Tuesday, December 18, 2012

கல்யாணக் கலாட்டாக்கள்.....

எனது மகளின் நிச்சயதாம்பூலம் நாகர்கோவில் ராமவர்மபுரம் பி.டி.பிள்ளை மண்டபத்தில் நடந்தது. பக்கத்தில் சுமங்கலி மண்டபம். அங்கும் அன்று ஒரு கல்யாண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
 எனது வீட்டு நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விருந்துக்கு நான் அழைத்தவர்களில் முக்கியமான இருவர் என் கண்ணில் படவே இல்லை. அவர்கள் என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கிறவர்கள்.
மத்தியானம் வந்து விடுவதாகச் சொன்னவர்கள் வரவில்லையா ?
 கல்லூரி அலுவலகத்துக்கு போனில் பேசி விவரம் கேட்டதில் அவர்கள் புறப்பட்டுப் போய் அரை மணிக்கூருக்கு மேல் ஆகிவிட்டதே.... !

என் கல்லூரி நண்பர் ஆறுமுகப்பெருமாளிடம்,“  நம்ம நடேசனும் அய்யனாப் பிள்ளையும் மண்டபம் எது எனத் தெரியாமல் திணறுகிறார்கள் என் நான் நினைக்கிறேன். கொஞ்சம் வெளியே போய் நின்று கொள்ளுங்கள்.....”

 நான் சொன்ன உடன் சத்தம் போட்டு சிரித்தார். சார் வாருங்கோ என என்னை அழைத்துப் போய் பி.டி.பிள்ளை மாடி மண்டபத்தில் இருந்து பக்கத்தில் உள்ள சுமங்கலி மண்டபத்தின் சாப்பாடு ஹாலைக் காட்டினார். அங்கே நான் தேடிய அந்த இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


எனது மகள் திருமணம் சுமங்கலி மண்டபத்தில் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு தினங்கள் ஆனபின் என்னுடன் வேலைபார்த்த பேராசிரியர் சுரேந்திரன்பிள்ளையை சந்தித்தேன்.

அது காலையில் நடக்கும் போது  நடந்த சந்திப்பு.

அவர், “ சார் !  பொண்ணு மாப்பிளையெல்லாம் எங்கே இருக்கிறார்கள் ?”

நான் பதில் சொல்லி முடிக்கக்கூட இல்லை. அவர் என்னிடம் , “ நான் கல்யாணத்துக்கு  சாயந்திரம் வந்தேன் உங்களைக் காணவே இல்லையே..... ஆறும்பிள்ளை சாரைக் காணவில்லை..... செயர்மேனைக் காணவில்லை...”

சரியான சமயத்தில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி விட்டது. நான் வாசலில் நின்றுதான் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தேன்.... என்னை பார்க்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாதே......

அவர்,“ நான் உங்கள் மகளையும் மருமகனையும் பார்த்து ஆசீர்வதித்து விட்டு வரும்போது செல்லபெருமாளிடம் உங்களை எங்கே என்று கேட்டேன்... இன்னமும் வரவில்லை என்று சொன்னாரே...”

சார்...!  நீங்க எந்த மணடபத்துக்குப் போனீங்க....” நான் கேட்டேன்.

என்ன சார்.... இப்படிக் கேக்கறீங்க... பெருமாள் மண்டபத்துக்குத்தானே வந்தேன்.
நான் சிரித்தேன்....

சில முக்கியமான பெரியமனிதர் அடுத்த மண்டபத்திற்கு வரவேண்டியவர்....தவறுதலாக வந்து விட்டார்....ஆனாலும் தம்பதிகளை
ஆசீர்வதித்து விட்டுப் போனதும் என் மனதினை நெகிழச் செய்தது.

சமீபத்தில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி உடுப்பியில் எங்கள் உறவினர் வீட்டு மறுவீடு விருந்து சௌபர்ணிகா ஹாலில் நடந்தது.

ஆனால் சிலர் உடுப்பி என்றதும் எதனையும் பார்க்காமல் யாரிடமும் கேட்காமல் மாடியில் உள்ள சர்வமங்களா ஹாலில் போய் வேறொருவர் நடத்தும் விருந்தில் ......... இந்த நிகழ்வு தான் என் பழைய நினைவுகளக் கிளறியது.

இது போல் கலாட்டாக்கள்...... கல கலப்பாகவே இருக்கிறது....



Thursday, December 13, 2012

எனது மன்னர் பாலராமவர்மா......


கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியிலும் 1947-க்குப்பின் மக்கள் ஆட்சியிலும் வாழ்ந்து வந்தனர். மன்னர் ஆட்சி என்பது ஒருவர் நாட்டை ஆழும் ஆட்சி. இவருக்கு ஆலோசனைகள் கூறுவதற்கு சட்டசபை உண்டு. திவான் ஒருவர் மன்னருக்கு உதவியாக இருப்பார்.அவர் திவான் என்று அழைக்கப்படுவார். திவானாக இருந்தவர்களில் சர்.சி.பி.ராமசாமி ஐயரும் ஒருவர்.
 திருவிதாங்கூர் ஸ்ரீசித்திரைத் திருநாள் பாலராமவர்மா தமது 19-ஆவது வயதில் 1931-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னராக மகுடம் சூட்டப்பட்டார்.கடல் கடந்து செல்வது மறுக்கப் பட்ட நிலையில் – அந்த மூடத்தனத்தை எதிர்த்து மேலை நாடுகளுக்குப் பயணம் செய்து அந்நாடுகளின் வளர்ச்சிதனைக் கண்டு வந்தார். 
கால காலமாக மூடநம்பிக்கையில் ஆழ்ந்திருந்த பல பழக்கங்களை அகற்ற முற்பட்டார். எல்லா ஜாதியினரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க ‘ஆலயப் பிரவேசனம்” என்ற சட்டத்தை அமல் படுத்தினார். இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக மகாத்மாவால் பாராட்டப்பட்டார்.
காசி சர்வகலாசாலை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது. 2012 ஆம் ஆண்டு மாமன்னரின் நூறாவது ஆண்டு. 
இவர் தான் கடைசியாக திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர். 1947-இல் இந்தியாவுடன் இணைந்தது. இணையும் பொழுது கேரளாவில் இருந்த நாஞ்சில்நாடு 1956-இல் தமிழகத்தோடு இணைந்தது.
நான் பிறந்த வருடம் 1947 ஏப்ரல் மாதம்.
 நான் பிறக்கும் போது எனது மன்னர் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராமவர்மா

Wednesday, December 12, 2012

வேரை மறவாத அனந்தபுரத்தார் -அய்யாவு


கடுக்கரை, அனந்தபுரம் இரண்டு பேர்களும் ஒரு கிராமத்தின் பெயர்கள். .திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியான நாஞ்சில்  நாட்டின் முக்கிய கிராமங்களில் அனந்தபுரம் கிராமமும் ஒன்று.மன்னர் ஆட்சியிலும் சட்டசபை உண்டு. தகரவீட்டு திரு. மாதேவன்பிள்ளை  சட்டசபையில் ஒரு உறுப்பினர்.

அவரது ஒரே மகன் அய்யாவு . சென்னையில் ஓவியராக தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கைரேகை பார்ப்பதில் , ஜாதகம் ,எண் சாஸ்திரம் -இவைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
மிகவும் அன்பாகப் பேசும் இயல்புடையவர். தாமும் தந்தையைப் பின்பற்றி
மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என எண்ணினார் . அதற்கான ஒரு அறக்கட்டளையை  பதிவு செய்ய விரும்பி 2011-ல் "அனந்தபுரத்தார்  இசை,கலை அறக்கட்டளை " என  பதிவு செய்தார்.

கழிந்த வருடம் சேலத்தில் மாற்றுத்  திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அறக்கட்டளை வழி செய்தார்.

  தான் பிறந்த ஊர் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தவும்  கலையில் ஆர்வம் உள்ளோருக்கு பரிசுகள் கொடுக்கவும் , இந்தவருடம் 16-ஆம் தேதியன்று ஒரு நிகழ்ச்சி அனந்தபுரம் பள்ளிக்கூடத்தில் நடைபெறவிருக்கிறது.

ஒரு ஏழைத்  தவில் வித்வானுக்கு, இலவசமாகத் தவில் ஒன்றும் கொடுக்கிறார் .
அனைவரும் பாராட்ட வேண்டிய  செயல் இது. 

Tuesday, December 4, 2012

ஞாபக சக்தி வளர்ந்திட எளிய வழிகள்



 திருமண வரவேற்பிற்கு போய் திரும்பும்போது எல்லோருக்கும் கொடுத்த அச்சடித்த தாள் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படித்துப் பார்த்தேன்.
அதனை இத்துடன் பதிவு செய்திருக்கிறேன்.

   TIPS TO IMPROVE YOUR  MEMORY POWER & SKILL

To improve the memory power and skill of a person the right side of the brain should be activated. This can be achieved by doing the following exercises using LEFT HAND. (Left handers should do this with right hand).
Write
   1.  A  to Z           2. Z   to   A            3.   A= 1, B = 2 ………Z= 26          4.  Z=26, Y = 25, ……A=1    
 5.     i1  to 100       ii.   100  to  1 
  6. Write the ALPHABETS in your mother tongue  in the same way.(m>M> .../) (f.q>r.d)

OTHER EXERCISES:
7. Try to create as many new words (in capital letters)as possible from the following words.
                                         [Use Right or Left hand as you do normally]
TEAM, PLANETS, YESTERDAY & OBSERVATION   ( 12, 65, 100 & 250 words  respectively can be formed)
8. Close your eyes and then draw a circle.
9. Everyday try to learn a new ENGLISH word with its meaning.
10.Everyday try to remember a new phone number.

N.B:SCHOOL GOING CHILDREN  TO ELDERS OF ANY AGE CAN PRACTICE THESE EXERCISES .

______________________________________________________________________________
Courtesy :            S.DEIVANAYAGAM, M.Sc.,(I.T) C.A.I.I.B.,               
                           Mob:  9442583040
.                       
Compiled By :     Prof.S.MURUGAN
                           Mob:  9443313526  

                                                                                                                 

Saturday, December 1, 2012

மறக்க முடியாத யாத்திரை

வாடிய பயிர் போல் எல்லோர் முகமும் காணப்பட்டது. நேரம் போகப் போக மழைத் துளி பட்டால்போல் முகங்கள் இறுக்கத்தில் இருந்து சற்று மாறத் தொடங்கியது.வயறு பசித்தாலும் சாப்பிட மனமில்லாமல் சாப்பிட்டோம் .

ரயில் சங்கீத ஒலியை  ஒரே தாளத்துடன் ரீங்காரமிட்டுக் கொண்டே  சென்று கொண்டிருந்தது. வெளியே  மழை பெய்தசுவடுகள் ஆங்காங்கே  தெரிந்தன.

காசிக்கு சென்றால் எதையாவது விடவேண்டுமே .....

நான் காசிக்கு வந்து போவது இது இரண்டாம்  முறை. போன தடவை  ஒன்றை விட்டாச்சுல்லா.........

ஒருவர் சொன்னது . நான் பித்தளை கப்பில் காப்பி குடிப்பதை விட்டு விடுவேன்.

நான்  திருக்கார்த்திகை அன்று வாழை இலையில் செய்யும் பணியாரத்தை சாப்பிடமாட்டேன்.  அதை  பூவரசு இலையில்  சாப்பிடுவேன் .....

இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் சொன்னார் .கெட்ட  பழக்கத்தை தான் விடணும் ..... ஆகாரத்தை  விட யாரும் சொல்லல்ல .

வியாழன் இரவு வந்தது.பிரயாணக் களைப்பு அனைவரின் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. தூங்க ஆரம்பித்தோம் ..... மறுநாள் மதியம் இரண்டரை மணி. மிக சரியான நேரத்தில் ரயில் சென்னை மைய நிலையத்தை அடைந்தது.

எழும்பூர் சென்றோம். இரவு 7.30 அனந்தபுரி ரயிலுக்காக காத்திருந்தோம். மீனா திரவியம் எங்கள் பத்து பேருக்கு இடியாப்பம் கொண்டு வந்தாள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்லும் அளவுக்கு எங்கள் மனம் இருந்தது.
இரவு நேரப்பயணம் இனிதாக முடிந்தது. நால்வர் ஆரல்வாய்மொழியில் இறங்கினார்கள். நாகர்கோவிலில் நாங்கள் இறங்கி ,மறக்காமல் முருகதாஸ் சாமியிடம் விடை பெற்று வீடுவந்து                 சேர்ந்தோம்.

