Wednesday, January 30, 2013

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே…



கடுக்கரையில் உயர்நிலைப்பள்ளி இல்லாத அந்த வருடத்தில் அதாவது 1960-இல் பூதப்பாண்டி சர்.சி.பி.ராமசாமிமுதலியார் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 9-ஆம் வகுப்பில் அவன் சேர்ந்து படித்தான். வசதி இருந்தும் நடந்து தான் பள்ளிக்கூடத்துக்கு செல்வது தான் அவனுக்கும் பிடித்திருந்தது.
அவனுடன் ஆனந்தம்பிள்ளை, வேலப்பன்,அய்யப்பன் மற்றும் பலர் தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்வார்கள். இரண்டு வழிகள் உண்டு. ஒன்று குறத்தியறை, தெரிசனம்கோப்பு வழியாக பஸ்களெல்லாம் செல்லும் சாலை. மற்றொன்று கடுக்கரை ஆற்றங்கரை வழித்தடம். தெள்ளாந்தி வழியாக சென்று சானல் அருகே செல்லும் பதைவழியாகப் போய் வயல் வரப்பில் வரிசையாக நடந்து செல்வது அனைவருக்குமே ஆனந்தமாய் இருக்கும்.மாலையிலும் நடந்தே பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வருவார்கள்.

வகுப்பாசிரியர் சமூகப்பாடம் நடத்தி அவ்வப்போது வகுப்பில் டெஸ்ட் எழுதச் சொல்வார்.  ஒரு தடவை அதிக மார்க்கு (மதிப்பெண்) எடுத்தவர்களுக்கு ருபாய் பத்து பரிசளிப்பதாகச் சொன்னார். டெஸ்டும் நடந்தது. அவன் தான் அதிக மார்க்கு எடுத்தான். மார்க்கு எடுத்த விவரம் ஆசிரியர் சொல்வதற்கு முன்னரே மாணவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது.
அவனுடன் படித்தவர்களில் வசதி குறைந்தவர்கள் பலர் உண்டு.  அவர்களில் சாம்ராஜும் ஒருவன். தனக்கு கிடைத்த பரிசுத்தொகயை சாம்ராஜுக்கு கொடுத்தால் சாம்ராஜுக்கு பிரயொஜனமாக இருக்குமே என்ற எண்ணத்தில் தனது சக நண்பர்களிடம் அதைப்பற்றிக் கூறினான். ஒருவன் கூட அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
வகுப்புக்கு ஆசிரியர் வந்தார்…. விடைத்தாளை அனைவருக்கும் கொடுத்தார்.
“ யாரப்பா கூடுதல் மார்க்கு எடுத்தது ?”
அவன் எழுந்து நின்றான்.
 “ உன் பேரென்ன?” ஆசிரியர் கேட்டார்.
அவன் தன் பெயரைச் சொன்னான்.
ஆசிரியர் பரிசுத்தொகையை அவனுக்கு கொடுக்க அவர் அமர்ந்திருக்கும் மேசை பக்கம் வரும்படி அழைத்தார்.
மிகவும் மகிழ்வுடன் எழுந்து நின்று,  “சார்….. எனக்குத் தரவேண்டிய ருபாயை சாம்ராஜுக்கு கொடுங்க சார்…. அவன் மிகவும் பாவம்…” என்று சொன்னான்.
அவன் சொன்னதும் ஆசிரியர் முகம் சிவப்பாய் மாறியது…… கோபக் குரல் ஆவேசமாய் பாய்ந்தது……
அவனைப் பாத்து ,” நீ என்னடே…. பெரிய பணக்காரன்….இந்தக்காசு உனக்குப் பிச்சக்காசு…. மிகவும் அதிகமாகவே கோபப்பட்டு பேசினார்.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை….. தன்னை எதற்காக திட்டுகிறார்….. மாணவர்கள் மத்தியில் கூனிக் குறுகிப் போனான்.
நல்லது செய்ய நினைத்த தனக்கு வந்த நிலைகண்டு வருந்தினான்…. கண்களில் நீர்….
மறுநாள் வகுப்பாசிரியர் வந்தார். வகுப்பில் இருந்த அவன் அமைதியாய் நொந்த உள்ளத்தோடு முந்தினநாள் ஏற்பட்ட மனவலி மாறாமல் ஒரு அமைதியற்ற நிலையில் அமர்ந்திருந்தான்.
ஆசிரியர் அவனை பெயர் சொல்லி அருகே அழைத்தார். பரிசுத்தொகையைக் கொடுத்தார். சாம்ராஜையும் அழைத்தார். அவனை அந்தப் பணத்தை சாம்ராஜிடமே கொடுக்கச் சொன்னார்.
அவன் செய்த தப்பு என்னவென்று புரிந்ததால் ஆசிரியர் மீதுள்ள மதிப்பு மேலும் கூடியது.
காலச்சக்கரம் சுழன்றது……. கல்லூரியில் ஆசிரியராய் பணியில் இருந்தபோது பொன்னப்பநாடார் காலனியில் வீடெல்லாம் கட்டி வசித்து வந்தான். ஒருநாள் அதே காலனியில் தற்செயலாக ஒருவரைப் பார்த்தான். ஹோலி க்ராஸ் கல்லூரிச் சாலை கடைவீதியில் உள்ள ஒருவீட்டில் இருந்து வெளியே வந்த அவர் அவன் பயணம் செய்த பஸ்ஸில் ஏறினார்.அவன் எழுந்து அவருக்கு இடம் கொடுத்தான். அவர் அவனை அறியவில்லை. அவனே அவரிடன் தான் பூதப்பாண்டி பள்ளியில் படித்த உங்கள் மாணவன் என அறிமுகப்படுத்தினான்.
உன் பேரென்ன ? அவர் கேட்டார்.
”பொன்னப்பன்”. அவன் சொன்னான்.
’அப்பம் நீ கடுக்கரை ஆறுமுகம்பிள்ளை அண்ணாச்சியின் மகன்லா…!’ என்றார்.
ஓய்வு பெற்ற வயதிலும் மிகக் கனிவாகப் பேசியது மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
அந்த ஆசிரியர் இன்றில்லை.
அவர் திரு. மரியேந்திரன்.

