Friday, November 6, 2015

எம் கல்லூரி தமிழ்த் துறைதம் கருத்தரங்க மூன்றாம் நாள்...நிறைவுநாளின் நிகழ்வாய் என்னுரையும் .........

அனைவருக்கும் என் அன்பான மாலை நேரத்து வணக்கம். தனித்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் கருத்தரங்கத்தில் கழிந்த மூன்று நாட்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ஒருவர் அல்லது பலர் அரங்கமேடையில் நிகழ்த்தும் பொம்மலாட்டம், நாடகம், கூத்து, நடனம், வில்லுப்பாட்டு போன்ற நாட்டார் கலைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை பலரும் அழகு தமிழில் வாசிக்கக் கேட்டிருப்பீர்கள்.
      மனிதன் தனது துன்பச் சூழலில் இருந்து விடுபட, அதில் இருந்து மீள்வதற்கு கலைகளின் துணையை நாடுவது இயல்பாக இருந்த காரணத்தால் நிகழ்த்துக்கலை உருவாயின.
      கால மாற்றத்தால் நம் உணவு உடை மாறின. உழைப்பவர்கள் போற்றிய நிகழ்த்துக் கலைகளும் மாறிற்று. பகுத்தறிவின் பேரால் பல கலைகள் புறக்கணிக்கப்பட்டன. பல இன்றைய தொழில் நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்குப் பலியாயின.
      நமது குமரி மாவட்டத்தில் இருந்த அறுபத்தி முன்று வகையான நிகழ்த்துக் கலைகளில் பதினொரு கலைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன என்பதை நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
      நாடகத்தின் முதல்நிலை தெருக்கூத்து. கோவில் திருவிழாக்களில் தெருவில் முச்சந்தியை மேடையாக்கி கூத்து மூலம் ஆடியும் பள்ளியும் மக்களை மகிழ்வித்தார்கள். கூத்து என்பதன் வளர்ச்சியே நாடகம் என்று மாறியது. நாடகத்திற்கு பண்ணை என்ற ஒரு பெயரும் உண்டு.
       நாடு + அகம் என்பதே நாடகம். நாடு என்பது மக்கள். அகம் என்பது மக்களின் உள்ளங்கள். மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவமே நாடகம்.
      ஒரு நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் – மூன்றையும் தன்னகத்தே காட்டுவது நாடகம். நாட்டு நடப்பை , நாட்டின் கலாச்சாரத்தினை, நாகரீகத்தை நாடகம் பார்த்து தான்  மக்களால் அறிய முடிந்தது. கூத்தைப் பின்னுக்குத் தள்ளிய நாடகமும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
      பொம்மலாட்டத்தின் இன்னொரு பரிணாமம் என்று சொல்லப்படும் திரைப்படம் வந்ததால் கிராமங்களில் நாடகம் போடுவது குறைந்து போய் பின் அறவே நின்று போயிற்று.
      ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
      இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் கூத்துக்கள் பெற்றுக்கொண்டதுபோல் , பழைய நாடகங்களில் அல்லது கூத்துக்களில் இருந்து இன்றைய  இலக்கியம் பல கூறுகளை எடுத்துக் கொண்டதும் உண்டு. உதாரணமாக சிறிய காப்ப்பியமான பாரதியின் பாஞ்சாலி சபதம். இது 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரௌபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்த காப்ப்பியமாகும்
      தமிழில் நாடக நூல் இல்லை என்கிற குறையும் பின்னாட்களில் மனோன்மணியத்தின் வரவால் நீங்கிற்று. ஆனாலும் இது ஒரு தழுவல் நாடகம் என்கிற குறையும் உண்டு.
      இவ்வாறு, கூத்து அல்லது நாடகம் என்ற நிகழ்த்துக்கலை, தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாகவே உள்ளது……..
 என் உரையை முடிக்குமுன் நான் சமீபத்தில் படித்த ஒரு தகவல்….
      நீலகிரி மாவட்ட வனப்பிரதேசத்தில் வாழும் கோத்தர்களின் நடனங்கள் ஆதிகாலத்தவை. பக்தியை முன்னிறித்தி ஏராளமான வாய்மொழிப் பாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன.. நாதஸ்வர வடிவிலான கட்டைக் குழலான கொல் எனும் ஊது கருவி, கொப் எனும் இசைக்கருவி, தபக், பர், குணர்… போன்ற தோல் கருவிகள், மூலம் இசைத்துப் பாடுகிறார்கள். கொப் என்னும் இசைக்கருவி விலங்குகளின் கொம்புகளால் ஆனது. இப்போது செம்பால் செய்யப்படுகிறது. இவர்களில் ஆடும் ஆட்டத்தின் பெயர் கண்மு ஆட்டு. பெண்கள் ஆடுவது பெமு ஆட்டு. இன்றும் தினை விதைப்புத்திருவிழா, அறுவடைத்திருவிழா, மாடுகளுக்கு உப்பு புகட்டும் திருவிழா, கில்லிப் பண்டிகை என விழாக்கள் கொண்டாடி தங்களுடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
 பொம்மலாட்டக் கலையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு  மாதம் 21-ஆம் தேதி உலக பொம்மலாட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
      நமது பாரம்பரியக் கலைகள் அழியாமல் காத்திட, தமிழ்நாட்டு உயர்கல்வித்துறை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
      தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நாடகத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. பளையாங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பட்ட மேற்படிப்புத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
      இதுபோல் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் கூத்து மற்றும் நாடகத்துறை, தமிழ்ப் பாடத்தின் பகுதியாக வரவேண்டும் . படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் இருக்க வேண்டும்.
இந்தக் கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அனைத்தும் நிகழ்த்துக்கலைகளுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.
நாடகத்தமிழ் வளம் பெற தரம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கிட உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்..
நான் பேசிய தமிழில் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
திறம்பட மிகச் சிறப்பாக கருத்தரங்கத்தை நடத்திய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சாந்தாள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் தே.வே. ஜெகதீசன் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
வாய்ப்பளித்தமைக்கு என் நன்றியைப் பதிவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி ...வணக்கம்......

Friday, October 23, 2015

அரங்கேற்ற விழா ....துவரங்காடு ராஜா மண்டபத்தில் ....எனது உரை (22-10-15)

இந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அன்புக்கினிய பெரியோர்களே, பெற்றோர்களே, 
எல்லோருக்கும் என் இனிய மாலை வணக்கம்.

இசை அறிவும், நடன அறிவும் இல்லா என்னை ஒரு பொருட்டாக மதித்து அழைத்து இந்த மேடையில் உங்கள் முன் நிற்க வைத்த அன்பு உள்ளங்களுக்கு முதன் முதலாக நன்றி ..

இந்த விழா…… சலங்கைபூஜை……அரங்கேற்றம்…..

சிந்துசுப்பிரமணி அவர்களின் முன்னேற்றத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஐந்தாவது சலங்கை பூஜை அரங்கேற்ற விழா..

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊர்த் திருவிழாவில் நான் ரசித்துக் கேட்டு மகிழ்ந்த இசை வில்லிசை. அந்த வில்லிசையை இயக்கிய கலைஞர் காட்டுப்புதூர் திரு நாகேந்திரன்.

அவர் வழிகாட்டுதலில் அவர் மகள் இசைப் பயணம் மேற்கொண்டு நடனம் கற்று , இன்று நடன ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாக இந்த நடனப் பள்ளியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்….

