Monday, April 30, 2012

நான் அறிந்த மானுட மகோன்னதம்


கடம்பூரில் இருந்து 8 மைல் தூரத்தில் கிழக்குத்திசையில் ஒரு சின்ன கிராமம்.அந்தக் கிராமத்தின் பெயர் பசுவந்தனை. அந்த கிராமத்தில்,ஒரு தாய் தான் பெற்றெடுத்த குழந்தையை தன் கணவருடனும் சொந்த பந்தங்களுடனும் கையில் எடுத்துக் கொண்டு குலதெய்வத்தைக் கும்பிட்டு வர ஒருத் தமிழ் மாத உத்திர நட்சத்திரத்தன்று கோவிலுக்குப் போனாள். அந்தக் கோவில் ஒரு அய்யனார் கோவில். கோவில் நடை திறந்ததும் அய்யன் தலையில் ஒரு நாகப்பாம்பு இருந்ததைக் கண்டாள். அதுவரை பெயர் எதுவும் சூட்டப்படாதிருந்த அந்த ஆண் குழந்தைக்குக் குடும்பத்துப் பெரியவர்கள் சொல்லியபடி "நாகபாலன்" என்றும் பெயரிட்டனர்.
அறிவிலும் அன்பிலும் உயர்ந்த நாகபாலனின் பத்தாவது வயதில் அவருடைய தந்தையார் இம் மண்ணைவிட்டு நீங்கி விண்ணையடைந்தார். 5 பெண்களுடனும், 4ஆண்களுடனும் தனியாய் விடப்பட்டாள். கேள்விக் குறியான நாகபாலனின் படிப்புப் பாதிக்கப் படாமல் அவரை அவரது மூத்த அண்ணன் உட்படஎல்லோரும் பார்த்துக் கொண்டார்கள். அண்ணன்களுக்குப் பெரிய வசதி எதுவும் இல்லை. இருப்பினும் நாகபாலனின் கல்விக்காக செலவு செய்தார்கள்.


நாகபாலனை எப்பாடுபட்டாவது பட்டதாரியாய்க் காண வேண்டும் எனத் திட்டமிட்டு, St.Xavier's கல்லூரியில் B.Sc படிக்கச் செய்தார்கள்.
நாகபாலன் தூத்துக்குடிக்குச் சென்ற போது அவருடைய உறவினரும் வ.உ.சிதம்பரனார் கல்லூரி நிறுவனருமான திரு.A.P.C. வீரபாகுவைச் சந்தித்தார். அவர் பாலனிடம்," நீ முதல் வகுப்பு பட்டதாரியானால் உனக்கு M.Sc Chemistry-க்கு இடம் தருவேன்" என்றார்.


