Monday, October 1, 2012

அன்பு அறிவுடன் அமைதியும் சேர்ந்தால் வாழ்க்கை வளமாகுமே.

செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி நானும் என் மனைவியும் பெங்களூருக்குப் போகணும்னு தீர்மானிச்சு டிக்கட் எடுக்க நினக்கும் போதுதான் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நான் நாகர்கோவிலில் இருந்தாக வேண்டிய அவசியம் நினைவுக்கு வந்தது. நான் இதைச் சொல்லி பெங்களூர் போகும் தேதியை தள்ளிப் போட்டால் என் மனைவியின் மனம் வாடும். நன்றி அறிவுப்புக் கூட்டம் நடக்கும் தேதியான ஒன்றாம் தேதியை மாற்றினாலும், என்னைப் போலவே இன்னொருவர் அந்தக் கூட்டத்திற்கு வந்து போவதில் சிரமம் ஏற்படும். மனதினில் குழப்பம்.

எனக்கு ஒரு ராசி உண்டு. ரயில் பிரயாணத்தின் போது லோயர் பெர்த்தில் ரிசர்வ் பண்ணி டிக்கட் எடுத்துப் போனாலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. காரணம் என்னை விட வயசான பெரியவர், குழந்தை யுடன் வரும் இளம்தாய் என எவராவது ஒருவர் வந்து விடுவர்.

நான் மட்டும் தனியாக செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்து விடலாம் . மறுபடியும் பிறிதொரு நாளில் பெங்களூர் போய் அவளையும் அழைத்துக் கொண்டு வந்துரலாம் எனத் திட்டமிட்டபடி டிக்கட் எடுத்தேன்.

29-ஆம் தேதி மத்தியானம் இரண்டு மணிக்குப் பிறகு தொலைக் காட்சி செய்தியைப் பார்த்த என் மனைவி ,“ பாருங்கோ ..... பஸ் ஒண்ணும் நாரூலுக்குப் போகாது....” எனச் சொல்ல நானும் பார்த்தேன்.

தமிழகத்திற்குத் கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பின் அதிர்வின் காரணமாக  சத்தியமங்கலம், மாண்டியா  எனச் சில இடங்களில் தமிழகத்திற்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக செய்திவரிகள் ஒடிக் கொண்டிருந்தன.

தொலைகாட்சித்  திரும்பத்திரும்ப அதனையே ஒளிபரப்பித்  தொல்லை  தர  ஆரம்பித்தது .

பதட்டமடைந்த என் மகளும் என் மனைவியும் என்னைப் போகவேண்டாம் என்று சொல்லாமல் ஆனால் தங்கள் முகபாவ மொழியால் சொல்லிக் கொண்டே இருந்தனர்.

என் மனதுக்குள் ஒரே குழப்பம்..... என்ன செய்வது ?  வீட்டில் இருந்து கொண்டே  டிக்கட்டை கேன்சல் செய்திரலாமா ?  பொம்மனஹல்லி வரைப் போய் பஸ் இல்லையென்றால்,அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாமா?     எண்ண  ஒட்டம் ஓடிக்கொண்டே இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பத் தயாரானேன்!. என் மனைவி என்னருகே வந்தாள்.

“போகாதே போகாதே என் கணவா... பொல்லாத சேதி என் மனதை கொல்லுதே.....” எனப் பாடுவாளா ?

அவள்,“ நானும் உங்க கூட வாறேன். பஸ் இருந்தா நீங்க போங்கோ !” என்றாள்.

 “நீ எப்படித் திரும்பி வருவே ? ”நான் கேட்டேன்.

 “வேலப்பனின் மகனையும் நான பொம்மனஹல்லிக்கு வரச் சொல்லுவேன்” என்றாள்.

அவளை சமாதானப்படுத்தி என் கைப்பையை மட்டுமே எடுத்து வெளியே வந்து சாலை வழியே நடக்க ஆரம்பித்தேன்.