ஒரு சின்ன குக்கிராமத்தில் பிறந்த சிந்து இன்று ஒரு சிறந்த நடன ஆசிரியர்.
சொல்வதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தத்தித் தத்தி நடந்து வருகிறது சிறுகுழந்தை….. நடந்துவரும் அழகைப் பார்த்து ரசிக்கிறாள் அன்னை.   அன்னைக்கு அதுவே நடனம்….
நடன அசைவுகளும், பதிவுகளும் குழந்தைகளது காதுகளையும் ,மனதையும் மகிழ்விக்கின்றன. 
தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி புரிகின்றன.
பாடலின் அர்த்ததை விட ஒலியின் அழகை ரசிப்பவர்கள் குழந்தைகள்
கற்றுக்கொடுத்தால் அந்தக் குழந்தைகளால்  ஐந்து வயதிற்குள்ளாகவே நடனமாடவும் பாடவும் முடியும்.

அவ்வாறு கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விக்காலம்  மிகச்சிறப்பாய் அமையும் .

குழந்தைகளது ஞாபகத்திறனை வளர்க்க, அவர்களது உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்க நடனம் மிகவும் உதவியாய் இருக்கும்.

நடன மயில் பட்டம் பெற்ற அன்பு சிந்து சுப்பிரமனியம் அவர்கள் மேலும் பட்டங்கள் பல பெற்று, அவர் நடத்திவரும் கிருஷா நாட்டியாலயா நடனப் பள்ளி சிறந்த பள்ளியாக திகழ்ந்திட எல்லாம் வல்ல , நடனக்கலையைத் தோற்றுவித்த சிதம்பர நடராஜனை வணங்கி ,வாழ்த்து கூறி, வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம்.


Sunday, September 27, 2015

1967-க்குப் பின் சந்தித்த வகுப்புத்தோழன் ஆறுமுகம்

வாழ்வின் பொருள் என்ன ?

தினமும் காலையில் தொடங்கி இரவில் முடங்கும் பொழுதழிப்பா...

நமக்கு ஒரு அங்கீகாரம் தந்து அழகு பார்த்த இந்த சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறாய்! இப்படி ஒரு ஆச்சரியமான கேள்வி எழுந்தது ....என் மனதிலா......?

இல்லை...இல்லவே இல்லை.

ஆறுமுகம்.... பாளையாங்கோட்டையில் மகாராஜ நகரில் இருக்கிறார். அவர் தினமும் காலையில் அலுவலகம் செல்வது போல் ஒரு நோய் காண் மையத்துக்கு செல்கிறார். ஓய்வு பெற்றவர் அவர். வங்கிப் பணி முடிந்து பத்து ஆண்டுகள் ஆயிற்று. பொருளாளராக செயல் பட்டு வருகிறார்.

ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கு இதில்....... !

அந்த கிளினிக்கல் லேப்  தனிப்பட்ட ஒருவருக்கு உரியதல்ல. முன்னாள் மாணவர்கள் நடத்தும் லேப் அது.

 தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால்  நடத்தப்படும் அந்த நிறுவனம் ஒரு முன்னாள் ஜட்ஜின் பெயரைக் கொண்டு மிகக் குறைந்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு  இயங்கி வருகிறது .

அதன் பெயர் ’ஜட்ஜ்  ஜோசப் நோய் காண்மையம்’.(Judge Joseph Clinical Lab )

அது இருக்கும் இடம் தூய சவேரியார் கல்லூரி வளாகம்.

மகாராஜன் மைந்தன் ஆறுமுகம் என் கல்லூரி வகுப்புத்தோழன்.

சொல்வதற்கே பெருமையாக இருக்கு.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது ?

எனது பெயரைத் தேடி ...... என் விலாசத்தை அறிந்து எனக்குக் கடிதம் எழுதி முன்னாள் கணித மாணவர்கள் சந்திக்கும் ஒரு நிகழ்வு ஜனுவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக எழுதி அழைத்திருந்தார்......

பல மாதங்களாகவே என் மனதினுள் உறங்கிக் கிடந்த ஓர் எண்ணம் என் ஆர்வத்தைத் தூண்டிற்று...... அதன் பலன்...நான்  இம்மாதம் 22 செவ்வாய் கிழமையன்று ஆறுமுகம் வீட்டில் அவருடன் 48 வருடங்களுக்கு முன்னால் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினோம்.... மலரும் நினைவுகள்....பல மலர்ந்தன....மகிழ்வும் சோகமும் மாறிமாறி வந்து போனது...... கொஞ்சம் செஸ் விளையாடத்தெரிந்த என்னை அதிகம் அறிய வைத்த செஸ் Problem சொல்லித்தந்த வகுப்புத்தோழன்....மானிட்டர்... பாலமோகன் மறைவுச் செய்தி என்னை பாதித்தது...... ஒலிம்பிக் வரை சென்று ஹாக்கி விளையாடிய வசந்து இன்றில்லை.

 ஆறுமுகம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி . அவர் பாளை ஹைகிரவுண்ட் மகாராஜ நகரில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் சிவானந்த சுந்தரி அப்பார்ட்மெண்டில்  வசித்து வருகிறார். அவருக்கு எனது இருப்பிடத் தகவல் தந்து மகிழ்ந்தவர் சென்னையில் வசிக்கும் எங்கள் வகுப்புத்தோழர் பொறியாளர்  ராய்.

நாகர்கோவில் வந்தபின்பும் தோழர் வீட்டு நிகழ்வுகள் என்னை வருடிக் கொண்டே இருந்தன..... என் உணர்வுகளை வார்த்தையால் சொற்களால் வர்ணிக்கவோ பதிவு செய்யவோ முடியாது... உணரமட்டுமே முடியும்.

நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன்..... அப்போது கூடுதல் தகவல் ஒன்று ஆனந்தமாய் செவியில் வந்து பாய்ந்தது.  ஜட்ஜ் ஜோசப் இந்துக்கல்லூரியின் கணித ஆசிரியர் வில்சனின் மாமா.......(வில்சனின் அத்தையின் கணவர் )....

1964 -67  கல்லூரிக் கல்விப் பயணம்...... 1967-க்குப் பின்.........48 வருடங்களுக்குப் பின்  வகுப்புத் தோழரை சந்தித்தது,  ரயில் நட்பு போல் ஆகிவிடவில்லை ....... என்பதால்...... என்றும் இந்த நினைவு ஆனந்தமே..... ஆனந்தமாக மட்டுமே இருக்கும்.....

சற்றும் கூட முகம் சுழிக்காமல் என் எண்ணத்தைப் புரிந்துகொண்ட என் மனைவி என்னுடன் வந்து நண்பர்கள் இருவர் சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்..... நெல்லையப்பர் தரிசனம் தடைபெற்றதையும் பொருட்டாகக் கருதவில்லை அவள்.

நன்றி மறப்பது நன்றன்று என்பதால் எனக்கு மூன்றாம் வருடம் பட்டப் படிப்பின் தொடக்கத்தில் கல்லூரி விடுதியில் இடம் தர மறுத்த முதல்வரிடம் எனக்காக பரிந்துரை செய்த ஆசிரியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று அவர் முகம் பார்த்து பழங்கதை பேசி மகிழ்ந்து  அவர் ஆசிப்பெற்று திரும்பினேன்....

அவர் சவேரியார் கல்லூரியில் பணியில் இருந்த காலத்து மாணவர்கள் அவரை தெரியாமல்  இருக்கவே முடியாது.... ஓய்வுக்குப் பின்னும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வருடந்தோறும் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பல முன்னாள் மாணவர்கள் உதவிகொண்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.....

அவர் பெயர் மேஜர் பெனெடிக்ட்.... உடற்பயிற்சி கல்வி ஆசிரியர்.....

