Friday, August 14, 2015

இதோ ஒரு இளைஞர்.....அப்துல்கலாம் அவர்களின் அருள் கிட்டிய இளைஞர்.....


இரண்டு மாதங்களுக்கு முன்னால்  இக்னோ அலுவலகத்தில் ஒரு கட்டிடத் தொழிலாளி தன் தம்பியுடன் நின்று கொண்டே நெறியாளரிடம் எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்று பரஸ்பரம் பேசி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த நான், அவரை செயரில் அமர்ந்து பேசலாமே என்று சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டாரே தவிர தொடர்ந்து நின்று கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தார்.

நான் வேறு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாலும் என் காதுகளை அவரது சில அறிவு பூர்வமான பேச்சுக்கள் ஈர்த்தன. அது ஒரு கட்டிடத் தொழிலாளியின் பேச்சாக இருப்பது கண்டு மனதளவில் வியந்து கொண்டிருந்தேன். அவரது ஆலோசனைகள்….. பேச்சுக்கள் எல்லாமே முடிவது வரை காத்திருந்தேன்….

அவரிடம் நீங்கள் பேசும் பேச்சு படித்தவர் பேச்சு போல் இருக்கிறதே ? என்று நான் கேட்கவே, அவர் சிரித்துக் கொண்டே M.A எக்னாமிக்ஸ் படித்திருக்கிறேன் என்றார்,

வெளிநாட்டில் வேலை செய்து இப்போ இந்தியாவில் இருக்க வேண்டிய சூழ்நிலை.  கம்பெனியில் அலுவலக வேலை பார்த்தபோது அந்த நிறுவனம் செய்யும் தொழிலையே தானும் கற்றுப்பின் செய்ய முற்பட்டு ,தற்பொழுது நம்ம ஊரில் கட்டிட உட்பகுதியழகினை மெருகூட்டும் பணிதனை செய்து கொண்டிருக்கிறேன்….. என்னாலும் அனைத்து வேலகளையும் செய்ய முடியும்…. நான் முதலாளியாக இருந்தாலும் நானும் ஒருஆள் செய்யும் வேலையைச் செய்வேன்….. அதனால் நான் எடுக்கும் பணியில் நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வேன்……. பேசி விட்டு சென்று விட்டார்…….

நாட்கள் நகர்ந்தன. இன்று (13 ஆகஸ்டு 2015) நான் கேட்டுக்கொண்டதால் என் வீட்டுக்கு ஒரு சிறிய பணிதனை செய்திட அவர் வந்தார். வந்தபோது என் வீட்டின் முன் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அப்துல் கலாம் அவர்களின் படம் இருக்கக் கண்டார்….

அவர் ,’ என் வீட்டில் ஃப்ளெக்ஸில் அவர் படம் வைத்திருக்கிறேன் “ என்றார்…

நான்,” உங்களுக்கு அவரை ரெம்ப பிடிக்குமா” கேட்டேன்.

”ஆம்…..நான் செய்யும் பணிக்கு அடித்தளமிட்டவரே அவர் தான்…..எப்படி அவரை என்னால் மறக்க முடியும்….. அவர் உடலை ராமேஸ்வரத்தில் விதைத்தபோது  நான் அங்கு தான் இருந்தேன்……”
சொல்லிக் கொண்டே இருந்தார்…..வியப்போடு நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன்…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில்…..அப்துல்கலாம் ஆலோசனைப்படி பத்து திருக்குறட்பாக்கள் GRANITE கற்களில் பொறிக்கப்பட்டு பதிக்கப் பட்டுள்ளதல்லவா…. அதனை ….அப்பெருமை மிகு பணிதனை செய்து முடிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்தது என்றார் அவர்.

அதற்காக அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மாமனிதரிடம் ஆலோசனகள் பெற்று பணிதனை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்…….அவரது கையெழுத்தை வெள்ளைத்தாளில் பெற்று வந்ததை …. தன்னை நம்பித்……தந்ததை தான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறார்…..கலாமின் படமும் அக்கல்வெட்டில் உள்ளது….

 அக்கல்லில் பணிதனை முடித்தவர் பெயரையும் போடச் சொன்னதோடு அலைபேசி எண்ணையும் போடச்சொன்னாராம் அப்துல்கலாம்……..
அந்த பெயர் altonestnes@gmail.com  cell no: 9442450574


 ஒரு மாமனிதரின் அருள்பார்வை கிட்டிய அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு.அருள். எங்கள் இந்துக் கல்லூரி வைரவிழா கட்டிட உள் அரங்க அழகூட்டும் பணிதனை செய்தவர்......

Friday, August 7, 2015

தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா பேராசிரியர் முருகன்

தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா பேராசிரியர்
என் கடன் பணி செய்து கிடப்பதே….. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே….என்ற வரிகளுக்கு உரிமை கொள்ளும் ஒரு உத்தமரை…வாழும் ஒருவரை மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்…. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் வாழ்நாளில் இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தார்….. அதுபோலவே செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியரை  வெளியுலகும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு……
நான்கு புத்தகங்கள் எழுதிய இந்தத் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பணியாற்றி 2011-இல் ஓய்வு பெற்ற CHEMISTRY பேராசிரியர் திரு.S.முருகன் , நுண்ணிய அளவிலான வேதியல் பரிசோதனைகள் சம்பந்தமாக ,கல்லூரிப் பரிசோதனைக்கூடங்களில் அதிகப் பொருட்செலவைக் குறைக்க  microscale technique –ஐப் பயன்படுத்தவும் ,அதனால்  சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்கப் படுவதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க முனைந்து இன்றைய தேதி வரை 95 கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று நற்பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்….. வெளி மாநிலங்களான கேரளா (28) , கர்நாடகா(3), மஹாராஷ்ட்ரா (2) கல்லூரிகளுக்கும் போய் சிறப்புரையாற்றியும் செய்முறைப் பயிற்சிகளை செய்துகாட்டியும் மைக்ரோ தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆகஸ்ட் 24-இல் நடைபெறும் தமது நூறாவது கருத்தரங்கத்திற்கு ,இவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவரது குருவான பேராசிரியர் Dr.S.L.KELKAR பூனேயில் இருந்து வர இருக்கிறார்..
இத்தொழில்நுட்பம் பற்றிய இவரது கட்டுரை 2013-இல் வலைதளத்தில் வேதியல் சம்பந்தப் பட்ட (The journal of Applicable Chemistry ) இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சபூத மருத்துவரான இந்தப் பேராசிரியர் மருந்தில்லா மருத்துவம் பற்றி நாகர்கோவில் வானொலி நிலையத்தில் பேசியது 2009-இல் ஒலிபரப்பானது.

இலவசமாகவே தம்மை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
இதை மட்டுமா இவர் செய்திருக்கிறார். மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியான வகையில் அவரது செய்கை பல உண்டு.

அது அவர் பயின்ற, பயிற்றுவித்த தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளர்ச்சிக்காக ஐந்து லட்சம் ருபாய் கொடுத்ததைப் பதிவு செய்வதா! 

ஆசிரியர் இயக்கத்திற்கு இரண்டு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா! தன் வீட்டில் பணிபுரிந்து ஓய்வுற்ற வயதான பெண்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா !  எதைச் சொல்வது…... 

ஓசையின்றி கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒப்புயர்வு பெற்ற இதயம் கொண்டவரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை……
நல்ல மனம் வாழ்க……