Friday, March 30, 2012

அறுவடை அன்றும் இன்றும்........


                          


Posted by Picasa நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு மத்தியானம் போகும்போது அறுவடை காலங்களில் தெருவில் நெற்கதிர்கட்டை தலையில் வைத்து மிக வேகமாக நடந்தும் ஓடியும் செல்வதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

சின்ன பிள்ளைகள் கட்டில் இருந்து நெல்லை உருகி வாயில் போட்டுக் கொறிக்க அவர்கள் பின்னால் போய் கதிரை உருகி எடுப்பதுண்டு.அது போன்ற சமயங்களில் சுமப்பவனுக்கு தெரிந்தால் அவன் நிற்காமலும் திரும்பிப் பார்க்காமலும் திட்டுவதுண்டு.

அவர்கள் தலைச் சுமட்டுடன் வரும்போது எதிரே யாராவது வந்தால்அவர்களது வேகம் தடைபடும்.
தலை சுமட்டின் முன்பக்கம் தாழ்ந்திருப்பதால் கண்ணை கொஞ்சம் மறைக்கும்.

வழி, வழி என்று சத்தம் போட்டுக் கொண்டே விரைவாக நடந்து செல்வான்.

வயல் அறுவடை காலத்தில் அறுக்க வருபவர்கள் ஒரு குழுவாக வருவார்கள். அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு களத்தில் உள்ள தொழுவில் தங்கி இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் உண்டு.

 அவனை கூரடி என்று அழைப்பார்கள்.
 கூறு என்றால் ஒரு பங்கு என்று பொருள்.

விளைந்து கிடக்கும் வயலை அறுக்கும்போது யார் எந்த பாகத்தை அறுக்க வேண்டும் என்று பிரித்துக் கொடுப்பது அந்தக் கூரடிதான்.கூறு கூறாகப் பிரித்துப் போட்டு யார் எந்தக் கூறை அறுத்து சுமந்து செல்ல வேண்டும் என்று சொன்னபிறகு அவனவனுக்குள்ள கூறை அறுக்க ஆரம்பிப்பான்.

எப்படி பங்கு வைப்பான்.?

 கூரடியின் கையில் ஒரு தடிமனான கம்பு இருக்கும்.

அந்தக் கம்பின் நீளம் தான் ஒரு கூறின் அளவு.

 வரப்பின் அற்றத்தில் இருந்து கம்பை வைத்து அதன் மறுமுனையில் இருந்து கதிரை நேராக ஒதுக்கி கொடுப்பான்.

 கதிர்களை முதலில் வேகமாக அறுத்துப் போட்டு விட்டு தாங்கள் தங்கும் இடத்துக்கு வந்து ஆகாரம் பார்ப்பார்கள். 

இதற்கிடையில் வெயிலில் காய்ந்த பின் கதிரை படை படையாய் எடுத்து பனைநாரில் வைப்பார்கள்.
ஒவ்வோரு தடவை படையை வைக்கும்போது மாத்தி மாத்தி வைப்பார்கள்.அதாவது ஒரு தடவை வைக்கும்போது கதிரின் அடிப்பாகம் இருக்கும் அல்லவா. மறுதடவை அந்த பாகத்தின் மீது எடுத்து வந்த படையின் நெல் இருக்கும் பாகத்தை வைப்பார்கள்.

இரண்டு நார் கொண்டு மிகவும் இறுக்கி கட்டி தலையில் வைத்து களத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.....

வயல் உரிமையாளன் நெற்கதிர்க் கட்டை வயலில் இருந்து எண்ணி அனுப்புவான் .களத்தில் ஒரு ஆள் எத்தனை கட்டு வந்தது என்று எண்ணுவான்.இருவர் சொல்வதும் சரியாக இருக்க வேண்டும்.

அவர்களது கூலி 21 மரக்கால் விதப்பாடு என்றால் 21 மரக்கால் நெல் கூலியாகக கொடுக்க வேண்டும்... ஒரு ஏக்கர் என்பது 21 மரக்கால் விதப்பாடு

சூடடிப்பவர்களும் ஒரு குழுவாய் இருப்பார்கள்.

 தலைவன் கூரடி என்றே அழைக்கப்படுவான். கதிரை வட்டமாகப் போட்டு மாடு வைத்து சூடடித்து நெல்லை தூசி நீக்கி வீசி வீட்டினுள் கொண்டு போடுவார்கள். படப்பு கூட்டவெண்டும். இவர்களது கூலி 21 கோட்டை நெல் கிடைத்தால் 21 மரக்கால் நெல். சமீபத்தில் நான் கடுக்கரைக்குப் போனபோது ,ஆட்களுக்குப் பதில் வயலிலேயே அறுத்தும் நெல்லை எடுத்து தந்து விடுகிற வண்டிகளைத்தான் கண்டேன்....


Tuesday, March 27, 2012

1952 முதல் இன்றுவரை.............


1952  முதல் 1957 வரை தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை சார்ந்திருந்தது...
துணைவேந்தர்:சர்.A.ராமசாமி முதலியார்
முதல் முதல்வர்:சத்தியவாகீஸ்வர அய்யர்(1955 வரை)
President:Thiru.K.VelayuthamPillai
Secretary:Thiru.N.Boothalingam Pillai.
Thiru.C.Subramaniam(Rasa).
the first class was engaged by Prof: L.C.Thanu. his student: Dr.D.Velappan.
Prof :L.C.Thanu was the Principal from 1971 to 1988.
Dr.D.Velappan was the principal for the year 1988-89.
***********************************************************************************
1
1957 முதல் 1966 வரை சென்னை பல்கலைகழகம்
துணை வேந்தர்: டாக்டர்.A.லெக்‌ஷ்மணசாமிமுதலியார்
முதல்வர்: Dr.B.நடராஜன்(1955 முதல் 57வரை)
Prof:V.பொன்னுசாமிப்பிள்ளை(1957 முதல் 1958 வரை)
UniMadras.png

*********************************************************************************************
1966-முதல் 1990 வரை மதுரை காமராஜ் பல்கலைகழகம்
துணைவேந்தர்:தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
முதல்வர்:Prof:V.M.ஸ்ரீதரமேனோன்(1962 முதல் 1969 வரை)
Madurai Kamaraj Univ Logo
President: P.Veerapathrapillai (1971 to 1977)
             President:T.S.Ramasamy    (1977 to 1991)        
***********************************************************************************
1990 முதல்.....................மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,திருநெல்வேலி...............................
துணை வேந்தர்:Dr.வேதகிரிசண்முகசுந்தரம்
முதல்வர்: Dr.C.பேச்சிநாதன்.(1989 முதல் 1994வரை)
2008 முதல்
Dr.A.மீனாட்சி சுந்தரராஜன் முதல்வராக பணியாற்றுகிறார்.


****************************************
Chairman-Secretary:Er.P.ARUMUGAMPILLAI


Monday, March 26, 2012

1970க்கு முன்னே கடுக்கரையில் நடந்த திருமணப்பந்தியைப் பற்றிய என் நினைவுகள்

ஆக்குப்பெரை என்பது தென்னை ஓலையால் வேயப்படுவதாகும். அதில்தான்  சாப்பாடு பந்தி வைப்பார்கள். சாப்பாடு பொங்குவதற்கு தனியாக சமையல்காரரை நியமித்து அதற்கு என்று தனியாகப் பெரையும் போடுவார்கள்.பெரை போடுபவர்கள் பூதப்பாண்டியிலும்,தெரிசனம்கோப்பிலும் உண்டு.

சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் கடுக்கரையில்  உண்டு.  அதனை வாங்கி வைத்தவர்கள் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்ற்ஸ்டிகளாக இருந்த ஒட்டடுக்கு வீடு பிச்சைக்காரன்பிள்ளை என்ற திருச்சித்தம்பலம் பிள்ளையும் கீழத்தெரு திரவியம்பிள்ளையும் தான்
நீளமாக இருக்கும் பந்தல்….மோட்டுப்பந்தல் தான் கல்யாண வைபவங்களுக்கு போடுவார்கள்.மூங்கில் கம்புகளைத்தான் மேற்கூரைப் போடுவதற்கு பயன்படுத்துவார்கள்…..தடிமன் கூடிய கம்பை நான்கு குச்சைகளில் (மூலைகளில்) கால்களுக்காக நடுவார்கள்.பெரையின் அகலம்  எந்த அளவு..?
 அப்போதெல்லாம் தரையில் இருந்துதான் சாப்பிடணும்.. நான்கு வரிசைகள் நீளமான பந்திப் பாய் தரையில் போட்டிருக்கும். இருவரிசைக்கும் இடையே சாதம், கறிகளை விளம்புவர்கள் நடந்து போவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருக்கும்…. 4 வரிசை அமைக்க ஏதுவாக ஒரு பெரையின் அகலம் இருக்கும்..
பெரையின் மோட்டுப் பகுதியில் வைக்கோல் வைத்துப் போட்டு மூடி இருப்பார்கள்…மழை வந்தால் ஒழுகாமல் இருக்கவே அப்படிச் செய்வார்கள்….
மழை நீர் தரை வழியாக பெரையின் உள்ளே வராமல் இருக்க, பெரையைச் சுற்றி பெரையின் அடிப்பாகத்தில் ஓலையை மண்ணை  வைத்து அணைத்தும் வாசலில் வரப்பு போன்ற சிறிது தடுப்பும் இருக்கும்.
மூன்று விதமான அளவுகளில் பெரைகள் இருக்கும். பந்திப்பெரை,ஆக்குப்பெரை,கலவறப்பெரைகள் தான் அவை…… ஆக்குபெரையில் தான் அடுப்புக் கூட்டி சமையல் வேலை நடக்கும்.
மண்தரையாதலால் எல்லாப் பெரைகளிலும் மாட்டுச்சாணி போட்டு மெழுகி,புழுதி வராமல் தரையை பண்படுத்தி வைத்திருப்பார்கள்……. கலவரைப்பெரைதான் store room. பந்திபெரை தான் சாப்பாடு நடக்கும் இடம். முகூர்த்தத்துக்கு வருபவர்கள் பந்திப்பெரைத்தரையில் விரித்திருக்கும் ஜமக்களத்தில் அமருவார்கள். பெரையின் ஒரு அற்றத்தில் நாதஸ்வரக் கச்சேரி நடக்கும்….
சமையலுக்கு அந்தக் காலத்தில் நிபுணர்களாய் இருந்தவர்களில் முக்கியமானவர் பார்வதிபுரம் அப்புவும் அவரது சீடர்களும்தான்.. சமையல்காரர்கள் செய்யும் வேலயைக் கண்காணிக்க ஊரில் உள்ள ஒருவர் இருப்பார்.
முகூர்த்தம் முடிந்ததும் வெத்தலை,பாக்கு தாம்பாளத்தில் வைத்து வந்திருந்த அனைவருக்கும் கொடுப்பார்கள்… உள்ளூர் ஆட்கள் அதனை வாங்கி வெளியே போய் அவர்களது வீட்டுக்கேப் போய்விடுவார்கள்…..
பந்தியில் இருந்த ஜமக்காளத்தை எடுத்து பின் மாப்பிள்ளை வீட்டார் பந்திப்பாயில் அமர்வார்கள்.பின் இடம் இருந்தால் வயதான முதியவர்களைக் கூப்பிட்டு அமரச்சொல்வார்கள்.அடுத்த பந்தியிலும் அதுவே தொடரும்….உள்ளூர் ஆட்களை மறுபடியும் சாப்பிட அழைக்க அதன் பிறகு அவர்கள் வருவார்கள்…அதன்பிறகு தான் பெண்வீட்டார் சாப்பிடுவார்கள்.
பந்திப்பாயில் எல்லோரும் அமர்ந்தபிறகே விளம்ப ஆரம்பிப்பார்கள். முதலில் தலைவாழை இலையைப் போடுவார்கள்………தேர்ந்தெடுத்த நல்ல இலையை தான் முதலில் கொண்டு வருவார்கள்……மாப்பிள்ளை வீட்டாரின் மனம் கோணாதபடி மிகவும் பௌயமாக கேட்டுக் கேட்டு பருமாறுவார்கள்…. முதலில் உப்பு,…பின் வரிசையாக வாழைக்காய் தொவட்டல்,அவியல்,தடியங்காய் கிச்சடி,இஞ்சிக் கிச்சடி,மிளகு பச்சடி,நாரங்காய் பச்சடி,சேனை எரிசேரி,ஓலன், ஏத்தங்காய் உப்பேரி……
சாதம் போட்டதும் பின்னால் பருப்பு பப்படம் வரும்…….இதற்கிடையில் ராமச்சிவேர் போட்டு சூடாக்கிய நீரை இலையின் முன்னே இருக்கும் பித்தளைக் கப்பில் அல்லது அலுமீனிய கப்பில் விட்டுக் கொண்டே அங்கேயும் இங்கேயும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருப்பான்………பருப்பு விட்டு சாப்பிட்டு முடிந்த பின் தான் சாம்பார் வரும். அமைதியாய் சாப்பிடுவார்கள்….புளிசேரி விட்டு சாப்பிட்டபின்……பாயசம்…பழம் பால்பாயசம் போளி….வரும்.. ஒரு பாயசம் வந்த பின் அதை சாப்பிட்டு முடித்தபின் தான் அடுத்த பாயசம் வரும். நெருக்க மாட்டார்கள். இவற்றையெல்லாம் கண்காணிக்க ஒருவர் உண்டு.அவர் எந்த இலையில் எது இல்லையோ அந்தக்கூட்டை வைக்க ஆவன செய்வார்.
முதல் வரிசைக்காரர்கள் சாப்பிட்டபின் பெரைக்கு வெளியே வந்து பெரிய வார்ப்பில் இருக்கும்தண்ணீரை பனைஓலைத்தோண்டியில் கோரி எச்சிக்கையைக் கழுகுவார்கள்.
பந்தியில் ஆட்கள் அமர்ந்தபின் அவசரமாக சாப்பிட்டுவிட்டு போக யாராவது வந்தால் சின்ன பிள்ளைகளை எழுப்பி அந்த இடத்தில் அமரவைப்பது உண்டு.அதனால் அழுதுகொண்டே செல்லும் பையனை சமாதானப்படுத்தி அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிடச் செய்வார்கள்……… மெதுவாக ஒரு பந்தி முடிந்ததும் பெரையைச் சுத்தம் செய்த பின், சாப்பிடாமல் இருப்பவர்களை அழைப்பார்கள்…அழைத்த பின் தான் அவர்கள் போய் சாப்பிடுவார்கள்…
வயதான சொந்தக்காரர் யாராவது  திருமணத்துக்கு வராமல் வீட்டில் இருந்தால்  அவருக்கு சாப்பாடு அவரது வீட்டுக்கே கூடப் போவதும் உண்டு….. சாப்பிட்டு வெளியே வருபவர்களுக்கு வெத்திலை,பாக்கு,சுண்ணாம்பு கொடுக்க யானைக்கால் பெட்டியில் எல்லாவற்றையும் வைத்து கொண்டு வருவான் ஒருவன்......வேண்டியவர்கள் வெத்தலையை அவனிடம் வாங்கி போடுவார்கள்.

Sunday, March 25, 2012

முழு வெத்தலையை போட்டால் கடன் தராத பாட்டா........


வங்கிகள் இல்லாத காலம்….கூட்டுறவு சங்கமும் இல்லாத அந்த நாட்களில் மக்கள் தமது திடீர் தேவைகளுக்கு பணம் தேவைப் பட்டால் என்ன செய்வார்கள்………
பாத்திரங்களை பணயம் வைத்து ருபாய்க்கு அரை அணா அல்லது ஒரு அணா வட்டிக்கு கடன் வாங்குவதுண்டு…..அனேகமாக பெண்களுக்கிடையேதான் தான் இந்த கொடுக்கல் ….. வாங்கல் பரிவர்த்தனை நடக்கும்.  இப்படி வாங்குவது பெரிய தொகையாக இருக்காது…..

பெரிய தொகை தேவைப்பட்டால்என்ன செய்வார்கள்………வயல் வைத்திருப்பவர்களுக்கு(விவசாயிகளுக்கு) கடன் கொடுப்பவர்கள் ஊரில் உண்டு. அப்படிக் கொடுப்பதைக் கோட்டக்கடன் என்பார்கள்…..
கடன் வாங்கியனுக்கு வயல் இருக்குமல்லவா…… அவன் அவனுக்கு கிடைக்கும் நெல்லை வட்டியும் முதலும் சேர்த்து அறுவடை முடிந்த உடன் கொடுக்கவேண்டும்.