B.Sc(Chemistry) பட்டதாரியும் ஆனார். அவரது Grade 'A'. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு M.Sc க்கு விண்ணப்பம் அனுப்பி முதல் Choice –ஆக V.O.C College பெயரையும் குறிப்பிட்டிருந்தார். கல்லூரியில் முதுகலை வகுப்புகள் ஆரம்பம் ஆனது. ஆனால் பாலனுக்கு Admission Card வரவில்லை. மிகுந்த வருத்ததுடன் தூத்துக்குடிக்குப்போய் திரு.வீரபாகுஅவர்களிடம் முறையிட்டார்.
கல்லூரிக் கட்டணம் கட்டிப் படிப்பைத் தொடர்ந்தார். இரண்டு வருடங்கள் ஓடின. Result வந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆயினும் அவர் அந்தக்கல்லூரியில் ஆசிரியராய் அமர்த்தப்படுகிறார். ஆறு வருடங்கள் வேலை பார்த்தபின் திருமணம் ஆனது. மனைவி நாகர்கோவிலில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியர்.
இப்போதும் உதவிக்கு வந்தவர் திரு வீரபாகு அவர்கள்தான். அவருடைய அன்பினால் அரவணைக்கப் பட்ட பாலனுக்கு நாகர்கோவில் Migration முறைப்படி தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைக்கவும் அவரால் இயன்ற உதவிகளைச் செய்தார்.
காலஓட்டத்தில் பாலன் தான் ஒய்வு பெறும் காலத்தினை நெருங்கும் போது தூத்துக்குடி வ.உ.சி கல்லூரிக்கு பலகலைத் தேர்வு சம்பந்தமாக போகும் வாய்ப்பு கிட்டியது. தாம் பயின்ற பணியாற்றிய கல்லூரியல்லவா .போனார்.
அங்கே ஒரு கட்டிடம் பழையதாய் இருந்தது. வைரவிழாவினை நெருங்கும் கல்லூரிப் புதுப் பொலிவு பெறுகிற இந்த நேரத்தில் அங்கே ஒரு சிறிய HALL பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. அதன் மேற்கூரையை செப்பனிட வெண்டுமென்ற திரு வீரபாகுவின் ஆசை அவர் மறைந்தபோதும் கூட நிறைவேற்றப்படவில்லை என்பதனைத் தெரிந்து கொண்ட பாலன் 8-4-2011-இல் ஒரு லட்சம் ருபாயை நன்கொடையாகக் கொடுத்தார். அந்தப் பணமும் காணாது என உணர்ந்த பாலன் மறுபடியும் 19-4-2011-இல் ஒரு லட்சம் நன்கொடையாகக் கொடுத்தார். பாலன் அளித்த நன்கொடையைப் பெற்றுக்கொண்டக் கல்லூரிச் செயலர் பிரமித்துப் போய் ஒரு கடிதம்தனைக் கொடுத்தார்.அந்தக் கடிதம் இதோ 


தனக்கு வாழ்வுதந்த ஒரு பெரியவரின் ஆசை நிராசையாய் போய்விடக்கூடாது என்பதற்காக இரண்டு லட்சம் ருபாய் கொடுத்த பாலன் ,மாணவர்களுக்கு பயன்படும் விதமாக MUTA, வ.உ.சி கல்லூரி யூனிட்டுக்கு இரண்டு லட்சம் ருபாய் நிதியையும் கொடுத்தார். கல்லூரி நிர்வாகம் பாலன் அவர்களை கௌரவிக்கும் விதமாக வைரவிழாக் கட்டிடத்தைத் திறக்கும் பணியை பாலன் அவர்களுக்கே அளித்தது.


20-4-2012-இல் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டுப் பிரமித்துப் போன ஜெயராமன், அவருக்கு கிடைத்த வரவேற்பையும் சிறந்த கூட்டத்தையும் அவரைப் புகழ்ந்து பேசிய திரு. சொக்கலிங்கத்தின் உரையையும் கூறியதைக் கேட்டு நான் ஆனந்தம் அடைந்தாலும் அதிசயித்துப் போனேன். அதிசயமே அதிசயப்படும்படியாக அவரது செயல்கள் அமைந்திருக்கின்றன.
தெ.தி.இந்துக் கல்லூரி MUTA UNIT-க்கும் 2 இலட்சம் ருபாய் மாணவர் பயன்படும்படியாக கொடுத்தார். இந்துக் கல்லூரி ஆசிரியர் மன்றத்துக்கும் 50,000/-ருபாய் கொடுத்தார்.

பாலன் …… நாகபாலன்…….இனியும் ஒரு பெயருண்டு. 
ஆம்.......அவருக்கு இரு பெயருண்டு. முருகன் என்றொரு பெயருமுண்டு.

அவர்தான் இந்துக்கல்லூரியின் முன்னாள் வேதியல்துறைத் தலைவர், பேராசிரியர் S.முருகன். முருகன் என்றால் அழகன் என்ற பெயரும் உண்டல்லவா........
அழகன் செய்யும் செயல்கள் அனைத்தும் அழகாகவே இருக்கின்றன.

