Wednesday, February 29, 2012

இந்துக்கல்லூரியின் மூன்று முத்திரைகள்

South Travancore Hindu College 1952-ல் ஆரம்பமானது.
கல்லூரியின் emblem (முத்திரை) குத்துவிளக்கு.




1960-க்குப் பின் குத்துவிளக்குடன் ,கோபுரம்,ஏரும் கதிரும் .தாமரைமலரில்  கலைமகள் கையில் வீணையுடன் அமர்ந்திருக்கும் திரு உருவம் என மாற்றி அமைக்கப்பட்டது. “ஒழுக்கம் விழுப்பந்தரும்” is the motto of the college.
இது முத்திரையின் கீழ் பொறிக்கப்பட்டது.



2002-க்குப் பின் மாறிய முத்திரை


2012 கல்லூரியின் வைர விழா வருடம்.Posted by Picasa

பாக்கெட் பாலில் கலக்கப்பட்ட நச்சுப் பொருள்.......



உங்கள் காலைப் பொழுதினை ஒரு கோப்பை பாலுடன் துவங்குகிறீர்களா...?
நிறுத்துங்கள்!

 பாலில் கலந்திருக்கும் washing soda -ல் இருந்து Urea வரை உங்களை என்ன செய்யும் எனத் தெரிந்தபின்,உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க மனம் வருமா?

மேலும் பாக்கெட்டில் பால் கெடாமல் இருக்க,சேர்க்கப்படும் நச்சுப் பொருள்கள்:-

1) Carbonates
2) Bi-carbonates
3) Starch
4) Urea
5)Hydrated lime
6)Formalin
7)Ammonium sulphate

கலப்படமான பாலை அருந்துவதால் ஏற்படும் நோய்கள்:-

 (Report of Indian Council of Medical Research)

1.Food poisoning
2. gastrointestinal complication
3.heart problem, cancer
4.kidney damage
5.Hypertension heart ailments
6.சிறு குழந்தைகளுக்கு குமட்டல், gastritis.

கலப்படமில்லாத பால் என சோதனை மூலம் பரிசோதித்து தெரிந்தபின் தான் நியாயமாக பால் விற்பனைக்கு கொண்டு வரப்படவேண்டும்.......ஆனால் நிலமை
அப்படி இல்லை.

N.B: Avin  milk is being tested every time .
        The leading dairies do not do that. the rejected milk had been sent to make casein.
It is a protein precipated from milk that is used in making plasics,adhesives,and water based paints.

Tuesday, February 28, 2012

பசுவின் பால் குடிக்கலாமா...? ஒரு விஞ்ஞானியின் செய்தி.......


நான் எனக்கு எப்போதோ அனுப்பிய ஒரு மின் –கடித்ததை இன்று படித்தேன். அது என் மைத்துனன் சி,கிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தின் இணைப்பு.
Extracted from Your Life in Your Hands, by Professor Jane Plan
அந்த இணைப்பின் கடைசி வரிகள்
 It was difficult for me, as it may be for you, to accept that a substance as 'natural' as milk might have such ominous health implications. But I am a living proof that it works and, starting from tomorrow, I shall reveal the secrets of my revolutionary action plan.

பேராசிரியைகேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிட்டன் நாட்டுப் பெண் விஞ்ஞானி.

தான் இந்த நோயில் இருந்து விடுபட ஒன்று சாக வேண்டும் அல்லது வாழ வேண்டும்.

அழகான தனது வீட்டில் தன் அன்பான கணவனோடும் இரண்டு குழந்தைகளுடனும் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

ஏற்கனவே நோயின் பாதிப்பால் தன் ஒரு மார்புப் பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட பின்னும் அந்த நோயின் துன்பம் தொடர்ந்து கழுத்துப் பாகத்தில் தோன்றிய கட்டி அவளை மேலும் சிரமப்படுத்தியது.

விஞ்ஞானியான தன் கணவன் சீனாவில் இருந்து வரும்போது அந்த நாட்டு விஞ்ஞான நண்பர்கள் தந்த herbal suppositories -யும்(மூலிகை மருந்து) சில சீனா பற்றிய தகவல் குறிப்புகளையும் தன் மனைவியிடம் கொடுக்கிறாள்.
அந்த மருந்தின் மீது நம்பிக்கையில்லாமலேயே குறிப்புகளை படிக்கிறாள்……..சீனாவில் கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைவு.

அந்நாடு முழுவதுமே கேன்சர் இல்லையென்றே சொல்லலாம்..10000 பெண்களில் ஒரு பெண் அந்த நோயால் பாதிக்கப்படுகிறாள். பிரிட்டனில் 12 பேருக்கு ஒருவரும் மேற்குப் பகுதி நாடுகளில் 10-க்கு ஒருவர் எனவும் புள்ளி விவரம் கூறுகிறது.

ஏன் இந்த விகிதாசாரம் சீனாவில் குறவு……………..?

ஊர்ப்புறத்தில் வாழும் சீனர்கள் பால் குடிப்பதில்லை.பாலில் இருந்து செய்யப்படும் உணவு பொருட்கள் எதுவும் சாப்பிடுவதும் இல்லை. இதே சீனர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் மேல் நாட்டு நாகரீகப்படி பால் அருந்தியும் மற்ற உணவு வகைகளையும் சாப்பிட்டு வருவதால் அவர்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை சீனர்கள் பணக்கார நோய் என்று கூறுவார்கள்.

கேன்சர் ஒரு மரபு வழி நோய் அல்ல. உணவுப் பழக்கத்தினால் ஏற்படுவது தான் இந்நோய்.....என முடிவுக்கு வருகிறாள்.

மிக அதிகமாக பால் உணவை விரும்பி சாப்பிட்ட அந்த பெண் விஞ்ஞானி இனிமேல் அவற்றை ஒதுக்கி விட முடிவெடுக்கிறாள்..........
2-வது chemotherapy treatment -முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பின் தன் கழுத்துப்பகுதியில் இருந்த கட்டிகளின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது..அதன்பிறகு 6 வாரங்கள் கழிந்த பின் கட்டி மறைந்தது.நோயில் இருந்தும் முழுவதும் விடுபட்டாள்.

70% உலக மக்களுக்கு பாலில் உள்ள சுகர்,லேக்டோஸ் ஜீரணம் ஆவதில்லை. தவறான உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை
இயற்கையும் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சீனர்கள் விருந்தின் போதுகூட பால் உணவை தவிர்த்து விடுகிறார்கள்.

 பெண் விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிவு:-
I now believe that the link between dairy produce and breast cancer is similar to the link between smoking and lung cancer.  

There is an important point for men here, too. I have observed in my research that much of the data about prostate cancer leads to similar conclusions.

According to figures from the World Health Organization, the number of men
contracting prostate cancer in rural China is negligible, only 0.5 men in every 100,000.

Monday, February 27, 2012

என் பால்ய நண்பன் கணபதி

நானும் கணேசனும் சம வயதுள்ள பக்கத்து வீட்டுக்காரர்கள்.கடுக்கரையிலும் குறத்தியறை பள்ளியிலும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பின் பூதப்பாண்டியில் 9-ம் வகுப்பு வரை சேர்ந்து தான் படித்தோம் .அதன் பிறகு கணேசன் நாகர்கோவிலில் டி.வி.டி பள்ளியில் படித்தார். அவரது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்தார்.

கணேசனின் அப்பா மிகவும் கண்டிப்பான மனிதர். மாலையில் வீட்டில் விளக்கு கொளுத்துவதற்கு முன் அவன் பாடங்களைப் படிக்க விளக்கின் முன் உட்கார வேண்டும். இல்லையென்றால் நிச்சயமாக அடி உண்டு. தெருவில் வைத்தும் அடி படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்தாலே நானும் பயப்படுவேன்.அவரது பெயர் ராமன் பிள்ளை .கடுக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் மளிகைக் கடை வைத்திருந்தார்.என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.

என்னைத்தவிர யாருடனும் கணேசன் விளையாடவோ பழகவோ கூடாது.......இதை மீறி நடந்தது, பெரியவருக்கு தெரிய வந்தால் கணேசனுக்கு தண்டனை உண்டு.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபின் விடுமுறை காலத்தில் நானும் அவனும் சந்தித்து விளையாடுவதுண்டு......அப்பொழுது கணேசன், “ நாம் அடுத்த வருஷம் S.S.L.C Public Examination எழுதணும்..... நல்ல மார்க்கு எடுக்கணும்.....கணக்குப் பாடத்துக்கு ட்யூசன் படிக்கப் போலாமா....... நீயும் வந்தால் நாம் சேர்ந்தே போகலாம் .......நீ வந்தால் தான் எங்க அப்பா சம்மதிப்பார்கள்....நீ உங்க அப்பாட்ட கேளேன்......”என்றான்.

