Thursday, February 13, 2014

வலியைத் தந்தது சுமை......வலிமையைத் தந்தது பாசம்....

நான் ஓசூரில் இருந்து திங்கள்கிழமை மத்தியானம் இரண்டரை மணிக்குப் புறப்படத் தீர்மானித்து என் மகனிடம் ஹனீபாவின் ஆட்டோவினைக் கொண்டு வரச் சொன்னேன். நான் சொல்லும்போது டாக்சியில் சென்று கொண்டிருந்தேன்...

“ நீங்க நாகர்கோவிலில் இருந்து பயணம் செய்திருக்கீங்க
களைப்பாக இருக்கும்லா...வாடகைக் காரில் போகலாம்.”...என்று சொன்னான் என் மகன் முருகன்.
“எத்தனை ருபாய் ஆகும்” .... நான் கேட்டேன்.

“நான் கொடுக்கேன்பா”

“யார் கொடுத்தாலென்னா..... எத்தனை ருபா ஆகும்னு சொல்லு...”

 “1200 ருபாய் கேட்பான்”.....

“இல்ல சார் 1000 தான் ஆகும் மனசாவடிக்கு (கஸ்தூரி நகர்)......” .சொன்னது காரை ஓட்டி வந்தவர்.

எனக்கு அவன் சொன்ன ஊரின் பெயர் ........ சற்று குழப்பமாய் இருந்தது. இரண்டும் ஒன்றுதான் என பின்னால் அறிந்து கொண்டேன்.

ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வர 250 ருபாய் வாங்கினான். அரை மணிக்கூர் காத்து நின்றதற்கும் சேர்த்துதான் அந்த ருபாய்....

அதிகமாய் வாங்கியது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.....

என் மகன் நாங்க வந்த காரின் ஓட்டுனரிடம் சொன்னான். “அப்பாவிடம் கேட்டு போன் பண்ணுகேன்....”

வீட்டுக்குள் போனதும் அவன் என்னிடம், “ எத்தனை மணிக்கு காரை வரச் சொல்லணும்.....”

“கார் வேண்டாம்போ...”

அவன் என் பதில் கேட்டு ஒன்றும் சொல்லாமலே என் அருகில் இருந்து போனான்.

எனது பேரனைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல ஆட்டோஹனீபா வந்தான்....

அவனிடம் இரண்டரை மணிக்கு ஆட்டோவைக் கொண்டு வரச் சொன்னாள் என் மருமகள்.....

என் மகன் அவன் மனைவியிடம் சொன்னது கேட்டது. “ அப்பாவை பஸ்ல பெங்களூருக்கு அனுப்பீராதேன்னு அம்ம போன் பண்ணி சொன்னா.... அப்பா கேக்க மாட்டாங்களே....”

ஆட்டோ சொன்ன சமயத்தில் வந்தது..... ஓசூர் பஸ்நிலையத்துக்கு போக 70 ருபாய் என் மகன் கொடுத்தான்....

பஸ்நிலையம் வந்து இறங்கினேன். நான் சுமைகளை தூக்கித் தோளில் போட்டு நடந்தேன். நடக்க நடக்க என் சுமை அதிகம் போல் தெரிந்தது... நான் கொண்டு வந்தது....தேங்காய்.... முறுக்கு..... முந்த்ரிக்கொத்து....பல இனிப்பு.... நான் போகும் இடம் என் மகள் வீடு.

தனியாய் என் மகள் வீட்டுக்கு போவது இதுவே முதல்முறை.... எப்பொழுதும் என் மனைவியுடன் தான் செல்வது வழக்கம்....

பஸ்ஸில் ஏறினேன்.... எங்கு இறங்க வேண்டும் என்று கேட்க நானும் சொல்லி 35 ருபாய் டிக்கட் வாங்கினேன். இறங்க வேண்டிய இடம் என தவறுதலாய் ஒரு இடத்துல இறங்கி நின்று பார்த்தால் ....... அதிர்ச்சி.....

அடுத்த பஸ் நிற்கும் இடம் கொஞ்சம் தூரம்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.நடக்க ஆரம்பித்தேன்.....

சுமை எனக்கு வலியைத் தந்தது....பாசம் வலிமையைத் தந்தது.

 ஆனாலும் கைப்பையின் வார் அறுந்து தோளில் இருந்து விழுந்தது  எனது பை......விழுந்த இடம் சில்க்ப்போர்டு சாலை....

என்ன செய்வது தலையில் தூக்கிக் கொண்டு செல்லவா....அல்லது ஆட்டோ ஏதேனும் பிடிப்பதா.....வேண்டாம்....

நான் ஒருவன் தானே....

சுமந்து சென்று  பஸ்நிலையம் போய் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி வீடுவந்து சேர்ந்தேன்...

“அப்பா.....உங்கள் தோள் சிவந்து போய் இருக்கே.... ஏம்பா..”
 என் மகள் கேட்டபோதுதான் பார்த்தேன். அது சிவந்துதான் இருந்தது.

