Friday, April 26, 2013

மறைவுக்குப் பின்னும் பேராசிரியரை மறவா மாணவன்





என் கைபேசி என்கையில் இருந்தது. காரணம் நான் அப்போது காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய……….பாடல் கேட்டதும் என் கண்கள் எனை அழைக்கும் எண்ணை பார்த்தது. இதுவரை நான் பார்த்திராத , அறியாத எண் என்பதால் அழைப்பைத் துண்டித்து விட்டேன்.. மறுபடியும் அதே பாடல்… அதே எண். ஒன்றில் ஆரம்பித்த எண்… அதனால் மீண்டும் புறக்கணித்தேன். ஒன்று என்று ஏதாவது எண் வந்தால் அந்த எணனை மிஸ்டு கால் என எண்ணி அழைத்தால் பைசா போய்விடும் என நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார்………அதனால் மறுபடியும் நான் அழைக்கவும் விரும்பவில்லை..
மீண்டும் என்னை என் கைபேசி அதே பாடல் பாடி தொந்தரவு பண்ணியது. வெறுப்பின் உச்சத்தில் நான் இருந்த போது. உள்மனம் என்னைக் கெஞ்சியது எடுத்துத்தான் பாரேன். என்ன தலையா முழுகிவிடப் போகிறது. மனம் ஒரு குரங்கல்லவா…….
என்கைவிரல் பச்சைப் பொத்தானை அமுக்கிற்று.
“ஹலோ, சார் சுகந்தானா ?  “ ஒரு பெண் குரல்
“ நீங்க யாரு ,தெரியல்லயே” நான் சொன்னேன்.
” US- ல இருந்து பேசுகேன்….. விவேக்கோட அம்மா……”
 “அய்யோ இது நம்ம வித்தியாசாகரோடஒய்ஃப்ல்லா….”

நல்லா இருக்கீங்கள்ளா….. பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே அவர் ஆமாம் எனச் சொல்லி தனக்கு மாவட்ட கருவூலத்தில் இருந்து கடிதம் வீட்டு விலாசத்துக்கு வந்திருப்பதாக சொன்னாள். மேலும் விவரம் கேட்டேன்,

மறுநாள் நான் வீட்டில் இருந்த போது ஒரு வாலிபர் தன் கையில் காகிதத்துடன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடம் தரும் போது மேடத்துக்கு வந்த லெட்டெர் உங்களிடம் தரச் சொன்னாங்க எனச் சொல்லி தந்தார்.

அவரது பேச்சு சற்று நளினமாகவும் பௌயமாகவும் இருந்தது.

அந்த கடிதம் தந்த செய்தியைப் படித்து அறிந்து கொண்டேன்.

நாளை அல்லது வசதிப் பட்ட நாளில் கருவூல அலுவலகம் சென்று இது பற்றி கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.  ஓய்வு பெற்ற வித்தியாசாகர் மறைவுக்குப் பின் கிடைக்க வேண்டிய தொகை 35000/- அவரது மனைவிக்கு காசோலை மூலம் அனுப்படும் என்கிற செய்திதான் அந்தத் தாளில் இருந்தது.
நின்று கொண்டிருந்த வாலிபரிடம் பெயர் கேட்க தனது பெயரைச் சொன்னார். பெயர் இந்துப் பெயர் மாதிரி இருந்தது.
”நான் ஒங்க காலேஜிலதான் சார் படிச்சேன். பி.எஸ்ஸி ஸூவாலஜி படிச்சேன்.”
சற்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தேன்.

”எனக்கும் வித்தியாசார்ட்ட பழக்கம் ஆனது என்.ஸி.ஸி மூலம் தான். அவரிடம் அறிமுகம் ஆனபின் அவர் ஆலோசனையினைக் கேட்டு அதன் படி நடந்தேன். எனக்கு அவர் அம்மா மாதிரி….. இல்ல சார் அதுக்கும் மேல. போன வருசம் பெரிய விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருந்த போது நான் தான் சார் இரவு நேரம் கூட இருந்தேன். உறக்கமே கிடையாது. என் கண் போல் அவரை பாது காத்தேன்.
 இப்பம் அவர் மார்பு வலி வந்து துடித்த போது என்னை அழைத்தார். நான் அப்போ உடனே வர முடியாத நிலையில் இருந்தேன்….  நேரமும் போய் நான் வந்து பார்க்கும்போது அவர் உயிர் அவரிடம் இல்லை. அது வானில்……
 நான் அழுதேன்… துடித்தேன். தாய் மரித்தது போல் என் மனம் பதறியது…. சாரின் மகன் பூனாவில்….. அம்மா அதான் சாரோட மனைவி அமெரிக்காவில்…..
எல்லோரும் வந்தார்கள். இறுதி ஊர்வலம்…. ஒழுகினசேரி சுடுகாடு தான் தகனம் செய்த இடம்.  அவர் உடலை நெருப்பு அணைக்கும்போது  உடல் வெடித்து வெளியே சிதறாமல் இருக்க யாராவது இருக்க வேண்டும். நான் அவரது உடல் எரிந்து அணைவது வரை அங்கையே இருந்தேன்… சார்…. இப்பம் மேடம் அமெரிக்காவுக்கு போயிட்டாங்க …… வீட்டப் பாக்க ஆள் கிடைக்கல்ல….. நான் தான் காவல்.”
நீங்க எங்க வேல பாக்குறீங்க.
டி.வி.டி யில் டீச்சராய்…… அதுவும் சார் சொல்லி கொஞ்ச நாள் பாத்தேன். வேல கிடைக்கும் வாய்ப்பும் வசதியும் அற்ற எனக்கு அங்கு அதிக நாள் வேலையில் நீடிக்கவில்லை.
 பக்கத்தில் கார்மல் பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் வேலை பாக்கேன். அதுவும் நிரந்தரமல்ல…. சாரும் இல்ல…. என் எதிர் காலம் ஆணடவன் கையில்….
“இந்துவான உனக்கு எப்படி வேலை தருவாங்க “ நான் கேட்டேன்.

”சார், நான் ஒரு கிறிஸ்டியன். என் பெயர் சுரேஷ் பாபு என்பதால் அப்படி நினைச்சுட்டிங்களா.”
உங்க வீடு எங்கிருக்கு என நான் கேட்க அவனும் சொன்னான்.
எல்லாம் இங்க பக்கத்துலதான்….. நான் அங்கு போவதில்லை….. நான் என் தாயாரிடம் பேசமாட்டேன்.
“ஏன்…. பேசமாட்டாய்…. என்ன ப்ராப்ளம்……”
அவன் பதில் பேசவில்லை…… கண்களில் நீர் வடிந்தது……. பேசாமல் நின்றான்.
ஒன்றுமே சொல்லாமல் விடைபெற்று போய்விட்டான்….
என் மனமும் சற்று கலங்கித்தான் போயிற்று….. அவனுக்கும் அம்மாவுக்கும் என்ன தகராறு….. ? தெரியவில்லை.
அவன் அந்தரங்கம் அவனுக்குப் புனிதமானது……

நாளை அவன் தாயுடன் இணக்கமாக வேண்டும்.....இதுவே என் பிரார்த்தனை............