Friday, April 27, 2012

இந்துக் கல்லூரியின் இலச்சினைதனை வடிவமைத்த பெரியவருடன் ஒருநாள்.


Posted by Picasaதென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி வரலாறு 
எழுத முற்பட்டு,  முன்னாள் பேராசிரியர்களைச் சந்தித்தும்,ஆண்டு மலர்கள் பலவற்றைப் படித்துப் பார்த்தும் தகவல்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன்.
கழிந்த 49 வருடங்களாக, நான் 1963-இல் இந்துக்கல்லூரியில் புகுமுக
வகுப்பு பயின்றநாளில் இருந்தே எம் கல்லூரிச் சின்னத்தை 
வடிவமைத்தவர் யாராக இருக்கும் ? என்று அறிய முற்பட்டும் 
என்னால் அறிய முடியவில்லை. 

காலங்கள் என்னை எங்கெல்லாமோ இழுத்துச் சென்று 1973-இல்
 இந்துக் கல்லூரிக் கரையோரம் கொண்டு போட்டது. 
ஆசிரியனானேன். என் மனத்தின் ஒருமூலையில் நம் 
கல்லூரியின் சின்னத்தை வடிவமைத்தது யார் என யாருக்குமே தெரியவில்லையே என்ற மனக்குறை இருந்து கொண்டே
 இருந்தது.
  
சமீப காலத்தில் (9-4-21012) கல்லூரிப் பண் எழுதிய முன்னாள் 
துணைமுதல்வர் திரு.தே.வேலப்பன் அவர்களை அவர் வீட்டில்
 போய் சந்தித்தேன்.வரலாறு எழுதுவதற்குத் தேவையான 
செய்திகள் பல கிடைத்தன. ஆனால் என்னாசையான 
சின்னத்தினை வடிவமைத்தவர் யார் என்ற தகவல் மட்டும்
 கிட்டவில்லை.





ஒரு போட்டி அமைத்து, மாணவர் ஒருவர் வரைந்த ஓவியம்தான் அது எனத் தெரிந்து கொண்டேன்.
ஒருநாள் அட்டைகள் இல்லாதக் கல்லூரி 
ஆண்டு மலர் ஒன்று என் கைக்குக் கிடைத்தது. 
மிகுந்த அலட்சியத்துடன் ஒவ்வொரு பக்கத்தையும்
 புரட்டிப் பார்த்துக்
 கொண்டிருந்தேன். மாணவர்களின் போட்டோ 
இருந்த பக்கத்தினைப் பார்த்தபோது அழகாய் இருந்த  ஒரு
 மாணவரின் படம் கண்ணில் பட்டு என்னை ஈர்த்தது. பெயரைப் படித்தேன்.M.MOHAMMED KHAN, III B.Com; College Crest –Best Designer
எனக் கண்டேன்.
கண்டு பிடித்துவிட்டேன்…….என உரக்கக் கூறி அங்கும் இங்கும்
ஓடுவது போன்ற உணர்வு எனக்கு !
 யாரந்த முகம்மத் கான்?
காந்திநாதனிடம் கூறினேன்…….விலாசம் வேண்டுமே  எனக் கேட்டேன்.
 விலாசம் சொன்னார்……..
தேங்காய்ப்பட்டணம் தான் சொந்த ஊரா ? நம்ம காலேஜுல வேலை
 பார்த்த பேராசிரியர் ஹஸ்ஸன் கண்ணுவின் ஊர் 
தேங்காய்ப்பட்டணம் தானே.
அவரிடமே கேட்டு விடலாமே. அவரிடம் ,போனில் பேசினேன்.