அவர் சேவை அவரது ஓய்வுக்குப்பின்னும் கல்லூரியில் தொடர்ந்தது......

 விடை பெறும்போது அவர் சொன்னது..,” உங்களைப் போல பல மாணவர்கள் என்னை சந்திக்கும் போது என் வயது கூடுகிறது... ஒவ்வொரு வருடமும் நீ வா..... இன்னும் ஐந்து வருடங்கள் வாழ்வேன் ‘

நல்லவெயில்.... அவர் வெளியே வந்து வழியனுப்பிய பாங்கு ... இருகரம் கூப்பி வணங்கிக்கொண்டே நல் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தது ...... என்னை மிகவும் கவர்ந்தன....

இப்போது அவருக்கு வயது 86.



Friday, August 14, 2015

இதோ ஒரு இளைஞர்.....அப்துல்கலாம் அவர்களின் அருள் கிட்டிய இளைஞர்.....


இரண்டு மாதங்களுக்கு முன்னால்  இக்னோ அலுவலகத்தில் ஒரு கட்டிடத் தொழிலாளி தன் தம்பியுடன் நின்று கொண்டே நெறியாளரிடம் எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்று பரஸ்பரம் பேசி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த நான், அவரை செயரில் அமர்ந்து பேசலாமே என்று சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டாரே தவிர தொடர்ந்து நின்று கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தார்.

நான் வேறு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாலும் என் காதுகளை அவரது சில அறிவு பூர்வமான பேச்சுக்கள் ஈர்த்தன. அது ஒரு கட்டிடத் தொழிலாளியின் பேச்சாக இருப்பது கண்டு மனதளவில் வியந்து கொண்டிருந்தேன். அவரது ஆலோசனைகள்….. பேச்சுக்கள் எல்லாமே முடிவது வரை காத்திருந்தேன்….

அவரிடம் நீங்கள் பேசும் பேச்சு படித்தவர் பேச்சு போல் இருக்கிறதே ? என்று நான் கேட்கவே, அவர் சிரித்துக் கொண்டே M.A எக்னாமிக்ஸ் படித்திருக்கிறேன் என்றார்,

வெளிநாட்டில் வேலை செய்து இப்போ இந்தியாவில் இருக்க வேண்டிய சூழ்நிலை.  கம்பெனியில் அலுவலக வேலை பார்த்தபோது அந்த நிறுவனம் செய்யும் தொழிலையே தானும் கற்றுப்பின் செய்ய முற்பட்டு ,தற்பொழுது நம்ம ஊரில் கட்டிட உட்பகுதியழகினை மெருகூட்டும் பணிதனை செய்து கொண்டிருக்கிறேன்….. என்னாலும் அனைத்து வேலகளையும் செய்ய முடியும்…. நான் முதலாளியாக இருந்தாலும் நானும் ஒருஆள் செய்யும் வேலையைச் செய்வேன்….. அதனால் நான் எடுக்கும் பணியில் நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வேன்……. பேசி விட்டு சென்று விட்டார்…….

நாட்கள் நகர்ந்தன. இன்று (13 ஆகஸ்டு 2015) நான் கேட்டுக்கொண்டதால் என் வீட்டுக்கு ஒரு சிறிய பணிதனை செய்திட அவர் வந்தார். வந்தபோது என் வீட்டின் முன் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அப்துல் கலாம் அவர்களின் படம் இருக்கக் கண்டார்….

அவர் ,’ என் வீட்டில் ஃப்ளெக்ஸில் அவர் படம் வைத்திருக்கிறேன் “ என்றார்…

நான்,” உங்களுக்கு அவரை ரெம்ப பிடிக்குமா” கேட்டேன்.

”ஆம்…..நான் செய்யும் பணிக்கு அடித்தளமிட்டவரே அவர் தான்…..எப்படி அவரை என்னால் மறக்க முடியும்….. அவர் உடலை ராமேஸ்வரத்தில் விதைத்தபோது  நான் அங்கு தான் இருந்தேன்……”
சொல்லிக் கொண்டே இருந்தார்…..வியப்போடு நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன்…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில்…..அப்துல்கலாம் ஆலோசனைப்படி பத்து திருக்குறட்பாக்கள் GRANITE கற்களில் பொறிக்கப்பட்டு பதிக்கப் பட்டுள்ளதல்லவா…. அதனை ….அப்பெருமை மிகு பணிதனை செய்து முடிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்தது என்றார் அவர்.

அதற்காக அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மாமனிதரிடம் ஆலோசனகள் பெற்று பணிதனை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்…….அவரது கையெழுத்தை வெள்ளைத்தாளில் பெற்று வந்ததை …. தன்னை நம்பித்……தந்ததை தான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறார்…..கலாமின் படமும் அக்கல்வெட்டில் உள்ளது….

 அக்கல்லில் பணிதனை முடித்தவர் பெயரையும் போடச் சொன்னதோடு அலைபேசி எண்ணையும் போடச்சொன்னாராம் அப்துல்கலாம்……..
அந்த பெயர் altonestnes@gmail.com  cell no: 9442450574


 ஒரு மாமனிதரின் அருள்பார்வை கிட்டிய அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு.அருள். எங்கள் இந்துக் கல்லூரி வைரவிழா கட்டிட உள் அரங்க அழகூட்டும் பணிதனை செய்தவர்......

Friday, August 7, 2015

தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா பேராசிரியர் முருகன்

தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா பேராசிரியர்
என் கடன் பணி செய்து கிடப்பதே….. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே….என்ற வரிகளுக்கு உரிமை கொள்ளும் ஒரு உத்தமரை…வாழும் ஒருவரை மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்…. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் வாழ்நாளில் இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தார்….. அதுபோலவே செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியரை  வெளியுலகும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு……
நான்கு புத்தகங்கள் எழுதிய இந்தத் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பணியாற்றி 2011-இல் ஓய்வு பெற்ற CHEMISTRY பேராசிரியர் திரு.S.முருகன் , நுண்ணிய அளவிலான வேதியல் பரிசோதனைகள் சம்பந்தமாக ,கல்லூரிப் பரிசோதனைக்கூடங்களில் அதிகப் பொருட்செலவைக் குறைக்க  microscale technique –ஐப் பயன்படுத்தவும் ,அதனால்  சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்கப் படுவதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க முனைந்து இன்றைய தேதி வரை 95 கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று நற்பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்….. வெளி மாநிலங்களான கேரளா (28) , கர்நாடகா(3), மஹாராஷ்ட்ரா (2) கல்லூரிகளுக்கும் போய் சிறப்புரையாற்றியும் செய்முறைப் பயிற்சிகளை செய்துகாட்டியும் மைக்ரோ தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆகஸ்ட் 24-இல் நடைபெறும் தமது நூறாவது கருத்தரங்கத்திற்கு ,இவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவரது குருவான பேராசிரியர் Dr.S.L.KELKAR பூனேயில் இருந்து வர இருக்கிறார்..
இத்தொழில்நுட்பம் பற்றிய இவரது கட்டுரை 2013-இல் வலைதளத்தில் வேதியல் சம்பந்தப் பட்ட (The journal of Applicable Chemistry ) இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சபூத மருத்துவரான இந்தப் பேராசிரியர் மருந்தில்லா மருத்துவம் பற்றி நாகர்கோவில் வானொலி நிலையத்தில் பேசியது 2009-இல் ஒலிபரப்பானது.

இலவசமாகவே தம்மை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
இதை மட்டுமா இவர் செய்திருக்கிறார். மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியான வகையில் அவரது செய்கை பல உண்டு.