அதாவது வயல் அறுவடை முடிந்து களத்தில் இருக்கும் நெல்லை, கடன் கொடுத்தவனே வந்து வாங்கிக் கொண்டு போயிருவான்……
வயல் இல்லாதவன் தங்க செயினோ மோதிரமோ பணயம் வைத்து பணம் கடன் வாங்குவது உண்டு…..

அன்றாடம் வேலை செய்து காலம் கழிக்கும் தொழிலாளர்களுக்கு தேவை என்று வரும்போது என்ன செய்வார்கள்………இப்படிப்பட்டவர்களுக்கும் கடன் கொடுப்பவர்கள் ஊரினில் உண்டு…….

அப்படிக் கொடுப்பவர்……ஒருவர் ……..அவர் ராமலிங்கம் பிள்ளைப் பாட்டா……
அதிக வட்டி வாங்க மாட்டார்…….பணயப்பொருளாக எதனையும் கேட்கமாட்டார்……மிக அதிகமான தொகையினை யாராவது கேட்டால் தாளில் உறுதி மொழி எழுதி வாங்கிக் கொண்டு கொடுப்பார்……

கடன் வாங்க வருபவனது முகத்தை பார்த்தே கொடுக்கலாமா….. வேண்டாமா எனக் கணித்து விடுவார்……… வீட்டில் வந்து கடன் கேட்பவர்களை பாட்டா அன்பாக உபசரித்து ,  “மக்கா, என்ன விசயம்…
ருபாய்க்கு அப்படி என்ன அவசரம்……..”. கடன் வாங்க வந்தவன் பேசுவதை வைத்தே உண்மை பேசுகிறானா………பொய் சொல்கிறானா……என்பதைக் கண்டு பிடிச்சுருவாரு…”

அவருக்கு எதிரில் இருக்கும் செயர் அல்லது பென்ச்சில் அமரச்சொல்வார்…… இருந்தால் பணம் கொடுக்க மாட்டார்…….

பாட்டா வெத்தல போடும் பழக்கம் உள்ளவர்……கடன் வாங்க வந்தவனை வெத்தலை போடச் சொல்வார்…….
வெத்தலை தட்டத்தில் இருந்து அவன் வெத்தலையை எடுப்பதை மிகவும் கூர்மையாக பாத்துக்கொண்டே இருப்பார்....
அவன் வெத்தலையை கிழித்துப் பாதியைப் போட்டால் அவனுக்குப் பாட்டா கடன் கொடுப்பார்.
 சும்மாதானே கிடைக்குது என முழு வெத்தலையை சுண்ணாம்பு தடவிப் போட்டால் , அவனுக்கு கடன் கொடுக்க மாட்டார்.

Monday, March 19, 2012

என் பெயரை மறந்த குறத்தியறை பள்ளியில் படித்த தாஸ்.......

மாலையில் 3 மணிக்குப் போன மின்சாரம் எப்போ வரும் ? தெரியாது....ஆனால் போகும்போது சொல்லாமல் கொள்ளாமல் போய்விடும்.......வெயிலின் தாக்கம் சற்று கூடுதல்........மணி 5.30......வீட்டில் இருக்க முடியவில்லை......நடந்தது போலும் இருக்கும் கடைக்குப் போனது மாதிரியும் இருக்கும் என்றெண்ணி வெளியே கிளம்பினேன்.....ஒரு பையையும் கையில் எடுத்துக் கொண்டேன்...பைக்கும் காசு கேப்பானே....

சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, “ கடுக்கர ....கடுக்கர....” என சத்தம் வந்தது..... எங்கிருந்து யார் இப்படி ......?  ஒரு கடையில் இருந்து ஒரு ஆள் என்னை நோக்கி என்னருகே வந்தார்.

“உங்க பேரு தெரியல்ல ....அதான் அப்படிக் கூப்பிட்டேன்......” என்றார்

எரிச்சலுடன் இருந்த நான் அவரைத் தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள்வில்லை... நிக்காமல் அந்த இடத்தை விட்டு போக சற்று நகர முயன்றேன்....

“உங்க அண்ணன் இப்போ எங்கே இருக்கான்.”  கேட்டான்

 “கடுக்கரையில் இருக்கான்”

‘என்னத் தெரியல்லியா?’

நான், “ தாஸ் தானே நீ.... மாணவர் தலைவர் தேர்தல்ல உன்னை எதுத்து நிண்ணது என் அத்தான் சிவதாணு ......எல்லாமே ஞாபகம் இருக்கு...” என்றேன்.

 “ நான் அவனைத்தான் ஒன் அன்ணன்னு நினச்சுகிட்டு கேட்டேன்” என்றான்

“அப்படியா.... அத்தான் இப்போ இல்ல.....” என்று சொன்னேன்......

தாஸுக்கு வயது 68 .... வழுக்கைத்தலை. பாக்க 75 வயதுக்கு மேலான தோற்றம்....

அவன் சொன்னது...... அவனுக்கு இரண்டு பிள்ளைகள்..... மூத்தவள் பெண்.....அவளுக்கு 5 பெண் பிள்ளைகள்......பின் ஒரு மகன்........

மகன் கோட்டயத்தில் ஏசி மெக்கானிக்காக இருக்கான்......நல்ல படிக்கல்ல....ஒரே அசத்து..... சொன்னால் ஒண்ணும் கேக்க மாட்டான்......வீட்டுக்கு வந்தாலும் அவன் பேசினாலும் நான் பேச மாட்டேன்.....ஆனால் அவன் மிகவும் வசதியாய் இருக்கான்...... அவனுக்குள்ள சொத்தை தனது அக்காளுக்கே கொடுத்து விட்டான்.................

“நல்ல பையன் தானெ .ஏன் பேசாமல் இருக்க” நான் கேட்டேன்.......

“இப்போ ஊரில் உள்ள வீட்டை விற்று அவனது அம்மைக்கு ருபாய் கொடுக்க சம்மதிச்சிருக்கான்...... அவ கீழ விழுந்து ஆஸ்பத்திரியில் இருக்கா........”

“ உனக்கு நல்லது தானே செய்திருக்கான்... .....” இது நான்.

“அவன் கல்யாணம் செய்திருக்கும் பெண் வேறு ஜாதிப் பொண்ணு...... கல்யாணத்துக்கும் கூட நாங்க போகல்ல..... அவன் கூப்பிடல்ல....... எப்படி அவன் கிட்ட பேச முடியும்......அவனுக்கு இப்போ 90 ஏக்கர் சொத்து இருக்கு......18 கடை இருக்கு.....மாமனார் இல்ல....... நாங்கள் கோட்டயத்துக்குப் போனதே கிடையாது....”

 “நான் அவனிடம் ஒரு பைசா வாங்கமாட்டேன்......”

“அதெல்லாம் சரி.... நீ இப்ப என்ன செய்துட்டிருக்கெ......” என்று கேட்டதும்

அவன் “ ஒரு தெம்பு புடிச்சவன்ற வேல பாத்துக்கிட்டுருக்கேன்...” என்றான்.

”புடிக்கல்லண்ணா அந்த ஆளுகிட்ட ஏன் வேலை பாக்குற....”

அப்படிப்பட்ட ஆள்ட்டதானெ பணம் நெறைய இருக்கு......என்ன செய்ய.....விதி.... இன்னும் எத்தனை நாளோ ....போகிற நாள் போகட்டும்......

மிகவும் அன்பாய் குறத்தியறை பள்ளியில் படித்த அனைவரையும்
 பெயர் சொல்லி விசாரித்தான்....அவன் சொன்ன பெயர்கள் அத்தனையும் வகுப்பில் படித்த பெண்களின் பெயர்களே.....

கடைசி வரை என்னிடம் என் பெயரையே கேட்கவில்லை....

 அவனைப் பொறுத்தளவில் என் பெயர் ’கடுக்கர’ தானோ என்னவோ

Saturday, March 17, 2012

85 வயதான ஆசிரியரும் 75 வயது மாணவரும் 60 வருடத்திற்கு பிறகு சந்தித்த வேளையிலே.......



சர்.சி.பி.ராமசாமி மெமோரியல் உயர்நிலை பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறது?

