Friday, November 6, 2015

எம் கல்லூரி தமிழ்த் துறைதம் கருத்தரங்க மூன்றாம் நாள்...நிறைவுநாளின் நிகழ்வாய் என்னுரையும் .........

அனைவருக்கும் என் அன்பான மாலை நேரத்து வணக்கம். தனித்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் கருத்தரங்கத்தில் கழிந்த மூன்று நாட்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ஒருவர் அல்லது பலர் அரங்கமேடையில் நிகழ்த்தும் பொம்மலாட்டம், நாடகம், கூத்து, நடனம், வில்லுப்பாட்டு போன்ற நாட்டார் கலைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை பலரும் அழகு தமிழில் வாசிக்கக் கேட்டிருப்பீர்கள்.
      மனிதன் தனது துன்பச் சூழலில் இருந்து விடுபட, அதில் இருந்து மீள்வதற்கு கலைகளின் துணையை நாடுவது இயல்பாக இருந்த காரணத்தால் நிகழ்த்துக்கலை உருவாயின.
      கால மாற்றத்தால் நம் உணவு உடை மாறின. உழைப்பவர்கள் போற்றிய நிகழ்த்துக் கலைகளும் மாறிற்று. பகுத்தறிவின் பேரால் பல கலைகள் புறக்கணிக்கப்பட்டன. பல இன்றைய தொழில் நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்குப் பலியாயின.
      நமது குமரி மாவட்டத்தில் இருந்த அறுபத்தி முன்று வகையான நிகழ்த்துக் கலைகளில் பதினொரு கலைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன என்பதை நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
      நாடகத்தின் முதல்நிலை தெருக்கூத்து. கோவில் திருவிழாக்களில் தெருவில் முச்சந்தியை மேடையாக்கி கூத்து மூலம் ஆடியும் பள்ளியும் மக்களை மகிழ்வித்தார்கள். கூத்து என்பதன் வளர்ச்சியே நாடகம் என்று மாறியது. நாடகத்திற்கு பண்ணை என்ற ஒரு பெயரும் உண்டு.
       நாடு + அகம் என்பதே நாடகம். நாடு என்பது மக்கள். அகம் என்பது மக்களின் உள்ளங்கள். மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவமே நாடகம்.
      ஒரு நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் – மூன்றையும் தன்னகத்தே காட்டுவது நாடகம். நாட்டு நடப்பை , நாட்டின் கலாச்சாரத்தினை, நாகரீகத்தை நாடகம் பார்த்து தான்  மக்களால் அறிய முடிந்தது. கூத்தைப் பின்னுக்குத் தள்ளிய நாடகமும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
      பொம்மலாட்டத்தின் இன்னொரு பரிணாமம் என்று சொல்லப்படும் திரைப்படம் வந்ததால் கிராமங்களில் நாடகம் போடுவது குறைந்து போய் பின் அறவே நின்று போயிற்று.
      ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
      இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் கூத்துக்கள் பெற்றுக்கொண்டதுபோல் , பழைய நாடகங்களில் அல்லது கூத்துக்களில் இருந்து இன்றைய  இலக்கியம் பல கூறுகளை எடுத்துக் கொண்டதும் உண்டு. உதாரணமாக சிறிய காப்ப்பியமான பாரதியின் பாஞ்சாலி சபதம். இது 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரௌபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்த காப்ப்பியமாகும்
      தமிழில் நாடக நூல் இல்லை என்கிற குறையும் பின்னாட்களில் மனோன்மணியத்தின் வரவால் நீங்கிற்று. ஆனாலும் இது ஒரு தழுவல் நாடகம் என்கிற குறையும் உண்டு.
      இவ்வாறு, கூத்து அல்லது நாடகம் என்ற நிகழ்த்துக்கலை, தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாகவே உள்ளது……..
 என் உரையை முடிக்குமுன் நான் சமீபத்தில் படித்த ஒரு தகவல்….
      நீலகிரி மாவட்ட வனப்பிரதேசத்தில் வாழும் கோத்தர்களின் நடனங்கள் ஆதிகாலத்தவை. பக்தியை முன்னிறித்தி ஏராளமான வாய்மொழிப் பாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன.. நாதஸ்வர வடிவிலான கட்டைக் குழலான கொல் எனும் ஊது கருவி, கொப் எனும் இசைக்கருவி, தபக், பர், குணர்… போன்ற தோல் கருவிகள், மூலம் இசைத்துப் பாடுகிறார்கள். கொப் என்னும் இசைக்கருவி விலங்குகளின் கொம்புகளால் ஆனது. இப்போது செம்பால் செய்யப்படுகிறது. இவர்களில் ஆடும் ஆட்டத்தின் பெயர் கண்மு ஆட்டு. பெண்கள் ஆடுவது பெமு ஆட்டு. இன்றும் தினை விதைப்புத்திருவிழா, அறுவடைத்திருவிழா, மாடுகளுக்கு உப்பு புகட்டும் திருவிழா, கில்லிப் பண்டிகை என விழாக்கள் கொண்டாடி தங்களுடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
 பொம்மலாட்டக் கலையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு  மாதம் 21-ஆம் தேதி உலக பொம்மலாட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
      நமது பாரம்பரியக் கலைகள் அழியாமல் காத்திட, தமிழ்நாட்டு உயர்கல்வித்துறை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
      தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நாடகத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. பளையாங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பட்ட மேற்படிப்புத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
      இதுபோல் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் கூத்து மற்றும் நாடகத்துறை, தமிழ்ப் பாடத்தின் பகுதியாக வரவேண்டும் . படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் இருக்க வேண்டும்.
இந்தக் கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அனைத்தும் நிகழ்த்துக்கலைகளுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.
நாடகத்தமிழ் வளம் பெற தரம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கிட உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்..
நான் பேசிய தமிழில் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
திறம்பட மிகச் சிறப்பாக கருத்தரங்கத்தை நடத்திய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சாந்தாள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் தே.வே. ஜெகதீசன் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
வாய்ப்பளித்தமைக்கு என் நன்றியைப் பதிவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி ...வணக்கம்......