அறுந்த வாரை சரிபடுத்த என்ன செய்ய .....Stapler pin -வைத்து முயற்சி செய்தேன்.... ம்ஹூம்.....

என் மகள் சொன்ன கடைப் பக்கம் போய் பார்த்தேன்...

பாதையோர நடை மேடை. அதனைத்தடுத்துக் கொண்டு ஒரு பெட்டிக்கடை. அதில் ஒருவர் செருப்பு ஒன்றைத் தைப்பதில் மும்முரமாய் இருந்தார். குளிர் சற்று கூடுதலாக இருந்ததாலோ என்னவோ இரண்டு சட்டை அணிந்து மேலே ஸ்வெட்டெரும் அணிந்திருந்தார். கண்களில் தங்க நிற சீதாப்பாட்டி அப்புசாமி கண்ணாடி.அவர் சற்று தடிமனாய் ஆடுகளம் தனுஷின் குருநாதர் போன்று இருந்தார்.அவர் முன்னால் உள்ள சாலையில் எங்கிருந்தோ வந்த தண்ணீர் தேங்கியும் , நகர்ந்தும் போய்க் கொண்டிருந்தது.சாலையில் கார்களும் மற்ற வாகனங்களும் வேகமாக....மிக வேகமாக....சர்...சர்... என ஓடிக் கொண்டிருந்தன.

என்ன வேணும் என்பது போல் பாவனையால் என்னை சற்று தலையைத் தூக்கிப் பார்த்தார்.. அறுந்த வாரைக் காண்பித்தேன். வாங்கிப் பக்கத்தில் வைத்தார். அரை மணிக்கூர் கழிந்து வரச் சொன்னார்.

நான் காத்திருக்கிறேன்.... எனக்கு திரும்பி வர நேரம் இல்லை எனச் சொல்லி அங்கேயே நின்ற ஒரு மரத்தில் சாய்ந்து நின்றேன். சற்று பின்னால் காலையில் திறக்காதக் கடைப் படிகளில் ஒரு பெரியவர் .....நீல நிறச் சட்டை.... பேண்ட்ஸ்....செருப்பில்லா கால்.....அமர்ந்திருந்தார்.

அவருடைய செருப்பை தான் தைத்துக் கொண்டிருந்தார்..... அவைகளைத் தைத்து முடிக்க நேரம் கூடுதலாகும்.....

நீலச் சட்டைக்காரர் என்னிடம் என்னை அழைத்து ஏதோ சொன்னார் .... ஒன்றும் புரியவில்லை.....இந்தியில் பேசினார்.....நான் அமைதியாய் நின்றதைப் பார்த்து அவர் எழுந்து செருப்புத் தைப்பவரிடம் எனக்கு  முதலில் வாரைத்தைத்துக் கொடுக்கும்படி சொன்னார்.

என் அவசரம் அந்தப் பெரியவருக்குப் புரிந்திருக்கிறது.

 சொன்னவர் அங்கிருந்த பழைய செருப்புகளை வாங்கித் தமது கால்களில் போட்டு ருபாயும் கொடுத்துவிட்டு சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுப்  போனார். அந்த வயதான பெரியவர் அமைதியாய் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவரது கம்பீரமான உருவம் அந்த வயதிலும் கம்பீரமாகவே இருந்ததில் மனதினுள் ஒரு பிரமிப்பு.....அவர் நின்று திரும்பிப் பார்த்து தான் இருந்த கடையைப் பார்த்தவாறே என்னவோ இந்தியில் சொன்னார்.

கடையின்  சொந்தக்காரராக இருப்பாரோ  என்று   நினைத்துக்  கொண்டே ,          “ என்ன சொல்லிவிட்டுப் போகிறார். கடையை கனித்துக் கொள்ள சொல்கிறாரா என்று கேட்டேன்.”

“இல்ல...இல்ல..... அவர் படியில் இருக்க ஒரு பை கொடுத்தேன். அதை யாராவது எடுத்துட்டு போயிடக்கூடாது. எடுத்து வைக்கச் சொன்னார்”

அவர் கப்பல் படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எனது வாரைத் தைத்துக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தார்.நாற்பதாயிரம் பென்சன் வாங்குகிறார். ஒருநாளைக்கு 1333 ருபாய்.........

என்னிடம் அவர் நட்பாய் பேசியதால் அவரிடம் பேசும்போது நான் பேட்டி காண்பது போலப் பேசினேன்....பல கேள்விகள் கேட்டேன்......

அவர் பெயர் சிவண்ணா.... தமிழ் தெரியும்... 1967-ல் சிவாஜி நகரில் வாழ்ந்தவர். எல்லா மத ,ஜாதி மக்களும் தமிழ் மொழி பேசுபவர்கள்தான் அப்போ....இப்போ தான் கன்னட மொழி பேசுபவர்களும் இருக்காங்க என்றெல்லாம் சொன்னவர் அடிக்கடி ஆங்கிலத்திலும் பேசினார்....

அவர் ஒரு முதலாண்டு பிகாம் வரை படித்தவர்.