 ஒன்பது நாட்கள் தென் கோடியில் இருந்து வடகோடியில் உள்ள காசிக்கு சென்று வந்தது இரண்டாம் முறையெனினும் முன்னதை விட என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மக்களின் வாழ்க்கை முறை, ஒரு சிறிய கோவிலை வைத்துக் கொண்டு அனைத்து மக்களும் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ஆன்மீகம் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தானே பொருள்.

கடவுளின் தேசமே இந்தியா தான் என நான் எங்கோ படித்த ஞாபகம்.இங்கு வயோதிகம் பிரச்சினையே
இல்லை. வறுமை அகல அன்னதானம் எங்கும் உதவி செய்கிறது.
வறுமை ஒரு காலத்தில் நம் தேசத்தில் இருந்திருக்கும். ஆனால் இன்று இல்லை. அரசு செய்ய வேண்டிய அனைத்து நல்ல காரியங்களைக் கோவில்கள் செய்து கொண்டிருக்கின்றன. கோவில்கள் இருக்கும் இடத்தில் வறுமை இல்லை. மனதில் நிம்மதி கிடைப்பதும் இங்கே தான்.

உடல் நோய் போக மருத்துவ மனைகள்.
 மன நோய் அகல தெய்வம் இருக்கும் கோவில்கள்.

மறக்க முடியாத ஆன்மீக சுற்றுலா.
முத்து,குமரேசன்,முருகன்,ராமு
படத்தில் இருக்கும் இவர்கள்  எங்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர்கள். இவர்களையும் என்னால் மறக்க முடியாது.  இந்த வரிகளைப் படிப்பவர்களும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.

வாழ்க வளமுடன்..... நலமுடன்.....



ஓர் இதய அஞ்சலி----- யாத்திரையின் நடுவில்


ஒன்றாம் தேதி அதிகாலை ...... ஒரு பெண்ணின்  அழுகுரல் என் காதில் விழுந்தது .அதிர்ச்சியில்  எழுந்து பார்த்தேன். விசயத்தைப் புரிந்து கொண்டேன் ..நதியில்  துள்ளி ஓடும் மீன்களில்  ஒன்று   தரையில் தவறி விழுந்து துடி துடித்தது  போல் , எங்களுள் ஒருவர் உயிர் ஓடும் ரயிலில் பறந்து விட்டது. இரவிபுதூர் குழுவில் வந்தவர். அவரது அன்பான           நடவடிக்கையால் அனைவரையும் அவர் எல்லோருக்குமே அறிமுகமானவராய் இருந்தார் ....தாய் அருகில் இருக்கும்போது நடந்த சோகம் எல்லோரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது ...... பறக்கும் விமானத்தில் ,ஓடும் ரயிலில் ,பஸ்ஸில் ..... ஏன்  இந்தக்   காலன் வருகிறான்.
இந்த சோகத்திலும் அவரது தாய் உட்பட உறவினர்கள் ,ஊருக்கு செய்தியை அறிவித்த முறை , குழுவில் உள்ள அத்தனை பெரும் உதவி செய்ததைக் கூறி யாருக்கும் எந்த மன நெருடல் வராதவாறு சொன்ன பாங்கு என்னை உலுக்கியது. என் இதயத்தை நனைத்தது. கண்களில் கண்ணீர் . என்ன செய்ய......

பாதிவழியில் அவரது உடல் ரயில் பயணத்தை முடித்துக் கொண்டது. பின்னர் சட்டபூர்வ நடைமுறைகள் முடிந்து விமானத்தில் சொந்த ஊருக்கு .........  

Friday, November 30, 2012

காசியில்கடைத்தெருக்கள்

31-10-2012..... இந்த நாள் மிகவும் இனிமையான நாள். காலை நாலு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குப் போனோம். அதிக கூட்டம் இல்லை. நெருக்கடி இல்லாமல் தரிசனம் முடிந்தது..... காசிக்கு வந்ததில் ஒரு பூரண    திருப்தி இருப்பதை உணர்ந்தோம்.

காசி என் பார்வையில் ஒரு குட்டி பாரதம். அனைத்து மொழி பேசுபவர்கள்... மாநில மக்கள்.... வந்து போகிற ஒரு இடம். ஆன்மீகத்துக்கு உகந்த இடம்.... அறிஞர்களும் சாதுக்களும் போற்றும் இடம் காசி. வறுமை வாட்டாத இடம்.

கடைகள் மிக அதிகம். அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் ..... எல்லா மக்களும் சுகமாகவே வாழ்கிறார்கள். தெருக்கள் குறுகலானது. இந்த அளவு கூட்டத்துக்கு தெருக்கள் போதுமானதாக இல்லை.
 மனம் விசாலமானவர்களின் கடைகளுக்குச் சென்றோம். ஒன்று ஸ்ரீராம் ஜவுளிக்கடை. மற்றொன்று ஸ்படிகம், ருத்திராட்சம்..... விற்பனை செய்யும் கடை.

சாரி எடுத்தவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மொழி தெரியாத இடம். ஏமாற்றுவதாக தெரியவில்லை. ஆனால் பேரம் பேசாமல் எதனையும் வாங்குதல் கூடாது. கட்டுப்படியானால் அவர் தருவார்.அதனை  வாங்க நம் மனது ஒத்துக் கொள்ளுமானால் வாங்கணும். ஆனாலும் நான் ராஜேந்திரனுடன் சென்று தான் சாரி எடுத்தேன். ராஜேந்திரனும் அந்தக் கடை முதலாளியும் நன்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்.
சாரி வாங்கி வரும்போது பரிசுப் பொருள்கள் தந்தார் கடைக்காரர். அதோடு கூடுதாலாக சாமிப்படம் ஒன்றும் தந்தார். வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். வந்து போய்க் கொண்டிருக்கிற மக்கள்களில் ஒருவர் தானே நாம்.  இருப்பினும் நிரந்தர வாடிக்கையாளர் போலவே எங்களை நடத்தினார்.
அன்புக்கு பஞ்சமில்லாத ஊர்.

சர்மா என்பவர் அடுத்துள்ள ஸ்படிகமாலைக் கடைக்காரர். அவர்  M.A. படித்தவர்.அவர் கடையில் சில போட்டோக்கள் கண்டோம். தமிழக அரசியல்,சினிமாவைச் சேர்ந்தவர்கள் அந்தக் கடைச்சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.நாங்கள் ஸ்படிக லிங்கம் ஊரில் உள்ள உறவினர் ஒருவருக்கு கொடுக்க வாங்க நினைத்து அவரிடம் கேட்டோம். பல அளவுகளில் வித்தியாசமான விலயில் எங்கள் முன் வைத்தார். அவருடைய ஆலோசனையும் கேட்டு வாங்கினோம். ஒரு பவள மாலை வாங்கினேன். நல்ல மாலைதானா! Original

மாலைதானா என்று கேட்டேன். உடனே அவர் இரண்டு பாசிகளை ஒன்றோடு ஒன்றினை வைத்து உரசினார். தீப்பொறி வந்தது. அது ஒரிஜினல் தான் என்ற நம்பிக்கையோடு வாங்கினோம்.எங்களுடன் வந்த ஒருவர் இரண்டு வயது பையனுக்கு போடுவதற்காக ருத்திராட்ச மாலை கேட்டார். அவர் தர மறுத்து விட்டார். அந்த வயதில் அதனை அணியக்கூடாது என்றும் சொன்னார்.

எல்லாம் வாங்கியாச்சு இனிமேல் ஒன்றும் வாங்க வேண்டியதில்லையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் , தீர்த்தச் செம்பு வாங்கவில்லையே என்பது மனதில் வந்தது.  சத்திரத்திலும்  அது கிடைக்குமே...   அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம்.

சத்திரத்தில் அதையும் வாங்கினோம். ரூமில் போய் இருந்தோம்.
குமரேசன்  Banaras Hindu University பற்றி  கேட்டான்.


BHU is a public Central  University. It is a residential University.1916-இல் ஆரம்பிக்கப்பட்ட து .நிறுவியவர் பண்டிட் மதன் மோகன் மாளவியா. 1300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.20000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும். உலகத்திலேயே இது தான் பெரியது என்று  சொல்கிறார்கள்.

 குமரேசன், “  Residential University என்றால் அது என்ன ?”
 என்று கேட்டான்.

நான் அவனிடம் , “ உனக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் பற்றித் தெரியுமா ?”

ஏண்ணே அது எனக்குத் தெரியாதா.! என் மகள் பி.காம் படிச்சு வாங்கிய டிக்ரி அந்த பல்கலைக் கழகம் தந்தது தானே.!அவள் படிச்சது நாரூல் இந்துக் கல்லூரில.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பற்றித் தெரியுமா ? நான் கேட்டேன்

’அது சிதம்பரம் காலேஜ் தானே.... நம்ம கோலண்ணன் அங்கதானே படிச்சது...” குமரேசன் சொன்னான்.

நான் “ பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகமும்  அண்ணாமலை பல்கலைக்கழகமும் Residential University ஆகும்.”  எனச் சொன்னேன்...

எல்லா வகுப்புகளும் ஒரே வளாகத்தில் இருப்பதுவும் வேறு எந்த இடங்களிலும் அதன் கீழ் கல்லூரி என்று எதுவும் இல்லாமல் இருப்பதும் தான் ரெசிடென்சியல் பல்கலைக்கழகம் .

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற வைகள் தான்.

பேசிகொண்டிருக்கும்போதே, ஹாலில் சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது.  நானும் கீழே போனேன். பல கேள்விகள் சாமி கேட்க பதில் சொன்னவர்களின் பெயரைக் குறித்து வைத்து அதிக மதிப்பு பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்தார்.

இரவு 10.30 மணிக்கு வார்ணாசி ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனோம்.
1 மணிக்கு ரயில் ஏறினோம். ரயிலும் கிளம்பிச் சென்றது. வியாழன் விடிந்தது ரயிலடியில்...... காலையில் பார்க்கலாம்.

Wednesday, November 28, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை...6....

அக்டோபர் 30 செவ்வாய்கிழமைக் காலையில் எழுந்ததும் இன்றுள்ள Programme  என்ன என்று அறிய சிவதாணுபிள்ளை அண்ணாச்சியிடம் கேட்டேன்.அவர் சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே என் கைபேசி பாட ஆரம்பித்தது. அதை எடுத்து பேசுவது யார் எனப் பார்த்தேன். பேசுபரின் பெயர் இருந்தது. அது என் கணித மாணவர்.


“ சார்! எப்போ காசிக்கு வந்தீங்க.... நான் உங்க மாணவி.... எங்க வீட்டுக்கு எப்போ வருவீங்க.....”

“ நான் உன்னைப் பார்க்க கண்டிப்பா வருவேன். ஆனால் ஒரு குழுவுடன் செல்வதால் இன்று வரமுடியுமா என எனக்குத் தெரியவில்லை.நாளைக்கு புதன்கிழமை நான் வருகிறேன்..”

“ சார்!... நீங்கள்  இன்று வருவதாக நினைத்து School-க்கு லீவ் போட்டுவிட்டேன்.கண்டிப்பா இண்ணைக்கு காலையில் டிபன் சாப்பிடவாவது வாருங்களேன்....”

“அரை மணிநேரத்தில் உனக்கு நான் வருவதைப் பற்றி சொல்கிறேன்.”

ராஜேந்திரனிடம் கேட்டேன் “ அந்த student ரொம்ப வற்புறுத்துகாளே என்ன செய்ய.....” நாங்கள் இருவரும் முருகதாஸ் சாமியிடம் போய் எங்கள் திட்டம் பற்றி சொன்னோம்.  அவர் சொன்னார் “ நீங்க போகவேண்டிய இடம் Banaras Hindu University Quarters தானே. அங்கு போகும் திட்டம் உண்டு, அங்கு தான் பிர்லா மந்திர் இருக்கு .அங்கு தான் அனைவரும் காலை டிபன் சாப்பிடவேண்டும் . நீங்கள் அந்த மாணவியின் வீட்டுக்குப் போய் வாருங்கள். அங்கிருந்து புறப்பட்ட உடன் போன் பண்ணுங்கள்.நாங்கள் நிற்கும் இடத்தை உங்களுக்குச் சொல்கிறோம். வந்திருங்க்கோ”

ஆஹா! எவ்வளவு ஈசியாப் போச்சு.

அவளுக்குப் போண் பண்ணி விசயத்தைச் சொன்னேன்.