நாங்கள் கடுக்கரையில் நயினார்தோப்பில் ஆறுமுகப்பணிக்கர் சாரிடம் கணிதம் படிக்கப் போய்க் கேட்டோம்......எங்களை யார் எனத்தெரிந்து கொண்டு எங்களுக்காகவே கணக்கும் ஆங்கிலமும் மாலையில் சொல்லித்தந்தார். சுரேந்திரனும் எங்களுடன் ட்யூசன் படிக்க வந்தான்.......

மிக அழகாக ,தெளிவாக சொல்லித் தந்தார்.....கணக்கு கேள்வியைதந்து, செய்யும் போது ,யார் சீக்கிரம் விடையெழுதி காண்பிக்கிறார்கள் என்பதில் எங்களுக்குள்ளேயே ஒரு போட்டி நடக்கும்....ஒரு தடவை நான் முதல் ஆளாய் எழுதி முடித்து அவரிடம் காண்பித்தேன். விடை சரியான விடைதான்.....ஆனால் விடையின் பக்கத்தில் பெருக்கல் போட்டு விட்டார்......

எனக்கு ஒன்றும் புரியவில்லை.......மற்ற இருவருக்கும் சரி என டிக் போட்டார்....அதே விடை தான்.......

என் நோட்டை எடுத்து நான் எழுதிய விடையான 47 -க்குப் பக்கத்தில் பெரியதாக
 டை என எழுதினார்.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது... ஆசிரியர் சொன்னார், “ விரைவாக கணக்கு செய்வது மாத்திரம் முக்கியமல்ல......சரியான விடைக்குத்தான் மார்க்கு கிடைக்கும்......47 பென்சில்கள் அல்லது 47 பென்கள் என எழுதணுமென்று சொன்னார். அவர் எழுதிய அந்த நோட்டை வெகுநாள் பாதுகாப்பாக வைத்திருந்தேன்....

காலங்கள் ஓடின. தெ.தி.இந்துக்கல்லூரியில் நாங்கள் ஒன்றாகவே படித்தோம் ....
ஹாஸ்டலில் தங்கிப் படித்தோம் .அவர் அரசுப் பள்ளி ஆசிரியாராக தன் பணியினைத் துவங்கினார்..

இருவருமே கடுக்கரையில் தாமதித்து வந்தோம். ஊர்மக்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் கணேசனின் முயற்சியால் சர்வோதயா சங்கம் ஒரு நூற்பு நிலையத்தை கட்டித் தந்தது....அதற்கு நான் தான் இடம் கொடுத்தேன்.
அதுவும் கணேசன் கேட்டதனால் மாத்திரமே கொடுத்தேன் என்பதுதான் உண்மை.
கடுக்கரை பெருமாள் கோவிலில் சமய வகுப்பு நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கணேசன். ஊர் மக்களுக்கு நன்மை செய்வதில் எப்பொழுதுமே நாட்டம் உடையவர்.

தான் தலைமை ஆசிரியராக ஓய்வு பெறும் போது பெரிய சோதனைதனை எதிர்கொண்டார்........கண்டிப்பானவர் என்பதால் இவரைப் பிடிக்காத ஆசிரியர் ஒருவரின் சதியால் போலீஸ் கேஸாகி ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டார்.

நல்ல மனிதர் ஒருவருக்கு இப்படியொரு நிலமை வந்திருக்கவே கூடாது.

 அவருக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டு ஊரே கொந்தளித்து அவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ஊர்மக்களே திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

அந்த கேஸில் வந்த போலீஸ் அதிகாரியே அவருடைய அனுபவத்தால் ஆசிரியரின் நற்குணங்களைப் புரிந்து மனம் நொந்ததாக கேள்விப்பட்டேன்..

நான் அவரிடம் நேற்று தொலைபேசியில் பேசினதில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்த தகவலைச் சொன்னார்.

ஆசிரியர் கணேசன் எளிமையாகவே எப்பொழுதும் இருப்பார். இதற்கெல்லாம் காரணம் எளிமையாக வாழ்ந்த ஆசிரியர் ஆறுமுகப் பணிக்கர் தான் என்றால் அது மிகையல்ல.

 கணேசன் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். இந்தக் குணம் அவருக்கு அவர் தந்தையால் தான் வந்தது....

என் நண்பர்களில் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத ,பகட்டும் படோடோபமும் இல்லா நல்லவன்......அவன் தான் கணபதியாபிள்ளை...
                

Sunday, February 26, 2012

பேராசிரியர் ஒருவரின் கானல் நீராய்ப் போன ஆசை

பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை என்னுடன் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய அனுபவம் ஒன்றினை ,தான் ஒரு பெரிய தமிழ்நாடே போற்றும் எழுத்தாளரை அவர் வீட்டிலேயே சந்தித்து பேசியதை சொன்னார்.

ஆறுமுகம் பிள்ளை சுந்தரம் ராமசாமியின் நெருங்கிய நண்பர்,பொன்னீலனின் மாணவர்,நாஞ்சில் நாடனுக்கும் தெரிந்தவர்,ஜெய மோகனையும் அறிந்தவர்......
அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்க விரும்புபவர். நான் நாவல்களை ஓரளவு படித்திருக்கிறேன் என்றால் அதற்கு அவரே காரணம் .

அவர் ஆனந்தவிகடனில் அந்த எழுத்தாளரின் எழுத்துக்களைப் படித்து நாட்கள் பல ஆன பின் அவருடைய புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படித்த போது,அந்த நாவலாசிரியரின் முகவரியைப் பார்த்திருக்கிறார். பார்த்ததும் அவர் இருக்கும் இடம் தன் மகள் இருக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடமல்லவா ......எப்போதாவது இனிமேல் போனால் எப்படியும் அந்த எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

2005 -ம் வருடத்தில் ஏதோ ஒரு நாள் ........ 

ஈக்காடுதங்கல்-க்கு தன் மகளின் வீட்டுக்கு ஒருதடவை போனார் ......காலையில் நடந்து போகும்போது ஒரு தெருவில் அவரது பெயரை பார்த்தார். 

உடன்தானே காலிங் பெல்லை அழுத்த ,ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

அவர் தான் அந்த பிரபல எழுத்தாளர்.

அவர் ," யார் நீங்க , உங்களுக்கு என்ன வேணும் ."  கேட்டார்.

ஆறுமுகம்பிள்ளை ," நான் உங்க கதை எல்லாம் படித்திருக்கேன் . உங்களை பாக்கத்தான் வந்திருக்கேன் ." என சொன்னார் .

அவர்," நீங்க appointment ஒண்ணும் வாங்காம திடீர்னு வந்திருக்கீங்க ..."


என் மகள் வீடு இங்க பக்கத்தில தான் .உங்க பேரப் பாத்துக்கிட்டு தான் வந்தேன்.

ஒரு நாவலின் பெயரை சொல்லி ,"நான் இந்த நாவலை விகடனில் படித்தேன் ... பிரம்மாதமாக இருந்தது .....நான் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர்." என்று
கூறினார் .மேலும் தன் எழுத்தாள நண்பர்களின் பெயர்களையும் கூறிவிட்டு நான்
இன்னொரு நாள் வருகிறேன் என்று வெளியே போகத் தயாரான போது அவர் ," வாருங்கள் உட்காருங்கள் "என வரவேற்றார் .

ஆறுமுகம் பிள்ளையும் அந்த எழுத்தாளரும் முப்பந்தைந்து நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆறுமுகம் பிள்ளையின் பேசுகின்ற பாணி எழுத்தாளருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

எழுத்தாளர் அவரிடம் ," நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் .....அழகாக கேள்வியும் கேட்கிறீர்கள் ...... பேட்டி எடுக்க உங்களிடம் திறமை இருக்கிறது " என்றார் .

மேலும் ," நீங்க பிரபலமான ஆட்களை சந்தித்து பேட்டி எடுக்க கேட்டுக்கொண்டால் சம்மதிப்பீர்களா "

" யாரிடம் ......"

"பழைய சினிமா நடிகர் நடிகைகளிடம் ....... "

"எந்த நடிகர் ?"

"பத்மினி,சரோஜாதேவி,ஜெமினிகணேசன் .........."

"ஐயோ ...! அவங்கள்ளாம் ரொம்ப பெரிய நடிகர்கள் ......"

"அப்படி ஒண்ணும் நினைத்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் .....இப்போது நீங்கள் பேட்டி எடுக்கப் போனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் ."

பேராசிரியர் முழு மனதுடன் சம்மதித்து தனது மொபைல் போண் எண்ணைக் கொடுத்து விட்டு வந்தார்.