அவரது அப்பாவால் செலவு செய்ய இயலவில்லை....வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை ..... படிப்பு பாதியில் நின்றது. வறுமை துரத்தியது.

கிடைக்கும் பஸ்ஸில் ஏற வேண்டியத்துதானே. இவரும் பஸ்ஸில் ஏறினார். தினமும் பயணம் தொடங்கியது.

அவருக்குக் கிடைத்த வேலை பஸ் கண்டக்டர்.....

பஸ் கண்டக்டராக வேலை பார்த்து தன் வாழ்க்கையை கழித்தார்.

நிறுவனம் -தொழிலாளர்கள் பிரச்சினை வந்தது.....

அவர் சொன்னார்... “ஜோசப் என்பவர்.... கேரளாவைச் சார்ந்தவர்....அவர் எங்கள் மேல் அக்கறை கொண்டவர். எங்கள்  எல்லோரையும் அழைத்துப் பேசினார். கேரளாவைப் பார்த்தீங்களா.....அங்கே இருப்பது போல்  யூனியன் ஒன்றை அமைக்கச் சொல்லி எங்களை ஒருங்கிணைத்து நியாயமாகப் போராடி அனைத்து உரிமைகளையும் வாங்கிவர வழி காட்டியாய் இருந்தார். மூன்றாம் வகுப்பு வரை படித்த அவரது மூளை.... சிந்தனை எல்லாமே அதிகம்.அவர் தான் எனக்கு கடவுள்....”

“ குடும்பச்சுமை கூடியது......பாசம் மனவலிமையைத் தந்தது....ஓய்வு பெற்றால் கிடைக்கும் பணத்தை வைத்து சில கடமையை முடிக்கலாமே ....நல்ல வரன் வந்தது.    காசு வேணுமே.......ஒரு வருடத்திற்கு முன்னமே கேட்டு வாங்கி ஓய்வு பெற்றேன். என் இரண்டு மகளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். ஒரு மகள் வேலை பார்க்கிறாள்..... ஒரு மகன் உண்டு. அவனும் வேலை பார்க்கிறான்.”

”எனக்கும் பல வேலைகள் கிடைத்தன.....ஆனால் எனக்கு எங்கும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. இருக்கவே இருக்கு என் குலத்தொழில்.... என் அப்பா தாத்தா செய்த செருப்புத் தைக்கும் வேலை. மரத்தடியைத் தேடி இங்கு வந்து இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று....யாருக்கும் நான் அடிமை இல்லை. எனக்கு எப்போ கழியல்லையோ.... ஏன் நேற்று கூட கடையைத் திறக்கல்ல....நான் சுதந்திரமாக இருக்கேன் ”

 “தினசரி வருமானம் என்று சொல்ல முடியாது..... காசு கிடைக்காத நாளும் உண்டு.ஆனால் மாதம் எட்டாயிரத்தில் இருந்து பத்தாயிரத்துக்குள் கிடைக்கும். ”

வாரைத் தைக்கும் வேலை முடிந்தது. வாரை என்னிடம் தந்தார்.

நான் ,“எவ்வளவு”..... என்றேன்.  எப்படியும் பத்து அல்லது பதினைந்து கேட்பார் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் சற்று அதிர்ந்து விட்டேன் அவர்....சிவண்ணா சொன்னதைக்கேட்டு....

“வேண்டாம்... நான் என்ன செய்துட்டேன்னு பைசா வாங்க.....”

எனக்கு ஒண்ணுமே சொல்லத்தோணல்ல..... என் மனம் பைசா கொடுக்காமல் போகவும் இடம் கொடுக்கல்ல...

அவரையே பார்த்துக் கொண்டு நின்றேன்...... “ நான் மினிமம் வாங்குவது ருபாய் 15. ஆனால் அது செருப்புக்கு.... இது சின்ன ஒரு இன்ச் வார்... வேண்டாம் சார்.......”

அடுத்துள்ள வேலையைப் பார்க்க அந்த கப்பல் படை வீரரின் செருப்புகளை எடுத்தார்.

நான் அவரிடம் சொன்னேன்...... “நீங்கள் செய்த இந்த சின்ன வேலை கூட என்னால் செய்ய முடியாத ஒன்று....நீங்கள் வாங்க வில்லையென்றால் எனக்கும் சங்கடமாக இருக்கும் என்றேன்.”

“அப்போ..... அஞ்சு ருபா தாருங்க....”

நான் கொடுத்தேன்..... THANKS என்று சொல்லிஅதை வாங்கிப் பார்த்தார்.

“என்ன சார் முப்பது ருபா தாரீங்க....” அதிர்ச்சியும் ஆனந்தமும்  கலந்து சிரித்துக் கொண்டே கேட்டார் .

நானும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே மௌனமாய் தைக்கப்பட்ட “வாருடன்” அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

சுமைதந்த வலியும் தோளில் கண்ட சிவப்பு நிறமும் என் மனதை விட்டுப் போயிற்று.

அந்தச் சுமை தந்த சுகம் தனை இப்போ நான் எழுதும் என் வரிகளில் காண்கிறேன்.....