காலையில் ஒவ்வொரு சுமோ வண்டியிலும் பதினொரு பேராக ஏறினார்கள். நாங்கள் ஒன்பது பேர். எங்களுடன் ஒருவரும் சாமியும் வந்தார்.
சாரநாத் புத்தர்


காலபைரவர் கோவில், சாரநாத்,காசிராஜா அரண்மனை போன்ற இடங்களுக்குப் போய் அதன்பின் காசிப் பல்கலைக்கழக வளாகம் போனோம். நாங்கள் வந்த வண்டியில் போகலாம் அந்த மாணவர் வீட்டுக்குஎன நினைத்து அவனிடம் கேட்க அவன் முடியாது எனச் சொல்ல நாங்கள் ஒரு ஆட்டோவில் போனோம். வீடு அடுத்த சாலையில். அவன் எங்களிடம் வாங்கிய வாடகை ருபாய் 100/-
வீட்டு வாசலில் நின்று  எங்களை வரவேற்று மிகவும் அன்புடன் பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.

”நான் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பணியில் இருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு Inspiration. ஒவ்வோரு வருட ஆரம்பத்திலும் உங்களை நினைத்துக் கொள்வேன். ....” இதுபோல் மேலும் சொல்ல என் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோட ஆரம்பித்தது.

காலை உணவுக்குப் பின் நாங்கள் கிளம்ப தயாரானோம். என் மனைவியும் என்னுடன் வந்தாள். என் மனைவிக்கு  அந்த ஊர் சம்பிரதாயப் படி ஒரு சாரியும் ஜம்பர் துணியும் கொடுத்தாள். எங்களை ஆசிர்வதிக்கும்படி சொல்ல , திருனீரை அவள் நெற்றியில் பூசிவாழ்த்தியபின் விடை பெற்றொம். அவர்களே எங்களை எங்கள் குழுவினருடன் கொண்டு சேர்த்தார்கள்.

அப்புறம் துளசி மானஸ மந்திர் சென்று  வேறு சில கோவில்களுக்கும் சென்று விட்டு சத்திரம் போய் சேர்ந்தோம்.

காசிக் கோவிலுக்கு பூஜா சாமான் தினமும் இந்த சத்திரத்தில் இருந்து தான் செல்கிறது.

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....5....

குமரேசன் எங்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் ,” காசியில் பசுமாடுகள் மிக அதிகம். பசுவுக்கு பக்தர்கள் உணவு கொடுப்பதுண்டு. மிரண்டு போகும் பசுவோ, முட்டும் பசுக்களோ கிடையாது.
நாய்கூட அந்த இடத்தில் குரைக்காது.”

சாலையில் பகல் நேரம் நடந்து செல்வதே கஷ்டம். இதனிடையில் இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்லும். சைக்கிள் ரிக்‌ஷாவில் எஜமானன் போல் இருப்பார்கள். அவை பல இடங்களில் சற்று வேகமாகச் செல்வதையும் பார்க்கலாம். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அனைவரும் நகர்ந்து செல்வதால் நேரம் அதிகமாகும் கோவிலை அடைவதற்கு.

சாலையில் சென்றால் இடது புறம் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது என்பதை தோரணவாயில் அடையாளம் காட்டும். அந்த வழி சிறிய மிகவும் குறுகலான சந்து. இருபக்கமும் கடைகள். நம்மை கையைப் பிடித்து கடையினுள் இழுத்து விடுவதுபோல் அருகில் வந்து கடைக்கு வந்து சாமான் வாங்கும்படி அழைப்பு விடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் நம்மை மெட்டல் டிடெக்டர் மூலம் தலை முதல் உள்ளங்கால் வரைத் தடவி பார்த்து சோதனை செய்து அனுப்புவர். இது போல் இரண்டு மூன்று இடங்களில் சோதித்தபின் நாம் சன்னதியை (கர்ப்பக்ருஹம் வரை) அடையலாம். தரைத்தளத்தில் சதுரவடிவ பள்ளத்தில் சிவ லிங்க வடிவில் விஸ்வாநாதர் வீற்றிருப்பார். நாம் சிவலிங்கத்தைத் தொட்டு, புண்ணிய நீர் விட்டு நாமே அபிஷேகம் செய்யலாம். கூட்டம் அதிகம் இருந்தால், அதிக நேரம் நிற்க விடாமல் வெளியே அனுப்பி விடுவார்கள்.

கோவிலில் உள்ள கதவுகள் தங்கம் போல்  மின்னும்  தகடுகளால் பொதியப் பட்டிருந்தது. அது காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் செலவில் செய்யப்பட்டது.

அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் பக்கத்தில்தான் உள்ளது.விக்ரகம் மிகவும் ஐஸ்வர்யமுடையதாக இருக்கிறது.எங்களுக்கு பிரசாதமாக அரிசி கிடைத்தது.இங்கு வருபவர்கள் யாரும் பசியுடனோ, இரவுநேரம் சாப்பிடாமலோ  இருக்கக்கூடாதுஎன்பதால் இரவு கோவில் நடை அடைப்பதற்கு முன்பு கோவில் சேவகர்கள் இதனை உறுதி செய்து கொள்வர். கோவிலில் அனைவருக்கும் இரவு உணவு வசதி உண்டு.

 இங்கு அன்னபூரணி சின்ன விக்ரகம் வாங்கி வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.காசித்தீர்த்தம் ஒரு சிறிய செப்புக் குடத்தில் வைத்து விற்பார்கள் தேவைப் பட்டவர்கள் சிறிய பெரிய அளவில் வாங்கலாம்.

ஊருக்குப் போய் உறவினர்களுக்கு கொடுக்கவும் பலர் வாங்கினார்கள்.
உத்திராட்ச மாலை வாங்கலாம். ஸ்படிகமாலை வாங்கலாம். பலர் வாங்கினார்கள்.ஸ்படிகமாலையைக் கயில் வைத்துப்பார்த்தால் குழுமையாக இருக்கும். நல்லதா என்று பார்க்க இரண்டு ஸ்படிக பாசிகளை ஒன்றோடொன்றை வைத்து வேகமாக உரச வேண்டும். தீப்பொறி வந்தால் அது நல்ல ஸ்படிகம்.

காசி நகரம் அழுக்கான நகரம் போலவே இருக்கு. காரணம் பக்தர்களின் அதிக கூட்டமும் பசுக்களின் நடமாட்டமும் தான்.  கங்கை அகலம் கூடுதல், ஆற்று நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. கங்கை நீர் புனிதநீர். ஆனால் அது மாசுபட்டு, அம்மாசுவை எங்கேயோ கொண்டுபோக ஒடுகிறது. பார்த்துக் கொண்டே இருக்கலாம். காசியின் ஒரு புறம் கடல் போல் காட்சி தரும் ஆறு. இன்னொருபுறம் சாலையில் மக்கள் வெள்ளம்.

500 வெளிநாட்டு யாத்திரீகர்கள் மிகவும் ஒழுங்காக அனைவரையும் கவரும்படி பக்தி கானங்கள் பாடிச் சென்றனர்.  நாம் ஏனோ சுய ஒழுக்கத்தை அதிகம் விரும்பாமலேயே பொது இடங்களில் நடந்து கொள்கிறோம். நம்முடன் வரும் இளைஞர்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வதால் வருங்கால சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் காணும் என்பது வெறும் கனவே.
கங்கா ஆரத்தி பார்ப்பதற்கும் பாடும் பாடல்களைக் கேட்பதற்கும் நன்றாக இருக்கும்.அது தினமும் மாலை 6 மணிக்கு நடக்கும்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் பற்றி அறிய ஆசைப் பட்டு ராஜேந்திரனிடம் கேட்டேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.

Tuesday, November 27, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....4....

இரவு விடை பெற்றுப் போனது. 28-ஆம் தேதி பகல் வரவேற்றது.
 நான் என் செல் போனை எடுத்துப் பார்த்தேன். பகீரென்றது. சார்ஜ் தீர்ந்து போகும் என எச்சரிக்கை குறியீட்டுக் கோடு பயமுறுத்தியது.

நாங்கள் இருந்த ரயில் பெட்டியில் சார்ஜ் செய்யும் வசதி உண்டு. அதற்கு  நீண்ட காத்திருத்தல் கண்டு, சார்ஜ் பண்ண வாய்ப்பு கிடைக்கும்னு தோணாததால்,என் போனை அணைத்து என் பையில் போட்டு வைத்தேன்.

காலைக் கடன் செய்யும் பணி முடிந்தது. எங்களுக்கு முருகன் தேனீர் வாங்கித் தந்தார். காலையின் விடியல் பொழுது மெல்ல மெல்ல வெளிச்சத்தை  கொணர்ந்தது. ஞாயிறு காலை நேரம். எல்லோருக்கும் தேயிலை அல்லது காப்பி குடிக்கணும் போல் இருந்தது. காப்பிக் கொண்டு வருபவனுக்காக காத்திருந்தோம். ஒருவன் வந்தான் .ஆனால் அவன் வைத்திருப்பது தேயிலை.
சரி எதையாவது சூடாக் குடிப்போம் என்று குடித்தோம்.

காலையில் இட்லி தந்தார்கள். காலை உணவுப் பிரச்சினை எதுவுமின்றி முடிந்தது,பகல் பொழுது பேசிக் கொண்டிருந்தோம்.

முருகதாஸ் சுவாமி எல்லோரிடமும் போய் நலம் விசாரித்துவிட்டு எங்கள் பக்கமும் வந்து நலம் விசாரித்தார். நான் அவரிடம் எதையோ கேட்க நினப்பதாகப் புரிந்த அவர் என்னிடம்,” சார் ! என்ன வேண்டும்”
சுரதவனம் முருகதாஸ்
சத்திரம்
 என வாஞ்சையுடன் கேட்டார்.

நாளை நாம் எத்தனை மணிக்கு காசிக்குப் போவோம்?

திங்கள் காலை 7 மணிக்கு நாம் காசியில் இருப்போம் என்றார்.

எங்கே தங்கப் போகிறோம் ?

கோவில் பக்கத்தில் உள்ள சத்திரத்தில்  தான் . தனி அறை வேண்டுவோருக்கு ஒரு நாளைக்கு 300 ருபாய் கொடுத்து தங்கலாம்.
நான் எனக்கு ரூம் வேண்டும் எனச் சொன்னேன். சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்.
 நான் ராஜேந்திரனிடம் பேச ஆரம்பித்தேன். நேரம் பொகணுமே!.

”நாளை என்ன Programme.? உனக்குத் தெரிந்தால் சொல்லலாமே”

காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு ,கங்கையில் போய் குளிக்கலாம். மொட்டை போடுபவர்கள் மொட்டை போடலாம். குளித்து விட்டு திரும்பலாம்.
தர்ப்பணம் செய்ய விரும்புவோர் காசி கோவில் பக்கம் உள்ள ஆற்றின் படித்துறையில் அந்த காரியங்களைச் செய்யலாம். அதன்பிறகு நேரம் இருந்தால் கோவிலுக்குப் போகலாம். பேசிப் பொழுதைப் போக்கினோம். அடுத்த நாள் காலையில் மிகவும் சரியான சமயத்தில் காசியில் ரயில் வந்து சேர்ந்தது. எல்லோரையும் வாடகைகாரில் அனுப்பி விட்டு கடைசி ஆளாக அவர் எங்களுடன் வந்தார். நாங்கள் சத்திரத்தை வந்தடைந்தோம். நான் நினைத்ததை விட சத்திரம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

காலை உணவு அங்கேயே கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் எங்களுக்கு அறைச்சாவியை முருகதாஸ் சாமியே வந்து தந்து ரூமையும் பார்த்துவிட்டு திருப்தியோடு போனார்.

எல்லோரையும் கோயிலின்  பக்கத்தில் உள்ள மணிகர்ணிகா படித்துறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு படகுகளில் ஏறி கங்கை யாற்றின் எதிர்புறம் உள்ள கரைக்குச் சென்றோம். அங்கு ஆசை தீரக் குளித்தோம்.
மொட்டை போட்டவர்கள் அந்த இடத்தில் குளித்து முடிந்ததும்  கரைக்கு வந்தோம். தர்ப்பணம் செய்ய விரும்பியவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து மந்திரங்களும் பாடல்களும் ஒரு பண்டிதர் சொல்ல சொல்ல இவர்களும் சொன்னார்கள். கொஞ்ச நேரம் இருந்து விட்டு நானும் சிலரும் சத்திரம் நோக்கி நடந்தோம்.
மதிய உணவு சாப்பிடும் நேரம் நெருங்கியதும் சத்திரத்தில் டோக்கன் பெற்று சாப்பிட்டோம்.