பூதப்பாண்டி அரசு மேல் நிலைப்பள்ளி........

யார் இந்த சி.பி.?

114 வருடம் வயதான இந்தப் பள்ளி அரசு பள்ளியா...?

அரசர் பள்ளியா..?          

 சர் சி.பி. ராமசாமி ஐயரின் பெயர்  இந்தப்பள்ளிக்கு எந்த வருடத்தில் சூட்டப்பட்டது . ஏன் சூட்டப்பட்டது ? பலரிடம் கேட்டேன்.

 யாருக்குமே தெரியவில்லை.

 சர்.சி.பி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாய் இருந்தவர்.

கன்னியாகுமரி மாவட்டம் 1940-50 களில் கல்வியில் மிகவும் முன்னணியில் இருந்த ஒரு மாவட்டமாக திகழ்ந்தது.

 இதற்கு காரணமே சி.பி தான்.....

1946-ல் அவர் கொண்டு வந்த கட்டாயக் கல்வித்திட்டம் தான்.

 கல்வி ஸ்தாபனத்துக்கு தனி மனிதர் பெயர் சூட்டப்படுவதை விரும்பாத ஒருவரான சி.பி யின் பெயரையே அரசு பள்ளிக்கு வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.....
114 வயதான பள்ளியின் ஆண்டுவிழா 13-02-2012 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
தலைமை திரு.அ.கோலப்பபிள்ளை

  திரு.பெ.ஆறுமுகம்பிள்ளை சிறப்பு விருந்தினர்.....

தலைவருக்கு இவர் ஏன் பொன்னாடை போர்த்துகிறார்..... நான் எங்கள் கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளையிடமே கேட்டேன்.

 அவர் சொன்னார்.“ கோலப்பபிள்ளை சார் அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்த போது நானும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன். என்னுடைய ஆசிரியர்....”

“உங்களுக்கு போட்ட பொன்னாடையை
அவருக்கே போட்டீங்களா...?” நான் கேட்டேன்.

 “ சே...ச்சே.......இங்கிருந்து நிகழ்ச்சிக்கு போகும் போதே எனது 85 வயது ஆசிரியரை கௌரவிக்க வேண்டும் என நினைத்தே நான் பொன்னாடையை வாங்கீட்டுப் போயிற்றேன்....”

திரு அப்துல் கலாம் தான் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோதும்க்கூட பொது இடங்களில் தனது ஆசிரியரை மதிக்கத் தவறியதே இல்லை........

75 வயதுப் பெரிய ஒருவர் 85 வயதான தனது ஆசிரியரை மேடையில் பாராட்டிப் பொன்னாடை அணிவித்தது பெருமைப் படும்படியான நிகழ்ச்சி யென எனக்கு தோணியது........அது நெகிழ்ச்சியானதும் கூட........

 நான் இதனை முடிக்குமுன் சில வரிகள்...........................

 நானும் அவரது மாணவனே.......

S.S.L.C படித்த அந்த சமயத்தில்,
1962-63 ல் நான், கிருஷ்ணன்,சிறமடம் சங்கரன்.......கோலப்பபிள்ளை சாரிடம் Tution
படித்தோம்.  Tution முடிந்ததும் அரசியல் பேசுவார்.அவருக்கு ராஜாஜியைப் பிடிக்கும்.....அதனால் சுதந்திரா கட்சியையும் பிடிக்கும்...... நீல வண்ணக் கொடி...அதன் நடுவில் ஒற்றை நட்சத்திரம்.....ராஜாஜி எழுதும் Swarajya  பத்திரிகையை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்.... நேருவின் கொள்கைகளை ஆதரித்துப் பேசமாட்டார்....நாங்கள் நேர் மாறாக ஆதரித்துப் பேசுவோம்.... பொறுமையாகக் கேட்டு அமைதியாக எங்களுக்கு பதில் சொல்வார்......கோபப்படாமல் அரசியல் பேசுவார்.....

நான் அவரிடம் கற்ற பாடம் ஆங்கிலம்மட்டுமல்ல..... அரசியலும்தான்......

நாகரீகமாகப் பேசவும் , பேசாமல் இருக்கவும் கற்றதே அவரிடம் தான்.....
Posted by Picasa

கேட்காமலேயே கொடுத்த முன்னாள் மாணவர் பொறியாளர் ஆறுமுகம் பிள்ளை

நான் என்னை செதுக்கிய சிற்பிகளை என்றுமே என் மனதில் வைத்துப் போற்றுவேன்......

சிற்பக் கூடங்களும் கோவில் வடிவங்களாகவே இருக்கும் என் இதயத்தில்......

சிற்பிகள் என் ஆசிரியர்கள்.....
.
சிற்பக்கூடங்கள் நான் பயின்ற பள்ளிக்கூடங்கள்......

அ....ஆ.... படிக்க  பள்ளிக்கு அனுப்பினார்கள் அறியாத வயது......

A....B....C....  இந்த வடிவம் எழுத்தாய்  தெரியும் போது   பதினோரு வயது 

எந்தச் சண்டித்தனமும் செய்யாமல் என்னோடு மிகவும் நட்பாய் இருந்த ஒரே பாடம்  கணக்குப் பாடம்.  கணக்குப் பாடத்தோடு  உறவு நெருங்கும் போது என் வயது 15....

 எனக்குப் பிடித்த பாடம் கணக்கு.....பிடித்த பள்ளி பூதப்பாண்டி பள்ளி.....எனை அணைத்து ஆதரித்த அந்த பள்ளிக்கு.... இல்லையில்லை .....கோவிலுக்கு எத்தனையோ முறை போனதுண்டு......

ஆனால் இப்போ போனபோது என்னுள்ளம் என்னைக் கேட்காமலேயே துள்ளி விளையாடியது....

ஆனந்தத்தால் நான் விட்ட மூச்சுக் காற்று கூடஅந்த இடத்தில் நறுமணமாய்... வசந்தமாய்........வீசியது.......

இதுவும் இனபம் தருகிறதே......புதிய அனுபவம் தான்......

எந்த வகுப்பில் கணிதம் படித்தேனோ  அதே வகுப்பறையில் .........

 இப்போ என் வயது 65.

சுவர்களை......தரையை.....பெஞ்சுகளை.....நான் அன்று இருந்த பெஞ்சுதானோ......

Board-ல் என்னவோ வெள்ளை எழுத்துக்களும் படமும் .....

என்னவென்று அருகே  சென்று பார்த்தால்........ ஆச்சரியம் எனக்கு......எனக்கு மட்டுமே அது அதிசயம்......... ஆம்.... எனக்கு மட்டுதான்.

Board-ல் பாத்தது நான் படித்த கணித பாடம்.....Geometry....என் கரம் பிடித்து என்னை வாழ வைத்த பாடம் .... அதன் பிள்ளையல்லவா நான்..... என்னை அன்போடு வரவேற்கிறது

அந்த வகுப்பறைக்கு இப்போ கொஞ்சம் மெருகு கூடி இருக்கிறதே........

காரணம்.....?

கரும்பலகை இருந்த இடத்தில் கரும்பலகை  இல்லை....

அந்த இடத்தில் இருந்தது ஒரு Green colour board...

பசுமையாக காட்சி தந்த Board தான் அந்தப் பொலிவுக்குக் காரணம் .......

உற்றுப் பார்த்தேன்... .......பச்சைப் பலகையா ...... இல்லை .....அது Green Ceramic Board .

ஆச்சரியம் என் கண்களில் நர்த்தனம் ஆடிக் கொண்டே இருந்தது.

  Board  இருந்த சுவரில் கையால் எழுதப்பட்ட ‘அறம் நம்மைக் காக்கும் ’என்ற

வரி மிகவும் பொருத்தமாய் இருக்கிறதே.......

 Board-ல் "Donated by Er.P.Arumugam Pillai.Chairman,S.T.Hindu College,Nagercoil".......

சொல்லவே இல்லையே.....எப்பங்கொடுத்தாங்க .......

வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியாது....... எங்கள் கல்லூரித் தலைவர் கொடுத்தது எஙகளுக்கே  தெரியாது......

