சொத்தினைக் கொடுத்து மகிழ்ந்த
பெருமான் ஒரு மண்டல பூஜைநாளில் சிவனடி சேர்ந்தார்.

மார்கழிப் பனிவிழும் அதிகாலை நேரத்தில்
காலனவன் கவர்ந்து சென்றான் எந்தையின் உயிரை.அவர்
உறங்கியது போலவே இருந்தது உயிர் போன பின்னும்.
வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும்
மடிந்தாலும் இது போலவே மடிய வேண்டும்.

No comments:

Post a Comment