“சார்! எனக்கு ஒரு தகவல் தெரியணும். நிச்சயம் நீங்க நினைச்சா
 முடியும். தேங்காப்பட்டணத்துல இருந்து முகம்மத்கான் என்ற 
பெயருடைய ஒருவர்
 1960-இல் படிக்கும்போது இந்துக்கல்லூரியின் சின்னத்தை 
வடிவமைத்து ‘College Crest-Best Designer’ என முதல் பரிசை
 வாங்கினார். விலாசத்தைப் பார்க்கும்போது ‘வியாபாரம்’
 என்றிருந்தது…… யாரிடமாவது கேட்டுஇரண்டு மூன்று
 தினங்களுக்குள்  விவரங்கள் சொல்லுங்களேன்” எனக்
 கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை மிகவும் திக்கு முக்காட வைத்து 
விட்டது. கனவாய் இருக்குமோ! நான் என்னையே கிள்ளிப்
 பார்த்துக் கொண்டேன். கனவில்லை  நனவேதான்.
முகம்மத்கான் வேறு யாரோ இல்லை!.பேராசிரியர் ஹஸ்ஸன்
 கண்ணுவின் உடன்பிறந்த மூத்த அன்ணன். அவர் 
திருவனந்தபுரத்தில் பெரிய வியாபாரி. மணக்காட்டில் வசித்து 
வருகிறார்.
25-4-2012-இல் நான்,NSP சார் இருவரும் ஹஸ்ஸன் கண்ணு சாருடன்
 ஜெயராமன் கார் ஓட்ட மணக்காடுச் சென்றோம். காலை 9 மணிக்குப்
 பயணம் துவங்கி் 12.15-க்குப் பெண்கள் பள்ளி அருகே அமைந்துள்ள குடியிருப்பில் முடிவடைந்தது.
ஒரு சிறியச் சந்து. இருவர் சேர்ந்துப் போவது கூடச் சற்றுச் 


சிரமமாகவே இருக்கும். அதன் வழி உள்ளே சென்றோம்.
நாங்கள் வீட்டை நெருங்கினோம். வீட்டின் முன்னே வாசலில்
 பத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும்முகமலர்ச்சியுடன் நின்றிருந்தார்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்று கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தைகள் மின்னொளி வீசும் காமிராக்களுடன் வாசலையே வரவேற்பு கீதமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
எங்களை மிக்க அன்புடன் அவர்கள் அனைவரும் வரவேற்ற
காட்சியைக் கண்ட நாங்கள் மிகவும் பிரமித்துப் போனோம், இப்படி ஒரு வரவேற்பைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் ஹஸ்ஸன் கண்ணு அவர்களின் செயல்......

இந்துக்கல்லூரிச் சின்னத்தை வடிவமைத்த முகம்மத்கான் தன்
முதுமையின் கொடுமை தந்த நோயின் வலியால் வடிவிழந்து
ஒரு கட்டிலின் நடுவே அமர்ந்து இருந்தார். பாசமாக அவர்தம் கரம் பற்றி என்னெஸ்பிசார் கான் அவர்களின் பெருமைதனைப் பேசினார்.
முகம்மத்கானின் முகம் மலர்ந்தாலும் உணர்வுகள் உலுக்கியதால்
அவர்தம் கண்களின் நீர் கன்னங்களில் வழிந்தோடியது.உடல் 
குலுங்கிக் குலுங்கி அழுதார். ஓய்வுற்ற போதும் தம்மை மகிழ்விக்க தேனமுதச்
 சொற்கள் வீடு தேடிவந்து காதுகளில் விழுகிறதே.!
தமக்கே மறந்து போன ஒரு பெருமைமிகுச் செயல் 52 வருடம் 
கடந்து தன் பிள்ளைச் செல்வங்கள் எல்லோருக்கும் தெரிந்து, 
அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைத் தம் கண்கள் காண்கிறதே!
நன்றி…..நன்றி….. நன்றி……அவரது கண்களும் முகமும் எங்களிடம் 
இதைத்தான் கூறிக் கொண்டே இருந்தன.

