Monday, December 16, 2013

என் மகன்களுடன் சென்னையில் ஒரு நாள்......

டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி காலையில் தினேஷ்  என்னிடம் வந்து அப்பா, “ நாளைக்கு நீங்க சென்னைக்குப் போகும் ரயிலில் எனக்கு டிக்கட் கிடைக்குமா ?” என்று கேட்டான்.
நான்,” அது எப்படி கிடைக்கும் ? அதுவும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல சான்ஸே இல்லை.தட்கல்ல வேணும்ணா  கிடைக்குமா என முயற்சிப்போம்...”

பத்து மணிக்கு மேல் தான் தட்கல் கிடைக்கும்.....  எதற்கும் முயற்சி செய்து பார்ப்போமே என IRCTC வலை தளத்திற்குள் புகுந்து தேட ஆரம்பித்தேன்.

 RAC 5 என அன்றைய தேதிக்கு இருக்கை அதுவும் செகண்ட் AC யில் இருந்ததைக் கண்டேன்.

எப்படியும் இருந்தாவது போகலாமே என நினைத்து e-ticket முன்பதிவு செய்து அச்சுப் பிரதியும் எடுத்தேன்.

அதன் பிறகு திரும்பி நாகர்கோவிலுக்கு 11ஆம் தேதி மாலை வர எந்த ரயிலிலும் முன் பதிவு செய்ய இயலவில்லை. உடந்தானே ஓசூரில் இருக்கும் என் மகன் முருகனிடம் சொல்லி பஸ்ஸில் டிக்கட் எடுக்கச் சொன்னான் தினேஷ்.

அவனும் மாலை 7.30 மணிக்கு ரதி மீனா பஸ்ஸில் ரிசர்வ் பண்ணிவிட்டான். அதனை அவன் எனக்கு அனுப்பி அச்சுப்பிரதியும் எடுத்துவிட்டோம்.

11-ஆம் தேதி மொபைல் போணில் PNR status பார்த்ததில் RAC 1 எனத் தெரிந்தது. இரண்டு மணிக்கூர் கழிந்து பார்த்ததில் படுக்கை உறுதி செய்யப்பட்டது தெரிந்தது.

Chart போட்டபின் பார்த்ததில் A2-18 ..... ஒரே ஆச்சரியம். எனக்கு A2-17 என்பதால்.

நான் தனியாய் அதுவும் கழிந்த ஒருவாரம் தலைவலி,.ஜலதோஷம், காதுவலியால் ENT Dr. விஜயராஜிடம் மருந்து சாப்பிட்டு வந்து குணமாகியும் குணமாகாமலும் இருந்ததால் சென்னைக்கு செல்வது என் மனைவிக்கு சற்று பயம் இருந்தது..... இப்போ மகனும் கூட வருவதால் அவளுக்குத் திருப்தி...

சென்னை சென்று எக்மோரில் இறங்கி ஒரு ஆட்டோவ்ல என் நண்பன் பப்பு வீட்டுக்குப் போகணும் என்று எண்ணியிருந்தேன்.

“மாமா.....” ஒரு குரல். அது வந்த திசையில் திரும்பிப் பார்த்தால் பப்புவின் மகன் ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.

அவன்  Call Taxi யில் எங்களையும் அவனது மாமியாரையும் அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு காலை உணவு உட்பட அனைத்தையும் முடிக்கவும் முருகன் கேசவன் காரில் வரவும் சரியாய் இருந்தது.

நம்ம வீடு வசந்தபவனில் நிச்சயதாம்பூல விழா.... அது எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் எதிர்பக்கம்.... மதுரவாயில்....பப்புவும் விழாவுக்கு எங்களுடன் வந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

சாப்பாடு முடிந்ததும் ஆவடி ராம்ஜி வீடு, அம்பத்தூர் முருகன் வீடு, பாடியில் உறவினர் ஒருவர் வீடு என எல்லோர் வீட்டுக்கும் போய் வந்தது 3.30 மணிவரை நேரம் போய் விட்டது.  எனக்கு ரயில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்... அது 6.50 மணிக்கு....

 என்ன செய்ய....நேரம் போகணுமே.Grand Sweets கடைக்குப் போய் ரசப்பொடி,வத்தக்குழம்பு .... வாங்கிவிட்டு எக்மோருக்குப் போனோம்.

நான் தனியாக செல்வதில் முருகனுக்கு இஷ்டமே இல்லை.....