பிரபலமான பழைய நடிகையிடம் சந்தித்து பேட்டி காணும் நாளை ஆவலோடு
எதிர்பார்த்துக் காத்திருந்தார் பேராசிரியர்.

சென்னையில் இருக்கும் வரை யாரும் அவரை பேட்டி எடுக்க வரும்படி  அழைக்க வில்லை.

ஒருநாள் கடுக்கரையில் சும்மா நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது சிணுங்கிய போணை எடுத்து காதில் வைத்தார் பேராசிரியர் .

"Am I talking to Professor Arumukam Pillai....." ஆண்மை கலந்த  பெண்ணின் குரல் .....American English.

" May I know who you are......."

" I am Padmini"

பத்மினி ," நீங்க பேட்டி எடுக்க வருவதாக எழுத்தாள நண்பர் ....... சொன்னார். எப்பொழுது வருவீர்கள் "

நான் என் மகள் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு தெரிவித்து விட்டு வருகிறேன் என்று ஆறுமுகம் பிள்ளை சொன்னார்.

பத்மினி ." உங்களுக்கு நாட்டிய சாஸ்திரம் தெரியுமா ?......"

அவர், " எனக்கு உங்கள் நாட்டியம் தான் சாஸ்திரம் ....நீங்க நடனமாடும்போது கால்கள் தரையில் படுகிறதா ,பட வில்லையா என்று கூட காண முடியாத அளவுக்கு காண்பதற்கு ரம்மியமாக இருக்கும் ........நீங்கள் வேடனாக பாவனை செய்யும் போது எய்யும் அம்பு போல் காட்சி தருவீர்கள் ...."

பத்மினி ," நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க .......சீக்கிரம் வாருங்க..."

அவர்," எனக்கு இப்போ வயது .....எங்க சின்ன வயதில் நீங்க தானே திரையுலக கனவுகன்னி ......"

பத்மினி,"  நீங்க எந்தக் கேள்வியானாலும் கேளுங்க .ஆனால் சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி எதுவும் கேட்கவேண்டாம் .....அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி சொல்லி எனக்கே மடுத்து விட்டது ........நீங்க சென்னை வரும்போது என் வீட்டுக்கு வந்து பேட்டி எடுக்க மறந்து விடாதீர்கள் ..."

அவர்," I am very much interested in meeting with you for the Interview.."

பேராசிரியர் சென்னை சென்ற போது பத்மினி சென்னையில் இல்லை...

இது போல் மூன்று தடவை முயன்றும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை

பேட்டி எடுக்கும் நாள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது ......

செப்டெம்பர் மாதம் 23 -ஆம் தேதி கலைஞர் கருணாநிதியைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பத்மினி கலந்து கொண்டவிவரத்தைப் பேப்பரில் பார்த்த பேராசிரியர் ,பத்மினியை பேட்டி காண சென்னை செல்ல திட்டமிடுகிறார்.

ஆனால் மிகவும் ஆசைப்பட்ட பேட்டிதனை  எடுக்க முடியாமல் விதி தடுத்து விட்டது .

திட்டமும் தவிடு பொடியாகி விடுகிறது ........

காலன் கவர்ந்து சென்று விட்டான் அந்த நாட்டிய பேரொளியை ...

ஆம் .... பத்மினி மறைந்தாள்......

அந்த நாள்  ....செப்டெம்பர் 25 ,2006 (வயது 74 )

பேட்டி எடுக்க நினைத்தது கானல் நீராகி விட்டதே ........

முதலில் பேட்டி காண நினைத்த  ஜெமினி கணேசனும் மறைந்தார்......

இப்போ பத்மினியும் போய்விட்டாள்

இனி யாரையும் பேட்டி காண நினைக்கவே  வேண்டாம் என முடிவெடுத்ததாக சொன்னார் பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை.   

Friday, February 24, 2012

நாகர்கோவிலில் நியாயத்துக்காக மட்டுமே மேடை போட்டு பேசிய மாவீரன்


Posted by Picasa
பல விசித்திரமான மனிதர்களை பார்த்திருக்கிறேன் .அப்படி பார்த்த ,ரசித்த ஒரு

மனிதரை என் வரிகளில் பதிவு செய்ய  நான் விரும்பினேன் ...........

1970 களில் நான் கண்ட ஒரு மனிதர். அரசியல் அறிவும் ,மனித நேயமும் கொண்ட நல்லவர்.

நான் எனது அறையில் இருந்து எதனையோ படித்துக் கொண்டிருந்த வேளையில் என் முன்னால் யாரோ நிற்பது போன்று தோன்றவே நிமிர்ந்து பார்த்தேன் .

எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே ......!

கருத்த ஒல்லிஎன்றும் தடிமன் என்றும் சொல்ல முடியாத உருவம் .தலையில் காந்திக் குல்லா.கதர் ஜிப்பா .தோளில் ஒரு தொங்கும் பை.

நான், அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க , அவர் பதில் சொல்வதற்குள் , எங்கள் துறைத் தலைவர் ," அண்ணாச்சி ! வாங்கோ ..... என்ன விசயமாய் வந்திருக்கீங்க .........." எனக் கூறி அவரை அவர் அருகே வரும்படி அழைத்தார் .

பேசி முடித்து வெளியே போனார்.  அவர் போனதும் அது யார் சார் என தலைவரிடம் கேட்டேன்.

ஹ...ஹா..... என சிரித்து அவர் யார் என்பதனை சொன்னார்.

எனக்கும் ஞாபகம் வந்து விட்டது.   ஒஹ் !  அவரா இவர் ?

யார் இவர் ?

 அநீதியைக் கண்டு பொங்குபவர்.......! நியாயத்துக்காக போராட விரும்புபவர்.
முனிசிபல் மைதானத்தில் மேடை போட்டு பேசுவார் .அரசின் தவறான கொள்கைகளை விளாசுவார் .....மாவட்ட பிரச்சனைகளை அலசுவார். மேடையில் தரக்குறைவான வசனம் பேசவே மாட்டார்..... மேடைப்பேச்சு  முடிந்ததும் கேள்வி கேட்கலாம். பதில் சொல்வார்.

ஒரு சைக்கிள் . அதில் தான் எங்கும் பயணிப்பார் . " பூமேடை முழங்குகிறார் " என அவரே செலவு செய்து போஸ்டர் அடித்து ,அவரே சுவரில் கொண்டு ஒட்டுவார். இது போன்ற செயலால் அவர் கேலி செய்யப்பட்டார் . ஆனால் அவர் எதற்கும் கவலை படுவதில்லை.கேலி செய்தாலும் பொருட்படுத்துவதுமில்லை
.
அவர் பாட்டுக்கு துரு பிடித்த சைக்கிளில் வலம் வருவார்.

அவரை யார் பார்த்தாலும் சிநேக பாவனையில் சிரிப்பார். தன சைக்கிளில் பின்னால் ஏறி வரும்படி அழைப்பார்.....

தனது சொத்துக்களை விற்று தன் காலத்தைக் கழித்தார்.அவருக்கென்று நாகர்கோவில் நகரத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

நான் அவரது பேச்சைக் கேட்டதே இல்லை.

 இந்த ப்ளாக் எழுதுவதற்கு முன் என் நண்பர் ஒருவரை சந்தித்து அவர் பேசியதில்  நகைச்சுவையாய் பேசியது ஏதாவது தெரியுமா ? எனக் கேட்டேன்.

அவர் சொன்னது...........
பூமேடை பேசுகிறார் :-
" எனக்கு நெருங்கிய நண்பர் . அவர் மாவட்ட ஒரு கட்சியின் தலைவர்....தமிழ் நாட்டில் உள்ள பல எம்பிக்களில் அவரும் ஒருவர்.அடிக்கடி இந்தியாவின் வடக்கில் உள்ள டெல்லிக்கு சென்று வருபவர். தேர்தல் சமயம்.

நான் புத்தேரி குளத்துக் கரையில் ஒரு மாலை நேரத்தில் நின்று கொண்டிருந்தேன் . அப்பொழுது வடக்கே இருந்து ஒரு காரில் நம்ம எம்.பி வந்து கொண்டிருந்தார் . என்னைக் கண்டதும் கார் என்னருகே வந்து நின்றது. அவர் காரை விட்டு இறங்கினார்.

நான் , " சுகம் தானா.... வடக்கேல்லாம் நிலவரம் எப்படி இருக்கு....."

அவர்," நான் இப்பம் வடக்கே இருந்துதான் வாறேன்....ஏன்...என்ன விஷயம்? அங்கே விசேசம் ஒண்ணும் இல்லையே... "

பாத்தீங்களா. ஒரு தேசியத் தலைவருக்கு வடக்கு என்றால் கடுக்கரையும்,,காட்டுப்புதுரும் தான். ஆனால் இந்தப் பூமேடைக்கு வடக்கு என்றால் டெல்லி .....

