Tuesday, October 22, 2013

மழை காப்பாத்திற்று.... மழை வந்தால்.....வராவிட்டால்...

கடுக்கரையில் வயல்களில் உள்ள பயிர்கள் தண்ணீருக்காக ஏங்கி பரிதாபமாய் இருந்த நாளில் கிட்டண்ணனைக் கண்டேன்....
நான் அவனிடம் “ என்னா  மழையைக் காணவில்லை.... எப்படிண்ணே... இந்தப் பூ தப்பீருமா...”
அவன் தம்பி “ நம்ம தம்புரான் சாமி நம்ம கைவிட மாட்டாருப்போ.... மழை வரும்..... கண்டிப்பா வரும்... மழை நம்மைக் காப்பாத்தும்” என்று சொன்னான்.

அதுபோல் மழையும் வந்தது.....

கிட்டண்ணன் ,“ பாத்தியாப்போ..... மழை காப்பாத்திற்று”.... என்றான்.. முகம் முழுவதும் ஆனந்தரேகைகள்......”

 தென் மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கி மழை பெய்யும் என்று நினைக்கையில் பெய்யாமலும் மழை எங்கே வரப்போகிறது இன்று வராது எனக் குடையை எடுக்காமல் போகும்போது மழை வருவதுமாய்  விழையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
அறுவடை ஆரம்பமான சமயம்..... மழை வந்தால் அறுவடை தடைபடும்....
அய்யோ இந்த மழை வந்து கெடுத்துருமோ...... நேரத்தே அறுத்தாதான் நல்ல விலையும் கிடைக்கும்..... நாட்கள் தள்ளிப் போனால் விலையும் கீழ்நீக்கிப் போயிரும்.

மழை பெய்யவில்லை சில நாட்கள்.....

மழை வராமல் இருந்ததால் விவசாயிகள்  வயலில் கதிர் அறுக்கும் மெஷின் வைத்துஅதிகம் நஷ்டப்படாமல் அறுத்துக் கிடைத்தநெல்லை விற்று பணமாக்கி சற்று மகிழ்வுடன் இருந்தனர்.

கிட்டண்ணன் , “ மழை அஞ்சாறு நாளா வரல்ல... எல்லா வயலையும் மெஷின் வைத்து அறுத்துட்டேன்.... நல்லவேளைப்போ.... மழை வரல்ல ... மழை நம்மை காப்பாத்திற்று.....” இப்போதும் முகம் முழுவதும் ஆனந்தரேகைகள்.....”

.காட்டுப்புதூரில்  எண்பது வயதுப் பாட்டி  கழிந்த வெள்ளிக்கிழமை அதிகாலைப் பொழுதினில் சிவனடியை அடைந்து விட்டாள்.

நான் காட்டுப்புதூருக்கு  ஞாயிற்றுக்கிழமை இரவு “துட்டி கேட்க” போயிருந்தேன்...
அவள் இயல்பாகவே நல்ல அன்பாகப் பழகுபவள்.

அங்கிருந்த ஒருவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்தார். என் காதிலும் விழுந்தது....

“ பாரு..... இந்த இரண்டு நாளும் ஒரு மழைகூட இல்லை.... இறுதிச் சடங்குக்கு  மழையால் தொந்தரவே இல்லை...... நாளைக்கு சுடுகாட்டுக்குப் போவதுவரை மழை வாரமல் இருந்தாலே போரும்.”

திங்கள் காலையில் இறுதியாத்திரையை மழை தொந்தரவு செய்யல்ல...

நேற்று பேசிக்கொண்டிருந்த அதே இரண்டு ஆட்கள் நடந்து செல்லும்போதே பேசிக்கொண்டே சென்றனர்.

“ பாத்தியா.... செத்தவள் இருக்கும் போதும் யாரையும் துன்புறுத்தல்ல.... இப்ப பாரு அவ போகும்போதும் யாரும் மழையால் கஷ்டப்படல்ல.... மழை மேகம் கறுப்பா இருந்து பயமுறுத்துகு.... ஆனா ஒரு துளிகூட விளல்ல.....”

வீட்டில் இருந்து சுடுகாடு வரை செல்லும் ரோடு  மஞ்சள், வெள்ளை, சிவப்புக் கம்பளம் விரித்தால் போல்  காட்சியளித்தது.  அத்தனையும் பூக்கள்..........அதனையும் மழை வந்து கெடுக்கவில்லை.....

சடங்குகள் முடிந்தன.......

அந்தத் தாயின் புதல்வர்களின் முகத்தில் சோகம் இருந்தாலும் மகிழ்ச்சியாய் சொன்னார்கள்.

“ நல்ல வேளை மழை காப்பாத்திற்று........”

செவ்வாய்கிழமை...... காடாத்து.... சுடுகாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வு.... காலையில் பத்தரைக்கு மேல்.... நான் போனேன். மழை வருவது போன்று இருந்தது.....ஆனால் வரல்ல...... பக்கத்தில் ஒரு வயல்..... அறுத்த வயல்.... நெல்லில்லா கதிர் வயல் முழுவதும் கிடந்தது.....

என்னருகே நின்ற ஒரு ஆளிடம் கேட்டேன்.... அவன் சொன்னான்.
“ வயல அறுத்தான்..... நெல்ல எடுத்துட்டான்.... ஆனா இந்தப் பாவி மழை வந்து கெடுத்திட்டு.... வக்கீல் எல்லாம் தண்ணியில மாட்டிற்று....”

எல்லாம் முடிந்து வீட்டுக்கு காரில் கிளம்பினோம்...... தெரிசை நெருங்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தது.... மழை அதிகமாய் பொழிந்தது....

என்னுடன் வந்த டிரைவர்.... பாருங்க இந்த மழை .... ஹோட்டலுக்குப் போகவிடாது போலிருக்கே.... அவன் துட்டிவீட்டில் சாப்பிடமாட்டான்.... அதனால் தெரிசையில் சாப்பிட இறங்கிப் போக முடியாத நிலை..... குடையும் இல்லை... குடை கொண்டுவந்திருந்தால்தான் மழையே வந்திருக்காதே....
சாலை வழியே சென்ற ஒருவர் குடை தந்து உதவ அவன் சாப்பிடப்போனான்....

சாப்பிட்ட பின்  மழை நின்றபின்...... வந்தான்....

பாருங்க சார் இந்த மழையை.... என் உடுப்பெல்லாம் நனைஞ்சிருச்சு....மழை ....
சொல்ல ஆரம்பிக்க..........  நான் சொன்னேன் ......

“ மழை ஒரு நாளும் கெடுக்காது.......  முன்யோசனையின்றி செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு மனிதனான நாமே தான் பொறுப்பு.”

மழைக்காலத்தில்  மழை வருவது மனிதகுலம் வாழவே.....

ஒருவன் மழை வந்தால் அது காப்பாத்திற்று என்கிறான்......
இன்னொருவனோ மழை வந்து கெடுத்திற்று என்கிறான்.... மழை வராமல் இருந்தாலும்......... இதே பல்லவிதான்.

உப்பு விக்கப் போகிறவன் மழைக் காலத்தில் போவானா........
புட்டுமாவு விக்கப் போறவன் காற்றடித்தால் என்ன செய்வான்.....





No comments:

Post a Comment