அறம் செய்தவர் கடுக்கரையில் இருந்து தினமும் காளை மாட்டு ‘ வில் வண்டி’யில் வந்து படித்த முன்னாள் மாணவர். தான்  படித்த பள்ளி அல்லவா. பூதப்பாண்டியில் போய் பார்க்கிறார் தனது 75-வது வயதில்..... ப்ளஸ் 2  வகுப்பறைகள் அனைத்துக்கும் பசுமை போர்டு கொடுக்க முடிவெடுக்கிறார். பெரியவர்.......கடனே என்று கொடுக்காமல் ஆத்மார்த்தமாக உள்ளன்போடு செய்து முடிக்கிறார்.......

செயல் வடிவம் ஆனபின் தான் மற்றவர்களுக்கே தெரிய வந்தது......

கோவிலுக்கு கொடுப்பது  என்பது வேறு...கடவுள் தருவார். காப்பாற்றுவார்.... எதிர் பார்ப்பு இருக்கும்....

கல்விக்கூடங்களுக்கு கொடுப்பதென்பது வேறு......எந்த எதிர்பார்ப்புமின்றி செய்கிற ஒன்றல்லவா. இது தானே அறம்... அதுதான் காக்கும்.

 கேட்காமலேயே கொடுப்பவன்....... அவன் யார் ?

அவன் தான் இறைவன்......!
Posted by Picasa

Tuesday, March 13, 2012

கதை கேளு... கதைகேளு... குமரிக்கு ரயில் வந்த கதை கேளு


  நானும் எனது சிறிய தந்தையாரும் திருநெல்வேலியில் இருந்து ரயிலில் சென்னைக்கு போய்க்கொண்டிருந்தோம். நாகர்கோவிலில் இருந்து பயோனியர் பஸ்ஸில் திருநெல்வேலிக்கு வந்தோம். அது சென்னை செல்லும் ரயில் புறப்படும் சமயத்துக்கு ஒரு மணிக்கூருக்கு முன்னால் திருநெல்வேலிக்கு வரும். அந்தக்காலத்தில் அந்த பஸ்தான் Express. இரண்டரை மணிக்கூராகும் நெல்லை வந்து சேர.அரசு பஸ் எதுவும் திருநெல்வேலிக்கு கிடையாத காலம் அது. ஸ்ரீகணபதி பஸ்,TMBS  பஸ் என எல்லாமே தனியார் பஸ்தான்.ஆம் நான் போனது 1964-ல்.....


கணடக்டர் டிக்கட் கொடுத்ததும் ,அவர் விற்ற டிக்கட்டின் நம்பரையும் அதன் மதிப்பான ருபாயையும் எவ்வளவு எனச் சொல்ல ட்ரைவர் தான் ஒரு (Trip sheet)தாளில் எழுதுவார். இப்படி ஒவ்வொரு தடவை எழுதும் போதும் வண்டி நிற்பதால் ஊர் போய் சேர்வதற்கு கால நேரம் மிக அதிகமாகும்.


 நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கோ அல்லது வேறு எங்காவது போக ரயிலில் பயணச் சீட்டு எடுக்கவேண்டுமெனில் பயொனியர் Out Agency--ல் எடுக்கணும். அப்படி சீட்டு எடுத்தவர்கள் நாகர்கோவிலில் இருந்து பயோனியர் பஸ்சில் திருநெல்வேலி வரை செல்லலாம்....


மன்னராட்சியின் கீழ் தென் திருவிதாங்கூர் (Kanniyakumari District) இருந்ததால் நாகர்கோவிலுக்கு ரயில் இல்லை. சுதந்திரம் கிடைத்து 32ஆண்டுகள் ஆன பின் தான் ரயில் போகும் சத்தத்தை குமரி மக்களால் கேட்க முடிந்தது.........ஏன் ஏற்பட்டது இந்தக் காலதாமதம்.


ரயில் எப்படி, யாரால் வந்தது? ஒரு தனிமனிதன் முயற்சியினால் மட்டுமே ரயிலை குமரி கண்டது...........யார் அந்த மனிதன்?


வடசேரி தழுவிய மகாதேவர் கிராமத்தில் வெங்கடபதி ஐயரின் தத்துப் புத்திரன் ராம சுப்பையர் தான் அந்த சாதனை மனிதர்.


அவர் தான் T.V.R  என்றழைக்கப்படும்  T.V.ராமசுப்பைய்யர்,


 T.V.ராமசுப்பைய்யர்,  “ பாரதம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை என்று பேசுகிறோம்.....காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் வர முடியுமா?குமரிக்கு வருபவன் திருவனந்தபுரத்துக்கும் ரயிலில் போகவேண்டும்.......... நெல்லை-குமரி-திருவனந்தபுரம் ரயில் பாதை அமைக்க வேண்டும்...” என நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினார்.


அவரது தலைமையில் ஓர் அமைப்பு 1950-ல் உருவானது.  அந்த அமைப்புக்கு செயலாளராக தோவாளைத் தியாகி சிவதாணு பணியாற்றினார்.
1951-ல் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. செலவு அதிகம் ஆகும் என்பதால் நிதி திரட்ட எண்ணி ரெசீது புக் அச்சடிக்கப்பட்டது...ஆனால் T.V.R அவர்கள் ‘ரயில் வரும் வரை என்ன செலவானாலும் செலவுக்கு நானே தருகிறேன்’ என்று சொல்லி விட்டார்.


டெல்லிக்கும்,சென்னைக்கும் பல சமயங்களில் தன்னுடன் செயலாளரையும் அழைத்துச் சென்று அமைச்சர்கள், தலைவர்கள் என பலரை சந்தித்து குமரிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டினார் T.V.R.


ஆண்டுகள் தான் உருண்டோடினதே தவிர ரயில் வந்த பாடில்லை......ஏனிந்த நிலை. தமிழ் நாடும் கேரளாவும் கன்னியாகுமரி பற்றி கவலைப் படவில்லை.தமிழ் நாட்டின் பிரதான கட்சிக்கு குமரிக்கு ரயில்வரவேண்டும் என்ற அக்கறை இல்லாததும் மிக முக்கியமான காரணம். இங்குள்ள பஸ் முதலாளிகள் மறைமுகமாக ரயில் வருவதை தடுத்து வந்தனர்.


T.T.K ,T.V.R  இருவரும் முதலமைச்சர் காமராஜர் வீட்டில் சந்தித்து ரயில் வருவதற்கான ஒரு memorandum -த்தை தயாராக்கினர். அதன் பின் சற்று விரைவாக அனைத்து நடவடிக்கையும் நடந்து முடிந்தன. 1970 T.V.R -ன் வேண்டுகோள் ஏற்கப்பட்டது.


1972-ல் குமரி முனையில் ரயில்வே ஸ்டேசனுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் குமரி அம்மன் கோவில் பக்கம் ரயில் நிலையம் அமைவதாக இருந்தது. கல் நாட்டவந்தவருக்கு அந்த இடம் திருப்தியாக இல்லை.காரணம் கோயிலின் புனிதத்தன்மைக்கு பங்கம் வரும்.....முக்கடல் சங்கமிக்கும் அழகும் கெடும் என உணர்ந்து தனியாகவே சென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார்......அவர் அன்று அப்படி தேர்ந்தெடுத்த இடத்தில் தான் இன்று கன்னியாகுமரி ரயில் நிலையம்
அமைந்திருக்கிறது.
அன்று கல் நாட்டியவர் அன்னை இந்திராகாந்தி...... அன்றைய பிரதம மந்திரி.....


T.V.R -ன் கனவு நனவாகிறது.....1979 தமிழ் புத்தாண்டு தினம் April 15 குமரியில் இருந்து முதல் ரயில் செல்கிறது கேரளத் தலைநகரை நோக்கி.....தொடங்கி வைத்தவர் பிரதமர் மொரார்ஜி தேசாய்.......


அவரது முயற்சி பற்றி குமரி மாவட்ட பெரியவர்கள் சொன்னது:-



இந்த இரயில் பாதை அமைப்பு முயற்சியிலும், சாதனையிலும், வெற்றியிலும் வேறு யாரும் பங்கு போட முடியாது. அனைத்துமே டி.வி.ஆரையே சாரும்’ என்று, மனம் திறந்து பாரட்டினார்கள், பாராளுமன்ற முதல் உறுப்பினர்களான, சிவன் பிள்ளையும், ரசாக்கும். 


