Friday, July 27, 2012

தூத்துக்குடியில் நான் கண்ட எளிமையான ஆசிரமம்

அன்போடு அழைத்தால் அழைப்பை மதித்து போவது ஒரு நாகரீகமான செயல். எனக்கும் போவது பிடிக்கும். போகமுடியாத நிலை சில சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது . ஜூன் மாதம்  ஐந்தாம்  தேதி   7  ஆம்  தேதி  என இரண்டு நாட்கள். முதலாவது திருமண நிகழ்ச்சி. இரண்டாவது புதிதாய் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.

3-ஆம் தேதியே திருமண அழைப்பிதழ் தந்த பெனெடிக்ட் வீட்டுக்குப் போய் பரிசும் கொடுத்துவிட்டு 4-ஆம் தேதி நான் பெங்களூர் போனதில் சற்று மன ஆறுதல். 11-ஆம் தேதி ஊருக்கு வந்ததும் ஒருநாள் அடுத்து போகாத அந்த வீட்டுக்குப் போகணும் என முடிவெடுத்து நேற்றுதான் போக முடிந்தது.

26-07-12 காலையில் திருச்செந்தூர் முருகனையும் கும்பிட்டுவிட்டு நாங்கள் ஒரு மணியளவில் தூத்துக்குடி TAC நகருக்குப் போனோம். அங்கே அந்தவீட்டில் உள்ளவர்கள் எங்களை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார்கள் . மதிய உணவை அங்கே முடித்துவிட்டு இரண்டரை மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். தூத்துக்குடிக்குப் போய் ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் சிவ பிரதாப்சிங் அவர்கள் இருக்கும் இடம் நோக்கிப் பயணித்தோம்.

அந்த இடம் ஒரு ஆசிரமம். அனாதைகளும், ஆதரவற்ற பிள்ளைகளும், ஊனமுற்ற முதியோர் வாழும் ஒரு அன்பு இல்லம். விவேகானந்தர் சேவா இல்லம்.

பத்து நிமிடங்களில் அவரை சந்தித்தோம்.

முதல் முதலாக அப்பொழுதுதான் நான் அவரை பார்க்கிறேன்.

இவரா ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்.  ஒல்லியான பச்சை வேட்டி கட்டி மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்ட அவரை அதிசய
மனிதராகவே பார்த்து அவர் பின்னால் போனோம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள வீட்டுக்கு அழைத்துப் போனார். வெளியே ஒரு பெயர்ப்பலகை.அதில் அவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
நாங்கள் அவருடன் மாடிக்குப் போய் அவருடைய 94 வயதான தாயைப் பார்த்தோம். அவளுடைய காதுகள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை. நாம் சிரமப்பட்டு குரலை உயர்த்திப் பேச வேண்டும். கண்கள் அவளுக்கு விவேகானந்தரையும் ராமகிருஷ்ணரையும் சாரதாதேவியையும் படிக்க துணை செய்கின்றன.

நான் பிரதாப்சிங்குடன் பேச ஆரம்பித்தேன்.

இந்தவீட்டை அவர் விலைக்கு  வாங்கி வசதியைக் கூட்ட மாடி கட்டினார்.இப்போ இந்த வீட்டில் எட்டு பேர் இருக்கிறர்கள். இருவர் பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலும் படிக்கிறார்கள். பலர் இங்கு இருந்து வேலை செய்ய வெளியே போய்விட்டார்கள். இது போல் நான்கு வயதில் அனாதையாக வந்த ஒரு பெண் கல்வியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறாள். அவள் இந்த ஆஸ்ரமத்தையும் கவனித்துக் கொண்டு இங்கேயே இருக்கிறாள்.

இவர் வ.உ.சி கல்லூரியில் பணிபுரிந்தவர். என்.சி.சி Navy-யில் ஆபீசராக இருந்தவர். தனது 45 வயதில் கடற்கரையோரம் ஒரு வீடெடுத்து அனாதைப் பிள்ளகளை அங்கே தங்க வைத்து வளர்த்து வந்தார்.
 அந்த நகரில் ஒண்ணே கால் ஏக்கரில் ஊனமுற்றவர்களை பாதுகாக்க வீடுகள் கட்டி வைத்திருக்கிறார். அங்கேயும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , கைகால் ஊனமுடைய சிலர் இருக்கின்றனர். ருபாய் யாரிடமும் இவர் ஆசிரமத்திற்கென கேட்டதில்லை. தெரிந்தவர்கள் சிலர் உதவி செய்வதுமுண்டு.

பிரதாப்சிங்கின் ஊர் நாகர்கோவில். 94 வயதான தாய் ஒரு ஓய்வு பெற்ற அன்பான ஆசிரியை.அவளது பிள்ளைகளுக்கு  உணவை மட்டும் ஊட்டவில்லை. ஆன்மீகத்தை ,நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்தாள். பிரதாப்சிங்க் தான் படித்த ஆன்மீகத்தில் இருந்து கற்றதை கொஞ்சமாவது செயல் படுத்தணும் என்ற எண்ணத்தில் இதனை நடத்திக்கொண்டு வருகிறார்.

அவரது தாயார்,” எனக்கு இங்கே தூக்கமே வர மாட்டேங்கு. ” என்றாள்.

”இந்த வயதில் நீங்க எதுக்கு நாகர்கோவிலில் இருந்து இங்க வந்தீங்க.” என் மனைவி கேட்டாள்.

“என்னை இவன் கவனிக்கவில்லை... சரியாய்ப் பார்க்கவில்லை என்று ஊரில் யாரும் சொல்லிவிடக்கூடாதுல்லா....அதுக்காக நான் இங்க வந்திருக்கேன்....” என்றாள்.

பிரதாப் சிங்குக்கு முதியோர் அனைவருமே தாய் அல்லது தந்தை தானே.

இப்பொழுது பிரதாப்சிங்க் மிக மிக அழகாய்த் தோன்றினார். அவரது அக அழகு மிகவும் பிரகாசமாய் என் மனதுக்கு தெரிந்தது.

இவரால் இந்துக் கல்லூரியும் பெருமை பெறுகிறது. ஆம்.... இவர் அங்கே படித்தவர்...... M.A பயின்றவர்..... அவர் செயல்கள் அனைத்துமே பிரமிப்பை தந்து கொண்டிருந்தன.....

No comments:

Post a Comment