மாலை நேரம் நெருங்கியதும் எல்லோரும் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டோம். சத்திரத்துக்குப் போனோம்.

எங்களுடன் வந்தவர்கள் தங்கியது ஒரு பெரிய ஹால். நம் பொருட்களை வைத்திட லாக்கர் வசதியும் உண்டு.

அந்தஹாலில் சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. (திங்கள் இரவு).யோகிராம் சுரத்குமார் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசியது நன்றாக இருந்தது. பேசி முடிந்ததும் அவர் சில தெய்வப்பாடல்களைப் பாடினார். குருவுக்கு நன்றி செலுத்தும் விதமாக தீபாராதனை நடந்தது.
 இரவு உணவுடன் அன்றைய நாள் இனிதாய் நிறைவுற்றது.

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....3....

ரயில் விரைவாகக் காசியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

நாங்கள் எங்களது லக்கேஜுகளை இருக்கையின் அடியில் உள்ள இடத்தில் ,  இருப்பதற்கும் தேவைப்படின் படுப்பதற்கும் வதியாக வைத்தோம்.

இந்த ரயிலின் பெயர் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ். கங்கை காசியில் உள்ளது. காவேரி தமிழ்நாட்டில் உள்ளது தானே. காவேரித் தண்ணிர் தான் வரவில்லை. சென்னையில் இருந்து காசிவழியாகச் செல்லும் இந்த ரயில் கடைசியாய் நிற்கும் இடம் சாப்ரா.அதனால் அதற்கு சென்னை-சாப்ரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு. அனேகமாக காசியில் அனைவரும் இறங்கி விடுவார்கள். சந்திரசேகர் பிரதம மந்திரியாக இருந்தபோது சாப்ராவுக்கு காசி வரை வந்த ரயில் நீட்டிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சாப்ரா அவரது தொகுதியில் உள்ளதால்.... இருக்கலாம்.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் இந்த ரயில் ஆந்திரா,மகாராஷ்ட்டிரா,மத்தியப் பிரதேஷ் எனமூன்று மாநிலங்களையும் கடந்து சென்று உத்தர்பிரதேஷில் உள்ள காசியை அடையும்.சனிக்கிழமை இரவு முழுவதும் ரயிலில் இருக்கவேண்டும்.  ஞாயிறு பகல் இரவும் ரயிலில் தான் பயணம். திங்கள் காலை 7 மணியளவில் காசியில் போய் சேரும்.

நாங்கள் 9 பேரும் ஒரு ஆளுக்கு ருபாய் 250 வீதம் வசூல் செய்து மொத்தப் பணத்தையும் முருகனிடம் கொடுத்து வைத்தோம். ரயிலில் எதனை வாங்கினாலும்  9 பேருக்கும் சேர்த்து வாங்குவது தான் வழக்கம். தேயிலையானாலும் சரி, ஆரஞ்சுப் பழமானாலும் சரி.....

காசின்னு சொல்லும் இந்த ஊரை வாரணாசி என்றும் சொல்கிறார்களே ! என்று எங்களில் குமரேசன் கேட்க, தெரிந்த ஒருவர் சொன்னார்.

2000 முதல் 3000 வருடங்களுக்கு முன்னமே உள்ள பழமையான இடம் இது. வேறு பெயர்களாலும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. பனாரஸ்,ஆனந்த வனம், மகா மயானம்,அவிமுக்தம் எனவும் பெயர்கள் உண்டு.
காசி என்பது தான் ஊரின் பெயராக அதிக மக்களால் சொல்லப்பட்டது.
மாவட்டம் வாரணாசி .
காசியில் விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. அம்மன் விசாலாட்சி .

காசி என்றால் என்ன ?

காசி என்றால் ஒளிநகரம். 12 ஜோதிர்லிங்கம் உள்ள கோவில்களில் காசி தான் முதன்மையானது.

 காசன் என்னும் அரசன் இப்பகுதியை ஆண்டதால் காசி என்னும் பெயர் இதற்கு உண்டாயிற்று என்றும் சொல்கிறார்கள்.பனாரன் என்னும் அரசன் இந்நகரத்தை பிற்காலத்தில் புதுப்பித்ததால் பனாரஸ் என்னும் பெயர் இதற்கு வழங்கப்படுகிறது.

வாரணாசி என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமே!

வாரணா,ஹசி என்ற இருநதிகளுக்கும் இடையில் அமைந்துள்ளதால் இவ்வூருக்கு வார்ணாசி என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தக் கோவிலைக் கட்டியது யார் ?

அக்பர் கட்டியதாகச்சொல்கிறார்கள். ஆதார பூர்வமான தகவல் எதுவுமில்லை.

1669-இல் அவுரங்கசீப் ,விசுவநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம். காசி ஒரு புண்ணிய ஸ்தலம் மட்டுமல்லாது மத ஒற்றுமையை வலியுறுத்திய சின்னமாகவும் இருக்கிறது.

காசிக்கு வருவதற்கு ஏன் ஆசைப்படுகிறார்கள்.?

காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டினால்,தீயசக்திகள் எதுவும் அண்டாது. தனது ஆயுட்காலத்தில் ஒருமுறையாவது காசிக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள்.

பொதுவாக வயதானவர்களே காசிக்குப் போய் வரவேண்டும் என்ற எண்னம் உள்ளது. இளைஞர்களும் போய்வரலாம்.

காசியின் சிறப்பு என்ன ?
காசியில் 64 தீர்த்த கட்டங்களில்  ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட் முக்கியமானவை. (காட் என்றால் ஆற்றின் அருகே அமைந்திருக்கும் படிக்கட்டுகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்).இது பிணத்தை எரியூட்டும் இடம். மன்னராய் இருந்த ஹரிசந்திரன் விதிப்பயனால் இந்தச் சுடுகாட்டை காவல்காத்ததால் அதற்கு இந்தப் பெயர். இறந்து போனவ்ர்களை கங்கையில் குளிப்பாட்டி அந்த சுடுகாட்டில் வைத்து எரிப்பதால் நித்திய சாந்தி உண்டாகும்.
காசியில் உள்ள இந்த இரு இடங்களிலும் “ பிணம் மணக்கும், பூ மணக்காது.” என்னும் பழமொழி இன்றும் அனுபவமாக பூர்வமாக உணரப்படுகிறது.
காசியில் மரணம் அடைந்தால் முக்தி கிடைக்கும் என்பதால் இறக்கும் தருவாயில் முதியவர்களை அவர்களது வாரிசுகள் காசியில் தங்க வைத்துக் கொள்வார்கள்.அவ்வாறு தங்குவதற்கென்று விடுதிகள் காசியில் உள்ளன.

  கங்கை ஆற்றின் அருகே தான்  உள்ள மயானத்தில் எப்பொழுதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும்.

காசியில் செய்ய வேணியது என்ன?

பித்ரு தர்ப்பணம், முண்டனம்,தானதர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்கள் செய்யலாம்.

காசியில் எப்பொழுது கோயில் தரிசனம் பண்ணலாம் ?

 காலை 2.30 முதல் இரவு 11 மணி வரை.

காசியில் என்னென்ன வாங்கலாம் ?

காசிக்கயிறு, தீர்த்தச் செம்பு, அன்னபூர்ணா விக்ரஹம்,ஸ்படிகமாலை, ஸ்படிக லிங்கம்,ருத்ராட்சம் போன்ற பூஜைப் பொருள்கள் வாங்கலாம். பட்டுப்புடவைகள் வாங்கலாம்.

தங்குவதற்கு வசதிகள் உண்டுமா?

நிறைய உண்டு. லாட்ஜுகள் உள்ளன. சத்திரங்கள் உள்ளன. நாங்கள் தங்கும் இடம் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே ,இரவு உணவு எங்கள் இருப்பிடத்திற்கே வந்தது. சாப்பிட்டோம்.  பின் சற்று நேரம்  பேசிக் கொண்டிருந்தோம்.9.30 மணியானதும் தூங்க ஆரம்பித்தோம்.

ரயில் சரியான சமயத்தில் எல்லா ரயில் நிலையங்களையும் கடந்து செல்வதாக அறிந்து கொண்டோம். அசைந்து அசைந்து செல்லும் ரயில் தொட்டில் போல் தூங்குவதற்கு சுகமாக இருந்தது. 27 ஆம் தேதி இரவு எங்களிடம் இருந்து விடைபெற தயாராக விழித்துக் கொண்டே இருந்தது.

.

Sunday, November 25, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....2....

26-10-2012 மாலை கன்னியாகுமரி சென்னை விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த நாள் பகல் பொழுதை எப்படிக் கழிப்பது ! வாரணாசி ரயில் Central Station -இல் இருந்து மாலை 5.30 க்குதான் புறப்படும்.
எங்களுடன் வந்தவர்களில் நான்கு பேர் தாம்பரத்தில் இறங்கிவிடுவதாகச் சொன்னார்கள். அண்ணா நகர் அண்ணனின் வீட்டுக்கு நாங்கள் போகலாம் என திட்டமிட்டோம்.

27-ஆம் தேதி காலை ரயில் தாம்பரத்தில்  நின்றது. நால்வர் இறங்கினர்.நாங்கள் மூன்று பேர் எக்மோரில் இறங்கும் போது  எங்களை அழைத்துக் கொண்டு போக எனது அண்ணனின் மகன் வந்து நின்றதைப் பார்த்தேன்.நாங்கள் அவருடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். செல்வதற்கு முன்னால் சொல்லவேண்டிய நபரிடம் தகவல் சொன்னோம். மாலை நான்கு  மணிக்குள் மைய ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்படி சொன்னார்.

அண்ணா நகர் வீடு வந்து சேர்ந்தோம். குளியல் , உட்பட எல்லாமே முடிந்தது.
அண்ணன் வந்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

82 வயதான அவர் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“உங்கள் எல்லோரையும் யார் அழைத்துக்கொண்டு போகிறார் ?”

எங்களை அழைத்துச் செல்பவர் ஒரு இளம் துறவி. அவர் பெயர் முருகதாஸ். (சுரதவனம் முருகதாஸ்). அவரை எல்லோரும் சுவாமி என்றே அழைப்பதைக் கண்டேன். நானும் அவரை அவ்வாற அழைக்க முற்பட்டேன். அப்போ அவர் சொன்னார்.“ சார், உங்களுக்கு எப்போதுமே நான் முருகதாஸ் தான். நீங்கோ முருகதாஸ் என்றே கூப்பிடுங்கோ.”

முருகதாஸ் தெ.தி. இந்துக் கல்லூரி மாணவர். படித்துக் கொண்டிருக்கும் போதே ஆன்மீக நாட்டம் காரணமாகவும் தமிழ் போதித்த ஆசிரியர் இந்து சாமியார்களை வசைபாடி வகுப்பில் பேசியதைத் தாங்க முடியாமல் மனம் நொந்ததன் காரணமாகவும் படிப்பதை நிறித்தி விட்டார். அந்த ஆசிரியருக்கும் இதனைத் தெளிவாக எழுதி கடிதம் ஒன்றையும் அனுப்பினார்.

கடிதத்தைப் பார்த்த அந்த தமிழ் ஆசிரியர் அவர் இருக்கும் இடம் போய், தான் தவறு செய்ததற்கு வருந்துகிறேன் என்றும் கல்லூரிக்கு வரும் படியும் வேண்டினார்.ஆனால் அதன் பிறகு படிக்க கல்லூரிக்குப் போகவில்லை. ஆனால் இன்று அவர் ஆன்மீகம் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கிறார். சம்ஸ்கிருதம் படித்திருக்கிறார்.தெய்வப் பாடல்களைப் பாடுவதும் கேட்பவர்களை பாட வைக்கவும் செய்கிறார். அவர்  குருவாக வணங்குவது திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் சுவாமி.

 பகவத் கீதை வகுப்பு நடத்துகிறார். அந்த வகுப்பில் தமிழ் ஆசிரியர்கள், ஆங்கிலப் பேராசிரியர் மாணவர் போல் அமர்ந்து கேட்கிறார்கள்.
ஆறுமாதத்திற்கும் அதிகமாக காசியில் தங்கி இருந்து தம்மை சுய பரிட்சை
செய்து பார்த்து இன்று ஒரு துறவியாக வாழ்ந்து வருகிறார்.