தேர்தல் சமயத்தில் இவரும் போட்டி இடுவார் .... அப்படி ஒருதடவை தேர்தலில் போட்டியிடும் போது இவருக்கு கிடைத்த சின்னம் யானை .

வெள்ளைக் கொடியில் யானைசின்னத்தை பொறித்து அவர் தனி ஆளாய் நடந்தும் ,சைக்கிளிலும் சென்றும்  பிரச்சாரம் செய்தார்.

அவர் தன் வாழ்வில் சொத்தை இழந்த , மனித நியாயத்துக்காக தன் வாழ்நாள் முழுவதுமே போராடிய அந்த மாமனிதன் தேர்தல்லயும் வெற்றி பெறல்ல.....


கோமாளியாகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரைப் பார்த்தனர்.


நல்லவன் வாழ்வான் என்பது நடை முறையில் சாத்தியம் இல்லையா?

நல்லவனாகவே வாழ்ந்து மடிந்த அந்த மனிதன் தான் .

பூமேடை ராமையா பிள்ளை   

Wednesday, February 22, 2012

பெட்ரோமாக்ஸ் lantern இப்போ என்ன விலை .....வாங்கலாமோ

50 வருடங்களுக்கு முன்னால் திருவிழா சமயங்களில்  இரவு வேளையில், சாமி வாகனத்தை ஊர்த் தெருக்களில் மேள தாளத்துடன் சுமந்து செல்வார்கள் . வாகனத்தின் அருகே தீப்பந்தம் ஏந்தி வருவார்கள் . அந்த வெளிச்சமும் காணாது என்பதால் தலையில் மூன்றடி உயரம் கொண்ட பெட்ரோமாக்ஸ்லைட்டை தலையில் சுமந்து வருவார்கள். அந்தக் காலங்களில் அது தான் வெளிச்சம் கூடிய விளக்கு .தலையில் சுமந்துவரும் அந்த லைட் சற்று வித்தியாசமாய் இருக்கும் .

மூன்றடி உயரம் உள்ள இரும்பு சட்டத்தில் மேல் பாகத்தில் பறக்கும் தட்டு வடிவத்தில் உள்ள லைட் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் . கீழ்பாகம் வட்டமான பலகை இருக்கும் .பலகை தலையில் படும்படி வைத்து சுமந்து செல்வார்கள் . போய்க் கொண்டிருக்கும் போதே வெளிச்சம் மங்கினால் அதை தலையில் இருந்து கிழே இறக்கி காத்தடிப்பார்கள் .

வீடுகளில் உள்ள லைட் பார்க்க அழகாய் இருக்கும். குறிப்பிட்ட சில வீடுகளில் தான் அது உண்டு. சைக்கிள் கடைகளில் வாடகைக்கு கிடைக்கும் .அறுவடை காலங்களில்,...... கல்யாண வீடுகளில் ..... தான் உபயோகிப்பார்கள் .

mantle  இது தான் முக்கியமான ஒன்று .இதில் தான் வெளிச்சம் வரும். மண்ணெண்ணெய் தான் எரி பொருள்.  டாங்கில் வெளிப்புறத்தில் காத்தடிக்கும் பிஸ்டன் இருக்கும். காற்றடிப்பதால் ஏற்படும் அழுத்தத்தால் எண்ணெய் ஒரு சிறு துவாரம் உள்ள குழாய் மேலே வரும். வெளிப்புறத்தில் உள்ள குழாய் சூடாய்
இருப்பதால் அது வாயுவாக மாறி mantle எரிந்து வெளிச்சம் தரும்.

குழாயை சூடாக்க ஸ்பிரிட் விட்டு எரிப்பார்கள் . அந்த mantle "EFAR ".......
அது நூலினால் செய்யப்பட்டது போல் இருக்கும் ....ஒரு தடவை எரித்தால் அதனை அதில் இருந்து தனியே எடுக்க முடியாது ....கை பட்டாலே பொடி பொடியாய் விடும் ......

ஆரம்பத்தில் இந்த லைட்டை தயாரிக்கும் கம்பனியின் பெயரே பெட்ரோமாக்ஸ்
தான் .

இப்பொழுது காஸ் லைட் வாடகைக்கு  கிடைக்கிறது    .......அதுவும் இதுபோல் தான் .  அடிப்பக்கம் சிவப்பு கலர்....... சிறிய காஸ் சிலிண்டர் போல் இருக்கிறது  ........

பெட்ரோமாக்ஸ் lantern இப்போ என்ன விலை .....வாங்கலாமோ .....எங்கே கிடைக்கும் .......
Posted by Picasa

Tuesday, February 21, 2012

நான் மனத்திரையில் பார்த்த காட்சி படமாய் .......

நான் கன்னியாகுமரி ஊரின் தெருக்களைத் தேடினேன் . மூன்று நாட்கள் தங்கி பார்த்துப் பரவசம் அடைந்த கடற்கரையைத் தேடினேன் . காந்தி மண்டபம்  மாத்திரமே இருந்த அந்த அழகு எங்கே ?

அனாதை ஆஸ்ரமம் நடந்த சத்திரம் போன்ற கட்டிடத்தில் இன்றைய நிலை ...........?
அகலமான தெருவை இன்று காண முடியுமா...!

விவேகானந்தா நூல் நிலையம் .....எங்கே ?

இதோ இந்தப்படத்தில் காணும் அம்மன் கோவிலை ,இன்று இது போல்  ஒரு படம் எடுக்க முடியுமா ?

யாரைக் குறை  சொல்ல ?

நான் சில நாட்களுக்கு முன்னால் என் மாணவனைத் தேடினேன் . 32 வருடங்களுக்குப் பின் சந்தித்தேன் . அவன் முகம் அன்று போல் இல்லை,,,,,!

அதுபோல் தான் கன்னியாகுமரியும்., அன்று போல் இன்றில்லை... ......

 அந்த மாணவன்  முருகேசனைப் பார்த்ததில்,அகம் மாறாத புது முகம்   தனை கண்டேன். என் மனம் மகிழ்ந்தது.

 ஆனால் கன்னியாகுமரி ஊரைப் பார்க்கும் போதெல்லாம்  அதன் அழகு போய்,  இன்றிருக்கும்   புது  முகம் மகிழ்ச்சியைத்  தரவில்லையே !.

கன்னியாகுமரிக்குப் போகும்போதெல்லாம்  ,.........மனசினை என்னவோ செய்கிறது ......

வெள்ளை சேலையில் அழகாய்த் தெரிந்த என் பாட்டிக்கு பட்டு கட்டினால் நல்லாவா இருக்கும். 

நான் தேடிய குமரித் தெருவினை இன்று முகநூலில் படமாய்க் கண்டேன் .

நன்றி முகம் அறியா நண்பர்  மதுரக்காரன்  கார்த்திகேயன் - அவர்களுக்கு .


நான் மனத்திரையில் பார்த்த காட்சி படமாய் .......
Posted by Picasa

Monday, February 20, 2012

என் தாய் நினைவு நாள் 20-02-2012

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணத்தியாறு பெப்ருவரியில்
எண்பத்திஎட்டு வயது என் தாய்க்கு .....எட்டு எட்டாய் வாழ்ந்து பதினோராவது
எட்டில் நாம் விரும்பாத எட்டாத வீட்டுக்கு பறந்து விட்டாள் அந்த மாத 20 -ல் .
ஆம் எனை ஈன்ற என் தாய் போய் இன்றோடு பதினாறு வருடம் ஆகிவிட்டது .

என் தாயவள் பெயர் பகவதியம்மாள்.அந்த புண்ணியவதியின்
பெயர் பெற்றதால் என்வீடும் என் தாய் வீடாய் ஆனது .என்றும்
என் "பகவதி" இல்லம் அவள் பெருமையையே பாடும் .

என் தாய் பெயரை என் மகளுக்கு இட்டு அழகு பார்ப்பதை
என் தாயால் காணமுடியாது என்பதால் தானோ என்னவோ
என் தாயிருக்கும்போதே வீட்டையும் கட்டி வீட்டுக்கு
என் தாயின் பெயராம் பகவதி என்று பெயர் வைத்தேனோ !

அம்மா .....அம்மா .....உன் பேரன் பேத்திகள் பாக்கியசாலிகளம்மா.....
அன்பை... உன்னன்பை உணர்ந்தவர்கள் எங்களைப்போல் அவர்கள்.
அம்மா...எனக்கொரு வருத்தம் உண்டு....  என்பேரன்கள் உட்பட மருமக்கள் யாரும் உனைக் காணும் பாக்கியம் தனை கொடுக்காமல்
ஏனம்மா இறைவன் உனை அழைத்தான் ....
என் தந்தையைக் காண சென்றாயோ .......