அது அவர் பயின்ற, பயிற்றுவித்த தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளர்ச்சிக்காக ஐந்து லட்சம் ருபாய் கொடுத்ததைப் பதிவு செய்வதா! 

ஆசிரியர் இயக்கத்திற்கு இரண்டு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா! தன் வீட்டில் பணிபுரிந்து ஓய்வுற்ற வயதான பெண்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா !  எதைச் சொல்வது…... 

ஓசையின்றி கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒப்புயர்வு பெற்ற இதயம் கொண்டவரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை……
நல்ல மனம் வாழ்க……


Sunday, May 10, 2015

அம்மா........தெய்வம்

மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்.....

இருக்கின்ற நாளில் இமையாய் இருப்பவள்


இல்லாத நாளில் இறையாய் இருப்பவள்


உருவாகும் போதுத் தங்கிட தன்னையே தருபவள்


உதிரத்தை உணவாய் தருபவள்


ஆல்போல் தழைத்திட அருகாய் அணைப்பவள்


ஊண் உறக்கமின்றி உறங்க வைப்பவள்


எருவாய் இருந்து உருவாக்குபவள்


ஏணியாய் உயர்த்துபவள்


உருவாக்கித் தருவாக்க ஓடாய் உழைப்பவள்


அன்பும் அரவணைப்பும் தருபவள்


ஒருத்தியாய் மட்டுமே இருப்பவள்


அவள் மட்டுமே அம்மா…..


அவள் மட்டுமே அன்னை….


தந்தையாய் இருப்பவள் அவள்….


அவளில்லாமல் எவனுமில்லை..


அணுவைத் கருவாய்த் தாங்கி


ஊனாய் அகிலம் காண தன்னைத் தந்த

தாயிற் சிறந்த இறையும் இல்லை……. 

Tuesday, May 5, 2015

காத்திருக்கிறேன்...... ஒரு நாள் சந்திப்பேன்......

கல்லூரியின் ஆட்சிகுழுக் கூட்டம் நடைபெற்ற நாள். நான் வழக்கம் போல் கூட்டம் நடக்கும் அரங்குக்குள் எல்லோரும் போய் அமர்ந்தபின்னால் நான் போய் சம்பிரதாய வணக்கம் கூறி அமர்ந்தேன். என்னருகே இடது பக்கம் இருந்தவர் திரு. ராமசாமி. அவர் என் முன்னாள் மாணவர். அவரது தந்தையார் திரு. சதாசிவன்பிள்ளை. பழகுவதற்கு இனியவர். அவர் கல்லூரி ஆட்சிக் குழுவில் பொறுப்பான பதவியில் இருந்த வேளையில் நான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன்.கணித ஆசிரியப் பணி.

வேலைக்கு விண்னப்பம் போட்ட பின் எனது  தந்தையின் அறிவுரையின் காரணமாக எல்லா ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் சந்தித்து வந்தேன்.

அனைவரும் அன்பாகப் பேசி அறிவுரை கூறினார்கள். திரு. ராமசாமியின் தந்தையாரையும் சந்திக்கச் சென்ற அந்த நாள் இன்றும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்குது.

அவர் வீட்டுக்குச் சென்றேன்.

அவர் வா என வரவேற்றார். ”என்ன விசயமாய் வந்திருக்க..... என்ன வேண்டும்...”

நான் யாரென்று தெரியாமலேயே அவர் பேசுகிறார் என்பதை உணர்ந்து கொண்ட நான் ,என்னை அறிமுகப் படுத்தினேன்.

முகம் மிகவும் பிரகாசமானது..... “ நீ கடுக்கரை ஆறும்பிள்ளப்பாக்கு மகனா ?
ஒங்க அண்ணன் மெய்க்கமும் நானும் சேந்து சுசீந்திரத்தில் படித்தோம்..... ஒங்க கணேச சின்னப்பாவும் நானும் குமரி மாவட்ட விவசாய சங்கத்தில்  பொறுப்பாளர்களாக இருக்கோம்.......”  சொல்லிவிட்டு அவர் அருகே என்னை அமரச்சொன்னார்.

நான் வந்த விசயம் பற்றி  சொன்னேன். அப்பாச் சொன்னா....அதனாலே பாக்க வந்தேன்......

அவர் சிரித்துக் கொண்டே ,” என்னை நீ இதுக்கேல்லாம் பாக்கணுமா ......”

”நீ  என் தம்பி...... என் வாழ்த்துக்கள் என்றும் உனக்கு உண்டு.....”

அநேகமாக அந்த நாட்களில் வயது குறைந்த DIRECTOR அவர்தான். இந்நாளில் அவர் மகன் ராமசாமி எங்கள் குழுவில் இளையவர்.

ராமசாமி பணிவும் அன்பும் கொண்டவர். காணும்பொழுதெல்லாம் மாணவராகவே நடந்து கொள்வதும் பேசுவதும் எனக்கு சங்கோஜமாக இருக்கிறது....  எனினும் அவர் முகம் கோண நான் எதுவும் எதிர்மறையாகச் சொல்ல முயன்றதில்லை.

அவர்,” உங்கள் பக்கத்தில் இருப்பதுவும் உங்களோடு உரையாடுவதும் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கு ...........” சொல்லிக் கொண்டே இருந்தவர்......
பல நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது நானும் என் மனதுடன் பின்னோக்கிச் சென்றேன்.

ராமசாமியிடம் சொன்ன து :-

1985-க்குப் பின்னால் .......1989--க்கும் முன்னால் .... ஒரு நாள்  கணித வகுப்பில் நான்..... பிஸிக்ஸ்-கெமிஸ்ட்ரி மாணவர்கள்.... சற்றும் எதிர்பாராத விதமாக கண்ட காட்சி என்னைக் கோபமூட்டியது.....ஒரு மாணவன் இன்னொரு மாணவன் மீது இங்கை தன் பேனாவை உதறிக் கொட்டியதால் அவன் அணிந்திருந்த சட்டை அலங்கோலமானது.....

அடிப்பது போல் அவனருகே சென்றேன்..... அறிவு அடிப்பதை தவிர்த்தது.... மிகக் கடினமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வெளியே அனுப்பி விட்டேன்.

இதனையறிந்த என் துறைத்தலைவர் என்னை அழைத்து விவரம் கேட்டார்.
 அவர்..” அந்தப் பையன் யார் தெரியுமா ?...”

நான்,” தெரியும் ......... ஒரு  மாவட்ட பிரமுகர்..........பையன் தானே.... நன்றாகப் படிப்பவன்.... ஆனாலும்  செய்த தவறைப் பார்த்துச் சும்மா இருக்க முடியாதே....வைர ஊசி என்பதற்காகக் கண்ணில் குத்தவா முடியும்...”

மறுநாளே அந்தப் பையன் வந்து செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
காலம் மாறியது.... அவன் வகுப்பில் முதல் தர மதிப்பெண் பெற்று கல்லூரியை விட்டு வெளியே போகும்போது மிகவும் நட்புடன் பேசி விடைபெற்றான்.....

அவனுக்கு வங்கியில் வேலைக்கான நேர்முக சந்திப்புக்கான அழைப்பு கிடைத்து....... என் வீட்டுக்கு வந்து  விவரம் சொல்லி மகிழ்ந்தான்.

அவன் ,” சார் ! எனக்கு ஒரு காண்டக்ட் செர்டிஃபிக்கெட் நீங்க தரணும்....”

”நான் வேறு யாரிடமாவது வாங்கித் தருகிறேன். நீ நாளைக்கு கல்லூரிக்கு வா ...என்னிடம் லெட்டெர் பேட் கிடையாது..... ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது....”