பிளாட்பாம் டிக்கட் எடுக்க தினேஸ் போனான்.....

  ‘அப்பா..... அந்த போர்ட பாத்தீங்களா.... ”இது முருகன் என்னிடம் சொன்னது....

சார்ட் தயாரிப்புக்குப்பின் முன் பதிவு செய்யும் இடம்  அது எனத் தெரிந்தது.

சற்றும் யோசிக்கவில்லை...... நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸில் நாகர்கோவிலுக்கு டிக்கட் இருக்கா எனக் கவுண்டரில் இருந்தவரிடம் கேட்டான் முருகன்....

ஆம் .... செகண்ட் ஏசியில் ஒரு சீட் இருக்கு.

”எனக்கு வேணும்.....”

அந்த பாரத்தில் எழுதித் தா.....

அவசரம் அவசரமாய் எழுதினதில் நான்  train name-ல் தினேஸ் பெயரை எழுத, அப்பா..அப்பா... அது ட்ரயின் பேர் எழுதணும் அல்லது நம்பர் எழுதணும்...

அடுத்த பக்கம் தெளிவாய் எழுதிக் கொடுத்தான்.....

விலாசம் எழுதல்லையே என்றார்....

அதுவும் எழுதிக் கொடுத்தான்......

தேதி எழுதல்லையே என்றார்......

எப்படியோ ஒரு வழியாய் டிக்கட் தயாராக அவர் 1335 ருபாய் எனகேட்க நான் 1500 கொடுத்தேன்.

35 ருபாய் தாருங்கோ எனக் கேட்க முருகன் தயாராய் வைத்திருந்ததைக் கொடுக்க ஒருவழியாய் டிக்கட் கிடைத்தது...... மீண்டும் ஆச்சரியம்....  அதுவும் நான் பயணம் செய்யும் அதே கோச்.  எனக்கு 40 அவனுக்கு 46.....

தினேஷ் மூணு பிளாட்பாம் டிக்கட் எடுத்துக் கொண்டு வந்தான்.

அவனுக்கு டிக்கட் கிடைத்ததில் மகிழ்ச்சி..... அஞ்சு ருபா போச்சே என்றான்....

அது மட்டுமா போச்சு .... பஸ் டிக்கட் அந்தக் காசும் போச்சே என்றேன்....

அது போட்டும்பா.... அண்ணன் உங்ககூட வருவது எவ்வளவு வசதி....

ரயிலில் ஏறினோம்.... தினேஸ் உள்ளே இருந்தான்...

நான் வெளியே வந்து சார்ட்டில் என் பெயர் இருக்கா எனப் பார்த்துப் பெயர் கண்டதில் ஒரு திருப்தி.....

“ முருகா .... நீ போ...”

நீங்க முதல்ல உள்ள போங்கோ..

”என்னடே... நான் என்ன சின்னப் பையனா”...

அம்ம சொல்லி இருக்கா.... நீங்க எப்பவும் ரயிலவிட்டு கீழ இறங்கிதான் நிப்பீங்களாம்.....

சரிடெ....

நான் ரயிலில் ஏறினேன். முருகன் விடைபெற்றுச் சென்றான்....

ரயில் புறப்பட்டது. தினேஸ், “ எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்குப்பா....போகும்போதும் வரும்போதும் அருகருகே சீட் கிடைச்சது......” என்றான்......

எல்லாமே இறைவன் செயல்..... உள்ளதைச் சொல்.... நீ  என்னுடன் வந்தாயே....நீயாக வந்தாயா... அம்ம சொல்லி வந்தாயா....

“ நானாகத்தான் வந்தேன்...... விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் உங்களுக்காக ..... உங்களுக்காக மட்டுமே வந்தேன்பா..அம்மாவுக்கும் நான் உங்ககூட வந்ததில் ரொம்ப சந்தோசம்தான்....

  அப்பா ரயில விட்டுக் கீழே இறங்கி நிப்பா.பாத்துக்கோ என...போணில் சொல்லிக் கொண்டே இருந்தா.

என்னடா.... இது....நான் என்ன சின்னப் பையனா.......  ஆம்....வயது ஏற ஏற....

வாழ்வு வசந்தமாய் இருந்திட இந்த அனுபவத்தைவிட எனக்கு வேறென்ன வேண்டும்.

என் கைப்பிடித்து நடந்தார்கள் எப்பவோ..... இப்போ அவர்கள் கைப்பிடித்து நடப்பதில் எனக்கு இன்பமே......



1 comment: