Monday, August 25, 2014

அவன் கதை

அவன் கதை மட்டுமல்ல. அவனோடு பயணம் செய்தவர்களின் கதையும்தான். இத்தனை நாட்களும் எழுத மனம் மறுத்த கதை. வாழ்க்கையில் மகிழ்வான வடுக்கள் ,சுவடுகள்..... இவைகளை மட்டுமே பதிவு செய்ய மனம் ஆசைப்பட்டது தான் மறுக்கக் காரணம்.

இது அவன் கதை......எழுதத் தெரியாமல் எழுதிய வரிகள்,

நாற்பது.....இல்லை அதற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால் அவன் கதையின் நடுப்பகுதி ஆரம்பம் ஆனது.... அவனுக்குத் தெரியாது குடும்பம் என்றால் என்ன என்று. வசதியான அப்பா.....அம்மா.... வரவே இல்லா வசந்த காலம்......தடுமாற்றம் இல்லா பயணம் நடுவே தடை வந்தது. ஆம்! அவன் தோற்றான் முதல் முறையாக.... கல்லூரி இறுதி ஆண்டில்...... அவன் முதல்முறையாக அப்பா அழுவதைப் பார்க்கிறான்.....அழுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அழுதவர் அப்பாவாக இருக்கலாம். எதற்கும் கலங்காத நெஞ்சுறிதி கொண்ட ஒரு மாமனிதர் ஒரு மகன் தோற்றதற்காக அழுதது அவனை ஊரை விட்டு விரட்டியது.....அவருக்காக படித்தான்..... வெற்றியும் பெற்றான்.

அவன் வங்கியில் வேலையில் சேர ஆசைப்பட்டு பலரைப் பார்த்தான்.....பரிட்சைகள் எழுதினான்...... எல்லாமே தோல்வியில் முடிந்தன......அவனது கல்வியால் அவனுக்கு நினைத்தவேலை கிடைக்கவில்லை. விரும்பாத வேலை கிடைத்தது. வேலை கிடைத்தவனுக்கு அடுத்து என்ன நடக்கும். கல்யாணம் தான்.....

கல்யாணம் அவன் மனம் போலவே இனிதாய் நடந்து முடிந்தது.....
முதல் நாள்.....இல்லையில்லை..... இரவு......

அந்த வீட்டின் ஏதோ ஒரு பகுதியில்  இருந்து சினிமா பாடல் புறப்பட்டு மணமக்கள் இருந்த அந்த அறையினுள் நுழைந்து அவன் காதினுள்ளும் நுழைந்து என்னவோ செய்தது.

”இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை, இதயத்தில் விழுந்தது திருமண மாலை,உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்,உலகம் நமக்கு இனி ஆனந்தக்கோலம்,இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை.......” எங்கள் தங்கராஜாப் படப் பாட்டு.....

அந்த இரவு வேளையில் அவர்கள் கேட்டு, ரசித்து மகிழ வேண்டிய பாடல்......

அது புறப்பட்டு வந்த இடம் மாடி அறை. அங்கு அவன் நண்பன்.....தனியாக தன் இளம் மனைவியை இழந்து .........பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தான்

”இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை”- இந்த வரி அவன் நண்பனுக்குப் பொய்யாகிப் போன காலமது.....

அந்த நண்பனின் தங்கை அவனருகில் அவன் மனைவியாய் இருந்தாள்.....அவள் கண்களில் கண்ணீர்......அந்தப் பாடல் கேட்டு மகிழவும் முடியாமல் விம்மவும் முடியாமல் தவித்தாள்....அன்னியமில்லா அவள் கண்ணீர் கண்டு அவன் மனமும் கனக்கவே செய்தது....கலங்கிய கண்ணோடு அவள் இழந்த அண்ணி பற்றியே அதிகம் பேசினாள்.  நாதஷ்வர மங்கள வாத்திய இசையோடு ஊரே பொறாமைப் படும்படியாக நடந்த திருமணம்....... யார் கண்பட்டதோ தெரியவில்லை.சித்திரை மாதம் ஒருநாள், நித்திரை இழந்தான்.... அவன் நண்பன் மட்டுமல்ல.... எல்லொருமே.....

காலம் தானே துன்பத்துக்கு மருந்து.....

திருமணசாட்சியாய் அவன் நண்பனுக்கு  ஒரு மகள்....ஏதுமறியாத வயது.... அன்னையாய் அனைவரும் தாயில்லா அவள் மீது பாசம் கொண்டிருந்தார்கள்....அன்னையின் ஸ்பரிசம்  அறிந்திராத அல்லது மறந்த இளம் தளிர் அவள். 

அலுவலகவேலை முடிந்து வரும் வேளையில் வீட்டில் தந்தைக்காக காத்திருக்கும் அந்த மகளை உச்சிமோந்து அணைத்து அன்பைக் காட்டும் போது எத்தனையோ தடவை அவன் கண்களில் நீர் தளும்பியதுண்டு....

காலங்கள் வேகமாய்ப் போனது...... பலவித வசந்தங்கள் வந்த வண்ணம் அனைவரது வாழ்க்கையும் அமைதியாய் போய் கொண்டிருந்தது.....அவன் நண்பன் வாழ்விலும் மறுமணம்  தென்றல் காற்றாய் வீசியது.

அவன் வீட்டில் இடி விழுந்தது போன்ற சம்பவம்..... தங்கையின் கணவர் வேலை பார்க்கும் இடத்தில் இதயவலியால் இறந்த செய்திகேட்டு அவன் அடைந்த துன்பத்துக்கு அழவே இல்லை....தடைகள் பல தங்கையின் வாழ்க்கையில்.....தடைகளை தடங்களாக மாற்றி முள்களை அகற்றி மலர் விரித்து மறுமணம் செய்வித்து அவர்கள் வாழ்விலும் தென்றல் வீசியது கண்டு மகிழ்ந்தான்.....

அவன் தந்தை மறைந்தார்.... தலைவனில்லா ,நங்கூரமில்லா கப்பல் திசை மாறிப் பயணித்தது. துன்பமும் துயரமும் துரத்தியது அவனை. 
ஆனாலும் வாழ்க்கை பல அனுபவங்களைக் கொடுத்தது..... தனியாக எங்கோ தங்கினான்.... ஆனால் அவனை விதி விடவில்லை.... எங்கேயடா போகிறாய்... குடும்பம் என்றால் என்ன ....? வா....வா.... என்றழைத்தது.... 

ஆம்.....அவனது அண்ணனின் கப்பல் கவிழ்ந்தது.....அதனால் தவித்தவர்கள் அவன் கப்பலில்.....வந்த சுமையை சுகமாக அவன் ஏற்றுக் கொண்டான்....அவர்களது வாழ்விலும் தென்றல் வீச அணில் போல உதவி செய்து மகிழ்ந்தான்....

காலம் வேகமாகச் சுழன்று சுழன்று போய்க் கொண்டிருந்தது..... வெவ்வேறு கப்பல்களில் பயணம்..........எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று எண்ணி அவன் பயணம் தொடர்ந்தது.

போற்றுபவர்கள் போற்றும் போது அகம்மகிழ்ந்தான். தூற்றுபவர்கள் தூற்றியபோது மனம் உடைந்தான்.... ஆனால் அவன் பயணம்.........
சமீபத்தில் அவன், அவன் நண்பன், இன்னொருவருடன் மிக உற்சாகமாக ஓரிடம் சென்ற போது இடியாய் நண்பனின் காதில் விழுந்த செய்தி கேட்டு என்ன செய்வது..... எப்படி ஆறுதல் கூறுவது.... தெரியவில்லை .... இறுகிய மனத்துடன் அவன் பக்கத்தில் இருக்க.....அந்த அமைதியிலும் அவன் நண்பன் விட்ட பெருமூச்சு புயலாய் வீசியது..... நண்பனின் ஆசை மகளது கணவனுக்கு நெஞ்சுவலி. ... எல்லாம் முடிந்து விட்டது என்பதை நம்பவே முடியாதநிலை....

இதையெல்லாம் கேட்க நான் இன்னும் உயிரோடு இருக்கணுமா,,,,,விம்மல்.....நண்பனின் அழுகை அவனை மிக மிக வாட்டியது.....

தன் கண் முன்னால் குழந்தையாய், சிறுமியாய்,பெண்ணாய் வளர்ந்த அந்த நண்பனின் ஆசை மகள் இப்படியொரு சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள். இப்போது அவளை அரவணைக்க அவள் மகள் கைகளும் இருக்கின்றன..... சுமையைத் தாங்க தோள்களும் பல உள்ளன........
வாய்விட்டு அழட்டும்.....அழுவதைத் தடுக்காதீர்.......... கண்ணீர் வற்றட்டும்.... அதுவே அரும் மருந்து.

அவன் போனான்......நண்பன் இருந்த அந்த ஆசை மகள் இல்லம் நோக்கி. நண்பன் மகள் முகம் காண வலுவிழந்தான்...
ஆறுதல் சொல்லப்போனவன் ஆறுதல் தேடி அழுதான்..........

காலனே ! வாடா என்னருகே..... அழைத்தானே முண்டாசுக்கவி பாரதி....அன்று பாரதி காலால் எட்டி உதைத்து அழித்திருக்க வேண்டாமா காலனை.....



No comments:

Post a Comment