அவன் “ நீங்கள் தான் சார் எனக்குத் தரணும்..... என் வாழ்நாளில் உங்களை என்னால் மறக்க முடியாது.... அன்று நீங்கள் அடித்த அடி என்னைத் திருத்தியது........ நானே எங்கள் துறைத் தலைவரிடம் கூட செர்டிஃபிக்கெட் வாங்க முடியும்..............வேறு யாரிடமும் வாங்க விரும்பவில்லை.........”

இரண்டு நாள் கழித்து வரச் சொன்னேன். அவன் விரும்பின படியே .......... கொடுத்தேன்.

சில நாட்கள் கழித்து வந்தான்..... அவன் கையில் வங்கி வேலைக்கான உத்தரவு...... நன்றி சொல்லி விட்டுப் போனான்.

சரியாக ஒரு வருடம் கழிந்தது.....அவனுடைய நண்பன் ஒருவன்.....அவன் வகுப்புத்தோழன் வந்தான்.....நன்றாகப் படித்தவன்....வசதி அதிகம் உள்ள செல்வாக்குள்ள ஒருவரின் மகன்........

இவனும் செர்டிஃபிக்கெட் கேட்க....... நானும் கொடுத்தேன்....
வேலை கிடைத்தது.......நன்றி சொல்லி விட்டுப் போனான்...

 அதன் பிறகு இது வரை.......இன்று வரை  இருவரையும் சந்திக்கவே இல்லை...
 காத்திருக்கிறேன்...... என்றாவது அவர்கள் வருவார்கள்.... அப்போது அவர்கள் பெயர்களை பகிரங்கமாக உரக்கச் சொல்வேன்.......




Wednesday, April 22, 2015

கடுக்கரை திரு.பெ.ராசப்பன் எழுதிய கவிதை.......” உணர்வுகளின் உதயம்”


                                           உணர்வுகளின் உதயம்

                                 கருவானேன்                   உருவானேன்
                                 உருண்டேன்                    புரண்டேன்
                                 வெளியே வந்தேன்       விழுந்தேன்
                                  படுத்தேன்                         சுவைத்தேன்
                                 தவழ்ந்தேன்                      உருண்டேன்
                                 கவிழ்ந்தேன்                     அழுதேன்
                                 எழுந்தேன்                         தடுமாறினேன்
                                 பிடித்தேன்                          எழுந்தேன்
                                 நடந்தேன்                            விழுந்தேன்
                                 நின்றேன்                              ஓடினேன்
                                 ருசித்தேன்                          உண்டேன்
                                  படித்தேன்                          வளர்ந்தேன்
                                 பார்த்தேன்                          இரசித்தேன்
                                 விளையாடினேன்            நண்பனானேன்
                                  ஒட்டினேன்                        உறவாடினேன்
                                 சேர்ந்தேன்                           உழைத்தேன்
                                 சந்தித்தேன்                          சிந்தித்தேன்
                                  ஓய்வெடுத்தேன்              உழைத்தேன்
                                   பிரிந்தேன்                          வாடினேன்
                                   படுத்தேன்                          தேடினேன்
                                   வீழ்ந்தேன்                           பிரிவேன்
                                   சேருவேன்                         பிறப்பேன்

                                                                                    எழுதியவர் திரு பெ.ராசப்பன்
                                                                                     கடுக்கரை
                                                                                      22-04-2015     

Thursday, February 19, 2015

செப்பு மொழி பதினெட்டு உடைய பாரதமாதா சிந்தனையும் பதினெட்டுடையாள்

ஜாம்நகர்..... குஜராத்தில் ......இந்தியாவில் உள்ள ஒரு நகரம்.....ஜாம்நகர மாவட்டத் தலைநகர். மாநகராட்சி. இந்த நகருக்கு பழைய பெயர் ஒன்றுண்டு...நவநகர். இன்று இந்த நகரம் இந்தியாவின் எண்ணெய் நகரம்

குஜராத்தின் தலைநகரமான காந்திநகரில் இருந்து 340 கிலோ மீட் டர் தூரத்தில் இருக்கிறது. வடக்கே பாகிஸ்தான். மேற்கே அரபிக்கடல்.

ரிலையன்ஸ், எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் இங்குதான் உள்ளன.

ஜாம்நகர் வளர்ந்துவரும் ஒரு நகரம். இரு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால் அப்பகுதி மிகவும் வளர்ந்து வருகிறது.மின்வெட்டு இல்லை


ஜாம்நகரில் பால் உற்பத்தி மிக மிக அதிகம். வெண்மைப்புரட்சி கண்ட குஜராத்தி ல் மக்கள் பசுக்களை,எருமை மாடுகளை அதிகமாய் வளர்த்து பால் வியாபாரம் செய்து மகிழ்வாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘ஜெய்கிருஷ்ணா’ என்று வணக்கம் சொல்வதற்குப் பதில் சொல்வார்கள்.
வெளியே சாலைகளில் மாடுகள் அங்கும் இயங்கும் தாறுமாறாக  அலைந்து திரிந்து கொண்டிருக்கும்….மாடுகளுக்கு தீவனமாய் புல் வாங்கிக் கொடுப்பது புண்ணியம் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களுக்கு இருப்பதால் ஆங்காங்கே புல்கட்டுடன் வியாபாரிகள் இருப்பதையும் காணலாம்.

அவர்களுடைய உடை நம்மூர் வேட்டியல்ல…. பேண்ட்ஸ் என்றும் சொல்ல முடியாத வித்தியாசமான ஒண்ணு… தலைப்பாகை கட்டியிருப்பார்கள்….
உடை அநேகமாக வெள்ளைதான், லுங்கி அணிந்து யாரையும் காணவில்லை.

உணவும் வட இந்திய உணவு தான். ஹோட்டல்களில் தென் இந்திய உணவு கிடைக்கும்....  காசு சற்று கூடுதல். இங்கு எல்லா ஹோட்டல்களிலும் ருசியான மோர் கிடைக்கும். டீக்கடைகள் கூடுதலாக இருக்கு. ருசியான டீ ஐந்து ருபாய்க்கு கிடைக்கும். அளவு குறைவாகத் தான் இருக்கும்.( அடுப்பின் மீது கெட்டிலில் டீ இருக்கும். நம்மூர் போல உடனே போட்டுத் தருவதில்லை…)

நான் இருந்த இத்தனை நாட்களில் வெளியே செல்கையில் என்னைக் கவர்ந்த விசயம்.
எதிரே வருபவர்களில் பத்துக்கு எட்டுபேர் அதிக வயதுள்ளவர்களாகவே இருந்தனர்…. ஆங்காங்கே வயோதிகர்கள் மாலையில் நிழல் உள்ள இடங்களில் கூடியும், ஒரே வரிசையாகவும் அமர்ந்து மகிழ்வுடன் இருப்பதைக் கண்டேன்…..

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பான் பராக் அல்லது பாக்கு மென்று துப்பிக் கொண்டே இருப்பார்கள்……யாரை பார்த்தாலும் கன்னம் உப்பியே இருக்கும்….வாயினுள் பாக்கு உந்திக்கொண்டே இருப்பதால்…..

சிகரெட்  கிடைக்கும். கடைகளில் இருக்கு. ஆனால் சாலையில் குடித்துக் கொண்டே வருவதைப் பார்க்கவே இல்லை. பலர் பீடி குடிக்கிறார்கள் .