இறையருளால் இவ்வுலகம் உய்யட்டும் ,என் தாய்
இறைவடிவாய் எமைக் காக்கட்டும் ......

உலகில் உயர்ந்தது சிறந்தது தாய்மையே ....

Friday, February 17, 2012

மாணவ சமுதாயம் பயன் பெற ஓடி ஓடி உழைக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்

கல்லூரிகளில் படிக்கும் போது பலதரப்பட்ட ஆசிரியர்களை ,அவர்களின் ஈடுபாட்டை கண்டு பிரமித்தது உண்டு .நான் கல்லூரியில் வேலை பார்க்கும் போதும் ஒரு சில மூத்த ஆசிரியர்கள் மாணவர் போற்றும் அளவுக்கு மதிப்புடன் விளங்கியதும் உண்டு  .

என்னைவிட வயது குறைந்த ஆசிரியர்கள் செய்யும் பணி மெச்சத்தகுந்ததாக இருந்தால் அவரைப் பற்றி மேலும் அறிய முற்படுவது என் இயல்பு .என்னைக் கவர்ந்த ஒருவர் ............... அவரைப் பற்றிய சில தகவல்கள் .......

ஒருநாள் என் வகுப்பின் வெளியே ஒரு பையன் ஓட அவன் பின்னால் அந்த ஆசிரியர் ஓடி அவனை சாலை வரை சென்று பிடித்து முதல்வர் முன்னால் கொண்டு போய் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தார். என்ன காரணம்..? இவரது வகுப்பிற்கு வெளியே நின்று தொந்தரவு செய்து கொண்டிருந்தவனை அதுவும் வேறு வகுப்பு படிப்பவனைப் பிடித்துக் கொடுத்தார்......!

நானே அவரிடம் போய் கேட்டேன்.,” இதெல்லாம் தேவை தானா.......இப்படிக் கள்ளனை விரட்டும் போலீஸ் போல் நீங்களும் ஓடணுமா....?”.......

அவர்,” நம்ம க்ளாசில் படிக்கும் பையன்கள் நல்ல பையன்கள்... இவர்களில் ஒருவன் கூட இதுபோல் அந்தப் பயல் செய்வது போல் செய்து நாசமாகி விடக்கூடாதல்லவா .."..

கல்லூரியின் நன்மைக்காகவும்  General Discipline-க்காகவும் தான் அவனை விரட்டிப் பிடித்தேன்.......என்றும் சொன்னார் .

இது போல் பல தடவை நடந்ததுண்டு.....

அவரது வகுப்பில் படிக்கும் மாணவன் லெக்‌ஷ்மணனிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது
அவன் சொன்னது..." பாடம் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லித்தருவார்......."

மேலும் பல.... அவரது பெருமைகளையெல்லாம் சொன்னான்

Laboratory-யில் சுற்றிச் சுற்றி வந்து எப்படி பரிசோதனை செய்யணும், தேவையில்லாமல் கெமிக்கல்ஸை வீணாக்கக் கூடாது...... தேவைக்கு அதிகமாக கெமிக்கல்ஸ் கேட்கக் கூடாது.....  இப்படியெல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து கல்லூரிக்கு ஏற்படும் வீண்செலவைத் தவிர்த்து வந்தார்.......

அந்த ஆசிரியர் குறுகிய கால பயிற்சி ஒன்றுக்காக பூனா பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.அங்கு திறமையான ஆசிரியர்களின் நட்பு கிடைத்தது. அப்பொழுதே அவர்களின் திறமையை தான் பணி செய்யும் கல்லூரிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டார்.

காலச் சக்கரம் உருண்டது. ஆசிரியப் பணியோடு ஓய்வு பெற வேண்டிய அவர் சூழ்நிலை காரணமாகத் துறைத்தலைவரானார்.

மாணவர்களுக்கும் தனது வேதியல்துறை ஆசிரியர்களுக்கும் பயன் படும் ஒரு செமினார் நடத்த வேண்டும் என திட்டமிட்டு, பூனா பல்கலைக் கழகப்
 பேராசிரியரோடு தொடர்பு கொண்டு பேசினார்.

பூனா பல்கலைகழக வேதியல்துறை ஆசிரியர்கள் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக வேதியல் பரிசோதனைக்கு ஆகும் அதிகச்  செலவினால் ஏற்படும் நிதிச்சுமையை மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

எப்படி நிதிச்சுமை குறையும்......? ஒரு சின்ன விளக்கம்:-

100 மில்லி கிராம் வேதிப் பொருள் எடுத்து அல்லது 20 சொட்டு திரவப் பொருள் எடுத்துதான்  பொதுவாக ஒரு பரிசோதனையை  செய்வார்கள்.

ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,அந்த அளவு வேதிபொருள் தேவையில்லை... 5 முதல் 10 மில்லிகிராம் பொருள் அல்லது ஒரு சொட்டு திரவம் தான் உண்மையிலேயே பரிசோதனைக்கு தேவை என்பதைக் கண்டு கொண்டனர்.

இந்த முறையில் பரிசோதனை செய்வதால் எந்த விதமான தவறும் இல்லை ,தரமும் குறைவதில்லை.

செலவு குறைவு என்பது ஒரு நன்மை தான் என்றாலும் இந்த முறையில் செய்யும் பரிசோதனையால் வேறு பல நன்மைகளும் உண்டு.

அதிக நச்சு வாயுக்கள் வெளியேறுவதில்லை...இதனால் சுற்றுச் சூழல் அதிக அளவில் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது...பரிசோதனை செய்ய அதிக நேரம் ஆகாது ....மிக எளிதாக செய்து கிடைக்கும் முடிவின் தரமும் நிரந்தரம் என்பதால் இந்தப் பரிசோதனை முறையை தெ.தி.இந்துக்கல்லூரி  உட்பட தென் மாநில ஆசிரியர்களும் பயிற்சி பெறவேண்டும் என எண்ணினார்  துறைத்தலைவர்.

அவரது முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத் தலைவரும் முதல்வரும் துணையாக இருந்தனர்......

குறைவான செலவு,பரிசோதனை செய்யும் மாணவர்களின் உடல் நலம் பேணப்படும் என்பதனை குறிக்கோளாகக் கொண்டு 2011  பெப்ருவரி    மாதம் தேசிய அளவிலான நுண்ணிய அளவிலான  வேதியியல் பரிசோதனை செய்யும் பயிற்சிக்கான ஒரு முகாம் நடந்தது.

 3 நாட்கள் மிகவும் பயனுள்ள இந்த Work shop இந்துக்கல்லூரியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தன....

This National Level Workshop sponsored by University Grants  Commission  was organised by the Department of Chemistry,S.T.Hindu College in collabration with  the Department of Chemistry, University of Pune.

இது போன்ற ஒரு பயன்பெறத்தக்க பயிற்சி முகாம் இந்தத் துறையில் நடந்தது இதுதான் முதல் முறை.

இத்தகு பெருமையான பல காரியங்களைச் செய்து முடித்து ஓய்வு பெற்ற ஆசிரியரை......... பேராசிரியர் முருகன் சாரை அவரது வீட்டில் சென்று பார்த்து  அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

கண்டிப்பும் கனிவும் கொண்ட அவர் ஓய்வு பெற்றதால் சோர்வாய் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாய் காணப்பட்டார்.

"ஒய்வு பெற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் முதியோர் இல்லங்களாய் செயல் படும் பல கல்லூரிகள் நம் நாட்டில் உண்டுமே.  அதுபோல் நீங்களும் எங்காவது .....என்று கேட்க நினைத்ததைப் புரிந்து கொண்டு

 அவர்,” ஆண்டவன் கிருபையால் அதிக வருடங்கள் ஆசிரியராக பணி செய்து நான் ஓய்வு பெற்றது எனக்கு  மிகத் திருப்தியாய் இருக்கிறது ,

 பஞ்சபூத மருத்துவம் மூலம் சேவை செய்ய நினைத்துள்ளேன்.

    நம்ம காலேஜ்ல நடந்த ஒர்க் சாப் -ல் கிடைத்த அறிவை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் பயன்படச் செய்யணும்.........” என்றார்.

அவர் நினைத்த பயன் தரும் பணியை இன்றும் செய்து கொண்டு வருகிறார்.

தென் இந்தியாவில் நுண்ணிய அளவிலான பரிசோதனை செய்வதைப் பிரபல        படுத்தியவர் பேராசிரியர் சு.முருகன் என்றால் அது மிகை அல்ல.அவர் தான் முன்னோடி .........