ராமமூர்த்திநகர் சிக்னல் அருகே வந்த போது பஸ்கள், கார்கள் அனைத்தும் ட்ராபிக் சிக்கலில் மாட்டி நின்று கொண்டிருந்தன. பஸ்களில் ஆட்கள் அதிகம் இல்லை.  சற்று சிரமப் பட்டு சாலையின் மறுபக்கம் போய் நின்றுகொண்டேன். 500 டி பஸ் வந்தது .சில்க்போர்டு போகும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் அதில் ஏறி அமர்ந்தேன் .ருபாய் 20 கொடுத்து டிக்கட் கேட்டேன்.  இரண்டு டிக்கட்டுகள் தந்தார். ஒன்று 12 ருபாய் மற்றொன்று 4 ருபாய்.  மீதி தரவில்லை .டிக்கட்டின் பின்புறம் 4 என எழுதியிருந்தது. இறங்கும் போது தருவார்.

அதிகக் கூட்டம் இல்லை. மக்கள் பந்த்-க்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களோ ! இந்த பஸ் தொடர்ந்து போகுமா அல்லது இடையிலே நம்மை இறக்கிவிட்டு விடுவானோ... என் மனத்திரையில் இந்த வரி ஓடிக்கொண்டே இருந்தன.

நாம் அவசரத்தில் இறங்கும்போது கண்டக்டர் பாக்கி தரவேண்டியதைத் தருவானா ?   கேட்க மறந்து போகுமே !

கண்டக்டர் எல்லாம் மோசம்.... மீதிப் பைசாவெல்லாம் தர மாட்டான். எப்படியும் அவனிடம் மீதியை வாங்கீரணும். நான் ஒரு ருபாயைக் கொடுத்து அஞ்சு ருபா கேட்டேன். அவன் இல்லையென்றான். அய்யோ! தமிழ்ல பேசிட்டோமே எவனாவது நம்மைத் தாக்கீருவானோ பயம் .....
ஆனாலும் எப்படியும் பைசாவை விடப்ப்டாது..... அவரிடம் ஆறு ருபாய் சில்லறையாய்க் கொடுத்து பத்து ருபாயைக் கேட்டேன். சிரித்துக் கொண்டே பத்து ருபாயை தந்தார்.

சில்க்போர்டு வரவே செய்யாதா....ஒரு மணி நேரம் ஆச்சே.... ரூட்டு மாறி பஸ் வேறெங்கோ போகுதோ.... மீண்டும் பயம்.

 என்          பக்கத்தில் இருந்தவரிடம் மிகவும் துணிச்சலாகத் தமிழில் கேட்டேன்.  அவன் கன்னடத்தில் பதில் சொன்னான். ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் அவரிடம் இதுவா சில்க் போர்டு...எனக் கேட்டுகிட்டே இருந்தேன். மிகவும் அன்பாக பொறுமையாக கன்னடமும் அவர்தமிழும் கலந்த மொழியில், “ இந்த பஸ் பொம்மனஹல்லிக்குப் போகுது. ஒரு இடத்தில் சற்று இடப்புறம் திரும்பி நிற்கும். அதுதான் சில்க்போர்டு.”

“ என்ன... இந்த பஸ் பொம்மனஹல்லிக்குப் போகக்கூடிய பஸ்ஸா.... எனக்கு அங்கதானே போகணும்...”

கண்டக்டரிடம் நான் சொல்ல முற்பட என் அருகே இருந்தவர் விசயத்தை சொன்னார்.  இன்னோரு டிக்கட் எடுத்தால் போதும் என ஆறுதலாகச் சொல்லி விட்டு பஸ்சின் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தார்.

சில்க் போர்டு வந்தது. கண்டக்டரிடம் பத்து ருபாய்த் தாளைக் கொடுத்து பொம்மனஹல்லிக்கு டிக்கட் கேட்டேன்.

“நீங்க எங்கிருந்து ஏறினீங்க...” எனக் கேட்க நானும் சொல்ல அவர்  “டிக்கட் எடுக்க வேண்டாம் இதுவே போதும்” என்று சொல்லிச் சிரித்து விட்டு அவர் பணியைத் தொடர்ந்தார்.