காந்தி பிறந்த குஜராத் காந்தியின் மது மறுப்பு இங்குண்டு. இங்கு மட்டுமே உண்டு.அதிக விலை கொடுத்தால் கிடைக்கும்..... சனி ஞாயிறுகளில் தெற்கு பகுதியானப் பக்கத்து யூனியன் பிரதேசமான டையூ-க்குப் போய் மது அருந்துவதுண்டு…(நம்மூர் பாண்டிச்சேரி போல)

நாங்கள் வந்த ஜனுவரி பிற்பகுதியில் குளிர் அதிகம் குறைந்தது 8 செண்டி க்ரேட்… ஒருவாரம் ஆனது செட்டாக….

பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து பார்க்கவில்லை….. அரசு பஸ் உண்டு .இரயில் நிலையம் உண்டு.
டீக்கடைகள் எதிலும் செய்தித் தாள் இல்லை…. சாலையோரக் கடைகளில் தினசரி இல்லை. பேப்பர் வேண்டுமெனில் பிளாட்பாரத்தில் காலையில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் போய் வாங்கலாம். வீட்டிற்கு கொண்டு போடுவதுண்டு…..

அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றன.
எண்ணெய் நிறவனங்கள் வருகையால் ஆட்டோ, வீட்டு வாடகை மிக அதிகமாகி விட்டது.

ரெலையன்ஸ் கம்பெனியின் ஊழியர்களில் 2500 ஊழியர்கள் தங்க டவுண்ஷிப் உள்ளது. இந்தக் கம்பெனியின் உரிமையான நிலம்  மொத்தம் 7500 ஏக்கர். இப்பகுதி லண்டனின் மூன்றில் ஒரு பகுதி….
ரிஃபைனரியில் உபயோகத்தில் உள்ள அனைத்துக் குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் ஒருமுனை இந்தியாவின் தென்முனையிலும் மறுமுனை வடமுனையிலும் இருக்குமாம்
80 சதவீத மக்கள் கல்வியறிவு உடையவர்கள்….ஆனாலும் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணமுடியவில்லை. இந்தியோ குஜராத்தியோ…….பேசும் மொழி.
ஒரு ஹோட்டலில் வித்தியாசமான அனுபவம் ஒன்று கண்டேன். இதுவரை எங்கும் காணாத அனுபவம். ஹோட்டலில் முதலில் ருபாய் கொடுத்து ஆயிரம் ருபாய் அல்லது ஐநூறு,….. கொடுத்து ஒரு கார்டு வாங்கணும். நாங்கள் வாங்கிய ஆயிரம் ருபாய் கார்டு…. அதனைக் கொண்டு போய் எந்த உணவு வேண்டுமோ....... தோசை எனில் அதற்கான கவுண்டரில்……சப்பாத்தி எனில் சப்பாத்திக் கவுண்டர்…. ஒவ்வொன்றிலும் போய் ஆர்டர் பண்ணணும்….அதற்கு கம்ப்யூட்டர் பில் தருவார்கள்…. எல்லா பில்களையும் கொடுத்து மீதிப் பணம் வாங்கணும்……. கூட்டம் அதிகம் இல்லாவிட்டால் நாம் தான் பிளேட்டை மேசைக்குக் கொண்டு போகணும்….

பாரதம்….. பல மாநிலங்கள்….கலாச்சார வேறுபாடு……..மொழி வேறுபாடு…..பல வேறுபாடுகள்…
செப்பு மொழி பதினெட்டு உடைய பாரதமாதா சிந்தனையும் பதினெட்டுடையாளாகவே இருக்கிறாள். ஒரே ஒரு சிந்தனை மட்டும் எல்லோர் உள்ளத்திலும் உள்ளது.  அது சட்டத்தை மீறுவது……
போக்குவரத்து விதிகள் மதிக்கப்படுவது குறைவே……

குஜராத்தை முஸ்லீம் மன்னர்கள் ஆண்டு வந்த காலம் 1411ல்.
1818ல் ப்ரட்டீஷ் கிழக்கு இந்தயக் கம்பெனி சூரத்தில் நுழைந்து ஆட்சி செய்தது.

1947-ல் சுதந்திர இந்தியாவில், சௌராஷ்ட்ரா, கச்சு பகுதி நீங்கலாக குஜராத்தின் அனைத்துப் பகுதியும் பம்பாய் மாநிலத்தின் பகுதியாக 1960 மே மாதம் ஒன்றாம் தேதி வரை இருந்தது.அதன்பிறகு பம்பாய் மகாராஷ்ட்ராவோடு இணந்தது. குஜராத் அஹமதாபாத்தை தலைநகரமாய் கொண்டு தனி மாநிலமானது. 1970 இல் தலைநகர் மாறியது.  புதிய தலைநகரம் காந்திநகர் ... இன்றும் அதுவே.....

தேர்தல் நடந்தபோது ஆர்ப்பாட்டம் எதுவுமே இல்லாமல் தேர்தல் நடந்ததாக அறிந்தேன் . ஜாம்நகர் பாராளுமன்ற தொகுதி  பா.ஜ.க விடம்….

இந்தியாவை ஒருங்கிணைத்த  இரும்புமனிதர் வல்லபாய் பட்டேல்  குஜராத்தில் பிறந்தவர்....

நமது இன்றையப் பிரதமர் குஜராத்தில் மூன்றுமுறை முதல் அமைச்சராக இருந்தவர்....

முக்கியமான ஒன்று.... மின்வெட்டு இல்லை......ஆச்சரியம்.....ஆனால் அதுவே உண்மை......  இதுவரை இலவசமாய் மக்கள் எதனையும் அரசிடம் இருந்து பெறவில்லை.

Monday, February 16, 2015

அழியாத.....காலத்தால் அழியாத காதல்....ஏழையின் காதல்

சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சோகம் மைசூருவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்
இது தினத்தந்தியில் 14-02-15 வந்த செய்தி.

எனக்குத்தெரிந்த ஒருவர் கதை.....என் வீட்டைக் கட்டிய நல்ல மனிதர் ஒருவரின் கதை............