முருகதாஸ் ரயிலில் வரும்பொழுது தனிதனியாக ஒவ்வொருவரிடமும் போய் அவர்கள் நலம் விசாரித்து ,“  தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ள, என்னுடைய mobile  எண் இதோ இந்தக் கார்டில் இருக்கிறது”, என்று சொல்லி கழுத்தில் மாலையாய் அணிந்து கொள்ள ஒரு அடையாள அட்டையைத் தந்தார். செந்நிறம் கொண்ட அந்த (ribbon) மாலை அழகாக இருந்தது.
ரயிலில் இரவு உணவு கிடைத்ததா .... நன்றாக இருந்ததா.... என்றெல்லாம் கேட்டதும்    ரயில் சாப்பாடு திருப்தியாக இருக்கும் என எப்போழுதும் எதிர்பார்க்க முடியாது.... எனச்  சொன்னது ..... என் மனதுக்குப் பிடித்தது.
அண்ணனிடம் சொல்லி முடித்தேன்.
அவர் ,” “ Banaras Hindu University -க்குப் போவீங்களா என்று கேட்டார்.
 மூன்று நாட்களில் ஒரு நாள் காசியைச் சுற்றியுள்ள இடத்திற்கு அதாவது பிர்லா மந்திர்,பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்,காசிராஜா அரண்மனை, காலபைரவர் கோவில்,சாரநாத்....போவோம் என்றேன்.

எங்கே தங்குவீங்க !

காசி விஸ்வநாதர் கோவிலின் பக்கத்தில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்குவோம். அங்கேயே உணவும் கிடைக்கும்.

மாலைமணி  மூன்று . சென்னை செல்லும் போதெல்லாம் நான் வழக்கமாகச் செல்லும் கேசவனின் கார் வந்தது. அதில் நாங்கள் மூணு பேரும் central station-க்குப் போனோம்.

காலையில் பிரிந்து சென்ற அனைவரும் மாலையில் செண்ட்ரல்-இல் கூடினோம்.எங்களுடன் வந்த முருகனின் அண்ணன் கோலப்பன், குமரேசனின் தம்பி மகன் பாரதி,சிவதாணுபிள்ளை அண்ணாச்சியின் மைத்துனர் வழி அனுப்ப வந்தார்கள். எங்கள் Luggage களை அவர்களே தூக்கிக் கொண்டு வந்து பத்துக்கும் அதிகமாக தண்ணீர் பாட்டிலும் வாங்கித் தந்தார்கள். தேநீரும் அவர்கள் வங்கித் தந்து குடித்தோம். நல்ல தண்ணியும் சாப்பாடும் இனி அடுத்த வெள்ளிக்கிழமைதான் கிடைக்கும் என்று எங்களில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. அவ்வாறு அவர்கள் வந்தது இன்றும் இதனை எழுதி கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ரயில் வந்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை,படுக்கை களில்  அமர்ந்து கொண்டோம். மிகச் சரியான நேரத்தில் ரயில் நகர்ந்தது. ரயில் நகர  நகர நடைமேடையில் நின்று கையசைத்தவர்கள்  கொஞ்ச தூரம் எங்கள் திசையிலேயே நகர்ந்து வந்ததும் கண்ணுக்குத் தெரிந்தது.

காசியை நோக்கிப் பயண ரயில் அதனுடைய சத்தத்தை சங்கீதம் போல் இசைத்துக் கொண்டே சென்றது.



Saturday, November 24, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....1....

அக்டோபர் மாதக் கடைசியில் புனித காசிக்கு ஒரு புண்ணிய யாத்திரை பற்றிய அறிவிப்புத் தகவல் தாள் என் கையில் கிடைத்தது. அது அழகுற வடிவமைத்திருப்பது கண்டு ரசித்தேன். படித்தேன்.

அச்சில் பார்த்துப் படித்துப் பார்க்கும்போதே மனம் மலர்ந்தது.இரண்டாவது தடவை செல்லும் காசி யாத்திரை சுகமான யாத்திரையாகத்தான்  நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை மனதில் பதிந்து விட்டது.

யாத்திரை நாள் 26 அக்டோபர் முதல் நவம்பர் 3 வரை(2012). யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் நலம் கருதி அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி பகல் 3,30 மணி முதல் 6 மணி வரை கஞ்சிமடம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வைத்து மகா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும் யாத்திரை விளக்கக் கூட்டமும் நடைபெறும். யாத்திரிகர்கள் இதில் அவசியம் கலந்து கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறார்கள்

பசுமையான வரிகள் மனதை ரம்மியமாக்கியது. நாங்களும் கலந்து கொண்டோம். மிகச் சிறப்பாக சொன்னபடியே அனைத்தும் நடந்தது. சுய அறிமுகம் என்று அனைவரும் தன் பெயரை சப்தமாக அனைவர் காதில் விழும்படியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நானும் என்முறை வரும்போது சொல்ல வேண்டும். சொல்வதில் தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் திரு. ஆறுமுகம்பிள்ளை கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி அனைவரும் அறியும்படி சொன்ன பிறகு நானும் சொல்ல வேண்டுமா !.பெண்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடன் என் மனைவியும் இருந்தாள். அவள் தன் பெயரை சொன்னாள். என்ன சொல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் பக்கத்தில் உள்ளவர் அவர் பெயரைச் சொன்னார். அவர் சொல்லி முடித்ததும் நான் எழுந்து நின்று சொன்னேன். “ அதோ அங்கே இருக்கும் சுப்பம்மையின் மாப்பிள்ளைதான் நான்” என்றேன். அனைவரும் ரசித்தார்கள் அதனால் சிரித்தார்கள் என நான் எடுத்துக் கொண்டேன் .

அந்தக் கணமே எங்களை அழைத்துச் செல்பவரின் நிர்வாகத்திறமையை, அவர் அறிவை, இதயத்தில் இருந்து மட்டுமே வெளிப்படும் அன்பை எங்களால் உணர முடிந்தது.
 அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கன்னியாகுமரி விரைவு ரயிலில் எங்கள் பயணம் தொடங்கியது. நாங்கள் 9 பேர் ஒரு குழுவாக இருந்ததால் எங்கள் அனைவருக்கும் அருகருகே இருக்கும்படியாக இருக்கைகளே ஒதுக்கப் பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. வசதியாகவும் இருந்தது.

அன்று இரவுக்கான உணவை நாங்கள் கொண்டு போயிருந்தோம்.அதை  சாப்பிட்டு விட்டு இரவு தூங்கினோம்.

காலை 7 மணியளவில் எழும்பூருக்கு ரயில் வந்து சேர்ந்தது. எங்களை ஒரு வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருந்த நபரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.







Friday, November 23, 2012

புனிதகாசிக்கு ஒரு புண்ணிய யாத்திரை

வழக்கம் போல்  கடுக்கரைக்கு போய் ராஜேந்திரன் வீட்டில் நான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கையில் ஒரு தோல் பையுடன் அங்கு வந்தார்.  பார்த்தால் சீட்டுப் பணம் வசூல் செய்பவரைப் போல் தோற்ற     மளித்தார்.அவரை அதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை.

அவர் தோவாளை ஊரைச் சேர்ந்தவர் என்றும் பலரை காசிக்கு அழைத்துச் செல்பவர் எனவும் அறிந்து கொண்டேன்.
 அவர் மே மாதம் காசி செல்ல விரும்புபவர்கள் பெயரையும் அதற்குண்டான கட்டணத்தையும் வாங்குவதற்காக வந்திருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னரே இரயிலில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் ஜனுவரி மாதம் முன்பதிவு செய்யவேண்டும்.அதுக்குப் பணம் வேணுமே. பணம் வாங்குவதற்காக அங்கு வந்தார்.

எத்தனை பேரைக் கூட்டிக்கொண்டு போகிறார் என்ற என் கேள்விக்கு 80-க்கும் அதிகம் என்ற பதில் கிடைத்தது. கடுக்கரையில் இருந்துதான் கூடுதல் ஆட்கள் என்றும் சொல்லப்பட்டது. அழைத்துக் கொண்டு செல்பவரைப் பற்றி மிகவும் புகழ்ந்தும் சொல்லப்பட்டது.
அவரது பெயரென்ன?

 “காசி முருகன்”.

காசி சிவனைத் தரிசிக்க வருடம்தோறும் ஆட்களை அழைத்துச் செல்வது ஒன்றே இவரது பிரதானப் பணியாய் இருப்பதால் இவர் பெயரோடு காசியும் ஒட்டிக் கொண்டது.

காசி முருகன் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“நீங்க காசிக்குப் போயிருக்கிறீர்களா ?”

“ஆமாம் 2009 -இல் போயிருக்கேன்.”

இந்த சந்திப்பு  நடந்த மாதம் ஜனுவரி 2012. அந்த நாளில் என் மனைவியும் கடுக்கரைக்கு என்னுடன் வந்தாள். காசி முருகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவள் என் அருகில் இருந்தாள். அவளுக்கு காசிக்குப் போகணும் என்ற ஆசை அரும்பியது. மெல்ல என்னிடம் , காசிக்கு நாமும் போலாமா? என்று கேட்டாள்.
“நீ வேண்டுமானால் போயிற்று வா. நான் வரவில்லை ”என்றேன்.

நான் சொன்னதை நிராகரிக்கும் மன நிலையிலேயே இருந்த அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அவளை சமாதானப்படுத்தும் விதமாக ,“ இப்பந்தானே போயிட்டு வந்திருக்கோம். கொஞ்சம் பொறுத்துக்கோ. விமானத்தில் இருவருமே அடுத்த வருஷம் போலாம். போனதடவைப் போகும் போது எவ்வளவு கஷ்டப்பட்டோம்.”

காசிமுருகன் விடை பெற்றுப் போனபின், அக்டோபர் மாதம் காசிக்குப் போனால் சீதோஷ்ணநிலை நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொன்னார்.

நான் சொன்னேன்.  “அதிக எண்ணிக்கையுடன் அவர் அழைத்துக்கொண்டு செல்வதால்  பல சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கூடுதல். மனதளவில் எனக்கு இஷ்டம் இல்லாமல் இருந்ததால் இது போன்ற பயணம் வேண்டாம்.”

”நீ அக்டோபர் மாதம் எங்களுடன் காசி யாத்திரைக்கு வா.நானும் அந்த டூரில் உண்டு. ஜுன் மாதம் பேரு கொடுத்தாப் போரும் . கண்டிப்பா வாருங்க.  நிச்சயம்  இந்த தடவை உங்களுக்குப் பிடிக்கும்” என்றார் ராஜேந்திரன்.

”அதெல்லாம் சரி! யார் நம்மை காசிக்கு அழைத்துக் கொண்டு போகிறார் ? முதல்ல அதைச் சொல்” என்றேன்.

பெயர் சொன்னான்.

பெயரைக் கேட்டதும் நிச்சயம் நாங்கள் வருவோம் என்று சொன்னேன்.

ஜுலை மாதம் எங்கள் பெயர்களையும் போட்டோவுடன் இணைத்து அவரிடம் கொடுத்தோம் . ஒரு ஆளுக்கு 3800 /- Senior citizen என்றால் 3500/- ருபாயும் கொடுத்தேன். பயண  நாள் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி.

புண்ணிய யாத்திரை ஆரம்பம் ஆனது.




Wednesday, October 24, 2012

எழுபது வயதான இருவர் சந்தித்த அந்த நாள்....

நேற்று சரஸ்வதி - நவராத்திரி பூஜையின் இறுதி நாள் பூஜை .காலையில்  பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு  வந்த என் மகள் அவர்களது வீட்டில் இருந்தாள்.  இதன் காரணமாக எங்கேயும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாமே என முடிவெடுத்துக் கொண்டிருந்த என்னை என் நண்பரின் அழைப்பு கடுக்கரைக்குப் போய் வர வைத்தது. அன்று அவரது 65-ஆவது பிறந்த நாள்.

காலை 11.30 மணிக்கு நானும் அவரும் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தோம்.

" உனக்கு எங்க தாத்தாவின் தம்பியைத் தெரியுமா” என்று கேட்டார்.

“ ஏன் தெரியாது ! நல்லாத் தெரியுமே. எனக்கும் அவர் தாத்தாதானே. கடுக்கரையில் நெல்லுக் கடை வைத்திருந்தார்லா.....” என்றேன்.

“ உனக்கு பிளாக் எழுத ஒரு விசயம் சொல்லட்டுமா....”

அவன் சொல்ல ஆரம்பித்தான்.