இப்பொழுது எனக்கு கண்டக்டர் மிக அழகாகக் காட்சி அளித்தார். அறுப்பத்தஞ்சு வயசான பின்னும் அடைய வேண்டிய சில நுண்ணறிவு நமக்கு இல்லையே !

ஊர்ந்து சென்ற பஸ் ஒரு இடத்தில் நிற்க அதுதான் பொம்மனஹல்லி என தெரிந்து கொண்டு இறங்கினேன்.

நாம் செல்ல வெண்டிய இடம் கே.பி.என் பஸ் நிற்கும் இடமல்லவா !

எதிரே வருவோரிடம் கேட்டேன்.  சொல்ல வில்லை..... என்னெதிரே வந்த இருவரிடம் கேப்பியென் பஸ் எங்கே நிக்கும் என நான் கேட்க ஒருவன் தெரியாது எனச் சொல்ல இன்னொருவன் “கேப்பியன் ட்ராவல்ஸ்தானே கேக்கிறீங்க .... நேரே போங்கோ. என்றான்.

சரியாக ஆறுமணி.... கே.பி.யென் ட்ராவல்ஸ்-இல் இருந்தவனிடம் என் கணினிப் பதிவுத்தாளைக் காண்பித்தேன். எட்டு மணிக்கு பஸ் வரும் என்றான்.

அப்பாடா...... ஏதானாலும் பஸ் ஓடும் . இன்னும் இரண்டு மனிநேரம் காத்திருக்கணுமே.... அந்த 2 மணி நேரத்தில் தண்ணீர்ப் பிரச்சினை வலுவடைந்து விடக்கூடாதே ..... சாலையில் செல்லும் வெகுதூர பஸ்ஸெல்லாம் போய்க் கோண்டே இருந்ததால் நிம்மதி ஏற்பட்டது.

 8.45க்கு வந்த பஸ் என்னையும் அழைத்துக் கொண்டு சென்றது.

பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும்  நான் என் மகளது போனில் என் மனைவியிடம் பேசினேன்.

அவள்,“ நாங்கள் கே.பி.என் ட்ராவல்ஸ்-க்கே போனில் பேசிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம் ” என்றாள்.

அவள்..... ஆம்....அவளேதான். அவள் தான் நாகர்கோவில் K.P.N. அலுவலகத்தில் இருக்கும் மகன் முருகனுக்கு தெரிந்த ஒருவரிடமும் கேட்டு அறிந்து கொண்டாள்.

அன்பும் பயமும் அவசியமும் அவளை அனுபவசாலி ஆக்கிற்று. அது எனக்குப் பிரமிப்பாகவும் இருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கு. அன்பில் என்னிலும் மேலானவள் அவள்.   அறிவும் ஆணவமும் சேரும்போது   ஏற்படுவது  வெற்றிடம்... இல்லாமை... சூன்யம்.   சிலவேளைகளில் இந்த வெற்றிடம் என்னில் ஏற்படுவது கண்டு வெட்கப்படுவதுண்டு.அன்பும் அமைதியும் அறிவுடன் சேரும்போது ஏற்படுவது இயல்பான இயக்கம். என்னில் இல்லாதது. அவளிடம் உள்ளது. அதனால் இடரில்லா இயக்கம் தொடர்கிறது.

 தூங்கும் வசதி உண்டு. காலையில் 8.45-க்கு நாகர்கோவிலில் இறங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அக்டோபர் ஒன்றாம் தேதி நன்றி அறிவிப்புக் கூட்டம். நானும் கலந்து கொள்வேன் அதில்.நாங்கள் ஐந்து பேர் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிச் சங்கத்தேர்தலில் இயக்குனர்களாக ஒருமனதாகத்  தேர்ந்தெடுக்கப் பட்டோம். அதற்காக நாங்கள் அனைவரும்  பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறிட நடைபெறும் கூட்டம் அது.

நன்றி மறப்பது நன்றல்ல....... எனக்குப் பிடித்தது இந்த வரியே.

அதனால் நான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதுதானே மரியாதை.




No comments:

Post a Comment