‘டி.வி.ஆர்., மட்டும் முயற்சி எடுக்கவில்லையானால் கன்னியாகுமரி மாவட்டம் ரயில் பாதையையே கண்டிருக்கப் போவதில்லை’ என்றார் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர், டி.எஸ்.ராமசாமி.


 இப்பாதை அமைப்புக் குழுவின் செயலாளராகப் பணியாற்றிய சிவதாணுவோ, ‘எவ்வளவு பெரும் செலவு . . . விடாமுயற்சி . . . சென்னைக்கும், டில்லிக்கும் எத்தனை முறை படையெடுப்பு . . . பத்திரிகையில் விடாமல் எழுதியது, கொஞ்சமா . . . நாங்கள் எல்லாம் சோர்ந்துவிட்டோம். டி.வி.ஆர்., ஒருவரே சோர்வடையாமல் கடைசி வரை போராடி வெற்றியைக் கண்ட சாதனையாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 தமது வாழ்நாளிலேயே இந்தப் பாதை அமைக்கப்பட்டதையும், அதுவும் அகல இரயில் பாதையாக உருவானதையும் காணும் பாக்கியம் பெற்றவர் டி.வி.ஆர்.,
யார் இந்த T.V.R ?
அவர் தான் தினமலர் பத்திரிகையின் நிறுவனர்..

Saturday, March 10, 2012

திருவண்ணாமலை விசிறி சாமியார்

ஜனுவரி மாதம் திருவண்ணாமலைக்கு போய் வந்ததை என் மைத்துனன்

 ராஜேந்திரனிடம் கடுக்கரையில் அவன் வீட்டில் வைத்து சொன்னேன்.

 ‘விசிறி சாமியாரின் ஆஸ்ரமத்துக்குப் போனாயா ?’ என கேட்டான்

 ‘இந்தத் தடவை போகவில்லை’ என்றேன்

‘அவர் உயிரோடு இருக்கும் போது அவர பாத்திருக்கியா.....’ எனக் கேட்டான்.

 ‘இல்லையே’ என்றேன்....

‘நான் பாத்திருக்கேன்.....அவரிடம் பேசியும் இருக்கேன்...முருகதாஸுடனும் டாக்டர் கேசவனுடனும் அவர் ஆஸ்ரமத்துக்குப் போனேன். முருகதாஸ உனக்குத் தெரியும்லா......யோகிராம் சுரத் குமாரின் பக்தர்னு.....’என்றான்.

‘ நாங்கள் அவரது முன்னால் உட்கார்ந்து அவரது பேச்சினை முழுக்கவனத்துடன்   கேட்டுக் கொண்டிருந்தோம்........சாமியைக் காண அப்போது ஒருவர் ஆஸ்ரமத்தினுள் நடந்து வந்து கொண்டிருந்தார்...... அவர் பிரபல பின்னணிப் பாடகர்......அவரைக் கண்டு நாங்கள் எழுந்து நிற்க முயலும்போது சாமி எங்களை இருக்கும் படி சைகை செய்தார்.

வந்தவரும் எங்கள் அருகிலே இருந்தார்..... சாமி அவரிடம், “ காலில் வலி ஏதாவது இருக்கா...... நடக்க சிரமப்படுவது போல் தெரிகிறதே......” என்றார்.

பாடகர்,” ஆமாம் ஸ்வாமி.... மூட்டில் கொஞ்சம் வீக்கம் உண்டு........”

விசிறி சாமியார் தன் பக்கத்தில் இருந்த எண்ணெயை இடது கையால் எடுத்து  வலது கையில் சிறிதளவு ஊற்றி பின் இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்த்து
 பாடகரது வலி இருந்த காலில் சாமியே தடவினார்.....கொஞ்ச நேரம் தடவி விட்டு அவரை எழுந்து நடக்கச் சொன்னார்.... எழுந்து நடந்தவர் சாமியைப் பார்த்தார்.....வலி போயே போச்சு என்று உற்சாகத்தில் கூறினார்.....

எண்ணெயை தரும்படி பாடகர் கேட்கவே சாமி, “ அப்பம் எண்ணெய்னால் தான் வலி போச்சா....”  என கேட்டார்....

‘மன்னிக்கணும் சாமி உங்க கை பட்டதனால் தான் வலி போச்சு‘ என்றார் பாடகர்.

பாடகர் சாமியிடம், “ நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு ஒரு தடவையாவது வரணும்........” அழைத்தார்.

 அவர் சொன்னதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்த சாமியார் ,“ Will thiruvannamalai mountain ever move ?" சொன்னார்.....சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.....

இதையெல்லாம் சொன்ன என் மைத்துனன் வேறொரு அனுபவத்தையும் சொன்னான்......

சாமியார் ஐந்து மாதுளைப் பழத்தினைக் கொடுத்து ஒரு பக்தரிடம் கொடுக்கச்சொல்லி ராஜேந்திரனிடம் கொடுத்தார்.

சாமி சொன்னது போலவே வெளியூரில் இருந்த அந்த பக்தரை சந்தித்து பழத்தினைக் கொடுத்தான்.......வாங்கியவர் மனம் உருகவே அவர் கண்ணிலும்
கண்ணீர்.......சாமிக்கு எப்படித் தெரியும் எனக்கு மாதுளை பிடிக்கும்னு......கடவுளல்லவா இது கூடவா அவருக்குத் தெரியாமல் இருக்கும்!

இது போல் பல அனுபவங்களை ராஜெந்திரன் என்னிடம் கூறினார்.

YOGI RAM SURATH KUMAR   JAYA GURU RAYA.

Thursday, March 8, 2012

பேராசிரியர் எல்சி சாரின் அன்பு மாணவர் தே.வேலப்பன்......

  பேராசிரியர் L.C.தாணு சாரின் 36-ஆவது இந்துக் கல்லூரி ஆண்டு விழா 1987-88
அறிக்கையைப் படித்தேன்.அதுதான் அவரது இறுதி அறிக்கையும் கூட. அந்த ஆண்டில் ஓய்வு பெறுகிறார்.

அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் அவர் தனது
முதல் வகுப்பு அனுபவத்தினை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“ I recollect the first hour of the very first day when I stepped on to the platform and began my experiment with teaching; Dr.D.Velappan was a pet student of mine belonging to the first batch."................
மேலும் பலரது பெயர்களைக் குறிப்பிட்டு நன்றிதனை பகிர்ந்த போது தனது முதல் மாணவருக்கும் இவ்வாறு நன்றி சொல்கிறார்......“ It is my pleasant duty to offer a thousand and one thanks to Dr.D.Velappan,our unassuming Vice-Principal .His identification with the instituion is so absolute that its prosperity has become the breath of his nostrils. With such a "magnificiant obsession",he has stood by me through thick and thin.as firm as rock. Indeed he is a self-effacing rare specimen of humanity.

அந்த ஆண்டுமலரின் Editor வேலப்பன் சார் தனது Editorial--ல்

" For others  one more year has silently slipped away .But for the STHC  and its esteemmed Principal L.C.Thanu,not a year but an era has slipped away. Principal Thanu has been with the STHC since its inspection (1952) and he retires this year (1988). The campus may miss very much that stately figure,stentorian voice,spotless courtesy,sportly demeanour,spontaneous generosity and sempiternal affection.His association with the STHC is so intimate and total that he has been the air,the aura of STHC.
yet (and. so) parting is always painful." Editor.....  மொத்த எடிட்டோரியலே இவ்வளவுதான்.

1986-87 ஆண்டு மலரில் இந்துக்கல்லூரி இதழியல் மாணவர்களுக்கு எல்சிசார் அளித்த பேட்டியை வெளியிட்டிருந்தார்கள்.....

 ஒரு கேள்விக்கு எல்சி சார் சொன்ன பதில்:-

” ‘நல்லாசிரியர் விருதை’ எனககுக் கிடைத்த பெருமையாக நான் எண்ணவில்லை. நான் பணியாற்றும் இந்துக் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட பெருமையாகவே கருதுகிறேன்...........”

இன்னொரு கேள்விக்கு ....