“  ஒரு நாள் அந்த தாத்தாவை  எங்க வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்காக அழைக்கப் போனேன். அவர் வெளியூரில் வசித்துவந்தார்.  பெரிய பண்ணையார். கடுக்கரையில் உள்ள களத்துக்கு வயல் அறுவடைக்காக வருவார்.  வந்து சில நாட்கள் தங்குவார். அவருக்கு சொந்த ஊர் கடுக்கரை.  அப்பம் அவருக்கு எழுபது வயதிருக்கும்.... ஆள் நல்ல சிவப்பு.... வேட்டியை வயிற்றுக்கு சற்று மேலே இறுக்கமா கட்டி இருப்பார். தூய வெள்ளை உடுப்பு. தடிமனாகவும் சற்று உயரமாகவும் இருப்பார். கையில் நடப்பதற்கு ஊன்றுகோல் எதுவும் கிடையாது.”

அவர் நடந்து வந்த போது ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைப் பார்த்தார்.சற்று அமைதியாய் நின்று என்னைப் பார்த்து, “  ஏய்! அந்தப் பாலத்துல நானும் அண்ணனும் இருந்து பேசிக்கிட்டிருப்போம் . ரெண்டு பேரும் நடந்து நொண்டிப்பாலம் வரை போவோம். நான் பீடி குடிப்பேன். அந்தக் காலத்துல சிக்கரெட்டுல்லாம் கிடையாது. நான் கொடுத்தா மட்டும் அண்ணன் பீடி குடிப்பார்.... அவருக்கு கடுக்கரையிலும் நல்ல மதிப்பு.. எல்லா ஊர்லேயும் மதிப்பு உண்டு. ... எனக்கு அதெல்லாம் ஒன்ணும் கிடையாது.”   அவரது பழைய நினைவுகள் - எனக்கு அப்போ 21 வயசு-. கேட்பதில் ஒரு சுவராஸ்யம் இருந்தது.”

நடந்து பள்ளிக்கூடம் அருகே வந்ததும் மேற்குத்தெருவில் இருந்து ஒரு பாட்டா தடிக்கம்பு ஊணி நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து நின்றார். அவர் அருகே வந்ததும் அந்தப் பாட்டாவின் வயிற்றுப்பக்கம் கட்டியிருக்கும் வேட்டியினுள் கையைவைத்துப் பிடித்து இளுக்க அந்தப் பாட்டா திடீரென்று ஏற்பட்ட அதிற்சி காரணமாக என்னவென்று அறியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

நம்ம தாத்தா ,“ என்னடே ..... என்ன உனக்குத் தெரியல்லையா?” என்றார்.

இவர் பேசிய சத்தம் கேட்டதும் பாட்டாவின் முகம் மலர்ந்து , “ ஏய்.... செல்லம்..... உன்னப் பாத்து எத்தனை நாள் ஆச்சுடே.... எப்படிடே இருக்க...
நல்லா இருக்கியாடே.....”

சேக்காளியைக் கண்ட பரவசம் அந்தப் பாட்டாவின் முகத்தில் தாண்டவம் ஆடியது.

“ என்னடா .... நீ.... கம்பு ஊணி நடந்து வாறே.... என்னப் பாத்தியா.... ஓன் வயசுதானெ எனக்கு... கம்பா வச்சிருக்கேன்.....” உற்சாக மிகுதியில் தாத்தா பேசினார்.

பதிலுக்கு பாட்டா,“ ஏய் ! செல்லம்.... நீ யாரு.... நான் யாரு... நீயும் நானும் ஒண்ணாடே...... நீ எப்படி இருக்கணுமோ அப்படி இருக்க.. நானும் உன்னமாரி இருக்க முடியுமாடே...... ஏண்டே என்ன பாக்க வரவே மாட்டேங்க.....”

உற்சாக மிகுதியால் அவரது முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டு தாத்தா என்னுடன் நடந்து வந்தார்.  பள்ளிக்கூடத்தைக் கையால் காண்பித்து “ இந்தப் பள்ளிக்கூடத்திலதான்  நானும் அவனும் ஒண்ணாப் படிச்சோம். அப்பம் இது ஓலைக் கட்டிடம்....”

காலத்தின் கோலம் பின்னாள் எப்படி இருந்தது தெரியுமா?

கம்பு ஊணி நடந்துவந்தவர் அதிக நாள் வாழ்ந்தார். தாத்தா ஒரு மாதத்தில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் பல வருடங்கள் சிரமப்பட்டார்.



Sunday, October 14, 2012

குரு ஒருவர் தேவை என அறிவுறுத்திய பாபு

இந்தத் தடவை என்னுடைய இரயில் பயணம்- பகலில் வந்த இரயில் பயணம் மிகவும்  வித்தியாசமாக இருந்தது. நான் சந்தித்த இரயில் நண்பர்கள் என் மனதில் இன்றும் மகிழ்வைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலில் சந்தித்தது விவசாயத்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி திரு.சுந்தரேசன். அவர் அப்பா மகாராஜ நகரில் கோவில் கட்டினவர். ஆனால் அவர் சின்னச் சின்ன கோவில்களுக்குப் போய் பூஜாரியின் முதுகைப் பார்ப்பதை விட வீட்டில் பூஜாரூமில் சாமி கும்பிடுவதைதான் விரும்புவாராம்
கல்லூரிக்கு நிதிஉதவி செய்த திருவாடுதுறை ஆதீனம் பற்றி அவர் சொன்னது புதுச் செய்தி. அது நாங்கள் எழுதும் வரலாற்று நூலில் சேர்க்கப்பட வேண்டுமா?
அடுத்தது வடநாட்டு நல்ல இளைஞனின் ஜோதிட மோகம்
நாடி ஜோதிடத்தினால் ஏற்படும் நன்மை ஒன்று உண்டு. அந்த ஜோதிடன் பணக்காரனாவது. தீங்கு அகப்படும் பாமரன் ஒருவன் தன் பணத்தை இழப்பதுவே. அநியாயமாய் ஒருவனின் ஆசை காரணமாக இன்னொருவன் பெருவசதிஅடைவதும் எத்தனை நாள் இந்த நாட்டில் நடக்குமோ.

மதுரையில் ஏறிய ஒருவர். வயது 47. மிகக் குறுகிய நேரத்தில் மலையாளமும் தமிழும் கலந்த பேச்சால் நண்பர்களாகி விட்டோம். என் இருக்கை எண் 44. அதன் படுக்கை மேலடுக்கில்.நான் TTE-இடம் 43-க்கேட்டு அதில் அமர்ந்து கொண்டேன். சேலம் செல்லும் அந்த இருக்கைக்கு வரவேண்டியவர் வரவில்லை.
மதுரையில் ஏறியவர் க்கு 43 ஆம் எண் இருக்கையை கொடுத்திருக்கிறார்.
அவர் அதற்கு உரிமை கொண்டாடுவதில் தவறேதும் இல்லை. ஆகவே அவரை இருக்கச் சொல்லி நான் எழுந்தேன்.அவர் பெயர் பாபு. பாபு என்னிடம்,’ நீங்க இருந்து கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன். கேரளத்துக் காரர் ஒருவர் இவ்வாறு சொல்வது அதிசயம் தான்.

பாபு மிகவும் அனபாகவே பழகினார். அவர் என்னைப் பற்றி கேட்க நான் சொல்ல என் மீது கொண்ட மதிப்பு அவரிடம் கூடுவதைக் கண்டேன். அவர் தான் பாலக்காட்டுக்காரர் . மதுரையில் வேலை நிமித்தம் மதுரையில் தாமசிப்பதாகவும் சொன்னார்.தாய் பாலக்காட்டில்.
அவரது தாயின் படம், தாரத்தின் படம்,ஒரே மகளின் படம் இருந்த கைபேசியை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார்.

அவர் ஒரு செயில்ஸ் மானேஜர். கார் சம்பந்தமான வேலை.

எங்கள் எதிரே இருந்தவரின் நாடி ஜோதிட அனுபவத்தைக் கேட்டதில் அவரும் உண்டு. அவர் பூனாவில் உள்ள ஆச்சிரமத்தின் விலாசத்தைக் கொடுத்துப் பார்க்க முடியுமானால் பாருங்கள் என்று அந்தப் பையனிடம் சொன்னார்.

என்னிடம் பேசும்போது  அவர் இந்தியாவில் உள்ள அவரது கம்பெனி ஆட்களில் தான் தான் முதல் ஆள். குறிக்கொள் அதிகம் எட்டியவர். தான் அவ்வாறு பெருமை அடையக் காரணம் ஒரு குரு தான் எனச் சொன்னார்.
குரு இப்பொழுது உயிரோட் இல்லை.அவர் பெயர் சத்தியானந்த சரஸ்வதி.செங்கோட்டுக்கோணத்தில் ஆசிரமம் இருக்கிறது.
திருமணம் ஆனவுடன் முதன்முதலாகப் போன இடம் அந்த ஆஸ்ரமம்.அவர் உயிரோடு இருந்த காலம்.
அவர்களை அவர் ஆசீர்வதித்து விட்டுச் சொன்னாராம். “உன் மனைவி பிரசவ சமயத்தில் முதுகு வலியால் வேதனைப் படுவாள். அப்போது நீ இங்கு வா.நான் மருந்து தருகிறேன்.” வலி வந்தது. அவர் தந்த மருந்தால் குணமும் கிடத்தது. சுகமாகவும் பிரவசம் நடந்தது.

ஆஸ்ரமத்தில் யாரிடமும் யாசிப்பதில்லை. விளக்குக்கு எண்ணெய்  ஒரு நாள் இல்லாமல் இருந்த சமயம். கிணற்று நீரை மந்திரித்து விளக்கில் விட்டு தீபம் ஏற்றச் சொன்னாராம்.விளக்கு எரிந்தது.

மணி பத்தைக் கடந்தது.
அவர் முகத்தில் அசதி தெரிந்து நான் தூங்கும் படி சொன்னேன்.
.
நான் எத்தனையோ தடவை நான் எழுந்து இடம் கொடுத்துத் அவரைத் தூங்கச் சொன்னேன்.

தூங்கவே இல்லை.அந்தப் பெட்டியில் உள்ள அனைவருமே
தூங்கிக் கொண்டிருந்தனர். இவர் ஒருவர் தான் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
நான் இறங்கும் இடம் வந்தது. எனது பொருட்களை எடுத்துத் தந்து உதவினார்.
முதல் தடவையாக இரயில் நண்பரிடம் எனது போன் நம்பரைக் கொடுத்தேன்.

இனிமையான நாளாக இருந்தது இந்த நாள்.





 

ரயிலில் நாடி ஜோதிட அனுபவம் சொன்ன இளைஞன்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்.” எனக்கு சின்ன வயதில் இருந்தே தியானம்,யோகா,யோகாசனம் இவற்றில் நம்பிக்கையும் ஈடுபாடும் கூடுதல். பள்ளியில் படித்து முடித்ததும் வழக்கம்போல் எல்லாப் பெற்றோர்களும் என்ன செய்வார்களோ அதையே எனக்கும் செய்தார்கள்.அதிக மார்க்கும் எடுத்துக் கூட என்னை மெடிக்கல் சீட் டொனேஷன் கொடுத்து தான் சேர்த்தார்கள். ஒராண்டு படித்தேன். என் நாட்டம் படிப்பில் இல்லை.அதனால் படிப்பைத் தொடரவில்லை.