Monday, January 21, 2013

நான் எழுதிய பதில் கடிதம்.......


அன்பு மிகு அண்ணன்,
நலம்.நலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி.
உங்கள் அன்புக் கடிதம்(9-11-12)  கிடைத்தது. எதிர் பாராமல் உங்கள் மதிப்பு மிகு வரிகள் பாராட்டும் வரிகளாகக் கண்ணில் பட்டதும் நான் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. மேலும் நன்றாக எதையாவது எழுத வேண்டும்; நீங்கள் பார்த்துப் படித்துப் புகழும்படியாக எழுதுவது அமைய வேண்டும்; ஒரு பேராசையும் உத்வேகமும் மனதில் எழுகின்றன.

மலர்க் குழுவில் நானும் ஒருவன் – இது நான் பெற்ற வரம்.
என் கட்டுரை மலரில் இடம் பெறுவதற்குக் காரணம் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. பெ.ஆறுமுகம்பிள்ளை.

எல்லாப் புகழும் எம் தலைவருக்கே.

 ‘எங்கள் உரை ‘ படித்தீர்களா ? நன்றாக இருந்ததா ? அதை எழுதியதும் நான் என்பதால் அதற்கு எத்தனை மதிப்பெண் என்று அறிய விரும்பும் மாணவன் போல் கேட்கிறேன்.
ஒவ்வொரு தடவையும் தந்தை போல் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. கரம் கூப்பி வணங்குகிறேன்.
வீட்டில் அனைவரையும் அன்பாய் விசாரித்து எழுதியதையும் கூற வேண்டுகிறேன்.
இப்படிக்கு 
தம்பி தங்கப்பன்.
நாகர்கோவில்
15-12-2012


Sunday, January 6, 2013

கருத்தரங்கம் ஒன்றில் பேசியது-----2


ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.  
                 
இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் கூத்துக்கள் பெற்றுக் கொண்டது போல், பழைய நாடகங்களில் அல்லது கூத்துக்களில் இருந்து இன்றைய இலக்கியம் பல கூறுகளை  எடுத்துக் கொண்டதும் உண்டு

உதாரணமாக சிறிய காப்பியமான  பாரதியின் பாஞ்சாலி சபதம் . இது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரவுபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்த காப்பியமாகும்
.
 தமிழில் நாடக நூல் இல்லை என்கிற குறையும் பின்னாட்களில் மனோன்மணியத்தின் வரவால் நீங்கிற்று. (ஆனாலும் இது ஒரு தழுவல் நாடகம் என்கிற குறையும் உண்டு.)

  இவ்வாறு, கூத்து அல்லது நாடகம் என்ற நிகழ்த்துக்கலை, தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாகவே உள்ளது.

என் உரையை முடிக்குமுன் நான் சமீபத்தில் படித்த ஒரு தகவல்.
நீலகிரி மாவட்ட வனப்பிரதேசத்தில் வாழும் கோத்தர்களின் நடனங்கள் ஆதிகாலத்தவை.. பக்தியை முன்னிறித்தி ஏராளமான வாய்மொழிப்பாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன. நாதஸ்வர வடிவிலான  கட்டைக் குழலான கொல் என்னும் ஊது கருவி, கொப் எனும் இசைக்கருவி, தபக், பர், குணர் ,…. போன்ற தோல் கருவிகள், மூலம் இசைத்து பாடுகிறர்கள். கொப் என்னும் இசைக்கருவி விலங்குகளின் கொம்புகளால் ஆனது. இப்போது செம்பால் செய்யப்படுகிறது. இவர்களில் ஆண்கள் ஆடும் ஆட்டத்தின் பெயர் கண்மு ஆட்டு. பெண்கள் ஆடுவது பெமு ஆட்டு. இன்றும் தினை விதைப்புத் திருவிழா, அறுவடைத்திருவிழா, மாடுகளுக்கு உப்பு புகட்டும் திருவிழா, கில்லிப் பண்டிகை என விழாக்கள் கொண்டாடி தங்களுடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.