கேரளாவில் இருந்தும், கர்னாடகாவில் இருந்தும் பேராசிரியர்கள் இந்த வொர்க் ஷாப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டில் உள்ள பல கல்லூரி ஆசிரியர்கள் அந்த வொர்க் ஷாப் -ல் கலந்து கொண்டதால் அதன் பயனை, பங்கு கொள்ளாத மற்ற கல்லூரி ஆசிரியர்களும் அறிந்து பேராசிரியர்  முருகனை அணுகி தங்கள் கல்லூரிக்கு வந்து விளக்கமாக பேசும்படி அழைத்தனர்.

ஓய்வு பெற்ற பின் அவ்வாறு பேச போன கல்லூரிகளின் எண்ணிக்கை 25 .

சென்னையில் லயோலா கல்லூரி,வைஷ்ணவா கல்லூரி ,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி , திருச்சியில் பெரியார் ஈ .வே.ரா கல்லூரி , சீதாலக்‌ஷ்மி ராமசாமிக் கல்லூரி ,மதுரையில் பாத்திமா கல்லூரி ,மீனாட்சி கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ,.........பல கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றியும் பரிசோதனைகளை செய்தும் காட்டியதால் திருப்தி அடைந்த அந்தக் கல்லூரிகள் இப்பொழுது பின்பற்றி வருகின்றன .

 மேலும்  பல கல்லூரிகளுக்கும் போக தயாராய் இருக்கிறார்.

காந்திகிராம் ரூரல் பல்கலைகழகத்துக்கும் சென்று   உரையாற்றினார் .

மிகவும் தன்னடக்கம் உள்ள முருகன் சார் அவராகவே கடிதம் எழுதியும் பல கல்லூரிக்கு போய் உரையாற்றுகிறார்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முருகன் சாரை நாடினால் அவர் ஓடிப்போய் அந்தக் கல்லூரிக்கு பயன்தரும் அளவுக்கு நுண்ணிய அளவிலான பரிசோதனையை சொல்லிக் கொடுக்கிறார்.

இவராகவே கல்லூரியை தேடியும் போகிறார்..........

தென் இந்தியா முழுவதும் இந்த பரிசோதனையை பரப்பி மாணவ சமுதாயமும் ஆசிரியர்களும் பயன் பட வேண்டும் என்பது தான் இவரது கனவு.

அவரது நியாயமான இந்த கனவு நனவாகட்டும் ........ வாழ்த்துக்கள் .


For any clarification you may contact him. 
His Mobile no: 09443313526. land line no:04652260342.

e-mail: mgansthc@gmail.com


மாணவ சமுதாயம் பயன் பெற ஓடி ஓடி உழைக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் 
முருகன் அவர்களின் விலாசம் :- 124 (2F /25 ) , "வசந்தம் ", அணஞ்சபெருமாள் சாலை ,நியு கவிமணி காலனி ,பொன்னப்பநாடார் நகர், 
நாகர்கோவில் -629004.  





பேராசிரியர் முருகன் இன்று (19-02-2012) பூனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். மேலும் நுண்ணிய பரிசோதனை ( for Physical Chemistry) -பூனா பல்கலைகழகம்  நடத்தும் இரண்டு நாள் -செயல் முறை வகுப்பில் கலந்து மேலும் அறிவு பெற 
தனது சொந்தச்செலவில் போகிறார். தென் மாநில கல்லூரிகளுக்கு இந்த சுற்று 

சூழல் பாதுகாப்பு தரும் பரிசோதனை முறையை பரப்ப வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையோடு ஒய்வு பெற்ற பின்னும் படித்துக் கொண்டே இருக்கிறார்.

Tuesday, February 14, 2012

மருந்தில்லா மருத்துவம் கண்ட முருகன்



எனது நண்பர் ஒருவர் தெ.தி .இந்துக் கல்லூரியில் வேதியல் துறைத் தலைவராக வேலை பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் . அவரின் பெயரை ஆசிரியரின் மறுபெயர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறந்த மனித நேயம் கொண்ட ஆசிரியர்.
தனது பணிக்காலங்களில் வாடிய முகம் கொண்ட மாணவரைத் தேடிப் போய் உதவி செய்த நல்லவர் இவர்.ஆசிரியர் பதவிக்கே பெருமை சேர்த்த இவரை எப்படிப் புகழ்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
இவரது பணிக்காலம் 2010 ஜூன் மாதம் முடிவடைந்தது .சட்டப்படி அவர் 2011 மே மாதம் வரை வேலை பார்க்கலாம் .ஆனால் போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என எண்ணி பதவி நீட்டிப்பு வேண்டாம் என முடிவெடுத்தார்.

இவரது சேவை ,கல்லூரிக்குத் தேவை என உணர்ந்து அவரை நியமப்படி தொடர்ந்து வேலை பார்க்கசொன்னார்கள் . இப்படி கல்லூரி நிர்வாகம் ஒருவரைக் கேட்டது இது தான் முதல் தடவை .........

இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு அவரது வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தது. ஒருநாள்(15- 5-2005)  அவருக்கு முகத்தில் paralysis  வந்தது ,ஆங்கில மருத்துவம் பார்த்து சிறிது குணம் அடைந்தார் .இருப்பினும் முகம் முதலில் இருந்தது போல் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அவரது உறவினர்களில் ஒருவரின் ஆலோசனைப்படி பஞ்சபூத மருத்துவர் இருந்த சேலத்துக்குப் போய் அவரிடம் சிகிச்சை பெற்றார் . அந்த மருத்துவர்  இவருக்கு எந்தவிதமான மாத்திரையோ மருந்தோ எதுவும் கொடுக்காமல் ACU PRESSURE  சிகிச்சை மூலம் மருத்துவம் பார்த்தார். ஏற்கனவே வாயில் இருந்த புண்  ,அதனால் உண்டான தொந்தரவு எல்லாமே மறைந்தன . மூன்று பல்களை பிடுங்க வேண்டிய நிலையில் இருந்த பல்லும் சரியாகி விட்டது.

வீடு திரும்பிய அவர் மனதில் படித்த நாமே மருந்து சாப்பிட்டு பக்க விளைவுகளுக்கு ஆளாகிறோமே..........மருந்தில்லா மருத்துவத்தை நாம் படித்தால் என்ன .......... சிந்திக்க ஆரம்பித்தார்.........

யார் இவருக்கு மருத்துவம் பார்த்தாரோ அவரையே குருவாக எண்ணி அவரிடமே படித்து பஞ்ச பூத மருத்துவரானார். இன்று அவர் ஒரு சிறந்த மருத்துவர். கட்டணம் வாங்காத மருத்துவர். தான் பெற்ற சுகத்தை இவ்வையகம்
பெறட்டும் என்று மனிதன் பால் அக்கறை கொண்டு மாத்திரமே இதனை இரண்டு
இலட்சம் ரூபாய் செலவு செய்து படித்து முடித்தார்.

அவர்தான் பொன்னப்ப நாடார் காலனியில் இருக்கும் பேராசிரியர் முருகன் இவர்தான் மருந்தில்லா மருத்துவம் கண்ட முருகன்.


you may visit the blog of Prof.Dr.S.Murugan.:-http://www.muruganshealthtips.blogspot.in/

Monday, February 13, 2012

ஊர் மக்களால் போற்றப்பட்ட அன்னை

Posted by Picasa
    மருங்கூர் பெரியவர் தாணுமாலயப்பெருமாளின்  மனைவியின் திரு உருவப்படத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் திறந்து வைத்த நிகழ்ச்சியை மகன் தாணப்பன் அவர்களுக்கு அறிவிக்க பஞ்சாயத்து நிர்வாகம் எழுதிய கடிதம்.

குமரி மாவட்டத்தில் உள்ள நூல் நிலையங்களில் பெருமை வாய்ந்த நூல்நிலையம் மருங்கூர் நூல்நிலையம். அதிலும் அன்னை பாக்கியம்அம்மாளின் படம் திறந்து வைக்கப்பட்டது.,  
திறந்து வைத்தவர் தேரூர் டாக்டர் முத்துக்கருப்பபிள்ளை



Saturday, February 11, 2012

1925-..........மறக்கப்பட்ட ஒரு நல்ல மனிதரின் கதை

மருங்கூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அழகான கிராமம். கிராமத்தைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் தென்னை மரத் தோப்புகள். அங்கு உயரமான ஒரு குன்றில் முருகன் கோவில் இருக்கிறது. அந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால்  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நாங்கள் ,உறவினர் சிலருடன் கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் முடித்து விட்டு மருகமள் வினுசுபாஷின் வீட்டுக்குப் போனோம்.

அங்கு சுபாஷின் அப்பாவின் பெயர்ப் பலகையில் தா. தாணப்பன் என இருந்ததைப் பார்த்து தா. தா என்று பேத்திமார்கள் அழைத்தால் தாத்தா என்று அழைத்தது போலவே இருக்குமே என்றேன் .