அவன் ஒருக் கட்டிடத்தொழிலாளி….தொழில் நுட்பம் தெரிந்தவன்…. இன்று நாகர்கோவிலிலும் அதன் பக்கத்து ஊர்களிலும் அவன் பெயர் சொல்லும்படியாக பல வீடுகள் இருக்கின்றன. பள்ளியில் ஐந்து வருடப் படிப்பு……… படிக்க வழியில்லை….. 
காலத்தின் கோலம் சுயம்புவின் (அவன் பெயர் சுயம்பு என இருக்கட்டுமே) வாழ்வில் அலங்கோலமாக மாறிற்று……..புள்ளிகள் முற்றுப் பெற்று கோடின்றி கிடப்பது போல் சுயம்பு கிடந்தான்…..
இல்லை என்பதுவே வழக்கமாக தினமும் கேட்கும் வார்த்தை அவன் தாயிடம் இருந்து.
பைசா கேட்டால் இல்லை என்றே தினமும் சொல்லும் அவன் தாயே இன்று இல்லை…… அவனுக்கு புரிந்து விட்டது….
நேற்று வரை இருந்த தாய் இன்று ஏன் இல்லாமல் போனாள் என்று……இல்லை என்று சொல்ல தாய் இன்று மட்டுமல்ல இனி என்றுமே இருக்கமாட்டாள்….
சுனாமி ஊரைச் சீரழித்தது போல் அவன் வாழ்க்கையும் நிலை குலைந்து போனது.
வீடு இருக்கு….. ஆள் இல்லை….
கோலப்புள்ளிகள் இருக்கின்றன.. கோடுகள் இல்லை.
கோடில்லா கோலமும், ஆளில்லா இல்லமும் அழகு தருவதில்லை.
சுயம்புக்கு இருப்பது எதுவும் இந்தச் சின்ன வயதில் உதவுவதாக இல்லை.
ஒரு கதவை அடைத்த ஆண்டவன் இன்னொரு கதவை திறப்பானல்லவா.
தாய்மாமன்  கடவுள் வடிவில் வந்தார். அவர்…… துவண்டு கிடந்த சுயம்புவை எடுத்து ஆதரவோடு அணைத்தான்……..அவன் கண்ணீரைத் துடைத்தான்….
மாமனோடு அவன் வீட்டுக்குச் சென்றான்......
ராமன் வீட்டில் தொட்டிலில் ஒரு பெண் குழந்தை ….. அதன் முதுகு கூனன் முதுகு போன்றிருந்தது….முகம் அழகாய் இருந்தது. மற்றபடி எதுவும் சொல்லும்படியாக இல்லை. விளையாட மச்சான்மார்கள் பலர்….. அவர்களில் எவனும் பள்ளிக்குச் செல்லாமல்….கூலி வேலைக்கும் கையாள் வேலைக்கும் சென்று வந்தனர்.
குடும்பம் கட்டுப்பாடில்லாததால்….. அந்த அறிவு அன்று விதைக்கப் படாததால் அந்த வீட்டில்  ஐந்து அரசனுடன் ஒரு அரசியும் வளர்ந்து வந்தனர்…..அத்தோடு சுயம்புவும் வளர்ந்தான்……
கையாளாகவே மாமன் கொத்தனாருடன் வேலைக்குச் சென்றான்…….. வேலை கற்றான்…….தன்னந்தனி ஆளாய் வேலை செய்துப் பழகியபின்  மாமன் அனுமதியோடு தன் வீட்டுக்குப் போனான்…..
அழகில்லா வீடு அவன் வருகையால்  அழகாய் மாறிற்று… அந்த ஊர் அவன் பிறந்த ஊர்…. அந்த ஊர்க்கோயில் தர்மகர்த்தாவானான்…. அவன் அம்மா தினமும் வணங்கிய வீட்டருகேயுள்ள அம்மன் கோயிலைப் புதுப்பித்தான்…. ஒரு திறமையான வாலிபன் எனப் பெயரும் பெற்றான் .அவன் வாழ்ந்த அக்கிராமமே அவன் வருகையால் புதுப் பொலிவு பெற்றது….
அவன் சிரித்தால் அழகு….. பேசினால் அழகு….அவன் சொன்னால் அதுதான் சட்டம்……
வாலிப வயதானால் வலிய வருமே உறவுகள். உறவுகளும் வந்தன…..காதல்…….அதுவும் வந்தது….….. ஒரு பெண் ……. தன் வீட்டு விளக்கை ஒளியேற்ற வரவேண்டும் ஒரு பெண்.. அது தான் விரும்பிய பெண்ணாகவும் தன்னையும் விரும்பிய பெண்ணாகவும்  இருக்கவேண்டுமே…… அப்படி ஒரு மங்கை கிடைத்தாள்….. இது பற்றி அவன் மாமனிடம் சொல்லி முறையாக உற்றார் உறவினருடன் சென்று பெண் கேட்க வேண்டுமே என நினைத்திருந்த வேளையில்………..
அவன் மாமனே வந்தான்….. நாளை வீட்டுக்கு வா……சுசீலையை பெண் பார்க்க வருகிறார்கள்………
வந்தவர்களுக்கு பெண் பிடிக்கவில்லை……. அவள் முகம் பேரழகு….. ஆனால் கூனியின் உடம்பைக் கொண்டவளல்லவா….யாரும் திருமணம் செய்ய விரும்பி வரவில்லை….
காலம் காத்திருக்குமா…..அதற்கென்ன கவலை…… ஓடிக்கொண்டேதானே இருக்கும்…..
வயது ஏற ஏற கவலை மாமனை வாட்டியதைக் கண்டு கலங்கினான் சுயம்பு.
தனது திருமணம் தடைபடுவதை உணர்ந்தான். தன் வயதும் ஏறிக்கொண்டே போனதையும் கண்டான்.
தன் மாமன் கவலையால் வாட அந்தக் குடும்பமே பொலிவிழக்க நேர்ந்ததைக் கண்ட சுயம்பு   தன்னைக் காப்பாற்றி ஆளாக்கிய மாமன் மகளைத் தானே மணக்காவிட்டால் வேறு யார் முன்வருவார்கள்….. இந்தச் சிந்தனையால்
தியாகியானான்…. தன் வீட்டில் கோடில்லா புள்ளிகளை கோடு போட , தன்வீட்டு விளக்கை ஏற்றிட மனப்பூர்வமாகச் சம்மதித்தான்…..
இரண்டு குடும்பங்களும் தழைத்தன…….சுயம்புவின் வீட்டுக்கு சுசீலை மனைவியாய் வந்ததால்..
அவள் போல் அன்புக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை….ஆயிரம் பொன் கிடைத்தாலும் இது போன்ற நற்பெண் கிடைக்குமா…. என்று பெயர் பெற்றாள்.. ஈருடல் ஒருயிராய் வாழ்ந்தார்கள்….. இருவருமே நோய் நொடியில்லாமல் வாழ்ந்தார்கள்…….
இருமகள், ஒருமகன்………
சக்கரம் வாழ்க்கையை தடங்கல்களின்றி உருட்டிக் கொண்டிருந்த வேளையில் யார் கண்பட்டதோ…..சோதனை ……….. சோதனை…… நோய்வடிவில் சுயம்புவை விரட்டியது. 
விதி விளையாடியது…. விஞ்ஞானத்துக்கே சவாலாய் இருக்கும் நோய்  தாக்கியது. தனது எழுபதாம் வயதில் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார்………. பயம் அவரை விரட்டுகிறது . மனம் துடிக்கிறது…..தன்னைப்பற்றி பயப்படவில்லை……மகன் மகள் பற்றியும் வருந்தவில்லை.
அய்யோ!........ அவள் அனாதையாய்…….நினைக்கவே அவர் நெஞ்சம் பதறியது.
தான் போய்விட்டால் தன் அருமை மனைவியை யார் கவனிப்பார்கள்……..
தான் மடியுமுன் அவள் கதை முடியவேண்டுமென தினமும் வேண்டினேனே…..ஆண்டவன் நம்மை ஏமாற்றிவிட்டானே…….என்று அழுகிறார். தனக்குள் மட்டுமே  பேசி…..பேசி….. கதறி அழுகிறார்…… அவர் கண்ணீரைத் துடைக்க அருகில் யாருமில்லை.…
இது நாள்வரை காய்ச்சல் என்று கூடப் படுக்காத தன் கணவன் படும் சின்ன வேதனையைக் கூடத் தாங்க முடியாமல்……சுசீலைக் குமிறிக் குமிறி நெஞ்சு முட்ட ஏங்குகிறாள்…. ஏங்கியவள் துவண்டு விழுகிறாள்…. அதன்பிறகெ அங்கே ஏற்பட்ட நிசப்தமே …….பெரும் சப்தமாய் மாறியது .
இருதயம் அவளிடம் சொல்லாமலே இயக்கத்தை நிறுத்தி விட்டது.
மனைவி மறைந்த செய்தியை அவரிடம் சொல்ல அவர் அருகே சென்று பார்க்கிறார்கள்.
முகத்தில் புன்முறுவல்……முகம் ஆடாமல் அசையாமல்…….
அவள் கதையா…….அவர் கதையா….. யார் கதை முதலில் முடிந்தது….. யாருக்கும் தெரியாது…….. ஆண்டவன்………. அவன் ஒருவனே அறிவான்…….


Saturday, February 7, 2015

வயதானபின் கணவன் மனைவியரில் யார் முதலில்.......... தாலிகட்டியவனா?.....தாலி அணிந்தவளா?......

