Wednesday, October 24, 2012

எழுபது வயதான இருவர் சந்தித்த அந்த நாள்....

நேற்று சரஸ்வதி - நவராத்திரி பூஜையின் இறுதி நாள் பூஜை .காலையில்  பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு  வந்த என் மகள் அவர்களது வீட்டில் இருந்தாள்.  இதன் காரணமாக எங்கேயும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாமே என முடிவெடுத்துக் கொண்டிருந்த என்னை என் நண்பரின் அழைப்பு கடுக்கரைக்குப் போய் வர வைத்தது. அன்று அவரது 65-ஆவது பிறந்த நாள்.

காலை 11.30 மணிக்கு நானும் அவரும் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தோம்.

" உனக்கு எங்க தாத்தாவின் தம்பியைத் தெரியுமா” என்று கேட்டார்.

“ ஏன் தெரியாது ! நல்லாத் தெரியுமே. எனக்கும் அவர் தாத்தாதானே. கடுக்கரையில் நெல்லுக் கடை வைத்திருந்தார்லா.....” என்றேன்.

“ உனக்கு பிளாக் எழுத ஒரு விசயம் சொல்லட்டுமா....”

அவன் சொல்ல ஆரம்பித்தான்.

“  ஒரு நாள் அந்த தாத்தாவை  எங்க வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்காக அழைக்கப் போனேன். அவர் வெளியூரில் வசித்துவந்தார்.  பெரிய பண்ணையார். கடுக்கரையில் உள்ள களத்துக்கு வயல் அறுவடைக்காக வருவார்.  வந்து சில நாட்கள் தங்குவார். அவருக்கு சொந்த ஊர் கடுக்கரை.  அப்பம் அவருக்கு எழுபது வயதிருக்கும்.... ஆள் நல்ல சிவப்பு.... வேட்டியை வயிற்றுக்கு சற்று மேலே இறுக்கமா கட்டி இருப்பார். தூய வெள்ளை உடுப்பு. தடிமனாகவும் சற்று உயரமாகவும் இருப்பார். கையில் நடப்பதற்கு ஊன்றுகோல் எதுவும் கிடையாது.”

அவர் நடந்து வந்த போது ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைப் பார்த்தார்.சற்று அமைதியாய் நின்று என்னைப் பார்த்து, “  ஏய்! அந்தப் பாலத்துல நானும் அண்ணனும் இருந்து பேசிக்கிட்டிருப்போம் . ரெண்டு பேரும் நடந்து நொண்டிப்பாலம் வரை போவோம். நான் பீடி குடிப்பேன். அந்தக் காலத்துல சிக்கரெட்டுல்லாம் கிடையாது. நான் கொடுத்தா மட்டும் அண்ணன் பீடி குடிப்பார்.... அவருக்கு கடுக்கரையிலும் நல்ல மதிப்பு.. எல்லா ஊர்லேயும் மதிப்பு உண்டு. ... எனக்கு அதெல்லாம் ஒன்ணும் கிடையாது.”   அவரது பழைய நினைவுகள் - எனக்கு அப்போ 21 வயசு-. கேட்பதில் ஒரு சுவராஸ்யம் இருந்தது.”

நடந்து பள்ளிக்கூடம் அருகே வந்ததும் மேற்குத்தெருவில் இருந்து ஒரு பாட்டா தடிக்கம்பு ஊணி நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து நின்றார். அவர் அருகே வந்ததும் அந்தப் பாட்டாவின் வயிற்றுப்பக்கம் கட்டியிருக்கும் வேட்டியினுள் கையைவைத்துப் பிடித்து இளுக்க அந்தப் பாட்டா திடீரென்று ஏற்பட்ட அதிற்சி காரணமாக என்னவென்று அறியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

நம்ம தாத்தா ,“ என்னடே ..... என்ன உனக்குத் தெரியல்லையா?” என்றார்.

இவர் பேசிய சத்தம் கேட்டதும் பாட்டாவின் முகம் மலர்ந்து , “ ஏய்.... செல்லம்..... உன்னப் பாத்து எத்தனை நாள் ஆச்சுடே.... எப்படிடே இருக்க...
நல்லா இருக்கியாடே.....”

சேக்காளியைக் கண்ட பரவசம் அந்தப் பாட்டாவின் முகத்தில் தாண்டவம் ஆடியது.

“ என்னடா .... நீ.... கம்பு ஊணி நடந்து வாறே.... என்னப் பாத்தியா.... ஓன் வயசுதானெ எனக்கு... கம்பா வச்சிருக்கேன்.....” உற்சாக மிகுதியில் தாத்தா பேசினார்.

பதிலுக்கு பாட்டா,“ ஏய் ! செல்லம்.... நீ யாரு.... நான் யாரு... நீயும் நானும் ஒண்ணாடே...... நீ எப்படி இருக்கணுமோ அப்படி இருக்க.. நானும் உன்னமாரி இருக்க முடியுமாடே...... ஏண்டே என்ன பாக்க வரவே மாட்டேங்க.....”

உற்சாக மிகுதியால் அவரது முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டு தாத்தா என்னுடன் நடந்து வந்தார்.  பள்ளிக்கூடத்தைக் கையால் காண்பித்து “ இந்தப் பள்ளிக்கூடத்திலதான்  நானும் அவனும் ஒண்ணாப் படிச்சோம். அப்பம் இது ஓலைக் கட்டிடம்....”

காலத்தின் கோலம் பின்னாள் எப்படி இருந்தது தெரியுமா?

கம்பு ஊணி நடந்துவந்தவர் அதிக நாள் வாழ்ந்தார். தாத்தா ஒரு மாதத்தில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் பல வருடங்கள் சிரமப்பட்டார்.



No comments:

Post a Comment