சுபாஷின் அப்பா அப்பொழுது நாங்கள் இருக்கும் பக்கம் வந்து ," என் அப்பா இறந்த நாளில் நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தேன் . நான் அதன் பிறகு 
பிறந்ததால் எனக்கும் அப்பாவின் பெயரையே வைத்து விட்டார்கள் .  அரசு ஹாஸ்பிடலில் பிறந்த அன்றே எனக்கு நர்சு "காந்தி "  பிறந்திருக்கான் என 
சொன்னதால் என் பெயர் காந்தி என்றும் உண்டு ."

ஏன், அவள் அந்த பெயரை சொன்னாள் என நான் கேட்க , அவர் " நான் பிறந்த நாள் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி.........மகாத்மா காந்தி பிறந்த நாளல்லவா" என்றார் .

       இந்த  போட்டோவை நான் பார்த்துக் கொண்டே நேரு இருப்பதுபோல் தெரிகிறதே என்றேன் .

நேருவுக்கம் இந்திரா காந்திக்கும் நடுவே நிற்பது தான் காந்தி அவர்களின் தந்தை தாணு மாலையப்பெருமாள் .அவர் 1933க்கு முனனால் காங்கிரஸ் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்திருக்கிறார்
  
1926 -ல் சுசீந்திரம் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஹரி ஜனங்கள்செல்ல ஒரு சத்தியாகிரகம் நடந்தது .அதில் முழு மூச்சுடன் கலந்து கொண்டார் .
தனது மனைவி பாக்கியம் அம்மாளுடன் வைக்கம் போராட்டத்தில் பெரியாருடன் கலந்து சமுதாய பணிகளில் மிக தீவிரமாக கலந்து கொண்டார் .
தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து பல தலைவர்களுடன் தோளோடு 
தோள் நின்று உழைத்திருக்கிறார் . ஆன்மீகத்திலும் சமரச சன்மார்க்க சங்க செயலாளராக இருந்திருக்கிறார் .அதன் மாநில தலைவராக மறைமலை

அடிகளார் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னும் காந்தி அவர்களின் தாயார் திருமதி பாக்கியம் அம்மாள் அந்தப் பகுதி


           மக்களின்                                         நலனுக்காகப்         பாடுபட்டார் . 
         ***

கலைஞர் அவர்கள் நேரில் 
பாக்கியம் அம்மாளை  சந்தித்து ஆசி  பெற்றார்.

      ***** 


                                                    1960-ல்                                    வெளி வந்த          தினத்தந்தி பேப்பர் துண்டினை காந்தி( தாணப்பன் ) அவர்கள் எங்களிடம் காண்பித்தார் .அதில் அவரது அம்மாவின் பெயர் சங்கர வடிவு என இருந்தது.

இத்தகு பெருமை பெற்ற பாக்கியம் அம்மாளின் திரு உருவப் படத்தை ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார்கள் . 

அவரது தாயார் இவ்வுலகை விட்டு மறைந்த நாள் மே மாதம் 27 -ம் தேதி. நேரு மறைந்த நாள் .

சேவை மனப்பான்மை கொண்ட இருவரின் மகன் காந்தி என்ற தாணப்பன் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு உறுப்பினராக இருந்து மக்களுக்குக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் . கழிந்த பல வருடங்களாக இரண்டு வகுப்பில் அதாவது பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூ வகுப்பிலும் வெற்றி பெறும் முதல் மாணவனுக்கு தங்க மெடல் செய்து பரிசாக கொடுத்து வருகிறார் .

இன்றுவரை காந்தி கதராடை தான் அணிகிறார் . மிகவும் எளிமையை விரும்புபவர் .



எளிமையான மனிதர்


Thursday, February 9, 2012

32 வருடங்களுக்குப் பின் நான் தேடிய மாணவன்

நானும் என் மனைவியும் கன்னியாகுமரிக்கு 22-1-12 ஞாயிறு மாலை சென்றோம். கன்னியாகுமரி நெருங்கியதும் வழக்கம்போல் சன்னதித் தெருவில் காரை நிறுத்த அனுமதிக்க வில்லை. கூட்டம் அன்று கூடுதலாக இருந்தது தான் காரணம்..ராமு காரை Sea வியூ லாட்ஜின் முன் சாலையோரத்தில் நிறுத்தினான். காரை விட்டு இறங்கியதும் பழைய ஞாபகங்கள் மனதில் தோன்றி மறைந்தன. 33 வருடங்கள் என் மனரதம் பினோக்கிச் சென்றது....

கடுக்கரையில் என் அப்பா அம்மாவுடன் வாழ்ந்த காலமது. என் மகள் அப்போது பிறக்கவில்லை. கன்னியாகுமரிக்கு போய் இரண்டு நாள் தங்கி வர எண்ணினோம். அப்பாவின் அனுமதியுடனும் ஆசியுடனும் இரண்டு நாட்களுக்குத் தேவையான அரிசி, வெஞ்சண சாமானத்துடன் கடுக்கரையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டுப் போனோம்.  மூன்று மணி நேரம் கடந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தோம். சத்திரத்தில் இடம் காலியில்லை.தேவஸ்வம் நடத்தும் லாட்ஜிலும் அறைகள் காலி இல்லை.

அப்பொழுது மணி இரவு 8 மணி இருக்கும். வேறு வழி ஒன்றும் தோன்றாததால் பஸ் ஏறி ஊருக்கேப் போய்விடலாம் என பஸ்ஸுக்கு காத்து நின்றோம். ஒரே எரிச்சல்.....பஸ் வரவே இல்லை....நேரம் கடந்து கொண்டே இருக்கிறது..... நாகர்கோவில் போய் அங்கிருந்து கடுக்கரைக்கு பஸ்ஸில் போகணுமே......அந்த பஸ் நாகர்கோவிலை அடைவதற்கு முன்னால் புறப்பட்டுப் போனால் என்ன செய்ய.....அதுதானே லாஸ்ட் பஸ்.

 என் மகன் தினேஸும் முருகனும் மற்றும் சிவா அவனது அம்மை எல்லோரும் காத்திருந்தோம்.

சிவாவின் அம்மாவின் உறவினர் ஒருவர் கன்னியாகுமரியில் இருப்பதாகவும் ஆனால் வீடு எங்கே இருக்குன்ணு தெரியாது எனவும் அவள் என் மனைவியுடன் சொன்னதைக்கேட்டேன்.

யாரிடமாவது கேட்கலாம் என்றால் அந்த இரவு நேரத்தில் அங்கு நின்றவர்கள் அந்த ஊர் ஆட்களா வெளியூர் ஆட்களா எனத் தெரியாது.

அப்போது என்னை நோக்கி ஒரு பையன் வந்து கொண்டிருந்தான். கிட்டே வந்ததும் தான் பாத்தேன். அவன் என் மாணவன். பெயர்.........

“சார்,....என்ன விசயம்...பஸ்ஸுக்காக நிக்கிறீங்களா.......”  நான் அவனிடம் விசயத்தைக் கூறினேன்.

பிள்ளையெல்லாம் வச்சுகிட்டு இந்த ராத்திரி நேரத்தில் போகாண்டாம் சார். நீங்க இப்பம் ஏங்கூடவாங்க....... எங்களை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்குப் போனான்.

ஒரு வீடு மாதிரி தோற்றத்தில் உள்ள லாட்ஜின் முன் பக்கம் இருந்த காளிங் பெல்லை அழுத்த வயதான பெரியவர் ஒருவர் எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

அது ஒரு பெரிய ஹால்.

அனறையதினம்  யாரும் வாடகைக்குகேட்காததால்   அதனை நாங்கள் மட்டுமே பயன் படுத்தினோம்.

அது Cape Lands Lodge.

 அதனை லீஸுக்கு எடுத்து நடத்துகிறார். அவர் பெயர்..........

 அவர் அன்றைய குமரி மாவட்ட நெடுமாறன் காங்கிரஸ் தலைவர். மிகவும் அன்பாக எங்களை உபசரித்தார்.

  அவர் ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் என அவரே சொன்னார் .

அன்று ஒருநாள்  நாங்கள் தங்கினோம். மறுநாள் காலையில் எங்கள் கல்லூரியில் வேலை பார்த்த ராமசாமிப் பிள்ளையின் அத்தானின் வீட்டுக்கு அழைத்துப் போனான் என் மாணவன்.

அவரது எதிர் வீட்டுச் சாவியை தந்து எங்களை அங்கே இரண்டு நாள் தங்கிப் போகும்படி சொன்னார்கள்.