ஒரு நாடிஜோதிடரை ஹைதராபாத்தில் போய்ப் பார்த்தேன். ஒருவரைப் பற்றி அவர் பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு தான் நாடிஜோதிடம்.
அவர் என் கைப்பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து விட்டு என்னிடம் கேள்விகள் கேட்டார்.  இரண்டு மாதம் கழிந்த பின் வரச்சொன்னார்.போனேன். என்னைபற்றிய என் முன் ஜன்ம வரலாறு, இன்றைய வரலாறு, நாளைய வரலாறு எல்லாமே நோட்டில் எழுதித் தந்தார்.”
நோட்டை நான் வாங்கிப் படித்துப் பார்த்தேன். எல்லாமே பாடல்களாகவே இருந்தன.
அந்த நோட்டில் 20000/-க்கான வங்கி ரெசீது ஒன்று இருந்தது. இவ்வளவு ருபாயா என்று கேட்டேன். இல்லைஇல்லை....இது பரிகாரம் செய்வதற்குண்டான செலவு.
பசுதானம்,ஆயிரத்தெட்டு லிங்கபூஜை,108 லிங்க பூஜை,பஞ்சலிங்க பூஜை என .......
சித்தர் ஒருவாரால் சபிக்கப் பட்டதால் சதுரகிரிவந்து பரிகாரம் செய்தாராம். வந்து போனதில் ஒரு லட்சம் ருபாய்க்கு மேல் செலவாயிருக்கும்.
நான் கேட்டேன் .” பெற்றோருக்கு இதில் நம்பிக்கை உண்டுமா ?”
அவன் சொன்னான்.”நம்பிக்கை உண்டு. என் பெற்றோர்கள் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம். என்னுடன் வந்திருப்பவர் ஒரு பண்டிட். அவருக்கு ஜோதிடம்.ரேக்கி இதெல்லாம் தெரியும். அவர் என்னுடைய தந்தையின் பால்ய நண்பர். இன்னொருவன் எனது காரோட்டி...”
தியானம் செய்வது பற்றி கேட்டேன். இரண்டு மணி நேரம் தியானத்தில் தினமும் இருப்பாராம். நிறைய புத்தகங்கள் படிப்பாராம்.
குரு உண்டுமா ?
இல்லை. பலரை நாடிப்போனதில் அவர்கள் பணத்தில் தான் குறியாய் இருக்கிறார்கள்.
நீங்கள் பாவங்களுக்கு இரக்கப்படுவதாக நாடி ஜோதிடத்தில் இருக்கிறதே. கோவில் கட்டி முடிப்பீர்கள் என்று இருக்குதே.
சிரித்தான்..... நான் சொன்னேன்.’நீங்கள் பிறக்கும் போதே தங்கக் கரண்டியோடு பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சுயமாக சம்பாதித்து இதெல்லாம் செய்தால் தானே பெருமை”
அவன் வயது 27. வசதியான பையன். கர்வம் இல்லை. மருத்துவ தேவையான அறிவு. பணிவானப் பேச்சு. அமுல் பால் டின்னுக்கு விலை கூடுதலாகக் கேட்ட பையனை சிரித்துக் கொண்டே எச்சரிக்க அவன் உண்மையான விலையைச் சொன்னபின்பும் அவனிடம் முதலில் கேட்டதையேக் கொடுத்த மனசு.
அவனுடன் வந்திருந்தவர் அவனைப் பற்றிப் புகழ்ந்து தான் பேசினார். ஆனால் அவனது அப்பாவுக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றார்.
ஒரு சுவர் இடிந்து அவன் மேல் விழுந்து ஆறு மணிக்கூர் ஆனபின்பும் அவனுக்கு ஒன்றும் ஆகாமல் இருந்ததைச் சொன்னார்.
ஏமாறக் காத்திருக்கும் போது ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமே.
கோதானம் செய்தவனும் பெற்றவனும்  ஒரே குடும்பத்து ஆட்களாக இருக்குமோ என சந்தேகப்பட்டேன். அவனிடம் கேட்கவில்லை. அவன் சொன்னான் பசுவைப் பெற்றுக் கொண்டவள் ஒரு விதவை. நான் நினைத்ததை ........அவன் சொன்னது தற்செய்லாக நடந்ததா?
ஒன்றுமே புரியவில்லை.
நாடி ஜோதிடம் பயில திருச்சியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களாம்.....

Saturday, October 13, 2012

ரயிலில்நான்சந்தித்தஇளைஞன்.

நாடி ஜோதிடம் பற்றிய செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொருவரும்  தங்கள் அனுபவங்களை மிகைப் படுத்திச் சொல்லும் போது கேட்கும் யாருக்கும் அங்கு போகவேண்டும் நாடிஜோதிடம் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். எனக்கு நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் சாதாரண ஜோதிடன் ஒருவர் தந்தையை இளந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன் சொன்னது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது..  எனது மாமனாரும் உறவு முறையில் மாமா இருவரும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தைக் காண்பித்து வருங்காலம் பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டார்கள்.
ஜாதகத்தைப் பார்த்த உடன் அவர் சொன்னது. “ இந்தப் பெண்ணின் தந்தை இப்போது இருக்க மாட்டார்.”.... இது போல் பல விசயங்கள் நம்புவதா? கூடாதா? என முடிவு எடுக்க முடியவில்லை. என்னைப் பற்றி ஜோதிடர் சொன்னது சரியாக இல்லாதது ஒரு காரணம்.

வைத்தீஸ்வரன் கோவில் -இந்த ஊரில் பல நாடி ஜோதிடர்கள் உண்டு. ஊரில் இறங்கிய உடன்  நம்மை நாடிவந்து  அழைத்துப் போக தரகர்கள் வந்து மொய்ப்பார்கள். நாகர்கோயிலிலும் , சுசீந்திரத்திலும் நாடி ஜோதிடர்கள் பலர் உள்ளனர். கோயில் இருக்குமிடமெல்லாம் இவர்களும் இருப்பார்களோ......

பெங்களூருக்கு வரும் போது நான் இருக்கும் ரயில் பெட்டியில் மதுரையில் மூவர் ஏறினர்.மூன்று பேருமே பூனாவைச் சேர்ந்தவர்கள். என்னை என் இருக்கையை தரும்படி வேண்டினார்கள்.. நான் சொன்னேன்...”தருவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. இரவு 9.30 க்கு நான் கேயார்புரத்தில் இறங்கி விடுவேனே’ என்று சொன்னேன்.  அதனால் அவரவர் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

சினிமா நடிகனுக்கு வேண்டிய அழகுத் தோற்றம் கொண்ட அந்த இளைஞன் தன் தொடு திரை கை பேசியை வைத்துக் கொண்டு அவனது பொழுதைக் களித்துக் கொண்டிருந்தான். நான் அவனை நானாகவே Software Engineer-ஆக இருப்பான் என ஊகித்துக் கொண்டிருந்தேன். அவனுடன் வந்தவர்களில் ஒருவர் என்னைவிட வயதானவர். இன்னொருவன் இளைஞன்.

இந்தியில் பேச நான் தமிழில் பேச இருவருக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது.
அவன் ஆங்கிலத்தில் பேச பேச்சு சுவராஸ்யமாக மாறியது.
அவன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  ,திருவண்ணாமலை,கோடைக்கானல்,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் உள்ள சதுரகிரியில் உள்ள சித்தர்  சத்தமுனி (சப்தமுனி)இருக்கும் இடம் என்னும் இடங்களுக்குப் போய்விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னான்(ர்)

இத்தனை இடங்களையும் பார்த்த 12 நாட்களும் அவர்கள் சென்றது வாடகைக்காரில்... அதற்கானச் செலவு ருபாய் 25000/-

இவ்வளவு இடங்களைப் பார்த்தவர்கள் ஏன் கன்னியாகுமரிக்கு போய் வரவில்லை என்று கேட்டேன். பதில் சொல்லாமல் சிரித்தான்.

நான் திரும்பவும் கேட்க அவன் சொன்னான்.” பரிகார பூஜை செய்வதற்காகத் தான் நான் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன்.” என்றான்

சற்று ஆச்சரியத்துடன் பூனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து பரிகார பூஜை செய்ய வந்தார்களா என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அவன் பெயர் சொன்னான்.அவனது பெற்றோர் இருவரும் புகழ் பெற்ற மருத்துவர்கள்.மூத்தவனாக இருக்கும் இவனது தம்பி,தங்கை,தங்கையின் கணவர் அனைவருமே டாக்டர்கள்.
இவனும் மெடிக்கல் காலேஜில் படித்துப் பாதியில் விட்டவன். இப்பொழுது ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தில்......

நான் கேட்டேன். ஏன் படிப்பைப் பாதியில் விட்டாய் எனக் கேட்க அவன் சொல்ல ஆரம்பித்தான்.

அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

சில ரயில்பயணத்தில் சில அனுபவங்கள்


ரயிலின் பகல் பயணம் மிகவும் பிடிக்கும்.வெளியே பார்த்துக் கொண்டு  வரும் போது சில வித்தியாசமான அனுபவங்கள்.
சாலைகளில் செல்லும் கார்கள் சற்று தூரத்தில் வேகமாக இரு திசைகளிலும் விரைந்து சென்று கொண்டிருக்கும். ரயிலை விட வேகமாகப் போவது போலவே இருக்கும்.  இணைந்து கொஞ்ச தூரம் வருவதும் திடீரென சண்டைக்காரன் போல் விலகிச் செல்வதும் உண்டு.
இந்தியன் ரயில் செல்லும் தண்டவாளப் பாதையில் வேறெந்த ரயிலும் செல்வது இல்லை. சாலை- அதில் கார்,லாறி, மனிதன் என எதுவும், எவரும் செல்லலாம்.
தனியார் ரயில் கிடையாது. தனியார் பஸ் உண்டு. வான் வெளியில் கூட தனியார் விமானச் சேவை உண்டு.
ரயிலை எதிர்த்து எதுவும் வர  முடியாது.
நான் சென்ற ரயில் ஒரு SUPER FAST TRAIN. எல்லா  முக்கியமான ரயில் நிலையத்திலும் ஒரு நிமிடம் நிற்கும். ஆனால் எதிர் திசையில் வரும் வண்டிகளுக்கு வழிவிட்டு நிற்கும். அவ்வாறு அடுத்துள்ள ரயில் செல்லும் போது நாம் இருக்கும் ரயில் போவது போன்ற ஒரு  உணர்வு ஏற்படும்.பதவி இழந்த மன்னன் போல் பவ்யமாய் நிற்கும். கால தாமதத்தில் ஏற்படும் நேரக் குறவை விரைவாகச் சென்று சமன் செய்யும்.
திருநெல்வேலி கழிந்து போகும் போது ஜன்னல் வழி வெளியே பார்த்தால் கருங்கடல் போல் தெரியும். வானும் தரையும் தொடும் தூரத்து அழகு நம்மைக் கவரும்.
கருமை நிற மண்கொண்ட பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு-கரிசல் காடு  எதற்கோ தயாராய் கொண்டிருக்கும். ஒற்றைப் பனை மரம் எஜமானன் போல் கம்பீரமாக நிற்கும். சில இடங்களில் ஒற்றுமையாய் பல பனைமரங்கள்.  பல மரங்கள் நெருக்கமே இல்லாமல் அதிக இடைவெளியோடு….
கல்லூரிப்பேராசிரியர் போல் உடை அணிந்து கொண்டு மிடுக்காக அதிகம் பேசாமல் நம் அருகில் வந்து டிக்கட் பரிசோதிப்பார் ஒருவர். கணினிப் பதிவுத் தாளை அவரிடம் காண்பித்து திரும்பி நம் கையில் கிடைப்பது வரை படபடப்பு நெஞ்சில். வயது சரியாக இருக்கணும். நமக்கே நம் முகம் தானா என்று சந்தேகம் தரும் அடையாள அட்டையை அவர் பார்த்து நம்மிடம் தருவது வரை மனதில் ஒரு பயம்.அவர் அதனைத் திரும்பி நம்மிடம் தரும் போது அவர் கையில் வைத்திருக்கும் தாளையும் நாம் கொடுத்த தாளையும் சரிபார்த்து அதில் டிக் அடித்து ,இதில் கையொப்பமும் இட்டு தருவார். அதன் பிறகு சினேக பாவத்துடன் சிரித்துக் கொண்டு செல்வது…..
கல்லூரி ஆசிரியர்கள் ஜீன்ஸ் போன்ற உடை அணிந்தும் கட்டம் போட்ட சட்டையும் தான் அணிகிறார்கள். என்று மாறுமோ இந்த அலங்கோலம்.ஹோட்டல் ஊளியர்களுக்கே சீருடை…. மாணவர்களுக்குச் சீருடை….. ஆனால் ஆசிரியர்களுக்கு….. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் மாறவேண்டுமே…. மாறும் காலம் வரும்.

ஈரோடு சந்திப்பில் நான் இருந்த இடத்தில் அடுத்துள்ள அறையில் ஒரே கூச்சல்…. ஒரு பெண்ணுடன் புதியதாய் வந்தவன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். அவள் இருக்கை தனது இருக்கை யென உரிமை கேட்டுச் சண்டை. அவள் பக்கம் நியாயம் இருந்ததால் அவள் அசையவில்லை அந்த இடத்தைவிட்டு. இவன் குரல் ஓங்க ,நல்ல வேளை பரமாத்மா போல் TTE அங்கே வர  டிக்கெட் கேட்டார். அவனிடம் டிக்கட் இல்லை. அவன் தன் மொபைல் போனில் உள்ள செய்தியை அவன் காண்பிக்கிறான். அந்தச் சமயம் பார்த்து அவளது கணவர் வர சண்டையும் வலுவாக ,இருவரின் சண்டித்தனம் முகம் சுழிக்க வைத்தது. TTE, Squad இருவரும் அவரை சமாதானப் படுத்தி வெளியே கூட்டிக் கொண்டு வந்து அந்த செய்தியை பார்த்ததில், அவர் ஏற வேண்டியதும் மும்பை ரயில் தான். ஆனால் அது இரவு 8 மணி வண்டி எனக் கூற அசடு வழிந்து போனான்.
தாளில் …. வேண்டாம்  ஒரு சின்னத் துண்டுத் தாளில் PNR தகவலை எழுதி வைக்கலாமே… படிக்க வாங்கும் செய்திதாளில் குறித்து வைக்கலாமே…..
முன்போல் ரயில் நிலையத்தில் நின்று பயணம் முடிந்து செல்பவர்களிடத்தில் காலாவதியான டிக்கட்டை கேட்க ஆள் யாரும் நிற்பதில்லை…..ரயிலில் கூட்டம் அதிகம். ஊளியர்கள் குறைவு.
நஷ்டத்தில் போகுதாம் ரயில்வேத் துறை......



