Tuesday, November 19, 2013

எப்படி எழுத ஆரம்பித்தேன்.....

நான் எழுதியவை எதுவும் ஞானபீடப்பரிசு பெறுவதற்காகவோ சாகித்ய அகாடமி விருதுக்காகவோ எழுதப்படவில்லை. அன்றொருநாள் பேரன் ஒருவன் அவன் தாத்தா பிரிந்தசோகம் கண்டு கவி எழுத, அதனைப் படித்த உறவினர்கள் ஒருத்தர் கூட கண்ணீர் விடாமல் இருக்கவில்லை.வாய்விட்டு அழுத பேத்திகளை நானே பார்த்தேன். எழுதிய பேரன் எனது மகன். பேரனவன் அதன்பிறகு அது போல் ஒன்று இந்நாள்வரை எழுதவில்லை. தாத்தா மறைந்து 14 ஆண்டுகள் ஓடிப் போயிற்று...... உணர்ச்சி மட்டும் இருந்திருந்தால் கூட அவன் எழுதிய வரிகள் உறவினர்களின் மனதில் இடம் பிடித்திருக்காது. உணர்ச்சியுடன் உண்மையும் இருந்தது..... அது தான் அந்த அவனது வரிகள் சாகா வரம் பெற்று இன்றும் எங்கள் எல்லோர் மனதிலும் நிலைபெற்றிருக்கிறது...

சின்ன வயதில் அறிந்தும் அறியாதவயதில் ஒரு கடிதம் நண்பன் ஒருவனுக்கு நான் எழுத அந்தக் கடிதம் யார் படிக்கக் கூடாதோ அந்த நபரிடமே கிடைத்தது. எப்படி கிடைத்தது.தானாக அது ஊர்ந்து போய்விடவில்லை. நண்பனே பகையானான்.எட்டப்பனாக மாறிக் காட்டிக் கொடுத்தான்.


அதனால் ஒரு உச்சகட்ட யுத்தமே பிரளயம் போல் நடந்து முடிய  என் தந்தை  பாசமாய் எனை அழைத்து ,” தங்கம்.... நீ எழுதியதில் உண்மை இருந்திருக்கலாம்.... அந்த உண்மைதான் அவர்களை சுட்டிருக்கிறது.... உண்மை சில சமயங்களில் சுடும் ...... இனிமேல் யாரையும் நிந்தித்து எழுதாதே..... எழுதினால் அது சாட்சியமாம் மாறும்.... பேசு... அது காற்றினால் களவாடப்பட்டு மாய்ந்து போகும்....”


தெனாலிராமன் வளர்த்த பூனைக்கு எப்படி பால் புடிக்காமல் போயிற்றோ அதுபோல் அதிகம் எழுத நினைத்த எனக்கு எழுதப் பிடிக்காமல் போயிற்று....


அதன்பிறகு மேற்படிப்பு படிக்கப் போனேன். அப்பாவுக்கு எழுதும் கடிதமே வேண்டுதல் கடிதமாய் அமைந்தது.... “நான் நலம்... நீங்கள் நலமா...நன்றாகப் படிக்கிறேன்... பணம் வேண்டும்.....” இப்படித் தான் என்னால் எழுத முடிந்தது.....

அப்பா சொன்னார்,” ஏன்.... மிகச் சுருக்கமாய் எழுதுக.....பயந்துட்டியா....எழுது .... நீ பார்த்ததை படித்ததை.... விரும்பியதை எழுது.”

ஆனாலும் கடிதவரிகள் குறுகியதாய் இருந்தநிலை மாறவே இல்லை.


நான் ஆனந்தவிகடனுக்கு குறும் செய்திகள் எழுதி அனுப்ப அது வெளிவந்து என்னை மகிழ்வித்தது. குமுதத்தில் துணுக்கு வந்து என் தந்தையையும் வசீகரித்தது....

கணித ஆசிரியனாய் பணியாற்றியபோது தினமலரில் என் கடிதம் படித்து,இந்துஎனும் ஆங்கிலப்பத்திரிகையில் பிரசுரம் ஆகும் என்ற நினைப்பில் எழுதி அனுப்ப அது வெறும்வெடிக்காத புஷ்வாணமாய் மாறிட ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன்....

தற்செயலாய் ஒருநாள் பேராசிரியர் L.C.தாணு எழுதிய ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் ஆசிரியர் கடிதம் பகுதியில் வந்ததைப் பார்த்து எனக்கும் எழுதணும் என்ற வேட்கை வந்தது.

என்ன எழுத ?..... யோசித்துப் பாத்தேன்.   ம்ஹூம்... 

ஒருநாள் காலையில் ரயில் நிலையம் போயிருந்த போது மூன்றாம் பிளாட்ஃபாமில் வந்த சென்னை ரயில் பயணிகள் கையில் சுமையோடும், வயோதிகர்கள் மிகவும் சிரமப்பட்டு படியேறி வந்ததைக் கண்டேன்.... உள்ளுணர்வு எனை எழுதத்தூண்டியது... எழுதினேன்... தொடர்ந்தது..... எண்பது கடிதங்கள்.....என்னை பிரமிப்பூட்டிற்று.... போதுமே என்று தோணியது... அதன்பிறகு நான் எழுத நினைத்தும் எழுத என் மனமோ கைகளோ ஒத்துழைக்கவில்லை.


என் மூத்த மகன் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று அதீத ஆசை கொண்டதால் குவைத்துக்கு எங்கள் நண்பர் வெங்கட்ராமன்போற்றி அவர்கள் உதவியால் போனான். வேலையும் பார்த்தான். ஒருமாதம் கூட ஆகவில்லை.... அவனுக்கு சலிப்பு ஏற்பட்டது. அதனால் அவனுக்கு நீண்ட ஒரு கடிதம் எழுதினேன்.... அது அவன் மனதினை மாற்றிற்று

...அந்தக் கடிதத்தைப் படித்த அவனது தோழர் ஒருவர் அதனை நகல் எடுத்து சக தோழர்கள் அனைவருக்கும் கொடுத்துப் படிக்க வைத்ததாக என் மகன் சொல்ல அவனுக்காக எழுத  ஆரம்பித்தேன்....

எழுதிய பல வரிகள் என்னை மீண்டும் எழுதத் தூண்டிற்று....


நானும் என்றோ எழுதிய மூன்று கடிதங்கள் ஒரு மகளின் “மகளோடு நான் “ என்றொரு அழகான வடிவம் கொண்ட ஆல்பத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. காரணம் அவ்வரிகள் சத்திய வரிகள்..... காலங்கள் ஒடிப்போயின...... அறுபத்தாறு வயதில் அறுபதாம் வயதுள்ள ஒருவருக்கு எழுதிய கடிதம்........என் வரிகள் அவரை மிகவும் கவர்ந்தன.... இப்போ அந்த வரிகள் அழகான் ஃப்ரேமுக்குள்.... அது இருக்கும் இடம் அவரது மேசையில் முக்கியமான போட்டோ வரிசையில் நடுநாயகமாய்........ எல்லாமே இறை அருள்..... இவையெல்லாமே எனக்கு ஞானபீடப் பரிசுகளே.......