பொம்மலாட்டக் கலயைப் போற்றும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 21-ஆம் தேதி உலக பொம்மலாட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

நமது பாரம்பரியக் கலைகள் அழியாமல் காத்திட, தமிழ் நாட்டு உயர்கல்வித்துறை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நாடகத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. பாளையாங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பட்ட மேற்படிப்புத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இது போல் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் கூத்து மற்றும் நாடகத்துறை, தமிழ்ப்பாடத்தின் பகுதியாக வரவேண்டும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் இருக்க வேண்டும்.

இந்தக் கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அனைத்தும் நிகழ்த்துக்கலைகளுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.

நாடகத்தமிழ் வளம் பெற தரம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கிட உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் பேசிய தமிழில் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.

திறம்பட மிகச் சிறப்பாக கருத்தரங்கத்தை நடத்திய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் Dr. சாந்தாள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் Dr.தெ.வே.ஜெகதீசன் ,மற்றும் தமிழ்த் துறைப்பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
வாய்ப்பளித்தமைக்கு என் நன்றியைப் பதிவு செய்து விடை பெறுகிறேன்.
நன்றி….. வணக்கம்…..

கருத்தரங்கம் ஒன்றில் பேசியது-----1


புது ஆண்டு 2013.-ல் 3-1-13 முதல் 5-1-13 வரை தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை ஒரு கருத்தரங்கத்தினை மிக நேர்த்தியாக நடத்தி முடித்தது. ஒருங்கிணைப்பாளர் திரு.தெ.வே.ஜகதீசன் எனை அன்போடு அழைத்ததை ஏற்று இறுதி நாள் நிகழ்வில் நானும் பேசினேன்.

”பழந்தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்துக்கலைகளும் அவற்றின் நீட்சியும்” என்பது தான் கருத்தரங்கத்தின் தலைப்பு.
நான் தயாரித்து வைத்திருந்த அனைத்தும் முதல் நிகழ்வில் கிட்டத்திட்ட எல்லா பேச்சாளர்களும் பேசிவிட்டனர். எதனைப் பேசுவது என்ற கலக்கம் என் மனதில் எழுந்தது. ஆனாலும் உலக வலைத்தளம் கைகொடுத்தது. தினகரன்  தீபாவளி மலரும் உதவிற்று.

நான் பேசியது:-

அனைவருக்கும் என் அன்பான மாலை நேரத்து வணக்கம்.
தனித்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் கருத்தரங்கத்தில் கழிந்த மூன்று நாட்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ,ஒருவர் அல்லது பலர்  அரங்கமேடையில் நிகழ்த்தும் பொம்மலாட்டம், நாடகம் ,கூத்து, நடனம்,வில்லுப்பாட்டு போன்ற  நாட்டார் கலைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை பலரும் அழகு தமிழில் வாசிக்கக் கேட்டிருப்பீர்கள்.
மனிதன் தனது துன்பச் சூழலில் இருந்து விடுபட, அதில் இருந்து மீள்வதற்கு கலைகளின் துணையை நாடுவது இயல்பாக இருந்த காரணத்தால் நிகழ்த்துக்கலைகள் உருவாயின.
கால மாற்றத்தால் நம் உணவு,உடை மாறின. உழைப்பவர்கள் போற்றிய நிகழ்த்துக் கலைகளும் மாறிற்று . பகுத்தறிவின் பேரால் பல கலைகள் புறக்கணிக்கப்பட்டன. பாரம்பரிய கலைகள் பல  இன்றைய தொழில் நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்கு பலியாயின..
நமது குமரி மாவட்டத்தில்  இருந்த அறுபத்தி மூன்று  வகையான நிகழ்த்துக் கலைகளில் பதினொரு கலைகள் மட்டுமே  எஞ்சியிருக்கின்றன என்பதை நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
நாடகத்தின் முதல் நிலை தெருக்கூத்து..கோவில் திருவிழாக்களிலும் தெருவில் முச்சந்தியை மேடையாக்கி கூத்து மூலம் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தார்கள். கூத்து என்பதன் வளர்ச்சியே நாடகம் என்று  மாறியது. நாடகத்திற்கு பண்ணை என்ற ஒரு பெயரும் உண்டு.
 நாடு + அகம் என்பதே நாடகம். நாடு என்பது மக்கள். அகம் என்பது மக்களின் உள்ளங்கள். மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவமே நாடகம்.
ஒரு நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம்,வருங்காலம்- மூன்றையும் தன்னகத்தே காட்டுவது நாடகம்.
நாட்டு நடப்பை , நாட்டின் கலாச்சாரத்தினை,நாகரீகத்தை நாடகம் பார்த்து தான் மக்களால் அறிய முடிந்தது., கூத்தைப் பின்னுக்குத் தள்ளிய நாடகமும்
இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பொம்மலாட்டத்தின் இன்னொரு பரிணாமம் என்று சொல்லப்படும் திரைப்படம் வந்தது. கிராமங்களில் நாடகம் போடுவது குறைந்து போய் பின் அறவே நின்று போயிற்று
ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. 
                  
தொடரும்