என்னெஸ்பி சார் முகம்மத்கானின் உருவப் படம் இருந்த கல்லூரி
ஆண்டு மலரை அவரிடம் காட்டிச் சொன்னது அனைவரையும் உருக்கி
விட்டது. அவர் சொன்னது :- “ ஒரு மாணவர் கல்லூரிச் சின்னத்தை வடிவமைக்க அந்த மாணவரின் குரு தே.வேலப்பன் அவர்களே அதனை 
வர்ணித்து கவிதையெழுத யாருக்கு கிட்டும் இந்த பாக்கியம்….பெருமை”


நெகிழ்வாய் போன கான் அவர்கள் தமது தலைஅசைத்து சார் 
சொன்னதை ஆமோதித்தார்.
வடிவமைத்த சின்னத்தில் தாம் ஆங்கிலத்தில் எழுதியதையும் ,
’ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என டாக்டர் எஸ்.எஸ் மாற்றியதையும்
 அவர் கூற அது தெளிவாகவே எங்கள் காதினில் விழுந்தது.
மறக்காமல் தாம் வடிவமைத்த இன்னொரு இலச்சினை ‘MOM’ என்ற
அவரது குடும்பச் சின்னத்தை ரப்பர் ஸ்டாம்பில் உருவாக்கி 
வைத்திருந்ததை எங்களிடம் காட்டி மகிழ்ந்தார்.  அவ்வாறு அவர் எங்களிடம் 
காட்டி மகிழ்ந்தது அந்த படைப்பாற்றல் பின்னாட்களிலும் தம்மிடம் 
வற்றாமல் இருந்தது என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருந்தது.

கண்,காது,தலை,மனம் இன்னமும் கான் அவர்களுடன் 
உறவாகவே இருக்கின்றன.

எங்களுக்காகவே தயாரித்த உணவை மிகவும் பாசமுடன்
பரிமாறினார்கள். அவர்களில் மூத்தவர் ஒருவர் எங்களிடம் 
எங்களது வருகையைப் பெருமையாய்ச் சொல்லி ,” எங்களுக்கு இன்று 
ஒரு பெரு நாள்”எனக் கூறினார்.
இன்னொருவர் சொன்னார் ”எங்கள் வீட்டில் இன்று முப்பெரும் விழா..
இரண்டு சிறுவர்களில் ஒருவனுக்கு பிறந்தநாள். முகம்மத்கான் என்ற
 பெயர் கொண்ட மற்றொரு சிறுவனுக்கு மதச் சம்பிரதாயப்படி நடந்த
 விழா முடிந்த ஏழாம் நாள் விழா, நீங்கள் இங்கே வந்ததும் எங்களுக்கு
 ஒரு விழாதான்…”
செவிக்கும் கூடுதலாகவே உணவு கிடைத்தது. வயிறும் நிறைந்து,
மனமும் நிறைந்து வழிந்தது.
அந்த வீட்டுச் சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் என்னெஸ்பிசாரும் 
பிள்ளையாய் மாறி அறிவு விளையாட்டு விளையாடியதைக் கண்ட
 அந்த வீட்டுப் 
பெரியவர்கள் எல்லோருமே அதிகமாகவே ரசித்தார்கள்.
குழந்தைகளின் கைவண்ணம் ,குறும்பு மணக்கும் நகைத்திறம்,புதிர் 
விடுவிக்கும் ஆர்வம் இவை அனைத்தும் அந்த இல்லத்தில் அந்த
 நேரத்தில் குற்றால அருவியாய்க் குதூகலத்தைக் கொட்டியது. 
மொழியும் வயதும் சமயமும் கடந்த ஓர் இனிமையில் நாங்கள்
 திளைத்தோம். அங்கிருந்த அனைவர் முகத்திலும் அகத்திலும் புத்துணர்ச்சியின் புதுப்பொலிவு !
நேரம் நெருங்கியது. தேநீரும் வந்தது, அதனையும் பருகி விட்டு 
விடைபெறத் தயாரானோம்.
மீண்டும் ஒரு முறை கான் அவர்கள் இருந்த அறைக்குள் சென்று
அவர் முன்னிலையில் பிள்ளைகளுடன் கலந்துறவாடி விட்டு 
அவரது இதமான இதயம் மலர்ந்தது கண்டு தளிர் மனமாகி
அவரிடம் ’போய் வருகிறோம்’ எனக்கூறிவிட்டு வெளியே 
வந்தோம்.
அந்த வீட்டில் இருந்த அத்தனை பேரும் வாசல் வரை வந்து 
வழி அனுப்ப நாங்கள் சந்து வழியே கார் நிற்கும் இடம் நோக்கி
நகர்ந்தோம். கார் வரை பெரியவர்கள் ஐந்து பேருடன் பிள்ளைகள்
அனைவரும் எங்கள் கூடவே வந்து எங்களை அனுப்பி
வைத்தார்கள்.
காரில் திரும்பி வரும் போது ஹஸ்ஸன் கண்ணு சாரிடம் நான் கேட்டேன்….
”நடந்ததெல்லாம் கனவா…… நனவா……”
அன்பாய்ச் சிரித்தார் அவர்.அது மிக அழகாக இருந்தது.
’அழகே! உன் மறுபெயர் ஹஸ்ஸன் தானே !’