“கல்லூரி தொடங்கிய முதல் நாள் முதல் வகுப்பில் என் ஆசிரியப்பணி தொடங்கியது. கல்லூரி ஆரம்பித்த அன்று காலை 10-11 முதல் வகுப்பு நடத்திய  பெருமை எனக்குண்டு. புதிய கல்லூரியில் புதிய ஆசிரியராக முதல் நாள் முதல் வகுப்புக்குச்சென்ற நிகழ்ச்சி இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. கல்லூரியே உற்சாகச் சூழலில் விழாக்கோலத்தில் இருந்தது. மாணவர்கள் -ஆசிரியர்கள்- நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என கல்லூரி முழுவதும் வெற்றிக் களிப்பில் இருந்தது.................முதல் நாள் முதல் வகுப்பு நடத்தினேன் என்றதும் ஞாபகத்திற்கு வருகிறது. என்னுடைய முதல் மாணவர் யார் தெரியுமா? இப்போதைய நம் உதவி முதல்வர் டாக்டர் தே.வேலப்பன்
என்னுடைய முதல் மாணவர்.”

1957-58 கல்வி ஆண்டின் ஆண்டுமலரில் ,கல்லூரியில் புதியதாக ஆசிரியப்பணிக்கு சேர்ந்தவர்கள் பெயர்களின் பட்டியலை வாசிக்கிறார் கல்லூரி முதல்வர் V. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள்.அதில் கடைசிப் பெயர் D.Velappan.,Tutor in Economics.

 " The last mentioned ,I may say with pride is an old boy of this College."  என தன் உரையில்
பெருமிதத்தோடு குறிப்பிட்டார் அந்த முதல்வர்.

1957-1958 ஆண்டுமலரில் அவர் எழுதிய கட்டுரை Delhi vs Madras...  Recently Sri.C.Desmukah revealed the fact that Madras is one of the poor states of India.............The total revenue of the state in the year 1953-54 was Rs.64.9 crores.........இதுதான் அந்த கட்டுரையின் ஆரம்பவரிகள்.....

1957-ல் தான் பயின்ற இந்துக்கல்லுரியிலேயே ஆசிரியப்பணியை ஆரம்பிக்கிறார் அந்த மாணவர்.......அதுவும் அவரது முதல் பேராசிரியர் போதித்த பொருளாதார ஆசிரியராக.... அத்துறைத்தலைவராக, துணைமுதல்வராக, முதல்வராக..... எல்லாமே பேராசிரியர் பயணித்த பாதையிலேயே பயணித்து ஒய்வுக்குப்பின் அவரைப்போலவே இவரும் நிர்வாகக் குழுவிலும் இயக்குனராக இருந்தார்.

அவர்தான் இரவிபுதூர் தேனாவேலப்பன் என்றழைக்கப்படும் DV சார்.....

கல்லூரி Emblem-தனை விவரித்து இயற்றிய DV சாரின் கவித்துவமான வரிகள்
“கல்லூரி வாழ்த்து" என்னும் தலைப்பில் கல்லூரி Hand Book--ல் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

1961-ம் ஆண்டு கடுக்கரை கிராமத்தில் The Census of India survey  நடத்தியது. அந்த   book "Volume IX, Madras,Part IV , Village Survey Monographs,13.Kadukkara.......... 12 வருடங்களுக்குப் பின் 1973-ல் கடுக்கரை ஊரில் ஒரு  Resurvey எடுக்கப்பட்டது. இந்த 12 வருடங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா
என்று பார்ப்பதற்காக வேலப்பன் சார் தலைமையில் ஒரு குழு கடுக்கரைக்கு வந்து ஊர்மக்கள் பலரை சந்தித்து கேள்விகள் கேட்டு பதிவு செய்தனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில் Planning Forum, S.T.Hindu College,  Nagercoil  வெளியிட்ட நூல் தான் ,“ A VILLAGE IN TWELVE YEARS, A Socio Economic Resurvey of KADUKKARAI Village- 1973. D.V sir is the President of this forum.

தன்னுடைய பேராசிரியர் எழுதிய முக்கியமான பத்திரிகைகளில் பிரசுரமான கடிதங்களை தொகுத்து 'Views on News' என்ற நூலை வெளியிட்டார்.....

 இந்துக்கல்லூரி Economics துறையில் Hindecon என்கிறபெயரில் அமைப்பினை தனது சொந்தப் பணத்தினை நிதி ஆதாரமாக வைத்து ஆரம்பித்தார். அது இன்று ஆல்போல் தழைத்து சாதனைகள் செய்து கொண்டிருக்கிறது....


குமுதம் பத்திரிகையில் ஏன் வேண்டாம் இந்தத் திராவிடம் ? கட்டுரை எழுதி முதல் பரிசு வாங்கிய இவர் பல பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார்..

       அ.கா.பெருமாள் ,N.T.கிருஷ்ணன் எழுதிய நூல்களில் வேலப்பன் சாரின் அணிந்துரை அல்லது அவர் பெயர் ஆசிரியரின் முகவுரையிலாவது இருக்கும்.

அவரது அன்னையின் பேரால் இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்கிவருகிறார்...

அவர் வாழும் ஊரில் உள்ள திருமலையில் வீற்றிருக்கும் முருகன் கோவில் பக்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து பல நல்ல காரியங்களை செய்திருக்கிறார்.

Dr.D.Velappan தனது ஒரே ஆண்டறிக்கையில் இறுதியாக விடைபெறுவதை,             “ It is true that in the mortal world  with time ,normally,the mother leaves the son first, but here ,the son has to leave the mother,after all I am a mortal".......இப்படி கூறுகிறார்....

என்னிடம் ஒருநாள்,“ பொன்னப்பா...... இங்க கொஞ்சம் வந்துட்டுப் போப்போ.....”
 அவர் அருகே போனதும் ,“ நீ ஒரு Endowment -க்கு 1000/- கொடுத்து உனக்கு பிடித்த யாருடைய பெயரிலாவது maths மாணவனுக்கு பரிசு கொடுக்கலாமே.....” என்றார்.

நானும் சார் சொன்னது மாதிரியே செய்தேன்.கணித பாடத்தில் நான் கொடுத்ததையும் சேர்த்து 5 prize களையும் கணினித் துறைக்கு 1ம் நான் தான் முயற்சி செய்து endowment  ஆரம்பித்தேன்.

இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் Dr. D.VELAPPAN.........

Posted by Picasa

Monday, March 5, 2012

நான் கண்ட எனதன்பு பேராசிரியர் எல்சிசார்


11-7-1952-ல் ஒரு புதிய கல்லூரி உதயமாகி, 12-7-1952-ல் முதல் வகுப்பு ஆரம்பமானது. அந்நாளில் கல்லூரி முழுவதுமே விழாக் கோலத்தில் இருந்தது. நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் திரு.இலங்கத்து வேலாயுதம்பிள்ளை ,வடிவீஸ்வரம் செல்லையாபிள்ளைப் பாட்டா(திரு பூதலிங்கம் பிள்ளை),செட்டித்தெரு ராசா அண்ணாச்சி எல்லோர் முகத்திலும் வெற்றிப் புன்னகை. மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோர் மனத்திலும் ஒரே குதூகலம்.
காலை மணி 10முதல்11 மணி வரை ஒருவர் Intermediate Class நடத்துகிறார். அவர் தான் தாழக்குடி L.C.தாணு. ஆம்.....அவர் தான் முதல் ஆசிரியர்.... வெள்ளி விழா முதல்வரும் அவரே.