Friday, October 12, 2012

எனது அத்தானின் நண்பர் சுந்தரேசனை சந்தித்தபோது....

நான் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த வேளை. கண்ணாடி ஜன்னல் வழியே, வெளியே தெரிவதை என் விழிகளால் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்.

வயதான பெண் ஒருத்தி உருளும் இரு சக்கர நாற்காலியில் அம்ர்ந்திருக்க  சுமைதூக்கி பின்னால் இருந்து உருட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். எப்படி இவளால் ரயில்பெட்டியினுள் ஏறமுடியும்....?  வாசல் அருகே வந்தாச்சு....இன்னும் இறங்க வில்லை..... காத்திருக்கிறாள்.... ஒரு இளைஞன் அவள் பக்கம் வந்தான்..... அவளது மகனாகத் தான் இருப்பான்....அவன் தாயை அவன் ஒருவனால் பிடித்துத் தூகக முடியாதே.... என்ன செய்யப் போகிறார்களோ..... அவள் இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்....அவன் மகன் சும்மாவே நின்று கொண்டிருந்தான்.  என்னடா இது....அம்மைக்கு உதவி செய்யாமல் சும்மாவே நிற்கிறானே....

அவள் யாருடைய உதவியும் இல்லாமல் இறங்கினாள்.....மகன் பின்பக்கம் நிற்க பெட்டியினுள் ஏறினாள்.  அவள் தான் முதலில் வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள். மகன் ஒரு பெட்டியை உள்ளே கொண்டு வைத்து விட்டு இறங்கினான். பின்னர் சற்று வயதான திடகாத்திரமான ஒருவர் வந்தார். பழகிய முகம் போல் இருக்கு. ஆனால் யாருண்ணுதான் தெரியவில்லை.... அவரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

ரயில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து  நகர ஆரம்பித்து பின்னர் வேகமாக ஓடியது. கோவில்பட்டியில் வைத்து அவரை சந்தித்து அவரிடம் பேசினதில் அவர் என்னுடைய அத்தானுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர் எனத் தெரிந்து கொண்டேன்.
என் பைபேசியை கையில் எடுத்து என் அத்தானின் பெயரைத் தொடர்பு வரிசையில் பார்த்து தொடர்பு கொண்டு பேசி அவர் பெயரைச் சொல்லாமல் அவரிடம் கொடுத்து அத்தானிடம் பேசச் சொன்னேன். பேசியதும் அவர் பெயரை அத்தான் சொல்ல அவருக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி... அதை அவர் முகம் காண்பித்தது.
இந்துக் கல்லூரிசங்க பங்குதாரர் ஒருவர் பெயரை ச்சொல்லி தமது மகளின் கணவர் என்றும் சொன்னார். தெரியுமெனச் சொன்னேன்.
அவர், “ அவருடைய மருமகனின் அப்பா கல்லூரியின் தொடக்க காலத்தில் இயக்குனராக இருந்தவர் என்றும் திருவாடுதுறை ஆதீனம் கல்லூரிக்கு மிகவும் நிதியுதவி கேட்டு மருமகனின் தந்தையும் அவரது தந்தையாரும் போய் வந்ததைச் சொன்னார்.” அவரது தந்தை  பேஷ்காரராய் ஆதீனத்தில் முன்னாளில் பணியாற்றியவராம்.

ஒரு புதுச் செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

எழுத்துக்களும் என் மனதினுள்ளே உள்ள நன்றியும்


    முகநூல் என்னை மாற்றியது. ஒரு எழுத்தாளனாக மாற்றியது.
     என் எழுத்துக்கள் என் மன அமைதிக்காகவும், ஆறு போல் சுறுசுறுப்புடன் இருக்கவும் எஞ்சி இருக்கும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் வேலை கொடுப்பதற்காகவும் எழுதினேன்.
    என் மூத்த மகன் பாராட்டினான்.என் எழுத்துப்பணி முகநூலில் பரந்தது. பலரது நட்பு கிடைத்தது. கோவை ஜீவானந்தத்தின் நட்பு என்னை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றது. அதுதான்  BLOG.          
         அதில் நான் எழுத என் மகனின் நணபர்கள் எனைப் பாராட்டினர். எழுத்து       என்னை மாற்றியது.

    ஆசை என்னை வரலாற்று ஆசிரியனாக மாற்றிற்று. தமிழ் எனக்கும் உதவிற்று. வரலாறு எழுதலானேன்............
    மாணவன் நானும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டே …..ஆம் நான் அதே கல்லூரியில் ஆசிரியராய் - கணித ஆசிரியனாய்……மாறினேன். . மாற்றம் என்னை மறுபடியும் வழக்கம்போல் தழுவியது. இந்த மாற்றம் ஓய்வுற்ற போதும் என்னை வளாகம் வரவேற்றதால் கண்ட மாற்றம். நானும் மாறித்தான் போனேன். இன்று இயக்குனர் - இந்துக் கல்லூரிச் சங்க இயக்குனர். இது எனக்கு கல்லூரி தந்த புது முகவரி.
    மாற்றம் என்னை மெருகூட்டிற்று. மனிதனாக்கியது. என் மனதில்  ஒன்றுக்கு - கல்லூரிபால் கொண்ட காதலில் மாற்றம் இல்லை…இல்லவே இல்லை….. ”மாற்றம்” மாறாதது போல் என் தாய் – கல்லூரிபால் கொண்டபாசமும் நேசமும் மாறாதது. அது என்னில் என்றும் நிரந்தரமே...... கல்லூரி வரலாறு எழுதும் காலமும் கனிந்தது.
    வரலாறும் பூவாய், காயாய் , கனியாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
    கால மாற்றத்தால் ஏற்படும் மாறுதல்களை ஒவ்வொரு ஜீவராசிகளும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கின்றன. அவ்வாறு ஏற்காத ஜீவன்கள் அருகிப் போவதற்குக் காரணம் எது எனத் தெரியாமல் நாமே ஒரு புதுக் காரணத்தைச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம். மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ,தடைகள் வந்தாலும் தளராத மனம் கொண்ட பல மன உறுதி கொண்ட மனிதர்கள் இந்துக்கல்லூரிக்குத் தலைவர்களாகவும், முதல்வர்களாகவும்  வந்ததால் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி பல மாற்றங்களை சந்தித்து இன்று ஒரு மிகப்பெரிய கல்லூரியாகத் திகழ்கிறது.
    அறுபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன…….. எத்தனை எத்தனை மாற்றங்கள்….. ஆட்சி மாற்றம்……..அதனால் தலைவர்கள் மாற்றம்…… காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட கல்லூரி முதல்வர்கள் மாற்றம்...... ஆசிரியர்கள் மாற்றம்..... இந்துக் கல்லூரியின் ஆரம்பத்தோற்றம் இன்று இல்லை. அதுவும் மாறித்தான் போயிற்று. அது ரம்மியமான தோற்றப் பொலிவை தந்து கொண்டிருக்கிறது. 
    விநாயகருக்கோர் ஆலயம், சுய நிதி வகுப்புகளை சரியான சமயத்தில் ஆரம்பித்தது,M.C.A, M.Sc எனவும் வானுயர் கட்டிடங்கள், எனவும் கல்லூரி கண்ட மாற்றம் பொலிவாகவே இருந்தது.
     இவ்வாறு வளர்ந்த வரலாறு நேற்றும் இன்றும் நாளையும் பயின்ற, பயில்கிற, பயிலப்போகின்ற மாணவர்கள், அறிய வேண்டும். 
    என்னைச் செதுக்கிய உருவாக்கிய உதிரம் கொடுத்த இந்த உயரத்தினில் வைத்து அழகு பார்த்த கல்லூரிக்கு - இந்தப் பெரும் கல்லூரிக்கு நன்றியாக ஒன்று செய்ய வேண்டும் – அச்செயல் நாளும் பேசப்படல் வேண்டும் – அது நாளையும் தொடர் செயலாக இருத்தல் வேண்டும். அதனால் என் சிந்தனையில் வந்ததன் பலனே இம்முயற்சி.
    தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிக்கு ஒரு வரலாறு நூல் தேவை. இதனை உணர்ந்த நான் அதனை எழுத முடிவெடுத்தேன். தேவைக்கு அதிகமாகவே கவல்கள் சேகரித்த பின் என் தமிழில் எழுத முற்பட்டேன்.  அறிவு என்னை எச்சரித்தது. என் தமிழ் அறிவு உதவுமா ? எழுதினேன். நணபர்கள் சிலர் நான் வடித்த தமிழுக்கு மெருகூட்டினர்.  அவர்களுக்கு நன்றி கூறுவதென்பது எனக்கு நானே நன்றி சொல்வது போல்தான் இருக்கும்.
     வரலாறு எழுத முற்பட்டபோது அதனை வரவேற்று ஊக்கப்படுத்தியும் பல முக்கியமான தகவல்களைத் தந்தும்  பெரும் ஆதரவு தந்தவர் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. ஆறுமுகம்பிள்ளை.
    திருப்பணிக்கு உதவியவர்கள் சிலர். அவர்களில் நிறுவனச் செயலர் மகன் திரு.பி.வள்ளிநாயகம் பிள்ளை, முன்னாள் முதல்வர் திரு தே.வேலப்பன், முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம். தொடக்க கால ஆண்டுமலர்கள்,கையேடுகள் பல தந்து உதவிய முன்னாள் மலையாளத்துறைத் தலைவர் திரு உண்ணிகிருஷ்ணன் நாயரின் குடும்பத்தினர் முக்கியமானவர்கள். கல்லூரி முதல்வர், பணியாளர்கள் சிலர்,என் ஆசிரிய நண்பர்கள். அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றியுடன்.
    ஆறு மாத கால உழைப்பு என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
    ஒருவன் ஒரு முறைதான் நீரோடும் ஆற்றைக் கடக்க முடியுமாம். கிரேக்க ஞானி சொன்னதாக பேராசிரியர் ஒருவர் சொன்னார்.
    என்னால் ஆற்றை ஒரு முறைதானே கடக்க - வரலாற்றை  எழுத- முடியும்….. தினமும் மாறும் வரலாற்றை இன்னொருவர் தான் எழுத முற்படல் வேண்டும்….. வரலாறு படைக்க வேண்டும்.  இதுவே என் பிரார்த்தனை
    மாற்றம் ஒன்றுதானே மாறாதது. மாற்றம் நிகழட்டும். “மாற்றம்” இயக்கம் இருந்தால் மட்டுமே நிலைபெறும்.... இயக்கம் தொடரட்டும்.....மாற்றம் அழகு. அது ஒன்றே அழகு. நமது கல்லூரியிலும்….. கங்கை கரையோரம் ஒரு காசி சர்வகலாசாலை இருப்பதுபோல் கன்னியாகுமரிக் கடற்கரையாம் நாகர்கோவிலிலும் ஒரு பல்கலைக் கழகமாய் நம் இந்துக் கல்லூரியும் மாறட்டுமே……….. மாறும் தேசிக விநாயகனின் அருளால். எல்லோரும் பிரார்த்திப்போம், முயல்வோம்……..முயற்சி திருவினையாக்கும்……..

     வரலாறு எழுத்துப்பணியில் எனை ஊக்குவித்த ஒருவர் பாராட்டப்படல் வேண்டும் என்பது என் ஆசை. நடு நிசியில் கூட எழுந்து தேநீர் அல்லது காப்பி சூடாய் தந்து உதபுபவர். நான் படித்துக் காட்ட,  என் வரிகளில் தவறிருந்தால் சுட்டிக் காட்டியதும் உண்டு. அவர் என் மனைவியே தான். அவருக்கும் நன்றி கூறுவதுதானே முறையானது.