Wednesday, April 11, 2012

13 வயதில் E.S.L.C தேறிய ஒருவர்...........யார் அவர்?

எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்ப வகுப்புகளான ப்ரைமரி SCHOOL-இல் 1 முதல் 4-ம் வகுப்பு வரை தமிழ் அல்லது மலையாளவகுப்பு வரைப் பயின்று 4-ஆம் வகுப்பில் தேர்வு எழுதி ஜெயித்த பிறகு படிக்க வேண்டிய வகுப்பை தமிழ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 5-ம் கிளாஸ் படிக்கணுமா அல்லது ENGLISH பள்ளிக்கூடத்தில் சேர்ந்து preparatory class படிக்கணுமா என தீர்மானிக்க வேண்டும். சில இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் preparatory class-இல் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.அதில் அதிக மார்க்குகள் எடுத்தால் தான் preparatory class admission கிடைக்கும்.
1938-39-இல்நடந்த நுழைவுத்தேர்வை 2-ஆம் வகுப்பில் பாஸான ஒரு மாணவரை,அதிக புத்திசாலி மாணவராக இருந்ததால் எழுத அனுமதித்தார்கள். அப்படி எழுதிய மாணவர் தான் அதிக மதிப்பெண் எடுத்தார்.அதிக மதிப்பெண் எடுத்த காரணத்தால் preparatory class-இல் படித்து தொடர்ந்து Ist form முதல் VI th formவரை படித்தார். III form ,VI form Examinations  were government examinations. 
VI th form தேர்வு எழுதும் போது age exemption  வாங்கி எழுதி வெற்றி பெற்றார்.
அதாவது அந்த மாணவர் தமது 13-ஆம் வயதில் E.S.L.C தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின் கல்லூரியில் Intermediate வகுப்பில் சேர்ந்து படிக்க நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பம் போட்டார்.16 வயதினர் தான் கல்லூரியின் சேரமுடியும் என்ற விதியைக்காரணம் காட்டி அட்மிஸன் மறுக்கப்பட்டது.
1944-ல் பாசான பின் எங்கேயும் படிக்காமல் சும்மாவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது ஊரில் உள்ள ஒரு நூலகத்திற்கு தினமும் போய் தமிழ் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
காலம் இவருடைய இந்தக் கோலத்தைப் பார்த்தும் பார்க்காதது போல் நகர்ந்து கொண்டே இருந்தது.சுமார் எட்டு வருட காலம் உருண்டோடியது...
தான் இவ்வளவு நாள் சும்மாவே இருந்து விட்டோமே என்று மன உளச்சலுக்கு ஆளானார்.அவர் மிகவும் மனவேதனை யோடு இருந்ததை காலம் கருணையோடு பார்த்தது. அதனால் கல்லூரியும் மலர்ந்தது. ஆம்...... அவருக்காகவே நாகர்கோவிலில் ஒரு புதுக் கல்லூரி உருவானதோ என்று நினைக்கும்படியாக இந்துக்கல்லூரி 1952-இல் தொடங்கப்பட்டது. அந்த வருடமே கல்லூரியில் சேர்ந்தார்.1954-ல் Intermediate Examination எழுதி திருவிதாங்கூர் பலகலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக (First Rank ) வெற்றி பெற்றார்.

 திருவனந்தபுரத்தில் B.A(Horns) படித்து முடித்தார்.1957-ஆம் ஆண்டு தான் படித்த இந்துக்கல்லூரியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.
அவர் யாராக இருக்க முடியும் ?.

Monday, April 2, 2012

வீடு தேடிப் போய் நன்றி சொன்ன மாணவர்......

எனக்கு எந்த விருதுகளும் கிடைக்க வேண்டும் என விரும்பிய தில்லை.ஆனால் விருதை விட மகிழ்ச்சி தரும் விமர்சனங்கள் ரொம்பவே சந்தோசத்தைத் தந்தது. நம்மை நம்பி கல்லூரியில் சேர்க்கும் மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றக் கூடாது என்பது தான் என் எண்ணமாய் இருந்தது.
சக ஆசிரியர்கள் என்னை விமர்சிப்பது உண்டு.நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை.
எனது ஆசிரியர் ஒருவர் R.S.P. அவர் பிஸிக்ஸ் ஆசிரியர்.அவரது விமர்சனம் எனக்கு பிடித்திருந்தது.....

என்னை ஊக்குவித்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

நான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த புதிதில் கடுக்கரைக்கு வந்த R.S.P சார் எனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது என்னைப் பற்றி சொன்னது.......“ பொன்னப்பனை எல்லோரும் பெருமையாய் சொல்கிறார்கள்...... ஆனால் பொன்னப்பன் எப்பவும் குமுதம்,ஆனந்தவிகடனோடுதான் காலேஜுக்கு வாறான்.......உங்க அப்பாட்ட ஒருநாள் நிச்சயமாக சொல்லிருவேன்னு சொன்னேன்...... சொல்லியாச்சு......” 
 அப்பா சிரிச்சுகிட்டெ இருந்தா..... நானும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.........
 நான் நாகர்கோவிலுக்கு தாமசத்துக்கு வந்த போது வீடு பாத்து தந்தவர் பிரபாகரன் சார்தான்.....
அவரது அடுத்த வீட்டில் தான் நாங்கள் முதன் முதலாக நாகர்கோவிலுக்கு தாமசத்துக்கு வந்தபோது இருந்தோம்.ஒருவருடம் இருந்த கால கட்டத்தில் நான் அவரைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டேன்........
அவர் பலருக்கு உதவி செய்ததை அறிந்து கொண்டேன்.....சத்தம் போட்டு தான் பேசுவார்.....கேட்பதற்கு சற்று கரடு முரடான மனிதரின் பேச்சு போல் இருந்தாலும் இரக்ககுணம் உள்ள மனிதர்.....
நெய்வேலியில் இவரால் படித்து வேலை பார்த்த ஒருவரை தற்செயலாகப் பார்த்தபோது இவர் பலருக்கு உதவி செய்தது தெரியவந்தது.
அவர் ஓய்வு பெற்று போனபின் சந்திப்பது குறைந்து போனது.