 தனது 36 வருட கல்லூரிப் பணியில் 17 வருடம் முதல்வராய் அதுவும் வெற்றிகரமாக கல்லூரிப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
நான் கண்ட பேராசிரியரைப் பற்றிய என் நினைவுகளில் இருந்து சில துளிகள்.......
நான் 1963-ல் PUC படிக்கும் போது ஒரு நாள் நான் அவரை சந்தித்த போது, அவர் என்னிடம்,” கடுக்கரைக்காரன் தானே நீ…..நல்லாபடிக்கணும்….ம்….ம்….
வாலையெல்லாம் சுருட்டி வச்சுக்கணும்…..இங்கேயெல்லாம் காணிக்கக்கூடாது…… ஒட்ட நறுக்கீருவோம்”.
அவருடைய ஆஜானுபாவானத் தோற்றமே பயமுறுத்தும்………அவரது இந்தப் பேச்சு என்னை கூடுதலாகவே பயமுறுத்திற்று….. “யார் இவர்…. என்னைப் பார்த்ததும் ஏன் அப்படிச் சொல்லணும்…….நம்ம க்ளாஸுக்கு தான் இவர் வர மாட்டாரே……”
1962 முதல் முதல்வராய் இருந்த V.M.ஸ்ரீதரமேனோன் நிர்வாகப் பிரச்சினையால் 1969-ல் இக்கல்லூரியில் இருந்து வெளியே போன சமயம் L.C சார் தான் முதல்வராக வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போனது. 1970 ஆரம்பத்தில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டு 1971-ல் அவர் முதல்வராகிறார்.அப்படி ஒரு நிர்வாக மாற்றம் ஏற்படவில்லையெனில் அவர் முதல்வராவதும் தள்ளிப்போயிருக்கும்.அந்த நிர்வாகக் குழுவில் இருந்த என் தந்தை தான் முதல்வராவதற்கு முக்கிய காரணம்.
1973-ல் எனக்கு இந்துக்கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் வேலைக்கான ஆர்டர் தரவில்லை. ஒரு மாதம் கழிந்தபின் என்னை அழைத்து முதல்வர் ஆர்டரைத் தந்தார். தந்து விட்டு அவர் சொன்னது:- “ நீ எங்களை எல்லாம் நல்ல ஏமாத்திட்டியே ………நீ shortல்லா…. நீ எப்படி சமாளிக்கப் போறெ…..பயந்து போய் உன்னால முடியாதுன்னு போயிடுவே….
எப்படி பாடம் நடத்தப் போகிறாய்……உன்னால முடியாது நான் உட்பட நினைச்சேன்………கடுக்கரைக்காரன்லா……… நல்ல பேர் உனக்கு…….ஒரு மாசத்திலேயே  Maths  பையன்கள் உன்னை மிகவும் பெரிசாய் சொல்றாங்க…. நீ கண்டிப்பாகவும் இருக்கிறாய்…….Keep it up…” என்று சொல்லி Shake hand தந்து வாழ்த்தினார்.
அடுத்த வருடமே PUC ‘F’ batch-க்கு (Maths,Economics, commerce ) group tutor-ஆக என்னை நியமித்தார்….  இப்படி என்னை நியமித்தது அந்த சமயத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாகவே இருந்தது. நான் தந்த பொறுப்பினை நிறைவாகவே செய்தேன்……..
Cent present pass ( IB.Sc Maths ) க்கு பரிசு தந்து ஊக்குவித்தார் முதல்வர்…..
அவருடைய கடைசி இருவருடம் கல்லூரி விழாவில் கொடுக்கும் Certificate களை என்னைத்தான் எழுதச் சொன்னார்.
Staff Assoiciation Secretary ஆக நான் இருந்த போது  staff council கூட்டத்தில் கலந்து கொண்டு ,” பணியாளர்கள் காலையில் தாமதமாக வருபவர்கள் Leave தான் எடுக்க வேண்டும் என்பதனை மாற்றி late register போட வேண்டும் என்று சொன்னதை வரவேற்று நடைமுறைப்படுத்தினார்.
1979-ல் அவர் தலைமையில் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தோம்…
25-12-1981-ல் மறைந்த எனது தந்தையாரின் மறைவை ஒட்டி மறுநாள் தான் வரமுடிந்த LC சார் தனது கண்ணீரை அஞ்சலியாக செலுத்தியதைக் கண்டேன்.
 நான் ஆங்கிலப் பத்திரிகைகளில் Letters to the Editor பகுதியில் எழுதும் கடிதங்களைப் படித்ததும் என்னைக் கண்டு அது பற்றிப் பேசி என்னை மேலும் எழுத தூண்டியவர் அவர் தான். எழுத வேண்டும் என்ற என் ஆசைக்குக் காரணமே அவர் எழுதியதைப் பாத்துதான்........

1987-ல் நல்லாசிரியர் விருது பெற்ற LC சார், 1988-ல் ஓய்வு பெற்று சென்றார்……. என் மனதில் என்றுமே உயர்வாய் நிற்கிறார்.

Saturday, March 3, 2012

என்றோ ஒரு நாள் நடந்த சம்பவம் இன்றென் நினைவில்

Posted by Picasa

நான் இந்துக்கல்லூரியைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்ணத்தில் என்னிடம் கிடைத்த ஆண்டுமலரைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1976-77-ம் ஆண்டு மலரின் ஒரு பக்கம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
ஆசிரியர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்ட விவரம் ஒன்றினைக் கண்டேன்.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.35 வருடங்களுக்குப் பின் பார்த்து படித்ததும் நான் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை....பரிசு வாங்கின நாளில் கூட இந்த அளவு சந்தோசப்பட்டேனா....... தெரியவில்லை.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் வந்து போகிறது.

என் நினைவலையில் வந்த ஒன்று........ April மாதம் கல்லூரிக்கு விடுமுறை....ஆனால் பையன்களுக்கு Examination நேரம். முதல் ஆண்டு B.Sc கணித மாணவர்களை Extra class எடுப்பதாகச் சொல்லி விடுமுறை நாளில் வரச் சொல்லி இருந்தேன்.அது தான் கடைசி class.
அதே நாளில் துறைத்தலைவரும் அந்த class மாணவர்களை அவரது extra classs-க்கு வரச் சொல்லவே பையன்கள் நான் ஏற்கனவே class வைத்திருப்பதாக சொன்னதும் ..........அவர் சற்று யோசித்து,” உங்களுக்கு வேற நாளும் இல்ல. அதனால நீங்க மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்திருங்க” என்று சொல்லி விட்டார்.
துறைத்தலைவர் எனக்கு நெருங்கிய உறவினர். அவர் என்னிடம்,” நீ class எல்லாம் முடிச்சாச்சுன்னுல்லா சொன்ன......அப்பறம் எதுக்கு Extra claas........"

நான் ,” இரண்டு வருட பழைய question paper-ல் உள்ள கணக்குகளை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கணும்.அதனால தான் வரசொன்னேன்”

மாலையில் கடுக்கரைக்குப் போனேன். நான் அப்போது ஊரில் இருந்து தான் கல்லூரிக்கு வருவேன்.

வீடு போய் சேர்ந்ததும்  மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த எனது அத்தை அதாவது என் அப்பாவின் தங்கையின் வீட்டுக்குப் அவங்கள பார்க்கப் போனேன்...........மிகவும்  serious condition..... நான் அங்கேயே இருந்தேன். 

எனது அத்தை...........அவளது கடைசி மூச்சு நிற்கிறது.........

 வெகுநேரம் நின்றுவிட்டு  எங்க வீட்டுக்கு போனேன்.

அப்பா வீட்டில் தூங்காமல் இருந்தார்.

நான், ”அப்பா!..... நீங்க ஏன் கீழத்தெருவுக்கு வரல்ல”

அப்பா,” என்னத்தப் போய் பாக்க ......தம்பி அய்யாவு போயிற்றான்.......இப்பம் இவளும் போயிற்றா ........ என்னோட வயசு குறஞ்சவள்ளா......நான் கல்லு மாரி இருக்கேன்......” சொன்ன அப்பாவின் கண்ணில் கண்ணீர் வடிகிறது.அது என் நெஞ்சையும் என்னவொ செய்வது போல் இருந்தது .

அப்பாவிடம் நாளைக்கு கல்லூரிக்கு கண்டிப்பாக நான் போயே ஆக வெண்டும் என்ற நிலமையைச் சொன்னேன்.

“நீ போய் க்ளாசை எடுத்து முடிச்சுட்டு வந்துரு.......மத்தியானத்துக்குப் பிறகு தானே இறுதி சடங்கெல்லாம் இருக்கும்.......”

காலையில் கல்லூரிக்குப் போய் எனது வகுப்பை நான் நடத்திக் கொண்டிருந்தேன்.துறைத் தலைவர் வந்தார்.

அவர் என்னை வெளியே அழைத்து,” பொன்னப்பா!..... நீ  வரமாட்டன்னுல்லா நினைச்சேன்........வந்துற்றியே...... நீ எத்தனை மணி வர class எடுப்ப.......எனக்கு அரை மணிக்கூர் வேணும்.....”

நான் 12 மணி வரை பாடம் நடத்தி விட்டு கடுக்கரைக்குப் போனேன்.

நான் கல்லூரிக்குப் போனதும் வந்ததும் யாருக்குமே தெரியாது........என் அப்பாவைத் தவிர.........