தாயோடு அறுசுவை போகும்,தந்தையோடு கல்வி போகும்,
மனைவியோடு எல்லாமே போகும் என ஆசிரியர் வகுப்பில் சொன்னது அடிக்கடி என் நினைவில் வந்து போகும்..... மனைவியின் பிரிவால் ஏற்படும் நிலை ஒரு வயதான மனிதனுக்கு ஏற்படவே கூடாது. மனைவி இருந்து கணவன் போனால் அந்தப் பெண் வாழ்க்கையை மகனுடன் .மகளுடன் அனுசரித்துப் போய் எஞ்சிய வாழ்வைக் கடந்து விடுவாள்.....ஆனால்,  ஒரு ஆணால் அது போன்று அவ்வளவு எளிதாக வாழ்க்கையை இனிவாய் முடிக்க முடியாது. ஆசிரியர் சொன்ன விளக்கம் இது.

அனைவருக்கும் வயதான காலத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுமோ என்னவோ.....தெரியவில்லை....

எனது வயதான தந்தை தன் இறுதிக் காலத்தில் சொல்வார்....  தாங்கள் இருவருமே ஒரே சமயத்தில் இறையடி சேரணும்.... சேர்ந்தால் இருவருமே யோகம் செய்தவர்கள்.ஒருவர்போய் மற்றொருவர் இருந்தால் அவமானப்பட வேண்டியதிருக்கும்.... ஆனால்

என் தந்தை மறைந்தபின் என் தாயர் எங்களுடன் 15 வருடங்கள் ராஜா இல்லா ராணி போல் வாழ்ந்து மறைந்தாள்..... என்பதுவே உண்மை....

வரும் வாழ்க்கையை அதன் போக்கிலேயே போகவிட்டு, இரவு தூங்கப் போவதும் மறுநாள் கண் விழித்தபின்னால்தான் உயிரோடு இருப்பதை உணர்வதாகவும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் பலர்.....

வறுமையும் வெறுமையும் வயோதிகத்தில் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் கணவனும் மனைவியும் சேர்ந்தே உயிரோடு இருந்தால் மட்டுமே இயலும். இயற்கை இதற்கு உதவி செய்வதில்லை....சேர்ந்தே வாழ விரும்பும் எவரும் ஒரே நாளில்  மறைவதில்லை....

யார் முதலில் இறப்பது......?  ஆண் .....அதுவும் முதியவயதினர்.....மனைவிக்கு முன்னால் போனால் பாக்கியம் செய்தவன்.....

ஒரு கதை......மங்கையர் மலர்.....பெப்ருவரி 1-15 இதழில்  இறையன்பு எழுதிய
” அவள் ஏன் அப்படிச் சொன்னாள் ?’.... படித்தேன்..... ஆச்சரியம்......எனக்குப் பிடித்த..... ரசித்த கதையாய் அமைந்தது.....

சுருக்கமாகச் சொல்வதானால் .............

கதை நாயகி பெயர் சபர்மதி....வயது எழுபது.... அந்த ஊர் அரங்கத்தில் ஒரு மகான்....அவரை தரிசித்து வணங்க வரிசை வரிசையாய் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்கிறார்கள். சபர்மதியும் வணங்குகிறாள்....மகான்,’’ தீர்க்க சுமங்கலியாய் வாழ்க.......என வாழ்த்த, பதறிய சபர்மதி .” அப்படி மட்டும் வாழ்த்தாதீங்க சாமி. அவர் எனக்கு முன்னாடி போயிடணும்”......... என வேண்டுகிறாள். இப்படி ஒரு கிராதகியா என அவளை கரப்பான்பூச்சியைப் பார்ப்பதைப் போல அரங்கத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். அவள் ஏன் அப்படி சொன்னாள் ? .......

 இதனை அறிய வேண்டுமானால் அந்த அழகு கதையத்தான் படிக்கவேண்டும்.........




Tuesday, January 27, 2015

நன்றி.....அன்புக்கு நன்றி.......

சிங்கப்பூர் சென்றநாள் ஞாயிற்றுகிழமை....அன்று விடுமுறை..அதனால் மணியுடன் நாங்கள் வெளியே செல்லலாம் என்ற ஒரு வாய்ப்பு அமைந்தது.. மதிய உணவு வீட்டில்...... நாங்கள் மூன்று மணியளவில் வெளியே சென்றோம்....நடந்தே சென்றோம்.....அதிசயம் ஆனால் உண்மை..... சுத்தம்...சுத்தம்......சுத்தமான நடைபாதை....பசுமையான மரங்கள்.....பழுத்த இலைகள் கூட கீழே தெருக்களில் வீழ்ந்திட அஞ்சுமா......எங்கும் ... எந்த ஒரு இடத்திலும் இலைச் சருகுகள் கூட கண்ணில் படவில்லை... நாய்கள் உள்ளன....ஆனால் அனாதை நாய்கள் இல்லை. நாய் மிகவும் கம்பீரமாகத் தன் எஜமானனுடன் செல்வதைக் காணலாம்......அதுகூட தெருக்களை அசுத்தம் செய்ததாகத் தெரியவில்லை....அதிசயமாய் இருந்தது......அது தெருவில் இருக்க முயலும்போதே ஒரு பிளாஸ்டிக் பை மூலம் அதன் கழிவுகளை எடுத்து ஆங்காங்கே இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போட்டு விடுவார்கள் .....


கீச்செயின் கவர் படம்......அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று பார்த்தேன்.
      துப்பினால்....புகைபிடித்தால்......இப்படியே எட்டு விதமான தவறுகள் செய்தால் 500 சிங்கப்பூர் டாலர் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.....
Singapore a real FINE place......இரு பொருள் தரும் வாசகம் அது....

முக்கியமான பல இடங்கள் ...... இந்திய உணவு.....மிருக காட்சி ச்சாலை ,
,பல நாட்டுப் பறவைகள்,..... கண்டோம்...

சரியான சமயத்தில் வரும் இரயில்கள், பஸ்கள்..... எனக்கு ஆச்சரியமாய் இருந்தது....

சொர்க்கமே ஆனாலும் நம் நாடு போல் இருக்குமா.... ஏழு நாட்களுக்கு மேல் வீட்டைத் தேடத்தொடங்கிற்று என் மனம்....

நம் நாடு மிகப் பெரிய நாடு......பல்வேறு கலாச்சாரம்.......பலமதம்.....பல இனம்...உலகில் இரண்டாவது பெரிய ஜனத்தொகை.....பல நகரம் ..... வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் நாடுதான் நான் நாடும் நாடு.....

அது சுற்றுலாத் தலம்.... அதிகம் படித்தவர்களுக்கு சொர்க்கம்....  நமக்கு போய்ப் பார்த்து கொஞ்ச நாட்கள் இருந்து ரசிக்கலாம்......

சிங்கப்பூர் ஒரு அழகு நகரம்.....சுய கட்டுப்பாடு....... தனித்தன்மை கொண்டவர்கள்..... ஒரு சிறிய நாடு......அமைதியான நாடு......எந்த விளைச்சலோ.....பயிர் வகைகளோ.... கிடையாது.....ஆனாலும் கலப்படமற்ற உணவுகள் கிடைக்கும்....


தமிழ்  தழைக்கும் இடம்...... சிங்கப்பூர்......பெருமையாக இருக்கிறது தமிழன் என்பதால்.......
23-ஆம் தேதி நாகர்கோவில் வந்து சேர்ந்தோம்...... வாழ்வில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என்னால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
ஆண்டவனுக்கு நன்றி......