என் மனோரதம் புறப்பட்ட காலத்திற்கே வந்து நின்றது . நான் இரண்டு நாள் தங்கிப் போன அந்த வீட்டைத் தேடிப்பார்த்தேன் . வீடு இருந்த இடம் மறைந்து போய் புதிய கட்டிடமாக சாகர் லாட்ஜாக மாறி இருப்பதாக பிறர் சொல்லக் கேட்டேன் .

அழகான தெருக்களைக் காண முடியவில்லை .விவேகானந்தர் மண்டபம்  இல்லா விவேகானந்தர் பாறையை மனத்திரையில் பார்த்தேன்.........

அந்த நாட்களில் இருக்க இடம் தந்த பெரியவரின் பெயர் என்ன?  அந்த இடத்துக்கு அழைத்து சென்ற  மாணவனின் பெயர் என்ன?..........நாடு காந்தியை மறந்தது போல் நானும் இக்கட்டான அந்த ஒருநாளில் உதவி செய்தவர்களின் 
பெயர்களை மறந்து விட்டேனோ !

மனம் அதையே நினைத்துக் கொண்டிருந்தது.

கோவிலுக்குப் போய்திரும்பினோம் .......என் மனைவியிடம் இது பற்றி கூறி அந்த  பெரியவரின் பெயர் தெரியுமா ? எனக் கேட்டேன் .

"உங்களுக்கே தெரியவில்லை ? எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?....."

சுவாமிநாதனாக இருக்குமோ !.......ஒரே சிந்தனை ......அன்று இரவு எங்கிருந்தோ சினிமா பாட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தது .

"தர்மம் தலை காக்கும் ,தக்க சமயத்தில் உயிர் காக்கும் ......எம்ஜிஆர் பாட்டுக் கேட்டது ...."........அவர் பெயர் தர்மநாதனாக ...... ஆம் தர்மநாதனே தான்.

இப்போ அவர் உயிரோடு இல்லை என்பதனை அறிந்து மனம் வருந்தியது .அவரது மகன்கள் கன்னியாகுமரியில் இருப்பதாக அறிந்தேன் .

அந்த மாணவன் எங்கிருக்கிறான் ? பெயர் ....? எதுவும் தெரியவில்லையே ....தெரிந்தால் ப்ளாக் எழுதலாம் ......

6 -2 -12  திங்கள் கிழமை காலையில் பெருமாள் திரு மண்டபத்தில் நண்பரின் மகனது திருமணவிழாவுக்குப் போய்விட்டு திரும்பும் வேளையில் ,எனது கார் நிற்கும் இடத்திற்குப் போனோம். எங்களுடன் வந்த என் மகன்  முருகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,என் கண் பார்வை படும் படியாக இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒருவர் குறுந்தாடியுடன் சற்று வயதான தோற்றத்தில் இருந்தார் . அவர் என்னையே பார்த்தபடி என் எதிரே வந்து நின்றார்

"சார்....! நீங்க பொன்னப்ப பிள்ளை தானே . ஹிந்து காலேஜ்ல நான் B .Sc  Maths  படிச்சேன் ........."

"அப்படியா ..... ரொம்ப சந்தோசம் .......நீங்க இப்பம் என்ன செய்யறீங்க ......."

"நான் திருவனந்தபுரத்தில் சென்ட்ரல் Telegraph ஆபீஸ் -ல் வேலை பாக்கிறேன் "

 'இப்பம் எங்க தாமசம் ...... திருவனந்தபுரத்திலா இருக்கிறீங்க ' என நான் கேட்டேன் ...

இல்ல சார்.....தினமும் கன்னியாகுமரியில் இருந்து train -ல் போய் வருகிறேன்   என்று சொன்னதும் என் பொறியில் ஏதோ ஒன்று தட்டியது .

நான் அவரிடம் எனது அந்த அனுபவத்தை சொன்னதும் , அவர் அதனை ஞாபகம்  இருப்பதாக கூறினார் . அவர் தான் தர்மநாதன் இப்போ உயிரோடு இல்லை  என்று சொன்னார் .

உடனே நான் என் மனைவியை அழைத்து அவரிடம் அறிமுகப்படுத்தினேன்.

என் மனைவி," கழிந்த நாலைந்து நாளாக உங்க பெயர் தெரியாம தவித்துக் கொண்டிருந்தாங்க . உங்க பெயரென்ன ?"... கேட்டாள்.

"முருகேசன் "   என சொன்னார் .

  32  வருடங்களுக்குப் பின் நான் தேடிய மாணவன் ஒருவனை நான் நினைத்த சில நாட்களிலேயே சந்தித்தது மிக மிக அதிசய நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது .


Friday, February 3, 2012

செல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடுக்கரையில் மூன்று நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாகி விட்டன.கும்பாபிசேக விழாவிற்கு வந்த பலரை, நான் பல வருடங்களுக்குப் பின் பார்த்துப் பேசியது அதிக மகிழ்ச்சியைத் தந்தது.


வேர்களை மறவா கடுக்கரை ஊர் அன்பர்கள் பலரைப் பார்த்தேன். கும்பாபிசேகம் காண்பதற்கென்றே வந்தவர்கள் சிலரையும் பார்த்தேன்.என்னைத் தெரியுமா என நான் கேட்க ,ஒரு இளைஞர் உங்கள் முகத்தினை ஃபேஸ்புக்கில் பாத்திருக்கேன் எனச்சொன்னது சற்று வித்தியாசமானதாகவும் சந்தோசமாகவும் இருந்தது.


கும்பாபிஷேகம் காண வந்த பலர்,கோவில் திருப்பணிக்கு மனமுவந்து நிதிதனை கொடுத்ததைக் கண்டேன்..


கோவிலின் தெற்குப் பக்கம் உள்ள தெருக்களில் வண்ணமிகு கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னே காணப்பட்டன.இரு வாசல்களில் வாழைமரங்கள், உலத்தி இலை, கட்டப்பட்டும் மின் ஒளி பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருந்தது.


முதல் நாள் யாகசாலை பூஜை ஆரம்பமானது.கும்பாபிஷெகத்தை நடத்தி வைக்க திருநெல்வேலியில் இருந்து திரு.கே.ராஜகோபால தீட்சிதர் அவருடைய குழுவினருடன் வந்தார்.முதல் நாள் மதியம் ஆயினூட்டு தம்பிரான்கோவில் பாயசம் வைப்பு அடியந்திரம் நல்லபடியாக நடந்தது. மாலை 5.30 க்கு மேல் கோவில்குளத்தில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்து ஊர் சுற்றி கோவிலுக்கு வந்தனர். யானையின் மீது திருப்பணிக்குழு தலைவர் திரு. காந்தியும் ஒரு தீட்சிதருடன் அமர்ந்திருந்தார். நான் ஒவ்வொரு இடத்திலும் முன்னதாகப் போய் வீடியோ படம் எடுத்தேன்.பின் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் மருந்து சாத்தும் பணி நடந்தது. ஊர்மக்கள்  அனைவரும் அதில் பங்கெடுத்தனர். மருந்தை  உலக்கையால் இடிக்க பெருங்கூட்டமாக வரிசையாக நின்றார்கள்.புதிய சிலைகள் நிறுவப்பட்டன. மூன்றாம் நாள் மகா கும்பாபிஷேகம் மிக அழகாக நடந்து முடிந்தது. 10.30 மணியளவில் அன்ன விருந்து நடந்தது. மிகப் பிரம்மாதமாக ஐந்து கூட்டுகளுடன் பருப்பு,சாம்பார்,ரசம்,மோர் (கட்டியான மோர்) சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது.அதை விளம்பியவர்கள் மிக அருமையாகவும் பொறுமையாகவும் விளம்பினார்கள். அன்ன விருந்து உபயதாரர் ஆட்டோ மாராசனின் அக்காளைப் பார்த்து மனதாரப் பாராட்டினேன்.மிக நல்ல முறையில் எல்லாமே இனிதாக முடிந்தது.
இது போன்றதொரு விழா என்னறிவில் இது தான் முதல் தடவை

Thursday, February 2, 2012

முன்னால் இருந்ததும் இந்நாளில் இருப்பதுவும்

23-4-2011 -ல் திருப்பணி நாளில் உள்ள கோயில் கும்பாபிஷேகம் நடக்க தயாரான பின் வித்தியாசமான, அழகான வடிவில் காட்சி தந்தது.கோபுரம் இல்லாதக் கோவிலில் கோபுரம். ஒட்டுப் பணி மாற்றப் பட்டு காங்க்ரீட் கட்டிடமாக கம்பீரமான வடக்கு வாசல் கல்தூணுடன் காட்சி அளிக்கிறது.

Posted by Picasa

கோவில் முன்னாட்களில்.......


Posted by Picasa


2012 ஜனுவரிக்குப் பின் செல்லிஅம்மன் கோவில்


Posted by Picasa


Posted by Picasa