Saturday, September 8, 2012

தன்னந்தனியே தவிக்கும் புது அனுபவம்

"ஆருடம் யாரும் சொல்லவில்லை
ஆருயிர் தோழனாய் என் தந்தைக்கு பலம் சேர்த்த  நீவீரும் நொடிப்பொழுதில்
அவ்விடம் செல்வீர் என்று.
யாரிடம் சொல்லி அழ ?

இந்த பிரபஞ்சத்தின் அணுத் துகள்களில்  உங்கள்  ஆன்ம சுடர் பிரகாசிக்கும்
என்ற நம்பிக்கையுடன் தேற்றிக் கொள்ள முயல்கிறோம்
கண்கள் பனிக்க அந்த சுடரைத் தேடித் தவிக்கிறோம் .

வயது வித்தியாசமின்றி சின்னஞ்சிறுவனுடனும்
வாஞ்சையோடு  பேசுகிற போது நீவீர் வித்தியாச சாகரம்  ;எங்கள்
மனதுள் இனி வித்தியா சாகாவரம் ........"

மறைந்துவிட்ட எங்கள் குடும்ப நண்பர் பற்றிய
இந்த வரிகள் என் மகன் முருகனின் முகநூலில் பதிவு செய்யப்பட்ட வரிகள். 

இந்த வரிகள் மூலம் விசயம் அறிந்து இதனை எனக்குச் சொன்னது அவனது அண்ணன் என் மூத்த மகன். அவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு  தழு தழுத்த குரலில் அதிர்ச்சியுடன் என்னிடம் பேசும் போது இந்த வரிகளையும் சொல்ல முயல , அதனை அவனால் முழுவதுமாய் சொல்ல முடியாமல் திணறி குரல் உடைந்து சிதறியதை உணர்ந்து நானும் உடைந்து விட்டேன்.

என் மகள் தொலைபேசியில் சொன்னது: “ என்னை பிரசவ வலி வந்த போது வித்யாசாகர் மாமா அவரது காரில் ஹாஸ்பிட்டலுக்கு என்னை  அழைத்துக் கொண்டு போனது உனக்கு நினவில் இருக்கிறதா ?”

என் மகள் திருமண விழா மாலை விருந்தே அவர் முன்னின்று நடத்தியது தானே!

எனக்கு நணபனவன். அவனிடம் என் பிள்ளைகளுக்கு இத்தனை பாசமா !

என் பிள்ளைகள் அனைவராலுமே அன்புடன் மாமா என்றழைக்கப் பட்டவர். எனது அம்மாவின் காலைத்தொட்டு வணங்கியதும் அந்த நாளில் நான் அதிசயித்துப் போனதும் என் நினைவுக்கு வருகிறது. அவரது வேண்டுகோளுக்காக மட்டுமே அதனை  ஏற்று பாரதிராஜாவின் சினிமாப் படப்பிடிப்புக்காக ,என் வீட்டுக் களத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்த என அப்பா .... என் நினைவில் வந்து போகிறார்.  .

உதவி...... அதற்கு பொருத்தமான மனிதன் அவனே. இளகிய மனம் உண்டு. அப்படி ஒரு மனம் இனி இல்லை  என்பதால் இவரது இழப்பு பலரையும் அழவைக்கும்..... ஆம் இது உண்மை.

ராமச்சந்திரன் சார் அவரது ஆராய்ச்சிக்கு வழிகாட்டியவர்.... அழுது கொண்டே சாலை வழி போகிறார் மாணவர் மறைந்த செய்தி கேட்டு.....
என் வயது அறுபத்தைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள். அவருக்கு 64 வயது. நானும் அவரும் ஒரே கல்லூரியின் ஆசிரிய நண்பர்கள்.

அவர் கே. வித்யாசாகர். இயற்பியல் ஆசிரியராகத் தன் பணிதனைத் தொடங்கி  வரலாற்றுதுறையில் பணிதனை முடித்தவர்.

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ரோட்டரி மாவட்டச் செயலர்.என்.சி.சி மேஜர் . ஓய்வுக்குப் பின்னும் அவர் மேஜர்.

அவர்  புதனன்று இரவு ரோட்டரி கூட்டத்திற்கு போவதற்காக கல்லூரி நிர்வாக அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டு வழியே இறங்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்  என்னிடம் ,“ பொன்னப்பா நான் போறேன்....” என சொல்லிவிட்டுப் போனார். அது தான் அவர் பேசியக் கடைசிப் பேச்சு.

அடுத்த நாள் அவர் இல்லை இந்த உலகில்.  கேள்விப்பட்ட உடன் அடைந்த மனவேதனை..... அந்த இடத்தின் அனைவரின் அமைதி.....

ஒரு நாளா....இரண்டு நாளா---- 39 ஆண்டுகள் பழகிய நட்பல்லவா அவரது நட்பு.  நட்புக்கு மரணமில்லை. நட்புக்கே இலக்கணம் படைத்த அவன் புகழுக்கேது மரணம் ?

வாஞ்சையோடு பழகும் குணம் கொண்ட; உதவி செய்வதைத் தன் மிக முக்கியமான குணமாகக் கொண்ட வித்தியாசமான மனிதர் அவர்.

தன் ஆணித்தரமான விவாதத்தில் தனியாளானாலும் துணிந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. 

இந்துக் கல்லூரியை மிகவும் நேசித்தவர்;வரலாற்றுத் துறைக்கு தமது நூல்கள் அனைத்தையும் அளித்தவர். பத்து வருடங்களுக்கும் மேலாக கல்லூரி நிர்வாகத்தில் ஆசிரியர் என்ற முறையிலும் இயக்குனர் என்ற முறையிலும் பங்காற்றியவர்.

‘சாவே ! உனக்கு சாவே வராதா........ ”  (கண்ணதாசன் சொன்னது.)

அறிவுக் கடல், அன்புக்கடல் ......அதனால் அவர் பெயரில் சாகரம்.

இன்று அவர் பால் மிக மதிப்பும் அன்பும் கொண்ட என் மகன் முருகன் பதித்த வரிகளை என் மகன் தினேஷ் தொலைபேசியில் வாசித்து எனக்குச் சொன்னபோது, நேற்றும் இன்றும் தேங்கி நின்ற ,அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலோடு பொட்டித்திறந்து சிதறியபோது நான் தனிமையில் எனது அறையில்.......
அந்த துளிகளே நண்பனுக்கு என் அஞ்சலி.
Posted by Picasa

No comments:

Post a Comment