மிக ஆச்சரியமாக இருந்தது.....மார்ச்சு மாதம் (2012)
ஒருநாள் நான் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். வந்தவர் அவரது உறவினர்.
“பிரபா,கொஞ்சம் வெளியே வாயே”னென்று அவரை அழைத்துப் போனார். நான் வீட்டுக்கு வந்து விட்டேன்.
பிரபா என்றால் பெண்ணின் பெயர் போலல்லவா இருக்கிறது.....அவரது ஆச்சியின் பெயர் பிரபாவதியாய் இருக்குமோ.....என் பெயர் தங்கம்.... எனது பெரியம்மாவின் பெயர் தங்கம்மாள்.....  
எங்க ஊரில் என்னை என் அப்பா,அம்மா உட்பட அனைவரும் தங்கம் என்று தானே கூப்பிடுவார்கள்.அது போலதான் இவருக்கும் இருக்கும் என நினைத்த நான்
அடுத்த நாள் அவரிடமே கேட்டேன்.....பிரபாங்கது யாரு ? 
”வீட்டில் என் பெயர் பிரபாகரன் என்று சொன்னவர் மேலும் சொன்ன தகவல்...”எங்க அப்பா இந்துக் கல்லூரியில் B.Sc Chemistry 1969-72-ல் படிக்கும்போது Fees கட்ட முடியாமல் கல்லூரிக்கு போக முடியாத ஒருநிலை ஏற்பட்டது.  Physics பாடத்தில் கூடுதல் மார்க்கு எடுத்த அப்பாவை பாராட்டிட அந்த ஆசிரியர் தேடுகிறார்.....அப்பா கல்லூரிக்கு வராத காரணத்தை அறிந்ததும், அப்பாவை வரச்சொல்லி பணம் கொடுத்து படிப்பை தொடரச் செய்தார்......அன்று பணம் கட்டியதால் தான் அப்பா படிப்பைத் தொடர்ந்து பட்டமும் பெற்றார். 
நன்றி மறப்பது நன்றன்று .....அந்த ஆசிரியரின் பெயர் தான் எனக்கு.....
அந்த ஆசிரியர் R.S.பிரபாகரன்.....எங்க அப்பா அந்த ஆசிரியரை பார்க்கணும்னு சொல்லிக்கொண்டே இருக்கிறார்....”
என் மனதை ஈரமாக்கிய அந்தப் பேச்சு என்னை அந்த ஆசிரியரிடம் உடன்தானே பேசவேண்டும் என்று தூண்டிற்று. பேசினேன்.... ஓய்வான சமயத்தில் இதுபோன்ற இதம்தரும் என் வார்த்தைகள் அவரது காதுகளில் தொலைபேசி மூலம் தேனாய்ப் பாய்ந்தது.
பிரபாவின் அப்பாவின் ஆசையைச் சொன்னதும் அந்த ஆசிரியர் எப்பம்
வேண்டுமானாலும் வரச்சொல் என மகிழ்ச்சியோடு சொன்னார். நான் பிரபாவிடம் சாரின் போன் நம்பரைக் கொடுத்து சார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா எனத் தெரிந்து கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டேன்.                     
ஒருநாள் மாலையில் வேலப்பன் என்ற அந்த மாணவர்,தன் மனைவியுடனும் மகன் பிரபாவுடனும் பிரபாகரன் சார் வீட்டுக்குப் போய் பொன்னாடை போர்த்தி மலரும் நினைவுகளில் நனைய வைத்து அவரது ஆசியையும் பெற்று மன நிறைவுடன் திரும்புகிறார்கள்.....
அந்தப் பிரபா யார் ?
அவர் தான் இந்துக்கல்லூரியில் பணியாற்றும் காந்திநாதன்...
எத்தனையோ பிரபா எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..... காரணம் பிரபாகரன் சாரின் அன்பையும் ஆசியையும் பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்...அவரது வலது கை கொடுப்பது அவரது மற்றொரு கைக்கே தெரியாது......இது மிகை அல்ல.....